அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday 1 October 2010

இதுவெல்லாம் ஒரு தீர்ப்பு..?!


பொதுவாக ஒரு நீதிமன்றம் இந்தியாவில் உள்ள சிவில் சட்டப்படி தீர்ப்பளிப்பதாக இருந்தால், அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க ஒரு மாத காலமே போதுமானதாகும். ஏனெனில் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் அவ்வளவு தெளிவாக இருந்தன. ஆனால் இந்தியாவின் மதச் சார்பின்மைக்கு சவாலாக இருந்த இந்த வழக்கில், வரலாற்று உண்மைகளையும் ஆதாரங்களையும் குழி தோண்டிப் புதைத்து இச்சமரச தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது!

ஆம்!சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து ஒரு பங்கை முஸ்லிம்களுக்கும் இரண்டு பங்கை இந்துக்களுக்கும் கொடுக்குமாறு அலகாபாத் லக்னோ உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது, நேர்மையான இந்து சகோதர சகோதரிகளையே வியக்க வைத்துள்ளது! உணர்ச்சிப் பூர்வமான பிரச்னைக்கு ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்கவேண்டிய நீதிமன்றங்களிலும் இப்படியெல்லாம் ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு எழுதப்பட முடியும் என்பதை அயோத்திப் பிரச்னையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

இந்தத் தீர்ப்பு எந்த சட்டத்தின் அடிப்படையிலும் வழங்கப்படவில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்புக் கூறாமல், சட்டப்படி இடம் யாருக்குச் சொந்தம் என்று தீர்மானிப்பதுதான் ஒரு நீதிமன்றத்தின் பணியாக இருக்கவேண்டுமே தவிர, சட்டங்களை அப்பட்டமாக மீறி அநீதியான முறையில் ஒரு தீர்ப்பை வழங்குவதற்கு நீதிமன்றமும் தேவையில்லை... தீர்ப்பும் தேவையில்லையே...! பங்காளிகளாக இல்லாத இருவருடைய‌ ஒரு சொத்து குறித்து வழக்கு வந்தால், ஆக்ரமித்தவனுக்கு இரண்டும் ஆக்ரமிக்கப்பட்டவனுக்கு ஒன்றும் என்று தீர்ப்பு அளிப்பதில் என்ன சட்ட அம்சம் இருக்கிறது? தாதாக்களின் கட்டப் பஞ்சாயத்து நிச்சயம் இதை விட சிறப்பானதாகவே இருக்கும்! அப்படியென்றால் நீதிமன்றங்கள் எதற்கு...?? ASI சர்வே செய்வதற்காக‌ கோடிக்கணக்கான ரூபாய்களை எதற்காக செலவிட வேண்டும்? இப்படி ஒரு தீர்ப்புக்காகவா இத்தனை முன்னேற்பாடுகளும், ஏகப்பட்ட பந்தோபஸ்துகளும்? நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றால், அது சமரச முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருக்கக் கூடாது என்பதுதான், நியாய உணர்வு கொண்ட அனைத்து மக்களின் நியாயமான எதிர்பார்ப்பாக இருந்தது!

சிறுபான்மை சமூகத்திற்கு நேர்ந்த இந்த அநீதிக்கு எத்தனையோ நேர்மையான எழுத்தாளர்கள் இருந்தும் ஏனோ யாரும் இதுபற்றி மூச்சுவிட மறந்து விட்டார்கள்! ஆனால், இதுவே மற்ற மத மக்களுக்கு இதுபோன்ற அநீதி நடந்தாலும் நிச்சயமாக நாம் தட்டிக்கேட்கவோ அல்லது அதுபற்றி குரல் கொடுக்கவோ செய்வோம். ஏனெனில் மதமோ மார்க்கமோ நமக்கு சொல்லிக் கொண்டிருக்கும் நீதி, நேர்மையை அப்போதுதான் நாம் உண்மையிலேயே கடைப்பிடித்தவர்களாவோம்!

அதுபோல் சில நியாய உள்ளங்களைத் தவிர‌ எல்லா அரசியல்வாதிகளும் 'இது நல்ல தீர்ப்பு, சரியான தீர்ப்பு' என்று பாராட்ட மட்டும் வாய் திறக்கிறார்கள். அரசியல்வாதிகள் அப்படிதான், போகட்டும்! ஆனால் இது சரியான தீர்ப்புதான் என்று சொல்லும் எந்த நடுநிலையாளர்களும் அவரவர்கள் தங்கள் வீட்டை இடித்துக் கொடுத்துவிட்டு, அதில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் தன‌க்கென்று வாங்கிக்கொள்வார்களா என்று நெஞ்சில் கைவைத்து சிந்தித்துக் கொள்ளட்டும்!


தீர்ப்பு சொல்லப்பட்ட அன்று இங்கு CNN செய்தி பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஆஃப்ரிக்க பெண்மணி கேட்ட ('இதுவெல்லாம் ஒரு தீர்ப்பா?' என்றகேள்வியை தான் இந்த இடுகைக்கு தலைப்பாக கொடுத்துள்ளேன். அதற்கு பிறகு அந்த பெண்மணி இந்திய அரசாங்கத்தையும் நீதித்துறையையும் காரித் துப்பாத குறையாக, "முஸ்லிம்களின் பள்ளிவாசல் வழக்கு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அது பகிரங்கமாக‌ இடிக்கப்பட்டதை, 'இப்படியும் ஒரு கையாளாகாத நீதிமன்றமா? இப்படியும் ஒரு கோழைத்தனமான அரசாங்கமா?' என்று உலகமே கேவலமாக பார்த்துக் கொண்டிருந்தது. இப்போது இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பைச் சொல்லி அங்குள்ள சிறுபான்மை மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது மதச்சார்பற்ற நாடு என்று இந்தியா தன்னை சொல்லிக்கொள்ள தகுதியற்றது என்பதை நிரூபித்துவிட்டது" என்று அந்தப் பெண்மணி சொன்னதும், கூடியிருந்த மற்ற நாட்டுக்கார மக்களும் அதை ஆமோதித்ததும் (உண்மை அதுதான் என்றாலும்) நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கிறது :(  

எப்படியோ ஒன்றை மட்டும் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் தெளிவாக சொல்லிவிட்ட அந்த நீதிமன்றத்தை வேறு வழியில்லாமல் பாராட்டியே(?!) ஆகவேண்டும். அதாவது, இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் மக்களின் ஒரு விருப்பம், அது சட்ட விரோதமாக இருந்தாலும் அது நீதிமன்றத்தில் அங்கீகரிக்கப்படும். அதே சமயம், சிறுபான்மை மக்களின் சட்டப்படியான உரிமைகள் எதுவாக‌ இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் அதை விரும்பவில்லை என்று தெரிந்தால், அது சட்ட விரோதமானதாக முடிவுசெய்து தீர்ப்பளிக்க‌ப்படும் என்ற செய்தி இப்போது சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது. எனவே நீதிமன்றங்களுக்கு அலைந்து பல ஆண்டுகள் சட்டப் போராட்டங்கள் நடத்தி, கடைசியில் இதுபோன்று அநியாயமான‌ ஒரு டுபாக்கூர் தீர்ப்புதான் கிடைக்கும் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டு, நீதிமன்றங்கள் சரியான நீதி வழங்கும் என்ற நம்பிக்கையையும் சிறுபான்மை மக்கள் இதன் மூலம் இழந்து விட்டனர். இன்னும் உச்ச நீதிமன்றத்தில் கொடுக்கவேண்டிய மேல் முறையீடு ஒன்றுதான் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையாக‌ எஞ்சி நிற்கிறது. அங்காவது நேர்மையான, தூரநோக்கு கொண்ட நீதிபதிகள் இல்லாமலா போய்விடுவார்கள்? பொறுத்திருந்து அதையும் பார்ப்போமே!

நல்லவேளை, பிரச்னைக்குரிய இந்த இடத்தைத் தங்களிடம் ஒப்படைக்கச் சொல்லி மூன்று தரப்பினர் தொடர்ந்த வழக்கில் முப்பது பேர் வழக்குத் தொடர்ந்திருந்தால், சுமூகத்திற்கும் சமரசத்திற்கும் வழி வகுக்கிறோம் என்று முப்பது கூறுகளாக போட்டு ஆளுக்கொரு பங்கு வழங்கி தீர்ப்பு சொல்லியிருப்பார்கள்!!

20 comments:

  1. அஸ்மா,
    நல்லதொரு பதிவு. ஆனால் இதை ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். இன்னும் சொல்லப்போனால் நம்மவர்களுக்காக என அபாடுபட ஏகப்பட்ட ஜமா'அத்துகள் இருந்தும் கட்சிகள் இருந்தும் யாரும் இதற்காக ஒன்று சேரவில்லை, சேரப்போவதுமில்லை. அதுதான் வருத்தம். நீதிபதி கானின் தீர்ப்பே சிறுபான்மையினர்க்கு சாதகமாக இல்லாத பட்சத்தில் வேறேன்ன செய்ய இயலும்? டாக்டர் ஆஃபியாவின் வழக்கில் வழக்கை ஒட்டுமொத்தமாக புறம் தள்ளி, அவருடைய காயங்களையும் அலட்சியப்படுத்தி, அவர் துப்பாக்கியை தொட்டாரா இல்லையா என்பதைக்கொண்டு எழுபத்திஆறு வருடம் தீர்ர்ப்பு கொடுத்துள்ளனர். அதே போல்தான் இங்கேயும் நடந்திருக்கின்றது. வழக்கை புறம் தள்ளி இடத்தை பிரிக்க மட்டும் நீத்மன்றத்துக்கு அறுபது வருடம் ஆகியுள்ளது. பின்னாளில் முஸ்லிம்களின் மேல் மொத்த உலகமும் ஈக்களைப் போல குவியும் என்றும் அதைக் கண்டும் காணாமல் நம்மினமே உலகத்தின் மீதான ஆசையால் ஊமையாய் இருக்கும் என்ற நபிமொழி உண்மையாகிவருவதையே காணமுடிகின்றது. :((

    ReplyDelete
  2. @ அன்னு...

    உங்கள் கருத்துக்களும் அருமையானவை, ஆழமானவை! பொறுமையா பேச நேரமில்லை, நன்றி அன்னு!

    ReplyDelete
  3. இந்தியா அல்ல ஹிந்து யா என்று சொல்லாமல் சொல்லியிறுக்கிறார்கள்.

    ReplyDelete
  4. @ ராஜவம்சம்...

    //இந்தியா அல்ல ஹிந்து யா என்று சொல்லாமல் சொல்லியிறுக்கிறார்கள்.//

    நிச்சயமா உண்மை அதுதான்! மேல் முறையீடுக்கான தீர்ப்பு எப்படி வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நானா!

    ReplyDelete
  5. ரொம்ப எதிர்பார்த்தது.. இப்படி ஒரு தீர்ப்பு வரும்முன்னு நினைச்சிக்கூட பாக்கல. ஜனநாயக நாடுன்னு சொல்லிக்கிற இந்திய நாட்டில் ஹிந்துஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்து அரசாங்கமே அவங்கபக்கமே சார்ந்து இருக்கிறது என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. இனிமே அவங்க வச்சதுதான் சட்டமாயிருக்கும். அராஜகம் ஜாஸ்தியாயிரும். மதவெறியர்களிடமிருந்து அல்லாஹ்தான் எல்லா மக்களையும் காப்பாற்ற வேண்டும்.

    வேதனை வேதனை வேதனை. காலம் ஒருநாள் மாறும்.

    ReplyDelete
  6. @ Starjan ( ஸ்டார்ஜன் )...

    //இனிமே அவங்க வச்சதுதான் சட்டமாயிருக்கும். அராஜகம் ஜாஸ்தியாயிரும். மதவெறியர்களிடமிருந்து அல்லாஹ்தான் எல்லா மக்களையும் காப்பாற்ற வேண்டும்.

    வேதனை வேதனை வேதனை. காலம் ஒருநாள் மாறும்.//

    இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக காலத்தைக் கொண்டு இறைவன் அவர்களுக்கு பாடம் சொல்வான்! பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான். ஆக்கப் பூர்வமான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் பொறுமையாக ஈடுபடுவதோடு, துஆவும் செய்வோம் நானா! உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  7. இந்த இடுகையில் உண்மை கிடைக்கும் படித்துப்பார்க்கவும். தீர்ப்பின் நீதி புரியும்

    ReplyDelete
  8. பாபரிநாமா என்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோயில்களை இடித்தாகச் செய்திகளோ குறிப்புகளோ இல்லை அதே நூலில் 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹுமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் அருமை மகனே! வகை வகையான மதங்களை பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள் ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமையாக அமைத்துக்கொள் .நீ உனது மனதைக் குறுகிய மதவுணர்வுகள்.தப்பெண்னங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்கள் எல்லா பிரிவினகளும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்பு கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும் .நீ மற்ற சமூகத்தினரின் வழிப்பாட்டுதலங்களை ஒரு போதும் இடித்து சேதப்படுத்தக்கூடாது.நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பாவனாக விளங்க வேண்டும்.இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபேறும் இன்றைய காவிகளின் தீர்ப்பையும் 500 ஆண்டுகளுக்கு முந்தய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டு பாருங்கள் இவரா இராமர் கோயிலை இடித்து இருப்பர்...?

    ReplyDelete
  9. பாபரி மஸ்ஜித் என்பது கோயிலை இடித்து கட்டப் பட்டதா? என்பதற்கு ஆதாரம் இல்லை இது அலகாபாத நீதி மன்றத்தின் தீர்ப்பிலும் கூறப்பட்டுள்ளது.

    அதே நேரம் 1992ல் மஸ்ஜித் தகர்க்கப் பட்டது என்பதற்கு ஆதாரங்களுக்கு குறையில்லை, அதை பற்றி மௌனம் சாதித்த நீதிபதிகள் …. நீதியை குழி தோண்டி புதைத்துள்ளார்க்ள் .

    நம்பிக்கை அடிப்ப்டையில் சொத்துரிமை வழக்கு தீர்ப்பு என்பதைவிட் ஒரு பெரிய முட்டாள்தனமான தீர்ப்பு உலக வரலாற்றிலேயே முன்னுதாரணமற்றது..

    பெரும்பான்மை அடிப்ப்டையில் நீதி என்பது, நீதி எனும் கண்ணியமான வார்த்தையை கொச்சைப்படுத்தி விட்டது…. கேவலம்… வெட்கக் கேடு … கையாலாகாத காலிதனம்.

    ஒரு மஸ்ஜிதோடு பல்லாயிரக் கணக்கில் உயிரைக் குடித்த கயவர்கள், நீதிமன்ற்ம் தீர்ப்பு சொல்ல இயலாது என்று கூறிவந்ததையும் கூட இந்த நீதிபதிகள் பொய்பிக்க செய்து விட்டனர்.

    மேலும் இத்தீர்ப்பை தொடர்ந்து இந்துத்துவ சக்திகள் மீண்டும் காசி, மதுராவை விடுவிக்கும் தங்கள் முழக்கத்தை ஆரம்பித்து விடுமோ எனும் அச்சமும் சிறுபான்மையினருக்கு உள்ளது. பாபரி மஸ்ஜித் இடித்ததை இன்று கோர்ட்டே அங்கீகரித்துள்ளதால் நாளை இதே நிலைமை காசிக்கும் மதுராவுக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வேறு வழியின்றி தங்களுக்கு எப்பாதிப்புமில்லை என்று சொன்னாலும் முஸ்லீம்களுக்கு இத்தீர்ப்பு ஏமாற்றத்தையும் சோகத்தையும் தந்துள்ளது என்பதிலும் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.

    இவர்கள் இங்கு எது செய்தாலும் கேள்வியில்லையென்று தோற்றமளித்தாலும் நிச்சயமாக ஒரு நாள் மறுமை நியாய தீர்ப்பு என்று உள்ளது அதில் இருந்து ஒருவரும் தப்பவே இயலாது.

    எச்சரிக்கை…….

    ReplyDelete
  10. @ smart...

    உங்கள் இடுகையைப் பார்த்தேன். அதில் தீர்ப்பின் நீதி(?) ஒன்றுமில்லை. பிள்ளையை கிள்ளிவிட்டுக் கொண்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவது போல் உள்ளது அந்த இடுகை! கமெண்ட்ஸ்களையும் கூட படித்தேன். இல்லாததைத் திரும்ப திரும்பச் சொல்லி அதையே நம்பவைக்க ஒரு தரப்பினர் முயற்சி செய்யும்போது, அதை அப்பாவித்தனமாக‌ நம்பி ஏற்றுக் கொண்டவர்கள் உங்கள் பார்வையில்'உண்மையான இஸ்லாமியர்கள்'. உண்மையைப் புரிந்து தெளிந்து பேசுபவர்கள் 'முட்டாள்கள்'?.அதை நீங்கள் சொல்லாவிட்டாலும் சொல்வதை ஆதரித்திருக்கிறீர்கள்(rightu. Thanks for comment)என்று! ரொம்ம்ம்...ப நியாயமான(?), உண்மையான இடுகைதான்.

    உங்கள் இடுகையின் கேள்விகளுக்கு அதைவிட நியாயமான, நேர்மையான, உண்மையான பதில்கள் உள்ளன. நேரமிருந்தால் தருவோம். அப்படி தந்தாலும் உண்மையைப் புரிந்துக் கொள்ள முற்படுபவர்கள் உண்மையிலேயே ரொம்ப கம்மிதான்!

    ReplyDelete
  11. @ smart...

    உங்கள் பார்வைக்கு இதோ நடுநிலையான ஒரு இடுகை! நீங்களும் நடுநிலை சிந்தனையோடு அங்கேயும் போய் படித்துப் பாருங்கள்!

    ReplyDelete
  12. @ Barakath...

    உங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன் பரக்கத்! என்ன சொன்னாலும் புரிந்தே புரியாத மாதிரி நடித்து அதில் வெற்றியும் கண்டுவிட்டார்கள். ஆனால் அநியாயமாகப் பெறப்பட்ட இந்த வெற்றியே நீடித்தால், இன்ஷா அல்லாஹ் இறைவனின் இறுதித் தீர்ப்பு நாளில் அதன் பலனை அடைந்துக் கொள்ளட்டும்! இந்த தீர்ப்பு காசிக்கும் மதுராவுக்கும் தூபம் போட்டுவிட்டது. ஆனால் இனியாவது இந்தியாவுக்கு புத்திவரவேண்டும்.

    ReplyDelete
  13. அயோத்தி: நடந்தது இதுதான்!

    http://arulgreen.blogspot.com

    ReplyDelete
  14. @ அருள்...

    //அயோத்தி: நடந்தது இதுதான்!

    http://arulgreen.blogspot.com//

    இதுவரை நடந்தவற்றை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டும் நேர்மையான ஒரு இடுகை!

    ReplyDelete
  15. சூழ்ச்சியாளர்கள் நேர்மையை நம்புவதில்லை..நல்ல இடுகை..

    ReplyDelete
  16. @ அஹமது இர்ஷாத்...

    //சூழ்ச்சியாளர்கள் நேர்மையை நம்புவதில்லை..நல்ல இடுகை..//

    நேர்மை என்றாலே அவர்களுக்கு என்னவென்று தெரியாது, அப்புறம் எங்கே நம்புறது...? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  17. அருமை அஸ்மா! ஒரு அரசியல் சம்பவம் அல்லது அரசியலாக்கப்பட்ட சம்பவம் குறித்து பெண்கள் இவ்வளவு தெளிவாக எழுதுவது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  18. பெரும்பான்மையின் இறைநம்பிக்கை காத்து
    சிறுபான்மையின் இறைநம்பிக்கையை
    இழிவுபடுத்திய தீர்ப்பு.

    சத்தியம் அழிந்து அசத்தியம் வென்றது
    நம்பியிருந்த நீதியோ அநீதி இழைத்தது.

    நிச்சியமாக தீர்ப்புகள் திருத்தப்படும் இறைவனின் சன்னிதானத்தில்..

    ReplyDelete
  19. @ இப்படிக்கு நிஜாம் ...,..

    //ஒரு அரசியல் சம்பவம் அல்லது அரசியலாக்கப்பட்ட சம்பவம் குறித்து பெண்கள் இவ்வளவு தெளிவாக எழுதுவது மகிழ்ச்சியளிக்கிறது.// நிறைய எழுத தோன்றுகிறது. நானே எனக்கு விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகளாலும் முதல் கடமையாகவுள்ள குடும்ப பொறுப்புகளாலும் அதிகமாக எழுத முடிவதில்லை :)

    //தொடர்ந்து எழுதுங்கள்.//இன்ஷா அல்லாஹ்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நானா!

    ReplyDelete
  20. @ அன்புடன் மலிக்கா...

    //சத்தியம் அழிந்து அசத்தியம் வென்றது
    நம்பியிருந்த நீதியோ அநீதி இழைத்தது//

    இது நிரந்தரம் அல்ல; இதற்கும் ஒரு தீர்வுண்டு விரைவில், இன்ஷா அல்லாஹ்! கவிதையான உங்கள் கருத்துக்களுக்கும் உங்கள் வருகைக்கும் நன்றி தோழி!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை