அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday 15 October 2010

இஸ்லாத்தில் இல்லாத முஸ்லிம்கள்!

நம்மில் பலர், தங்களையும் அறியாமல் அல்லாஹ்வுக்கு இணையாக மனிதர்களில் சிலரைக் கருதிக் கொண்டிருப்ப‌தும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் எல்லாமே மனிதர்களில் சிலருக்கு இருப்பதாக நம்பி, அதன் வழியிலே தங்களின் வாழ்வை அமைத்துக் கொண்டிருப்பதும் அதிர்ச்சி தரும் உண்மைகளாகும்.

அறியாமல் செய்த தவறுகளை அல்லாஹ் மன்னிப்பான் என்பது இணை வைத்தலுக்கு பொருந்தாது. ஏனெனில் அல்லாஹ் தனது திருமறையிலே,

"நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்;. இது அல்லாத(மற்ற பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான். எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்." (அல்குர்ஆன் 4:116) என்று கூறுகிறான்.

ஆனால் இன்றைக்கு இஸ்லாம் மார்க்கத்தை அறிந்துக் கொள்வதற்கான சகல வழிகளும் திறந்திருக்கும்போது,  தெளிவான பாதை கண் முன்னே பளிச்சிடும் போது, முன்னோர் கொண்டு வந்ததுதான் மார்க்கம் என்று கண்களை இறுக மூடிக் கொண்டு, செல்லுமிடம் பற்றி கவலைக் கொள்ளாமல் தவறான பாதையில்தான் பயணிப்பேன் என்று அடம் பிடிப்பவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"நான் உங்களை தெள்ளத் தெளிவான ஆதாரத்தின் மீது விட்டுச் செல்கின்றேன். அதன் இரவும் பகலைப் போன்றது. எனக்குப் பின்னால் அதைவிட்டும் திசை மாறுபவர் அழிந்தவர் ஆவார்." 
             (அறிவிப்பாளர்: இர்பால் பின் ஸாரயா; ஆதாரம்: இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத்)

சில நாட்களுக்கு முன் பத்திரிக்கைகளில் வெளியான ஒரு சம்பவத்தைப் பார்த்து, 'இவர்களுக்கு எந்தளவுக்கு மார்க்கம் எடுத்துச் சொல்லப்படாமல் இருந்திருந்தால் இந்த நிலைக்கு ஆளாகியிருப்பார்கள்! இம்மையில் கஷ்டப்பட்ட இவர்கள் தங்க‌ளின் மறுமை வாழ்வையும் தண்டனைக்குரியதாக ஆக்கிக் கொண்டார்களே! இவர்கள் தெளிவான மார்க்கத்தை தூய்மையான முறையில் புரிந்துக் கொள்ள முயலாதது அவர்களின் குற்றமாக இருந்தாலும், இவர்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்லவேண்டிய பொறுப்பில் இருந்தவர்களும் இப்போது அல்லாஹ்வுக்கு பதில் சொல்லும் நிலைக்கு ஆளாகிவிட்டார்களே!' என்றெல்லாம் நாம் கைசேதப்படாமல் இருக்க முடியவில்லை.

இதோ பத்திரிக்கையில் வந்த அந்த செய்தி: 


"ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் புகழ் பெற்ற தர்கா உள்ளது. உத்தரபிரதேசம் அலகாபாத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 1 1/2 ஆண்டாக அஜ்மீரில் வசித்து வந்தனர். அவர்கள் குடும்பத்தில் சில கஷ்டங்கள் ஏற்பட்டன. இதற்கு தீய சக்திகளின் பாதிப்புதான் காரணம் என்று கருதினார்கள்.

இது சம்பந்தமாக அவர்கள் ஒருவரிடம் குறி கேட்டுள்ளனர். அதற்கு அவர் 40 நாட்கள் எதுவும் சாப்பிடாமல் அஜ்மீர் தர்கா முன்பு உண்ணாவிரதம் இருந்தால் தீய சக்தி விலகிவிடும் என்று கூறினார்.

இதை நம்பி அந்த குடும்பத்தை சேர்ந்த 12 பேர் அஜ்மீர் தர்கா முன்பு உண்ணாவிரதம் தொடங்கினார்கள். 39 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த நிலையில் அவர்களில் 3 பேர் உயிர் இழந்தனர். 25 வயது, 22 வயது கொண்ட 2 வாலிபர்களும், 16 வயது கொண்ட இளம் பெண்ணும் இறந்தனர்.

மற்ற 9 பேரும் உயிருக்கு போராடியபடி இருந்தனர். இதை அறிந்த தர்கா நிர்வாகத்தினர் 9 பேரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்."


அறிவுப் பூர்வமான இஸ்லாமிய மார்க்கத்தில் நல்லவையும் தீயவையும் தெளிவாக்கப்பட்டுவிட்டன. இரண்டையும் பிரித்தறியக்கூடிய‌ தெளிவான வழிகாட்டுதல்களான குர்ஆனும் ஹதீஸும் நம்மிடம் இருக்கிறது. இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, இறைவன் அல்லாத‌வர்களுக்கு வணக்க வழிபாடுகளில் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் பெயரால் கற்பனைக்கு அப்பாற்பட்டு இட்டுக்கட்டப்பட்ட‌ கட்டுக் கதைகளை நம்பி, இஸ்லாத்தையே களங்கப்படுத்துவது வேதனையிலும் வேதனை!

நாம் பின்பற்றி வாழக்கூடிய கொள்கைக் கோட்பாடுகளும், அன்றாடம் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகளும், நம்முடைய அனைத்து சிந்தனை மற்றும் செயல்பாடுகளும் சரியானவை தானா என்பதை திருக்குர்ஆனின் அடிப்படையிலும், இறைத்தூதர்(ஸல்)அவர்களின் தெளிவான வழிகாட்டுதலின் அடிப்படையிலும் ஒவ்வொருவரும் மறு பரிசீலனை செய்துப் பார்த்தால், எவ்வளவு பெரிய ஷிர்க் என்னும் வழிகேட்டில் நாம் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை நிச்சயம் புரிந்துக் கொள்ளமுடியும்.

தீமைகள் குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி குர்ஆனும் ஹதீஸ்களும் நமக்கு விரிவாக விளக்கிவிட்டன. அவற்றைத் தெளிவாகப் புரிந்துக் கொள்ள‌ முயற்சி செய்து, அதன்படி தம் வாழ்க்கை பாதையை அமைத்துக் கொண்டவர்கள், அவற்றிலிருந்து முற்றிலும் விலகி, பாவங்களிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள முடியும். ஆனால் நன்மைகள் என்ற பெயரில் தீமைகளை நியாயப்படுத்தி ஷைத்தான் நம்மை வழி கெடுப்பான். நன்மையான காரியங்கள் என்ற பெயரில் நம்மிடையே எவை வழக்கத்தில் உள்ளதோ அதில்தான் அதிக கவனமும் எச்சரிக்கையும் நமக்கு தேவைப்படுகிறது.

நல்ல பொருட்கள் என்று நம்பி நாம் புழங்கக் கூடியவற்றில்தான் போலிகள் கலக்கப்பட்டு விற்பனைக்கு வரும். அதுபோலவே இறை வணக்கங்களில் ஈடுபாடு உடைய‌வர்களை வழி கெடுப்பதில்தான் ஷைத்தானுடைய வெற்றி இருக்கிறது. இதுதான் சுவர்க்கத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய நேரான பாதை என்று நரகத்தின் வழியை ஷைத்தான் அழகாக்கிக் காட்டுவான்.

ஏற்கனவே தனது கட்சியில் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பவர்கள் குறித்து எந்தக் கட்சித் தலைவரும் அதிக அக்கறைச் செலுத்துவதில்லை. புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதில்தான் கட்சித் தலைவரின் முழு கவனமும் இருக்கும். அதுபோல யாரெல்லாம் இறைவழிபாட்டை நேசிக்கிறார்களோ அவர்களைதான் தன் பக்கம் திசை திருப்புவதை ஷைத்தான் விரும்புவான். ஆனால், குர்ஆனையும் ஹதீஸையும் உறுதியான ஈமானோடு கடைப்பிடிப்பவர்கள் அவனுடைய இந்த சூழ்ச்சிகளுக்கெல்லாம் (இன்ஷா அல்லாஹ்) அடிபணியமாட்டார்கள். அதேசமயம் இதற்கெல்லாம் ஆளாகக்கூடியவர்கள், குர்ஆனையும் ஹதீஸையும் கண் திறந்து பார்க்காதவர்கள்தான்! காது கொடுத்து கேட்காதவர்கள்தான்!

இறைவனும், இறைத்தூதர்(ஸல்)அவர்களும் எவற்றையெல்லாம் நன்மை என்று நமக்கு அறிமுகம் செய்தார்களோ அவை மட்டுமே நன்மைகளாகும். அவற்றைத் தவிர மற்றவர்களால் தம் சுய விருப்பத்திற்கு இவை நல்லவை என்று பட்டியலிடப்ப‌ட்டவை எதுவும் நல்ல வணக்கங்களாக ஆகாது. சொல்லக்கூடியவர் எவ்வளவு பெரிய பண்டிதராயினும் சரிதான்! ஆகவே எனதன்பு சகோதர, சகோதரிகளே! இதை உணர்ந்து, இறையோனுக்கு இணைவைத்தல் என்ற‌ மன்னிப்பே இல்லாத அந்த மாபெரும் பாவத்திலிருந்து மீட்சி பெற்றவர்களாக, இறுதி மூச்சுவரை ஏக இறைவனை மட்டுமே வணங்கக் கூடியவர்களாக வல்ல அல்லாஹுத்தஆலா நம் அனைவரையும் வாழ வைப்பானாக!

14 comments:

  1. சுப்ஹானல்லாஹ், சுப்ஹானல்லாஹ்....என்ன சொல்வ‌தென்றே தெரியவில்லை. தர்காக்காரர்களுக்கும் இவ்வளவு பேர் இறந்த பின்தான் புத்தி வந்ததா? சுப்ஹானல்லாஹ்...இதெல்லாம் நடப்பதன் அர்த்தம் முஸ்லிமக்ளே இன்னும் திருக் குர்'ஆனை சரியான வடிவில் படிக்காததும் அதன் அர்த்தங்களை விளங்கிக் கொள்ளாததுமே ஆகும். காதியானிக்களை எப்படி காஃபிர் என்று அரபில் ஃபத்வா கொடுக்கப்பட்டதோ அதே போல தர்காவை வணங்குபவர்களுக்கும் தரவேண்டும். இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை இவர்கள் இத்தனை தீவிரமாக செய்யும்போது மற்ற உலமாக்களெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மாயிருந்தால் பின் என்னவாகும்? சுப்ஹானல்லாஹ்...மனம் ஆற மாட்டேன் எஙிறது. இறுதியில் இறக்கும் வேளையிலும் அல்லாஹ்விற்கான அமலை செய்யாமல் ஷிர்க்கில் இறந்துள்ளார்களே என்பதுதான் இன்னும் வேதனை தருகிறது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.

    ReplyDelete
  2. @ அன்னு...

    //காதியானிக்களை எப்படி காஃபிர் என்று அரபில் ஃபத்வா கொடுக்கப்பட்டதோ அதே போல தர்காவை வணங்குபவர்களுக்கும் தரவேண்டும். இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை இவர்கள் இத்தனை தீவிரமாக செய்யும்போது மற்ற உலமாக்களெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மாயிருந்தால் பின் என்னவாகும்?//

    உலமாக்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதற்கே அவர்களுக்கு கேள்விக் கணக்கு உண்டு இறைவனிடத்தில்! இதில் வேறு இந்த தர்கா வழிபாட்டுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள் சுன்னத் ஜமாஅத்தின் ஆலிம்கள்! இவர்களை என்ன சொல்வது?

    //சுப்ஹானல்லாஹ்...மனம் ஆற மாட்டேன் எஙிறது. இறுதியில் இறக்கும் வேளையிலும் அல்லாஹ்விற்கான அமலை செய்யாமல் ஷிர்க்கில் இறந்துள்ளார்களே என்பதுதான் இன்னும் வேதனை தருகிறது//

    ஷிர்க் வைத்த நிலையில் இறந்து போகக் கூடியவர்களுக்காக பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை அன்னு! ஆனால், அவர்களுக்கு பாவ மன்னிப்புக் கூட நாம் தேடக்கூடாது எனும்போது...... மனதிற்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது. மக்கள் இதை நல்ல முறையில் புரிந்து, மரணத்திற்கு முன் திருந்திக்கொண்டால் சரி!

    ReplyDelete
  3. நல்ல தொகுப்பு அஸ்மா.. இவற்றையெல்லாம் என்னவென்று சொல்வது.. உலகில் எல்லா திசைகளிலும் இவ்வாறான இனைவைப்புகள் இன்னும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

    அஸ்தவ்பிருல்லாஹ்..

    ReplyDelete
  4. @ Riyas...

    //உலகில் எல்லா திசைகளிலும் இவ்வாறான இனைவைப்புகள் இன்னும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

    அஸ்தவ்பிருல்லாஹ்..//

    ஆமா சகோ! இணை வைத்தலைவிட்டு தவிர்ந்து வாழ நம்மால் முடிந்தவரை எடுத்துச் சொல்வோம். நாமும் இதில் ரொம்ப ஜாக்கிரதையாக வாழ கடைசிவரை அல்லாஹ்தான் உதவி செய்யணும், இன்ஷா அல்லாஹ்! வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. நானும் செய்தித்தாளில் வாசித்து, மெயிலில் பகிர்ந்தேன் சில நண்பர்களோடு.. அதிர்ச்சியைவிட, ஆச்சர்யம்தான் மேலிடுகிறது.. இப்படியும் ஆட்கள் இருக்கிறார்களே என்று.. இறைவன் காக்கட்டும் நம் ஈமானை..

    ReplyDelete
  6. தமிழகத்தில் உள்ளது போல் தவ்ஹீத் எழுச்சி மற்ற மாநிலங்கலில் இல்லை இன்ஸா அல்லாஹ் உலகம் முழுவதும் தவ்ஹீத் சிந்தனையுள்ள மக்களாக மாற இறைவன் அருள் புரிவானக.

    ReplyDelete
  7. @ ஹுஸைனம்மா...

    //நானும் செய்தித்தாளில் வாசித்து, மெயிலில் பகிர்ந்தேன் சில நண்பர்களோடு.. அதிர்ச்சியைவிட, ஆச்சர்யம்தான் மேலிடுகிறது.. இப்படியும் ஆட்கள் இருக்கிறார்களே என்று.. இறைவன் காக்கட்டும் நம் ஈமானை..//

    அப்படியா... நீங்களும் படித்தீர்களா? இப்படிப்பட்ட‌ ஆட்கள் இருப்பதற்கு காரணமே மார்க்கம் தெரிந்தவர்கள் சரியான முறையில் அவர்களுக்கு எடுத்துச் சொல்லாததும், எடுத்துச் சொல்லப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளாத மனப்பாங்குமேயாகும். அல்லாஹ்தான் இதுபோன்ற நிலைகளை விட்டும் நம் அனைவரையும் பாதுகாக்கவேண்டும். கருத்துக்கு நன்றி மிஸஸ் ஹுஸைன்!

    ReplyDelete
  8. @ ராஜவம்சம்...

    //தமிழகத்தில் உள்ளது போல் தவ்ஹீத் எழுச்சி மற்ற மாநிலங்கலில் இல்லை இன்ஸா அல்லாஹ் உலகம் முழுவதும் தவ்ஹீத் சிந்தனையுள்ள மக்களாக மாற இறைவன் அருள் புரிவானக//

    உண்மையில் நாம் பெருமைப்படவேண்டிய விஷயம், மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் தவ்ஹீத் கொள்கை நல்ல முறையில் எழுச்சி பெற்றுள்ளது. அதேபோல் எல்லா மக்களையும் இறைவன் ஆக்குவதற்கு நீங்கள் சொல்வதுபோல் துஆ செய்வோம், இன்ஷா அல்லாஹ்! வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  9. nice article.

    fews peoples are keeping Muslim name, they dont know what is right and wrong :(... Insha allah, this will be change.

    ReplyDelete
  10. @ ..:: Mãstän ::.....

    //nice article.

    fews peoples are keeping Muslim name, they dont know what is right and wrong :(... Insha allah, this will be change//

    இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்ததினால் முஸ்லிம் பெயரோடு, ஆனால் இஸ்லாத்தின் சட்டங்களை சரியாக புரியாமல் வாழும் மக்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்வது நாம் ஒவ்வொருவர் மீதும் கடமையாக உள்ளது. நீங்கள் சொல்வதுபோல் இன்ஷா அல்லாஹ் இந்த நிலை விரைவில் மாற இறைவன் துணைபுரிவானாக!

    தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி சகோ! (முடிந்தால் அடுத்த முறை தங்களின் கருத்துக்களை தமிழில் பதியவும். நல்ல கருத்துக்கள் அனைவரையும் சென்றடையுமே, அதனால்தான்.)

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    லாத்தா நலமுடன் இருக்கிறீர்களா? மீண்டும் உங்களிடமிருந்து ஒரு காரசாரமானப்பதிவு இறைவனின் தோற்றம், விதி ஆகிய இரண்டை தவிர அனைத்து செய்கைகளுக்கும் இஸ்லாம் தர்க்கரீதியாகவும், அறிவுப்பூர்வமாகவும் ஆதாரம் அளிக்கும்போது இதைப்போன்ற இஸ்லாத்தின்(?) பெயரால் நடக்கும் இத்தகைய முடச்செயல்கள் அவர்களின் அறியாமையே காட்டுகிறதா ?அல்லது அறிந்தே தவறு செய்வதை காட்டுகிறதா? என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது.
    நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம். -8:22

    ReplyDelete
  12. @ G u l a m...

    //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் லாத்தா நலமுடன் இருக்கிறீர்களா?//

    வ அலைக்குமுஸ்ஸலாம்! அல்ஹம்துலில்லாஹ், நாங்க நலமா இருக்கிறோம் தம்பி! நீங்க நலமா?

    //மீண்டும் உங்களிடமிருந்து ஒரு காரசாரமானப்பதிவு...
    ...இதைப்போன்ற இஸ்லாத்தின்(?) பெயரால் நடக்கும் இத்தகைய முடச்செயல்கள் அவர்களின் அறியாமையே காட்டுகிறதா ?அல்லது அறிந்தே தவறு செய்வதை காட்டுகிறதா? என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது//

    அறியாமையாக இருந்தாலும் அறிந்துக் கொண்டே தவறு செய்தாலும் சிந்திக்கும் தன்மையோடு படைக்கப்பட்ட‌ மனிதன் சிந்திக்கத் தவறியது அவனுடைய குற்றமல்லவா? அல்லாஹ்தஆலா தன் படைப்பினங்களுக்கு அணுவளவும் அநியாயம் செய்யமாட்டான் அல்லவா? அப்போ தண்டனைக்குரிய குற்றவாளிகள் யாரோ அவர்கள்தான் அதற்கு பொறுப்பாளிகள்!

    ReplyDelete
  13. அஸ்மா,

    http://muthusidharal.blogspot.com/2010/11/2.html
    இந்த லின்க்கையும் அதில் நான் எழுதியுள்ள கமெண்ட்டையும், அதற்கு பதிலில் மனோ அக்கா எழுதிய பதிலில் மசூதி செய்யும் வேலையையும் பாருங்கள். திருத்த வேண்டிய மஸ்ஜித் நிர்வாகமே இப்படி குஃப்ருக்கு இடம் கொடுத்தால் நாம் எங்கே போவது??

    ReplyDelete
  14. @ அன்னு...

    அடப் பாவமே! பார்த்தேன் அன்னு. இதற்கெல்லாம் சப்பைக்கட்டு கட்டும் சுன்னத் ஜமாஅத்தினரைதான் நாம் கேட்கணும். ஆலிம்களே கூடும் என்கிறார்கள் எனும்போது, பாமரர்கள் வருமானம் வரும் வழியாக இதைப் பயன்படுத்திக்கொண்டு பாவத்திற்கு ஆளாகிறார்கள்! அந்த பாவங்கள் அனைத்திற்கும் துணை போகும் அந்த ஆலிம்களும் பள்ளி நிர்வாகிகளும் அல்லாஹ்வுக்கு நிச்சயம் பதில் சொல்லிதான் ஆகணும்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை