அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday 27 September 2010

அமைதியை இழந்து தவிக்கும் அமெரிக்க வீரர்கள்!

‘அமைதியை நிலை நாட்ட ஒரு போர்’ என்ற பெயரில் பொய்யான காரணத்தை அவ்வப்போது உலக அரங்கிற்கு முன் அரங்கேற்றிப் பொருளாதாரத்திலும், ஆயுத பலத்திலும் குன்றிய ஏழை நாடுகளைத் தேர்ந்தெடுத்து அதன் மீது படையெடுப்பதைத் தன் இலட்சியமாகக் கொண்டு இயங்கி வரும் அமெரிக்க ராணுவத்துறை இப்போது அமைதியின்றித் தவிக்கிறது.


ஆம்! ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பிய அமெரிக்கப் படைவீரர்களில் மூன்று இலட்சம் பேருக்கு ‘உணர்வதிர்ச்சி’ (post-traumatic stress disorder) எனும் நோயினால் பாதிக்கப்பட்டு கடுமையாக மனநலம் குன்றியிருப்பதாக வாஷிங்டனில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன. போரினால் தொடர்ச்சியாக ஈடுபடும்போது படைவீரர்களுக்கு ஏற்படும் நோய்க்கு Post-traumatic stress disorder என்று பெயர். இது PTSD என்று சுருக்கமாக அழைக்கப்படும். 


அதிகப்படியான மனித உயிர்களைக் கொலை செய்வதும், துடிதுடித்து இறப்பவர்களையும் அதீத (ம)ரணங்களை அருகிலிருந்து பார்ப்பதனாலும், இந்நோய் ஏற்படுகிறது. ஸர்ச் அண்டு டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (RAND corporation) சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட 320,000 அமெரிக்கப் படைவீரர்களுக்கு இத்தகைய மனநோய் ஏற்பட்டுக் கடும் அவதிக்கு உள்ளாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


சிகிச்சை பெற்றுவரும் வீரர்களின் எண்ணிக்கையை இதுநாள் வரை ரகசியமாக வைத்திருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறை உள்பட உலகம் முழுவதும் இந்த அறிக்கை பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கப் படையில் பணிபுரிவோர், விரக்தியில் வேலையை விட்டு ஒதுங்கியோர், மனநோய்க்கு சிகிச்சை பெறுவோரில் சிலர் என்று கிட்டத்தட்ட இரண்டாயிரம் அமெரிக்கப் படைவீரர்களின் வாழ்க்கையினைப் பகுத்தாய்ந்து புள்ளிவிபரங்களுடன் துல்லியமாகத் 500 பக்கங்கள் அடங்கிய RAND நிறுவனத்தின் இவ்வறிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வீரர்களைப் பாதித்து வரும் PTSD எனப்படும் இந்நோயின் அறிகுறிகள்:
- கொடூர சம்பவங்கள் மற்றும் அவற்றின் நினைவலைகள் கண்ணில் தோன்றி மறைதல், சிறு சப்தமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துதல் (உதாரணம்: போக்குவரத்து சத்தம், செய்திகளைத் தொலைக்காட்சியில் பார்ப்பது போன்றவற்றின் மூலம்)

- தனது போர்க்காலங்களில் நடந்த நிகழ்வை திரும்ப நினைவு படுத்தும் எவ்வித காரணிகளில் இருந்தும் தூர விலகி ஓடுதல்


- குடும்பம், சொந்த பந்தங்களுடன் உறவுகளை முறித்துக் கொள்ளல், விரக்தியான மனோநிலை, எளிதில் கோபப்படுதல், தூக்கமின்மையால் அவதியுறுதல், அதிர்ச்சியால் துடித்தல் …….. .

இது தவிர மூளையின் உட்புறம் ஏற்பட்டுள்ள நோயால் விளையும் உடல்நலக் குறைகள்:
— அடிக்கடி வரும் தலைவலி
— குழப்பமான மனநிலை
— தலைசுற்றல், தலை கனத்திருத்தல்
— விசித்திர மனநிலை
— நினைவில் எதுவும் நிற்காமல் இருப்பது
— குமட்டல் வாந்தி
— பார்வைக்குறைபாடு மற்றும் காது கேளாமை

 

பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்ட வீரர்களுக்கு சரியான முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாமல் இருக்கும் திடுக்கிடும் உண்மையும் இவ்வறிக்கை மூலம் வெளிவந்துள்ளது. இவர்களுக்கு ஏற்பட்டுள்ள மூளை நோய்க்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படா விட்டால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது” என்று RAND இன் தலைமை ஆய்வாளர் டெர்ரி டேனிலியன் குறிப்பிட்டுள்ளார்.

தாம் மனநலம் குன்றியுள்ள விவகாரம் வெளியே வந்தால் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் பெருமளவு அமெரிக்க வீரர்கள் மருத்துவர்களிடம் செல்ல வெட்கப்பட்டு உள்ளுக்குள் அவதியுறும் விவகாரமும் வெளியாகியுள்ளது. மனநலம் குன்றிய நிலையிலேயே அவர்கள் பணியினைத் தொடர்வது அமெரிக்க படைக்கு ஆபத்தானது என்ற எச்சரிக்கையும் கூடவே விடுக்கப்பட்டுள்ளது.


                                                   [Tim.jpg]
'டிம் நோ' என்ற பெயருள்ள இப்படைவீரர் (காண்க: மேலேயுள்ள புகைப்படம்) மன அழுத்தம் காரணமாக மூளையில் ஏற்பட்டுள்ள நோய்க்கு அமெரிக்க மருத்துவர்கள் மூலம் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சை முடிந்துவிட்டாலும் வாழ்நாள் முழுக்க பிளாஸ்டிக்கிலான ஹெல்மெட்டை அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார். அமெரிக்கப் படையிலிருந்து ஓய்வு பெறும் வீரர்களின் பிற்கால வாழ்க்கை நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள 'Veterans Affairs' ஒப்புக்கொண்டுள்ள அறிக்கையில் 120,000 படைவீரர்கள் கொண்ட ஒரு குழுவில் 60,000 பேருக்கு இத்தகைய PTSD மனநோய் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


அமெரிக்க வீரர்களின் இந்த அவல நிலைக்குக் காரணம் அமெரிக்க ஆட்சியாளர்கள்தான். ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். தங்கள் நாட்டைக் காப்பதற்காக அவர்கள் போரிட்டிருந்தார்கள் என்றால் அவர்களை உயிர்த் தியாகிகள் என்று போற்றலாம். தங்கள் நாட்டுக்காக இராணுவ வீரர்கள் இழக்கும் ஒவ்வொரு நொடியும்கூட‌ தியாகம்தான்! ஆனால், எந்தக் காரணத்தைச் சொல்லி அமெரிக்கா இந்த போரைத் துவக்கியதோ அவையெல்லாம் பொய் என்று நிரூபணம் ஆகிவிட்டன. இது தியாகம் அல்ல! ஒருபுறம் உலகுக்கு உதவுவது போலவும் மற்றொரு புறம் ஏதாவது ஒரு பொய்க்காரணம் சொல்லிக்கொண்டு, தான் குறிவைக்கும் நாட்டின் அப்பாவி மக்களை அநியாயமாக கொன்று குவிக்கும் இரட்டை வேஷம் போடும் உலக மகா கொடுங்கோலாட்சி அமெரிக்கா, தான் இழப்பதற்கு இதுமட்டுமல்ல, இறைவன் புறத்திலிருந்து இன்னும் நிறைய இருக்கிறது இன்ஷா அல்லாஹ்!


அமெரிக்காவில் இருந்து வெளியாகியுள்ள இவ்வறிக்கை மூலம் அமைதியை உலகில் நிலைநாட்ட பிறந்தவர்கள் என்ற மமதையுடன் வலம் வந்தவர்கள், இன்று அமைதியிழந்து அவதிக்கு ஆளாகியுள்ளதைக் கண்கூடாகக் காண முடிகிறது. இத்தகைய “அமைதியை நிலை நாட்டும்(?) போர்” அடுத்தடுத்த நாடுகளில் தொடர்ந்து நடத்தி பிணக்குவியல்களை அதிகரித்துக் கொண்டிருக்கும் திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டே உள்ளன.
                                   
இவ்வளவுக்கும் காரணமாகச் சொல்லப்பட்ட அல்காயிதா தொடர்பு, அணுஆயுதம் தயாரிப்பு போன்ற பொய்யான காரணங்களும் முகத்திரை கிழிந்து தொங்கும் இச்சூழலில், இதுநாள் வரை இரட்டை வேடம் காட்டிய ஊடகங்கள் இதனை உணர்ந்து, சர்வதேச அளவில் மக்களுடன் ஒன்று சேர்ந்து இனிவரும் காலங்களிலாவது மனித உயிர் மதிப்பின்றி சருகாய் கருகுவதைத் தடுக்க வழிவகை செய்ய முன் வரவேண்டும்.


எங்கெல்லாம் அமெரிக்க வீரர்கள் அமைதியை நிலைநாட்டவும் பயங்க‌ரவாதத்தை ஒடுக்கவும் என்று சொல்லி காலடியெடுத்து வைக்கிறார்களோ அங்கெல்லாம் மனிதத் தன்மை என்பதே இல்லாத மனிதநேயமற்ற அவர்களின் மிருக வெறியாட்டத்தைதான் காண்கிறோம். ஆனால், அதுபோன்ற நாடுகளில் நடக்கும் செய்திகளை இந்திய ஊடகங்கள் கவரேஜ் செய்யும் விதமும் அந்த நாடுகளில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அவலங்களும் நேர்மாறானவை என்பதை எந்த ஒரு மனிதாபிமானியும் சரியாக உணர்ந்துக் கொள்ளமுடியும். மதம், மொழி, இனம், நிறம் அனைத்தையும் கடந்து மனிதாபிமானத்தை மட்டும் கொண்டு இங்கு நடக்கும் அநியாயத்தை பார்த்தால் நிச்சயம் ஒவ்வொரு மனிதாபிமானியின் இரத்தமும் கொதித்து எழும் என்பதில் சந்தேகமில்லை!
அப்பாவி முஸ்லிம்களின் அமைதியை கெடுப்பவர்களுக்கு வல்லோனின் தன்டணையோ இது..…?! அன்று கஃபாவை இடிக்காமல் விடமாட்டேன் என சூளுரைத்து நின்ற அப்ரஹாவின் யானைப்படைக்கு எதிராக நிராயுதபாணிகளாக நின்ற குறைஷிகளுக்கு அபாபீல் பறவைகளை அனுப்பிய இறைவன், இன்று இஸ்லாத்தின் எதிரிகளிடம் நிராயுதபாணிகளாக நிற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கு உதவ இதுவும், இன்னும் இதுபோன்ற எத்தனையோ சோதனைகளையும் அவர்களுக்கு கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றான். அல்லாஹ் மிகப் பெரியவன்!  ‘அல்லாஹ் சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் மிகப்பெரும் சூழ்ச்சியாளன்’. இனியாவது பாடம் பெற்றுக்கொள்ளுமா மேற்குலகம்?


source:myalagankulam

2 comments:

  1. //முஸ்லிம்களின் அமைதியை கெடுப்பவர்களுக்கு வல்லோனின் தன்டணையோ இது..…?!//

    ஆமாம்க்கா. அல்லாஹ் வல்லவன்!! பிக் பாஸ் என்று பெயரிட்டுக் கொண்ட நாடு இன்று பொருளாதாரச் சீரழிவால் அழிந்து வருகிறது!!

    ReplyDelete
  2. @ ஹுஸைனம்மா...

    பப்ளிஷ் பண்ணிவிட்டு இன்னும் சில கருத்துக்களை சேர்ப்பதற்காக‌ உடனே எடிட் பண்ணினேன். அதற்குள் உங்களின் பின்னூட்டம் வந்ததைப் பார்த்தேன் :) வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி மிஸஸ்.ஹுஸைன்! மீண்டும் சேர்த்த கருத்துக்களையும் முடிந்தால் பாருங்கள்!

    //ஆமாம்க்கா. அல்லாஹ் வல்லவன்!! பிக் பாஸ் என்று பெயரிட்டுக் கொண்ட நாடு இன்று பொருளாதாரச் சீரழிவால் அழிந்து வருகிறது!!// இன்னும் இருக்கிறது சீரழிவு! மீண்டும் சேர்த்த கருத்துக்களில் ஒன்றை உங்களுக்காக இங்கு பேஸ்ட் செய்கிறேன்.

    //அப்பாவி மக்களை அநியாயமாக கொன்று குவிக்கும் இரட்டை வேஷம் போடும் உலக மகா கொடுங்கோலாட்சி அமெரிக்கா, தான் இழப்பதற்கு இதுமட்டுமல்ல, இறைவன் புறத்திலிருந்து இன்னும் நிறைய இருக்கிறது இன்ஷா அல்லாஹ்!//

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை