அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday 29 October 2011

அரஃபா நோன்பு


ரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தவிர, வருடத்தின் மற்ற சில நாட்களில் நோன்பு வைப்பதும் இஸ்லாத்தில் வரவேற்கத்தக்க, வலியுறுத்தப்பட்ட வணக்கங்களாக உள்ளன. அவற்றில் மிக முக்கியமான நோன்புதான் 'அரஃபா நோன்பு' என்று சொல்லக்கூடிய நோன்பாகும்.

இந்த நோன்பை, இஸ்லாமிய மாதங்களில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று நோற்கும்படி நபி(ஸல்) அவர்கள் நம‌க்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.

அபூ கதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், 
                   துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                         நூல்:முஸ்லிம்(2151)

இந்த அரஃபா நோன்பை, அவ்வருடம் யார் ஹஜ்ஜுக்கு செல்லாமல் இருக்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் நோற்கவேண்டும். ஏனெனில் அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும் ஹாஜிகள் நோன்பு நோற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.

அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்.              
                       நூல்: இப்னுமாஜா(1722)

'அரபா நோன்பு' - பிறை ஒன்பதிலா? அல்லது அரஃபாவில் ஹாஜிகள் கூடிய அன்றா?

உலகம் முழுதும் அனைவரும் ஒரே நாள் பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற தேவையற்ற சிந்தனைகளும் அறிவியலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சிந்திக்கும் போக்கும் சமீப காலமாக‌ சிலரிடம் உருவாகி, அதனால் அவர்கள் ஏற்படுத்தும் குழப்பங்களின் காரணத்தால் எழும் கேள்வியே இது!

நாம் எந்த ஒரு விஷயத்தையும் அல்லாஹ்வின் கட்டளையிலோ, நபி(ஸல்) அவர்களின் வழிமுறையிலோ எவ்வாறு உள்ளது என்பதை மட்டும் கவனமாக பார்ப்போமானால் இதுபோன்ற கேள்விகளுக்கே இடமில்லாமல் போய்விடும்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பிறையைக் கொண்டே நாட்கள் கணக்கிடப்படுகிறது. பிறைக் காண்பது என்பது, ஒரு இடம் அமைந்துள்ள அமைப்பு மற்றும் வானிலைகளை வைத்து இடத்திற்கு இடம் மாறுவதற்குதான் வாய்ப்புகள் அதிகமாக‌ இருக்கும் என்ற இந்த நியதி எக்காலமும் மாறாதவை. நாம் எவ்வளவுதான் விஞ்ஞானத்தில் விண்ணைத் தொட்டாலும் ஒரு நாளின் ஆரம்பத்தையும் முடிவையும் மாற்றி அமைக்கும் திறன், படைப்பினங்களாகிய‌ நமக்கில்லை. இது வல்ல நாயன் வகுத்துள்ள அமைப்பாகும்!

எனவேதான் முக்காலமும் பொருந்தக்கூடிய இம்மார்க்கத்தில் நபி(ஸல்) அவர்கள் அழகான முறையில் வழிகாட்டிச் சென்றுள்ளார்கள். ஆக, எந்த நோன்பாக இருந்தாலும் அவரவர் பகுதிகளில் பார்க்கும் பிறைக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்க வேண்டும் என்ற அண்ணல் நபியவர்களின் கட்டளையை நாம் கடைப்பிடிக்கத் தவறிவிடக் கூடாது. இதோ அந்தக் கட்டளை:

"பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்" என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
          அறிவிப்பவர்:இப்னு உமர்(ரலி);  நூல்:புகாரி(1906)

அதேபோல், பிறைப் பார்த்துதான் ஹஜ்ஜைக்கூட தீர்மானிக்க வேண்டும் என்றே இறைவனும் நமக்கு கட்டளையிட்டுள்ளான்.

பிறைகளைப் பற்றி (முஹம்மதே!)  உம்மிடம் கேட்கின்றனர். 'அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:189)

மேலும் அவரவர் பகுதிகளில் பார்த்த பிறைக் கணக்கின் அடிப்படையில்தான் இரண்டு பெருநாட்களையும் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்பதே நபிவழி என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.

"நீங்கள் 'நோன்பு' என முடிவு செய்யும் நாள்தான் நோன்பாகும். 'நோன்புப் பெருநாள்' என நீங்கள் முடிவு செய்யும் நாள்தான் நோன்புப் பெருநாளாகும். 'ஹஜ்ஜுப் பெருநாள்' என நீங்கள் முடிவு செய்யும் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாளாகும்" என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                   அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி); நூல்:திர்மிதீ

துல்ஹஜ் மாதம் முதல் பிறைக் கண்டதிலிருந்து 10 - ம் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாளாகும். இதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. ஆக, அதற்கு முந்திய ஒன்பதாம் நாள்தான் அர‌ஃபா நோன்பு நோற்கவேண்டிய நாளாகும். ஏனெனில், அரஃபா நோன்பு பற்றி வரக்கூடிய ஹதீஸ்களில் 'ஒன்பதாவது நாள்' என்று தெளிவாகவே குறிப்பிடப்ப‌ட்டுள்ளது.

"நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள்" என்று ஹுனைதா இப்னு காலித்(ரலி) அறிவிக்கிறார்கள்.
                    நூல்கள்: அபூதாவூத், நஸாயி, அஹ்மத்

"துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்"  என்று அபூ கதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
                         நூல்:முஸ்லிம்(2151)

அதேசமயம் 'ஒன்பதாம் நாள்' என்று குறிப்பிட்டு சொல்லாமல் 'அரஃபா நாள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சில ஹதீஸ்களும் காணப்படுகின்றன. அதையும் இப்போது பார்ப்போம்.

அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
             அறிவிப்பவர்:அபூகதாதா(ரலி); நூல்:முஸ்லிம்(1977)

துல்ஹஜ் பிறைப் பார்த்த ஒன்பதாம் நாள் ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் கூடுவதால் அன்றைய தினத்திற்கு 'அரஃபா நாள்' என்று பெயர் வந்தது. மேற்கண்ட ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள், 'அரஃபா நாள்' என்று கூறியுள்ளார்கள். அதே சமயம் அந்த ஒன்பதாவது நாளுக்கு 'அரஃபா நாள்' என்று பெயர் சொல்லப்பட்டாலும், நோன்பு வைப்பதைப் பொறுத்தவரை அன்றைய தினத்தில் நோன்பு வைப்பதை நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு நமக்கு நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்? என்பதைதான் நாம் கவனிக்கவேண்டும்.

'டெலிஃபோன் வசதிகளோ,  லைவில் பார்ப்பது போன்ற வசதிகளோ, ஈ-மெயில்/எஸ்.எம்.எஸ் வசதிகளோ இல்லாத காலமாக இருந்ததால் அவர்களால் தகவல் அறிந்துக் கொள்ளமுடியவில்லை' என்றும், 'நமக்கு இன்றைய காலகட்டத்தில் உடனுக்குடன் அறியக்கூடிய எல்லா வசதிகளும் இருப்பதால் ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளைக் கணக்கிடுவதற்காக நாம் சவூதியின் முதல் பிறையை அறிந்துக் கொண்டு, சவூதியின் 9 வது பிறையில் அரபா நோன்பை நோற்றுக் கொள்ள வேண்டியதுதான்' என்றும் தங்களின் இஷ்டத்துக்கு மார்க்கத்தில் விளையாடுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்பதை இறையச்சமுள்ள‌ ஒவ்வொருவரும் தங்கள் மனதில் பதியவைத்துக் கொள்ளவேண்டும். விஞ்ஞான முன்னேற்றம் ஏற்படுவதால் மார்க்கத்தின் சட்டங்கள் கியாம (இறுதி)நாள் வரையிலும் மாறப்போவதில்லை.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்தில் விஞ்ஞான வசதிகள் இல்லாவிட்டாலும், மக்காவில் முதல் பிறைக் காணப்பட்டவுடன் அந்தத் தகவலை ஓரிரு நாட்களில் அறிந்துவர‌ வசதிகள் இருந்தன. அப்படியிருந்தும் கூட‌ நபி(ஸல்) அவர்கள் அந்த வசதியைப் பயன்படுத்தவில்லை. அதாவது அரஃபா நாளில் நோன்பு நோற்கச் சொன்ன நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்காவுக்கு ஆளனுப்பி எந்த நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகிறார்கள் என்பதை/மக்காவில் எப்போது முதல் பிறை என்பதை விசாரித்து வருவதற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. ஹாஜிகள் எப்போது அரஃபாவில் தங்குகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ளத் தேவையில்லை என்ற அடிப்படையில்தான், மதீனாவில் காணப்பட்ட பிறையின்படி ஒன்பதாம் நாள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றார்கள்.

எனவே அரஃபாவில் ஹாஜிகள் தங்கும் நாள் என்பது சவூதியில் பிறைப் பார்த்த கணக்குப்படி நமக்கு எட்டாம் நாளாகக்கூட‌ இருக்கலாம். நாம் அதைப் பின்பற்றத் தேவையில்லை. 'அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் கூடியதை உறுதி செய்துக்கொண்டு நோன்பு வையுங்கள்' என்று எங்குமே நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவுமில்லை. அதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. ஆக, மதீனாவில் வாழ்ந்த நபி(ஸல்) அவர்கள் அரஃபாவில் உள்ள நிலையைப் பின்பற்றத் தேவையில்லை என்று எவ்வாறு நமக்கு நடைமுறைப்படுத்திக் காட்டினார்களோ, அவ்வாறுதான் நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது, நாம் நம் பகுதியில் பிறைப் பார்த்த கணக்குப்படிதான் ஒன்பதாம் நாளில் அரஃபா நோன்பை நோற்க வேண்டும்.

ஆக‌வே, நபிவழியின் அடிப்படையில் இந்த அர‌ஃபா நோன்பை நோற்று அண்ணல் நபியவர்கள் கூறிய அந்த நன்மையை நாமனைவரும் அடைய எல்லாம் வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக!

21 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    நல்ல தகவல் அஸ்மா!

    இநோன்பை எங்கள் வீட்டில் யாரும் விடுவதில்லை.

    ReplyDelete
  2. @ ஆமினா...

    //இநோன்பை எங்கள் வீட்டில் யாரும் விடுவதில்லை//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..! அப்படியா... இன்ஷா அல்லாஹ் நம் ஆயுள் முழுதும் இதுபோன்ற நன்மைகளைத் தொடர அல்லாஹ்தஆலா உதவி செய்வானாக! வருகைக்கு நன்றி ஆமினா.

    ReplyDelete
  3. அஸ்மா நாங்களும் இந்த நோன்பை பிடிப்போம்.
    நல்ல விளக்கம் நன்றி

    ReplyDelete
  4. @ Jaleela Kamal...

    //அஸ்மா நாங்களும் இந்த நோன்பை பிடிப்போம்.
    நல்ல விளக்கம் நன்றி//

    இன்ஷா அல்லாஹ் நாளை நாம் எல்லோரும் இந்த நோன்பு வைத்திருப்போம் :) அல்லாஹ்தஆலா அதற்குரிய முழுமையான கூலியை நம்மனைவருக்கும் தந்தருள்வானாக! வருகைக்கு நன்றி ஜலீலாக்கா!

    ReplyDelete
  5. Assalamu alaikum!Arafa vil thangi iruppor nonbu norpadhai thadai sey dhullargal,enbadhan moolam ,arafavil illadhor nonbu norka veyndum yebadhu thelivagiradhey!why indha pirai kuzhappam?

    ReplyDelete
  6. நல்ல விளக்கமான ப்கிர்வு அஸ்மா..

    ReplyDelete
  7. அரஃபா நோன்பைப் பற்றி தெரிந்துகொண்டோம்.. தங்கள் வலையில் இருக்கும் ஒவ்வொரு பதிவும் இஸ்லாத்தை பற்றி நன்கு புரிந்துக்கொள்ள கூடிய வகையில் எளிமையாக பதிவிட்டுள்ளீர்கள்.. பாராட்டுகள்..!! நன்றி சகோதரரே..!!

    ReplyDelete
  8. எமது வலைப்பூ உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் அறியத் தாருங்கள்.. நன்றி சகோதரரே!

    ReplyDelete
  9. அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


    //// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////


    .

    ReplyDelete
  10. பிறை சாதாரணமாக த்விதியை அன்று தெரியும். அதிலிருந்து 9-ஆவது நாள் என்றால் ஏகாதசி அன்று ஈத் வரும் அல்லவா. இந்த வருடம் அது துவாதசியன்று (திங்கள்) காலண்டரில் குறிக்கப் பட்டுள்ளது. ஆனால், அன்று காலையில் ஏகாதசி உள்ளது. ஆனால் காலண்டர்கள்/பஞ்சாங்கங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. பஞ்சாங்கங்களில் ரேகை அடிப்படையில் அந்தந்த தேசங்களில் நேரம் மாற்றிக் கொள்ள ஓர் அட்டவணை இருந்தாலும் யாரும் பொதுவாக அதை கவனிப்பதில்லை. உங்களுக்கு அந்தந்த பகுதி இமாம்களே பிறை பார்த்துச் சொல்லிவிடுவதால் இது போன்ற பிரச்சனை இல்லை. அதை பின்பற்றி நோன்பு இருக்கலாம்.

    வணக்கங்கள் நண்பரே.

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    சகோ சூழ்நிலைக்கு ஏற்ற பதிவு!
    இன்ஷா அல்லாஹ் அன்றைய நாளில நோன்பு நோற்க அல்லாஹ் அருள் புரியட்டும்

    பெருநாள் தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களும் நோன்பு நோற்க அனுமதியில்லையென., ஹதிஸ் அறிந்திருக்கிறேன்

    இன்ஷா அல்லாஹ் அதுக்குறித்து விளக்கம் தரவும்

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கும், நல்ல பயனுள்ள கட்டுரை. பகிர்ந்து கொண்டமைக்கு அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானக என்று துவா செய்கிறேன். இந்த கட்டுரையை எனது தளத்தில் இட்டுக்கொள்ளலாமா? உங்கள் பெயருடன்(தளத்தின்).

    ReplyDelete
  13. @ Inian ...

    வ‌ அலைக்குமுஸ்ஸலாம்!

    //பகிர்ந்து கொண்டமைக்கு அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானக என்று துவா செய்கிறேன்//

    துஆவுக்கும் வருகைக்கும் நன்றி சகோ.

    //இந்த கட்டுரையை எனது தளத்தில் இட்டுக்கொள்ளலாமா? உங்கள் பெயருடன்(தளத்தின்)//

    தாராளமாக உங்கள் தளத்திலும் இதை பதிவு செய்யுங்கள்.

    ReplyDelete
  14. @ Anonymous...

    //good//

    வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  15. @ Rahila Masthan...

    //Assalamu alaikum!Arafa vil thangi iruppor nonbu norpadhai thadai sey dhullargal,enbadhan moolam ,arafavil illadhor nonbu norka veyndum yebadhu thelivagiradhey!//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... 'அரஃபாவில் இருப்போர் நோன்பு நோற்கத்தடை' என்பதால், அந்த அன்றுதான் அரஃபாவில் இல்லாத (உலகின் மற்ற பகுதிகளில் உள்ள)வர்கள் நோன்பு நோற்கவேண்டும் என்ற சட்டத்தை எங்கிருந்து எடுத்தீர்கள் சகோதரி? ஒரு விஷயத்தை தடை செய்த அல்லது அனுமதித்த நபி(ஸல்) அவர்கள், தங்கள் வாழ்வில் எவ்வாறு அதற்கு செயல்விளக்கம் கொடுத்தார்கள் என்று பார்க்கவேண்டாமா?

    இங்கே அரஃபா நோன்பின் சிறப்பைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் சிலாகித்துக் கூறியுள்ளதால், அந்த சிறப்புகளை முன்னிறுத்தி அரஃபாவில் தங்கியிருக்கும் ஹாஜிகளும் அதை நோற்றுவிடக் கூடாது என்பதால் அந்தத் தடையை அவர்களுக்கு அறிவிக்கிறார்களே த‌விர, அதே அன்றுதான் மற்ற‌வர்களும் நோன்பு நோற்கவேண்டும் என்பதற்காக அல்ல! அதேபோல் ஹாஜிகள் கூடியிருக்கும் அன்றுதான் அரஃபா நோன்பை நிறைவேற்றவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவுமில்லை; அதற்கு செயல்வடிவம் கொடுக்கவுமில்லை; அப்படி ஒரு வழிகாட்டுதலுக்கான எந்த ஒரு முயற்சியும்கூட அவர்கள் செய்ததுமில்லை. அப்படியொரு ஆதாரம் இருந்தால் காட்டுங்கள். தலைப்பிறைக் கண்டு 9-வது நாள்தான் அரஃபா நோன்பை மற்ற‌வர்கள் நோற்கவேண்டும் என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டுதல் இருக்க, ஹாஜிகள் அரஃபாவில் கூடிய அன்றுதான் நோற்கவேண்டும் என்பதற்குரிய‌ எந்த முகாந்திரமும் இல்லாமல் பிடிவாதம் செய்யக்கூடியவர்களுக்கு அல்லாஹுதஆலா விரைவில் தெளிவு கொடுக்கவேண்டும் என பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறுவழி தெரியவில்லை சகோதரி.

    //why indha pirai kuzhappam?//

    நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிப்படி பிறைக் கணக்கை சரியான முறையில் பின்பற்றுபவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் கியாமத் நாள்வரை எந்த குழப்பமும் இருக்காது. 'குழப்பம்' என்பது இஸ்லாம் கூறும் பிறைப் பார்த்தலை நீங்கள் புரிந்துக் கொண்ட விதத்தில்தான் உள்ளது :) நடுநிலையோடு மீண்டும் இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். பிறைப் பார்த்தல் சம்பந்தமாக மேலே கொடுத்துள்ள லிங்குகளையும் க்ளிக் பண்ணிப் பாருங்கள். அல்லாஹ் போதுமானவன்!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  16. @ asiya omar...

    //நல்ல விளக்கமான ப்கிர்வு அஸ்மா..//

    அல்ஹம்துலில்லாஹ்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா!

    ReplyDelete
  17. @ தங்கம்பழனி...

    //அரஃபா நோன்பைப் பற்றி தெரிந்துகொண்டோம்.. தங்கள் வலையில் இருக்கும் ஒவ்வொரு பதிவும் இஸ்லாத்தை பற்றி நன்கு புரிந்துக்கொள்ள கூடிய வகையில் எளிமையாக பதிவிட்டுள்ளீர்கள்.. பாராட்டுகள்..!! நன்றி சகோதரரே..!!//

    இஸ்லாத்தை எளிமையான முறையில் நீங்கள் இங்கே புரிந்துக் கொள்வதில் ரொம்ப சந்தோஷம் சகோ. உங்களால் முடியும்போதெல்லாம் வந்து பாருங்கள்.

    //நான் உங்கள் வலையில் பாலோவராக இணைந்துவிட்டேன். எமது வலைக்கும் வந்து பாருங்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகளையும் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்..!!//

    பாலோவராக இணைந்ததற்கும் உங்கள் வருகைக்கும் மிக்க நன்றி. உங்கள் வலையையும் நிச்சயமா பார்வையிடுகிறேன் சகோ.

    ReplyDelete
  18. @ VANJOOR...

    //அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை//

    சுப்ஹானல்லாஹ்! சுயநினைவு உள்ளவரை ஒரு நாளைக்கு ஐவேளையும் தவறாமல் இறைவனை தொழவேண்டும் என்ற இஸ்லாத்தின் கட்டளையை மனதிருப்தியோடு நிறைவேற்றும் மக்கள்! பகிர்வுக்கும் வருகைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  19. @ வேங்கட ஸ்ரீனிவாசன்...

    //உங்களுக்கு அந்தந்த பகுதி இமாம்களே பிறை பார்த்துச் சொல்லிவிடுவதால் இது போன்ற பிரச்சனை இல்லை//

    அந்தந்த பகுதிகளில் பிறை பார்த்துச் சொல்வதால் எந்தக் குழப்பத்திற்கும் இடமில்லை என்பதை புரிந்துக் கொண்டதற்கும், உங்களின் முதல் வருகைக்கும் நன்றிகள் சகோ.

    ReplyDelete
  20. @ G u l a m...

    //பெருநாள் தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களும் நோன்பு நோற்க அனுமதியில்லையென., ஹதிஸ் அறிந்திருக்கிறேன்

    இன்ஷா அல்லாஹ் அதுக்குறித்து விளக்கம் தரவும்//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... வருடத்தில் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ் பெருநாள் ஆகியவையும் மற்றும் ஹஜ் பெருநாளைத் தொடர்ந்து வரும் 'அய்யாமுத் தஷ்ரீக்' எனப்படும் 3 நாட்களும் நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்களாகும். கூடுதல் விபரங்களுக்கு,

    சுன்னத்தான நோன்புகளும் நோன்பு நோற்கக் கூடாத நாட்களும்

    இந்த‌ லிங்கைப் பாருங்க சகோ.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை