அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Sunday 31 October 2010

இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை (தொடர் 1)


நபி(ஸல்)அவர்கள் ஏகத்துவக் கொள்கையை எடுத்துரைக்க ஆரம்பித்த சமய‌ம், அண்ணல் நபியவர்களும் அவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களும் புனித கஃஅபாவில் நுழைவதற்கும் அங்கு தொழுவதற்கும் தடை விதிக்கப்பட்டனர். அதை மீறிச் செல்பவர்கள் தாக்கப்பட்டனர். குறைஷிகளின் இப்படிப்பட்ட அட்டூழியங்கள் ஹிஜ்ரி 6 - ம் ஆண்டு வரை தொடர்ந்துக் கொண்டிருந்தது. அதன் உச்சக்கட்டமாக, உம்ரா செய்வதற்காக‌ வந்த மக்கா மண்ணின் மைந்தரான நபி(ஸல்)அவர்களும் அவர்களின் தோழர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். எந்த வகையிலும் முஸ்லிம்களை மக்காவினுள்ளே அனுமதிக்க மக்கத்து காஃபிர்கள் தயாராக இருக்கவில்லை. இதன் விளைவாக இந்நிகழ்ச்சியின் இறுதியில், இறைவனின் உதவியினாலும் இறைத்தூதர்(ஸல்) அவர்களது நுண்ணறிவு மிக்க நடத்தையினாலும் ஏற்பட்ட ஓர் உடன்படிக்கை தான் இஸ்லாமிய வரலாற்றில் 'ஹுதைபிய்யா உடன்படிக்கை' என்று அழைக்கப்படுகின்றது. ‍‍‍‍‍‍‍‍‍அந்த நிகழ்ச்சி நடந்தது, இப்போது நாம் எந்த மாதத்தில் இருந்துக் கொண்டிருக்கிறோமோ இதே 'துல்கஃதா' மாதத்தில்தான். இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வு என்பதாலும் அதைப்பற்றி தெரியாதவர்களும் தெரிந்துக் கொள்வதற்காகவும் ஹுதைபிய்யா உடன்படிக்கை நடந்த இந்த துல்கஃதா மாதத்தில் இதைப் பதிவிடுவது பொருத்தமாக அமையும் இன்ஷா அல்லாஹ்!

ஹிஜ்ரி 6 - ம் ஆண்டில் நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்வதற்காக மக்காவை நோக்கி வரும்போது அவர்களுடன் சுமார் 1500 தோழர்கள் இருந்தனர்.

"ஹுதைபிய்யா தினத்தன்று நபி (ஸல்) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தவர்கள் ஆயிரத்து ஐநூறு பேர் இருந்தனர்" என்று ஜாபிர் அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.

அறிவிப்பவர்: கத்தாஹ்(ரலி); நூல்:புகாரி (இன்னொரு அறிவிப்பில் 1400 பேர் என்றும் கூறப்பட்டுள்ளது)

மக்கத்து நிராகரிப்பாளர்கள் முஸ்லிம்கள் வருவதைக் கேள்வியுற்று, அவர்களை மக்காவினுள்ளே உம்ரா செய்ய அனுமதிப்பது என்பது தாங்கள் அதுவரை செய்துவந்த போராட்டத்தில் தாங்கள் தோல்வியை தழுவியதாகிவிடும், முஹம்மது(ஸல்)அவர்கள் தம் பலத்தால் மக்காவினுள் நுழைந்துவிட்டார் என்று மக்கள் பேசிக் கொள்வார்கள் என்று எண்ணி, இதனைத் தடுக்க தங்களால் இயன்ற‌ அனைத்து முயற்சிகளிலும் இறங்குகிறார்கள்.

நபி(ஸல்)அவர்கள் இஹ்ராம் அணிந்து உம்ராவுக்குச் சென்று கொண்டிருந்த போது, உம்ராச் செய்யவிடாமல் தடுப்பதற்காகக் குறைஷிகள் படை திரட்டியுள்ளதாக நபி(ஸல்)அவர்கள் ஏற்படுத்தியிருந்த உளவுத் துறை மூலமாக செய்தி கிடைக்கின்றது. புகாரி கிரந்தத்தில் இதுபற்றி மிஸ்வர் பின் மக்ரமா(ரலி)அவர்கள் அறிவிக்கக்கூடிய 4179 வது ஹதீஸின் தொடர்ச்சியில்,

நபி(ஸல்)அவர்கள் அனுப்பி வைத்த உளவாளி வந்து கூறிய செய்தியை அறிந்தவுடன் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள், "மக்களே! இறையில்லத்திற்குச் செல்ல விடாமல் நம்மைத் தடுக்க நினைக்கும் இவர்களின் குடும்பத்தாரிடமும் சந்ததிகளிடமும் நான்(போர் தொடுக்கச்)செல்ல வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்களா? நம்மிடம் அவர்கள்(போர் புரிய)வந்தால், (அதற்கு நாம் பொறுப்பல்ல. நாம் அனுப்பி வைத்த) உளவாளியை(யும்) அந்த இணை வைப்பாளர்களுக்குத் தெரியாமல் அல்லாஹ் ஆக்கிவிட்டான். அவ்வாறு அவர்கள் வராவிட்டால் அவர்களை நாம் இழப்புக்குள்ளாக்கிவிட்டுச் செல்வோம்" என்று கூறினார்கள்.

அப்போது அபூபக்க‌ர்(ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த இறையில்லத்தை நாடிதானே நீங்கள் புறப்பட்டு வந்தீர்கள். யாரையும் கொல்லவோ எவரிடத்திலும் போரிடவோ நீங்கள் வரவில்லையே! எனவே, இறையில்லத்தை நோக்கிச் செல்லுங்கள். இறையில்லத்திற்குச் செல்லவிடாமல் நம்மை எவன் தடுக்கின்றானோ அவனிடம் நாம் போரிடுவோம்" என்று (ஆலோசனை) கூறினார்கள். பிறகு நபி(ஸல்)அவர்கள், "அல்லாஹ்வின் பெயரால் பயணத்தைத் தொடருங்கள்" என்று கூறினார்கள்.

இதனிடையே நபி(ஸல்)அவர்கள் தாங்கள் உம்ரா செய்வதற்காகதான் மக்காவிற்கு வருகிறோம் என்பதை விளக்கிச் சொல்லும்படியும், அமைதியாக உம்ரா செய்து விட்டுத் திரும்புவதாக பேச்சு வார்த்தை நடத்திவிட்டு வரும்படியும் உஸ்மான்(ரலி)அவர்களை அனுப்பி வைக்கின்றார்கள்.

அதற்கு முன்பு...

நபி(ஸல்)அவர்கள் குஸாஆ கிளையினரைச் சார்ந்த கிராஷ் பின் உமைய்யாவை ஸஃலப் என்ற ஒட்டகத்தின் மீது அமர்த்தி முதலில் அனுப்பி வைத்திருந்தார்கள். அவர் மக்காவிற்குள் நுழைந்ததுமே குறைஷிகள் அவரது ஒட்டகத்தை அறுத்து அவரைக் கொலை செய்யவும் நினைத்தனர். ஆனால் பனூ கினானா கிளையைச் சேர்ந்தவர்கள் அதைச் செய்யவிடாமல் குறைஷிகளைத் தடுத்துவிட்டனர். (குறைஷிகளிடமிருந்து தப்பித்த) கிராஷ், நபி(ஸல்)அவர்களிடம் வந்தார்.

இதனால் உமர்(ரலி)அவர்களை அனுப்பி வைப்பதற்காக நபி(ஸல்)அவர்கள் அழைத்தார்கள். அதற்கு உமர்(ரலி)அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! குறைஷிகள் என்னைக் கொன்று விடுவார்கள் என்று அஞ்சுகின்றேன். (என்னுடைய) 'பனூ அதீ' குடும்பத்திலிருந்து என்னைக் காப்பாற்றுபவர் யாருமில்லை. நான் குறைஷிகள் மீது கொண்டிருக்கும் விரோதத்தையும் கடுமையையும் பனூ அதீ குடும்பம் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றது. எனினும் நான் என்னைவிடக் கண்ணியமிக்க ஒருவரை உங்களுக்குக் காட்டுகிறேன். அவர்தான் உஸ்மான் பின் அஃப்பான்" என்று கூறினார்கள்.

உடனே நபி(ஸல்) அவர்கள், உஸ்மான்(ரலி)அவர்களை அழைத்து, தாம் போர் செய்வதற்காக வரவில்லை; கஃஅபாவின் கண்ணியத்தை மதித்தவனாக அதைச் சந்திக்கவே (உம்ரா செய்யவே) வந்திருக்கிறேன் என்று தெரிவித்து வருமாறு அவரைக் குறைஷிகளிடம் அனுப்பி வைத்தார்கள்.

உஸ்மான்(ரலி) புறப்பட்டு மக்கா வந்து சேர்ந்தார்கள். அவரை அபான் பின் ஸயீத் வந்து சந்திக்கிறார். உஸ்மான்(ரலி)அவர்களை வாகனத்திலிருந்து இறக்கி, தமது (வாகனத்தின்) முன்னால் அமர வைத்துக் கொண்டு, தான் பின்னால் இருந்து அபான் பின் ஸயீத் அடைக்கலம் கொடுக்கிறார்.

கடைசியாக உஸ்மான்(ரலி), நபி(ஸல்)அவர்கள் சொல்லியனுப்பிய‌ செய்தியைச் சமர்ப்பிக்கிறார்கள். அதன் பிறகு அபூ சுப்யானிடமும், மற்ற குறைஷிகளின் பெரும் புள்ளிகளிடமும் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செய்தியைத் தெரிவிக்கின்றார்கள்.

அதற்கு குறைஷித் தலைவர்கள், "நீ தவாஃப் செய்ய வேண்டும் என்று விரும்பினால் தவாஃப் செய்து கொள்! (முஹம்மதின் விவகாரத்தை இங்கு பேசாதே!)" என்று சொல்லி விடுகின்றனர். அதற்கு உஸ்மான் (ரலி), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தவாஃப் செய்யாத வரை நான் செய்ய மாட்டேன்" என்று பதிலளிக்கிறார்கள். உடனே அவர்கள் உஸ்மான்(ரலி)அவர்களை திரும்பி வரவிடாமல் தடுத்து வைக்கின்றார்கள். அப்போது உஸ்மான்(ரலி)படுகொலை செய்யப்பட்டதாக நபி(ஸல்)அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தகவல் கிடைக்கின்றது.

அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி); நூல்: அஹ்மத்

தொடரும்... இன்ஷா அல்லாஹ்!


ஹுதைபிய்யா தொடரின் இரண்டாம் பகுதிமூன்றாம் பகுதிநான்காவது பகுதிஐந்தாவது பகுதி



11 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ், துல் க'அதா மாதம் முடியப் போகும்போது அருமையான ஒரு தொடரை ஆரம்பித்துள்ளீர்கள். அல்லாஹ் அதை பயனுள்ளதாக ஆக்கி ஈருலகின் சவாபும் தருவானாக.

    ReplyDelete
  2. துல் க'அதா மாதம் முடியப்போகும் தருவாயில் அருமையான ஒரு பதிவு. தொடருங்கள் இன்ஷா அல்லாஹ். :)

    ReplyDelete
  3. என்ன திடீர்னு கமெண்ட் மாடரேஷன் போட்டுடீங்க? அனானிங்க தொல்லை ஏதும் இருக்கா என்ன?

    ReplyDelete
  4. நல்ல விஷயம்.. தொடருங்கள்..

    ReplyDelete
  5. @ அன்னு...

    //துல் க'அதா மாதம் முடியப்போகும் தருவாயில் அருமையான ஒரு பதிவு. தொடருங்கள் இன்ஷா அல்லாஹ். :)//

    துல்கஃதா மாத ஆரம்பத்திலேயே எழுதவேண்டும் என்று ஒரு மாதத்தை ஓட்டிவிட்டு இப்போ அவசரமாக உட்கார்ந்து தொகுக்கிறேன் அன்னு :( இப்போதாவது இந்த தொடரைப் பதிய முடிந்ததற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன், அல்ஹம்துலில்லாஹ்!

    ReplyDelete
  6. @ அன்னு...

    //என்ன திடீர்னு கமெண்ட் மாடரேஷன் போட்டுடீங்க? அனானிங்க தொல்லை ஏதும் இருக்கா என்ன?//

    ஆமா அன்னு! நேற்று ரொம்ப நேரமா ப்ளாக்கை பார்க்காம பிறகு வந்து பார்த்தபோது ஒரு அனானிமஸ் கமெண்ட். அதைப் பார்த்து கடுப்பாகி டெலிட் பண்ணிவிட்டு சிறிது நேரத்தில் பார்த்தால், மீண்டும் அதே அனானிமஸ்! இது வேலைக்கு ஆகாது என்று கமெண்ட் மாடரேஷன் போட்டுவிட்டு, ஒரு ஆள் மீது சந்தேகம் வந்து ஃபோன் பண்ணிக் கேட்கலாம் என்று டெலிஃபோனை எடுத்து ட்ரை பண்ணிக் கொண்டிருக்கும்போது, நான் நினைத்த அந்த ஃபேமிலியிருந்தே ஃபோன் வருகிறது செல்லுக்கு! அப்போதே நான் நினைத்தது கன்ஃபார்ம் ஆகிப் போய் ஃபோனை எடுத்தால் அந்தப் பக்கம் ஒரே சிரிப்பலை! அது வேறு யாருமில்ல அன்னு, எல்லாம் என் ஃபேமிலி மக்காதான் :) என் குடும்பமே என் ப்ளாக்கைப் பார்க்கிறது அன்னு. என்னை கலாய்க்க இப்படி கமெண்ட்ஸ் போட்டு... ஹூம்.. என் நேரம்தான் வேஸ்ட். நீங்க கேட்டதும் கொஞ்ச நாளைக்கு கமெண்ட் மாடரேஷனை நீக்கிடலாம் என்று இப்போ நீக்கிட்டேன்.

    ReplyDelete
  7. @ ஹுஸைனம்மா...

    //நல்ல விஷயம்.. தொடருங்கள்..// இன்ஷா அல்லாஹ்! வருகைக்கு நன்றி மிஸஸ் ஹுஸைன்.

    ReplyDelete
  8. அல்ஹம்துலில்லாஹ்.இஸ்லாமிய வரலாற்று நிகழ்ச்சிகளை தினந்தோறும் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

    ReplyDelete
  9. @ sumraz...

    //அல்ஹம்துலில்லாஹ்.இஸ்லாமிய வரலாற்று நிகழ்ச்சிகளை தினந்தோறும் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது//

    தொடர்ந்து பாருங்கள் சகோ. வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  10. ஹ ஹ... நல்லதொரு குடும்பம்னு பாடத்தான் தோணுது., நானும் எப்படிடா அனானிக்கு ஃபோன் செய்வீங்கன்னு யோசிச்சேன் முதல்ல, அப்புறம்தான் புரிஞ்சது உங்க பிரச்சனை. எல்லோரும் உங்களுக்கு சப்போர்ட் செஞ்சு படிக்கறாங்கன்னா இன்னும் நிறைய எழுதுங்க. குடூம்பத்தினர்க்கும் என் ஸலாம்... :)

    ReplyDelete
  11. @ அன்னு...

    //ஹ ஹ... நல்லதொரு குடும்பம்னு பாடத்தான் தோணுது., நானும் எப்படிடா அனானிக்கு ஃபோன் செய்வீங்கன்னு யோசிச்சேன் முதல்ல, அப்புறம்தான் புரிஞ்சது உங்க பிரச்சனை// குடும்பத்தில் இப்படியும் சில‌ அன்புத் தொல்லை அன்னு :))

    //எல்லோரும் உங்களுக்கு சப்போர்ட் செஞ்சு படிக்கறாங்கன்னா இன்னும் நிறைய எழுதுங்க. குடூம்பத்தினர்க்கும் என் ஸலாம்... :)//

    நிறைய எழுத துஆ செய்யுங்கள். என் குடும்பத்தினருக்கு சலாம் சொல்லவா...? நிச்சயம் சொல்கிறேன், ஆனா கொஞ்ச கொஞ்சமாகதான் சொல்ல முடியும். ஏன்னா மிக நெருங்கிய குடும்பமே (மாஷா அல்லாஹ்) 20 குடும்பம்போல் உள்ளது இங்கு. யாரை விட்டு யாருக்கு சொல்ல.. :-)

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை