அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Tuesday 28 September 2010

"முள்ளங்கிக் கீரை" சாப்பிடுங்க‌!

              "முள்ளங்கிக் கீரை"

முள்ளங்கி குத்துச்செடி வகையைச் சேர்ந்த கிழங்காகும். சிலர் முள்ளங்கி எனப்படுவது முள்ளங்கிச் செடியின் வேர்தான், அது ஒரு கிழங்கல்ல என்கிறார்கள். அதைப்பற்றி ஆராய்வதைவிட‌ அதிலிருந்து கிடைக்கும் நன்மைகளைப் பற்றி முதலில் தெரிந்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இந்த முள்ளங்கி மட்டுமல்லாமல், அதன் இலை, தண்டுகள், விதை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்ட‌வை. இப்போது முள்ளங்கிக் கீரையின் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.

முள்ளங்கிக் கிழங்கின் மேல் பக்கம் தழைத்து வளர்ந்திருக்கும் இலைகளைதான் முள்ளங்கிக் கீரை என்கிறோம். நம்மில் பெரும்பாலானோர் முள்ளங்கியை மட்டும் பயன்படுத்திவிட்டு, அதன் கீரையை அலட்சியம் செய்துவிடுகிறோம்.  ஆனால், முள்ளங்கிக் கிழங்கைவிட அதன் கீரையில்தான் ஏராளமான‌ மருத்துவக் குணங்கள் உள்ளன‌!

அதன் சத்துக்கள்:-

-   கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் A,B,C முதலியவையும் இதில் அதிகம் உள்ளன.

-   இதன் கிழங்குப் பகுதியில் இருப்பதைவிட‌ ஆறு மடங்கு 'வைட்டமின் C' இதன் கீரைகளில் இருக்கிறது.

-  100 கிராம் கீரையில் சுமார் 28 கலோரிகள் கிடைக்கிறது.

-  இதில் 90 சதவீதம் மாவுச் சத்தும், 0.7 சதவீதம் நார்ச்சத்தும் உள்ளன.

-   புரோட்டீன், சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்புச் சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன.

முள்ளங்கிக் கீரையின் பலன்களும், பயன்படுத்தும் முறைகளும்:

பொதுவாக முள்ளங்கிக் கீரையை மற்ற கீரைகளைப் போலவே சமைத்து சாப்பிடலாம். ஆனால் எந்தக் கீரையானாலும் அதன் பசுமை நிறம் மாறாத அளவுக்கு மட்டுமே வேகவைக்கவேண்டும். முள்ளங்கிக் கீரையை சமைக்காமல் மெல்லிய துண்டுகளாக்கி பச்சையாக சாலட் போலவும் சாப்பிடலாம்.

‍-  முள்ளங்கிக் கிழங்கைப் போன்றே அதன் கீரையும் இரைப்பைக் கோளாறுகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலக்கடுப்பு, மஞ்சள் காமாலை போன்றவைகளையும் குணப்படுத்துகின்றன.

- நீரிழிவு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக உள்ளது.

-  மலச்சிக்கலைக் குணப்படுத்தும் ஆற்றல் இந்தக் கீரைக்கு உண்டு.

-  கல்லீரலில் உண்டாகும் பலவிதமான‌ கோளாறுகளை இக்கீரை குணப்படுத்த வல்லது! அதுபோல் இருதயத்திற்கும் பலம் சேர்க்கக்கூடியதாக உள்ளதால் இதயம் பாதிக்கப்பட்டவர்கள், இதயப் படபடப்பு, இதய பலவீனம் உடையவர்கள் வாரம் ஓரிரு முறையாவது இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

‍‍-   முள்ளங்கிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும். வைட்டமின் பற்றாக்குறைகளும் நீங்கும்.

-   முள்ள‌ங்கிக் கீரையின் சாற்றை 5 அல்லது 6 டீஸ்பூன் அளவு எடுத்து, 3 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும். சிறுநீர்ப்பை வீக்கம் இருந்தாலும் குணமாகும். சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள் கீரை சாப்பிட விரும்பினால், முள்ளங்கிக் கீரையை மட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

-  சிறுநீர் சரியாக பிரியாமல் இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் பார்லியை முள்ளங்கிக் கீரையுடன் சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு நீங்கி சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

- சிறுநீர் கல்லடைப்பு, கரப்பான் என்ற தோல் வியாதிகளையும் குணமாக்கும்.

-  பசியின்மைக்கு முள்ளங்கிக் கீரையில் சாறெடுத்து, அந்த சாற்றில் ஊற வைத்த மிளகைப் பொடியாக்கி, அதிகாலையில் 1/2 ஸ்பூன் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் ஜீரண சக்தி ஏற்பட்டு நன்றாக பசி உண்டாகும்.  

-  சூட்டினால் உண்டாகும் தொடர் வயிற்றுவலிக்கு வெந்தயம் ஊற வைத்த 1/2 டம்ளர் தண்ணீரில் 1 பிடி முள்ளங்கிக் கீரையை அரைத்துச் சாப்பிட்டால் குணமாகும்.

‍‍   (a ) கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டவர்கள், (b) விந்து உற்பத்தியின்மை உடையவர்கள், (c) நீரிழிவு நோய் உள்ளவர்கள் முள்ளங்கிக் கீரையைச் சாப்பிடுவதால் நோயின் தாக்கம் குறைவதை நன்கு உணரமுடியும்.

-    (a) கல்லீரல் நோய்களுக்கு முள்ளங்கிக் கீரை சாற்றுடன் சிறிது வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும்.

‍-    (b) முள்ளங்கீரைச் சாறில் நெருஞ்சில் முள்ளை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் விந்து உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  
‍  
-    (c) முள்ளங்கிக் கீரை சாறில் வெந்தயத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும்.

-  முள்ளங்கிக் கீரையின் சாற்றை 100 மில்லியளவு எடுத்து மெல்லிய, சுத்தமான‌ வெள்ளைத் துணியில் வடிகட்டி, அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அருந்தினால் மஞ்சள் காமாலை உடனே கட்டுப்படும். தினமும் அரைக்கிலோ முள்ளங்கிக் கீரையைச் சேகரித்து இந்த முறையில் அருந்தி வந்தால் வயதானவர்களுக்கும் கூட‌ மிக விரைவில் மஞ்சள் காமாலை நோயிலிருந்து குணம் கிடைக்கும்.

-  ஒரு கைப்பிடி அளவு முள்ளங்கிக் கீரையில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வேகவைத்து, தொடர்ந்து மூன்று நாட்கள் காலை, மாலை உண்டு வர நீர் அடைப்பு தொல்லை தீரும்.

-  தொடர்ந்து மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், முள்ளங்கிக் கீரையின் சாற்றை 1 ஸ்பூன் எடுத்து 3 வேளைகளும் சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும்.

-  சுறுசுறுப்பின்றி படிப்பிலும் அன்றாட செயல்பாடுகளிலும் மந்தமாக உள்ள குழந்தைகளுக்கு இதை ஏதாவது ஒரு வகையில் செய்துக் கொடுத்தால் மந்தகுணம் நீங்கும். குழந்தைகள் உடலுறுதியுடன் வளரவும் முள்ளங்கிக் கிழங்குடன் முள்ளங்கிக் கீரையையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொடுக்கலாம். அடிக்கடி சளித் தொல்லை இருந்தால் கொடுக்கவேண்டாம். ஏனெனில் இந்தக் கீரை குளிர்ச்சி நிறைந்ததாகும்.

-  சிகப்பு முள்ளங்கியின் கீரையை நிழலில் காயவைத்து நன்கு ஈரமில்லாமல் காய்ந்தவுடன் அதை ஒரு மண் சட்டில் போட்டு எரித்து சாம்பலாக்கி, ஈரமில்லாத, சுத்தமான ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

தேவைப்படும்போது அந்த சாம்பலில் சிறிது எடுத்து விளக்கெண்ணெய் சேர்த்து குழைத்து, ஒரு வெள்ளைத் துணியில் தொட்டு பாலுண்ணி உள்ள இடங்களில் போட்டு வந்தால் சில தினங்களில் குணமாகும்.

-   கற்களால் உண்டாகும் நீர் அடைப்பு மற்றும் வெள்ளையால் வரும் நீர் அடைப்பிற்கு முள்ளங்கிக் கீரையின் கொழுந்து இலைகளாக 2 கைப்பிடியளவு எடுத்து 1 சிட்டிகை கல் உப்பு சேர்த்து அரைத்து நீரில் கலக்கி தினமும் 2 முறை குடித்து வந்தால் குணம் கிடைக்கும். நீர்க்கடுப்பிற்கும் இதுப்போல் செய்தால் குணமாகும்.

முள்ளங்கிக் கீரையை யாரெல்லாம் தவிர்த்துக்கொள்ளவேண்டும்?

-  வாத நோய்க்காரர்கள் முள்ளங்கிக் கீரையைச் சாப்பிடக் கூடாது. ஆனால், முள்ளங்கிக் கிழங்கை பகலில் மட்டும் சாப்பிடலாம்.

‍-  கப உடம்புக்காரர்கள் என்று சொல்லக்கூடிய சளித் தொல்லைகள் உடையவர்கள், ஆஸ்த்துமா நோயாளிகள் அதிகமாக‌ சாப்பிடவேண்டாம்.

-  கேஸ் ப்ராப்ளம் உள்ளவர்கள் பூண்டு சேர்க்காமல் சமைக்கப்பட்ட முள்ளங்கிக் கீரையோ, சமைக்காமல் சாலட் போன்று உண்ணுவதையோ தவிர்ந்துக்கொள்ளவேண்டும்.

-  பொதுவாகவே எந்தக் கீரைகளும் இரவில் சாப்பிடக்கூடாது என்றாலும் முள்ளங்கிக் கீரையை கண்டிப்பாக இரவில் சாப்பிடக்கூடாது. (முள்ளங்கியும் அதுபோலவே இரவில் சாப்பிட்டால் தீங்குதான் விளையும்.)

இதுவரை முள்ளங்கிக் கீரை எவ்வாறெல்லாம் நமக்கு பயன்படுகிறது என்பதையும் அவற்றை மருந்தாக பயன்படுத்துவது எவ்வாறு என்பதையும் பார்த்தோம். அதை பலவிதமாக சமைத்து உண்டும் அதன் பயன்க‌ளை அடையலாம். அதன் ஒரு செய்முறையைக் காண இங்கே க்ளிக் பண்ணவும்.

4 comments:

  1. முள்ளங்கி பற்றிய நீண்ட பகிர்வு அருமை.

    ReplyDelete
  2. @ asiya omar...

    //முள்ளங்கி பற்றிய நீண்ட பகிர்வு அருமை// முள்ளங்கியல்ல‌, முள்ளங்கிக் கீரை ஆசியாக்கா:)!

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றிமா!

    ReplyDelete
  3. அஸ்மா, உங்களை ஒரு மெகா தொடருக்கு அழைத்துள்ளேன். எந்த வேலையிருந்தாலும் தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவும். ப்ளீஸ். :)
    http://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_28.html

    ReplyDelete
  4. @ அன்னு...

    அன்னு...என்ன மெகா தொடரா...? தொடர் பதிவைச் சொல்றீங்களா.. ? சரியான பேர்தான் :)ஏம்ப்பா... என்னை வேற இப்படி அழைக்கிறீங்களே...! பார்ப்போம்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை