அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday 16 November 2012

முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும் (பகுதி 2)

முதல் பாகத்தை இங்கே பார்க்கவும்.

தொடர்ந்து ஐந்தாவது ஆறாவது நாட்களில் கர்பலா சம்பவங்கள் பற்றி கூறும் நிகழ்ச்சியும், சோக பாடல்கள் மூலம் அந்த துக்கங்களைப் புதுப்பித்துக் கொள்வதும் நடைபெறும். வளரும் பருவத்திலுள்ள சின்னஞ்சிறிய பாலகர்களிடம் கூட இவற்றை மனதில் பதிய வைத்து, அன்றைய தினம் மேடையேறி பாடி அழவைக்கும் கோலங்கள் நடைபெறும்.

பத்தாம் நாளுக்கு முன்னதாக ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாவ‌து நாட்களிலும் ஊர்வலம் புறப்படும். இந்த ஏழாம் நாள் பஞ்சாவில் ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி) நினைவாக அலங்கரிக்கப்பட்ட இரண்டு குதிரைகளைக் கொண்டு வந்து, அவ்லியாக்களுக்கு மிகவும் பிடித்த நிறம் என்று நம்பப்படும் பச்சை நிறத் துணியால் போர்த்தப்பட்டு அதில் இரண்டு இளைஞர்கள் அமர்த்தப்படுவார்கள்.


தங்களின் தேவைகள் நிறைவேறவும் பற்பல பாக்கியங்கள் கிடைப்பதற்காகவும் நேர்ச்சை செய்துக் கொண்ட குமரிப் பெண்கள் எல்லாம் குடத்தில் தண்ணீரைக் கொண்டு வந்து குதிரைகளின் கால்களில் வழிநெடுகிலும் கொட்டுவார்கள். அந்த குதிரைகளில் அமர்த்தப்பட்ட‌வர்கள் கூட, தங்கள் பெற்றோர்களால் நேர்ச்சை செய்யப்பட்டவர்கள்தான்! அதாவது தங்களுக்கு ஆண் குழந்தைகள் பிறந்தால், அல்லது தங்கள் குழந்தைக்கு வந்த‌ நோய் குணமாகிவிட்டால் அவனை முஹர்ரம் ஏழாம் நாளில் ஹஸனாகவும், ஹுசைனாகவும் கொண்டு வந்து குதிரையில் ஏற்றுவேன் என்று பெற்றோர்கள் நேர்ச்சை செய்து வைத்திருப்பார்களாம்!(?) அதிலும் யார் பணத்தை அதிகமாக‌ கொடுத்து முன்பதிவு செய்கிறார்களோ அவர்களுக்கு இன்ன‌ ஆண்டில் குதிரை சவாரி செய்ய வேண்டும் என்று பக்கீர்கள் நாள் குறித்துக் கொடுப்பார்கள். இவ்வாறு குதிரையில் ஏற வாய்ப்பு கிடைத்தவர்கள், முஹர்ரம் மாதம் முதல் பத்து நாட்க‌ளும் பிரத்யேகமாக நோன்பு நோற்கவேண்டுமாம்.

நேர்ச்சை செய்திருந்த பக்தர்களின் வீட்டு வாசல்களுக்கு இந்தக் குதிரை வரும்போது அவர்க‌ள் நேர்ச்சை செய்த ஆடு, கோழிகளை இந்தக் பக்கீர்களிடம் காணிக்கையாக கொடுப்பார்கள். இப்படியாக‌ இந்த குதிரை ஊர்வலம் கடைசியாக‌ ஆற்று வரைச் சென்று, அதில் அமர வைக்கப்பட்டவர்களைக் குளிக்கச் செய்தவுடன் அவர்களுக்கு 'ஷஹாதத்' என்ற‌ அந்தஸ்து கிடைத்துவிடுமாம்!(?)

பிறகு அவர்களுக்கு முக்கிய கட்டமான அந்த பத்தாம் நாள்! அன்று மாலை அதன் மையத்திலிருந்து பக்கீர்களின் தோள் புஜங்களிலும் வண்டியிலும் பஞ்சாவை ஏற்றி அதன் ஊர்வலம் ஆரம்பிக்கப்படும். இவர்கள் எல்லாம் இஸ்லாமியர்களா என்று நினைக்குமளவுக்கு அவர்களின் மூடத்தனம் எல்லை மீறிப் போகும்.

நேர்ச்சை செய்திருந்த சிலர் உடல் முழுவதும் சந்தனம் பூசிக் கொண்டு ஒருவிதமாக‌ சுற்றிக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் புலி வேஷம் போட்டுக் கொண்டு ஊர்வலத்தோடு நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள்!(?) இந்த பஞ்சாவில் ஹுஸைன்(ரலி) அவர்களின் போர்க்களத்தின் நினைவாக வாள்கள், ஈட்டிகள் போன்றவற்றை எடுத்துச் செல்வார்கள். பஞ்சாவுக்கு முன்னால் ஆடும் சிலம்பாட்டக் காரர்கள் பேண்டுக்கு மேல் ஜட்டி அணிந்து, நகைகளையும் போட்டுக் கொண்டு சிலம்பாட்டம் ஆடுவார்கள்.


தங்களுக்கு நல்ல கணவன் அமையவதற்காக‌ நேர்ச்சை செய்த பருவ வயதுப் பெண்கள், அதுபோல் நல்ல கணவன் அமைந்துவிட்டால் அந்தப் பெண்ணும் அவளது தாயாரும் பத்தாம் நாள் பஞ்சாவுக்கு வந்து தங்களது தலைகளில் நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொண்டு, தீக்குளித்த‌தாக நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்!(?) திருவிழாக்களில் தீமிதி நடப்பது போன்று தங்கள் பாவங்கள் தீரவும் நாட்டங்கள் நிறைவேறவும் தீமிதி நடத்துவார்கள். பச்சைத் தலைப்பாகையுடன் பக்கீர்கள் மயில் இறகைக் கொண்டு ஆண், பெண் பேதமில்லாமல் தடவி வருடிவிடுவார்கள். இதில் அவர்களின் மலைப் போன்ற பாவங்கள் பனிபோல‌ கரைந்துவிடுமாம். தாய்மார்கள் மனமுருக நின்று அதைப் பார்த்து பிரார்த்தனை செய்துக் கொண்டிருப்பார்கள்.

பஞ்சா ஊர்வலம் வரும்போது சாம்பிராணி புகைப்போட்டு, காணிக்கை என்ற பெயரில் காசு வாங்க சிலர் நியமிக்கப்படுவார்கள். மக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதை உப்பு, மிளகு நீக்கி விடும் என்ற நம்பிக்கையில் அவர்களிடம் உப்பும், மிளகும் பார்சலாகக் கொடுப்பார்கள். மேலும் ஆண் குழந்தை வேண்டுபவர்கள் கொழுக்கட்டை செய்து(?) பஞ்சா ஊர்வலத்தில் வருபவர்களுக்கு விநியோகம் செய்வார்கள். பெண் குழந்தைகளை யாரும் வேண்டுவதில்லை போலும்!

இவ்வாறு ஒருபுறம் கொட்டு, மேள/தாளத்துடன் ஹுஸைன்(ரலி)அவர்களின் நினைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, இன்னொரு கூட்டம் 'யா அலீ! யா ஹுஸைன்!' என்று தங்களின் மார்பில் அடித்துக்கொண்டும், ஒப்பாரி வைத்துக் கொண்டும், ஹுஸைன்(ரலி) அவர்களை நினைவு கூர்கிறோம் என்று பக்தியோடு (?) தங்கள் உடம்பில் காயங்களை ஏற்படுத்திக் கொண்டும் வருவார்கள். இஸ்லாமிய மார்க்கம் பற்றிய சாதாரண அறிவுள்ளவர்களுக்கு கூட இது ஒரு எல்லை மீறிய‌ அறியாமை என்பது புரியும். இதை செய்பவர்களும் அதற்கு உறுதுணையாக இருப்பவர்களும் சிந்தனையற்ற, இஸ்லாமிய தெளிவற்ற, இஸ்லாமிய வரலாறுகளின் ஆய்வற்ற மிகக் கீழ்நிலையில் உள்ளவர்கள்தான்! அவர்களின் இந்த இரத்தக் காணிக்கை அவர்களின் மடமையின் உச்சக்கட்டத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். (அந்த கோலத்தை கீழுள்ள படங்களில் பாருங்கள்)



மூஸா(அலை)அவர்களுக்குக் கிடைத்த வெற்றி நாளான‌ வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இந்த முஹர்ரம் பத்தாம் நாளின் உண்மையான சிறப்பு மறக்கடிக்கப்பட்டு, தன்னைத்தானே காயப்படுத்தி இரத்தக் காணிக்கை செலுத்துவதும், மாரடிப்பதுமான‌ இந்தக் காட்சிகள் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகி, இஸ்லாத்தின் தூய தோற்றத்தைச் சிதைத்து உருமாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த கொண்டாட்டங்களினால் அரசாங்கமும் இந்த நாளை 'முஹர்ரம் பண்டிகை' என்று அரசு விடுமுறையாக அறிவித்துள்ளதால், இஸ்லாத்தில் கூறப்பட்ட ஒரு கொண்டாட்டமோ இது என்றுதான் மற்ற‌வர்களை நினைக்கத் தூண்டும். ஆனாலும் அல்லாஹ்வின் உதவியால் ஏகத்துவப் பிரச்சாரம் வளர்ந்து வருவதால் இஸ்லாத்தின் உண்மை நிலை இதுவல்ல என்பதையும் மாற்றுமத மக்களும் உணரத்தான் செய்கிறார்கள்.

ஒருவாறாக இறுதியில் அந்த பஞ்சாவை ஆற்றில் கொண்டுபோய் கரைத்துவிட்டு, கலைந்த அந்தப் பஞ்சாவை ஒரு வெள்ளைத் துணியால் மூடி, ஒப்பாரி வைத்தவாறே அதை தூக்கிக் கொண்டு திரும்புவார்கள். இதன் பிறகுதான் தங்களுக்கு தடை செய்துக்கொண்ட (மீன் சாப்பிடுவது போன்றவற்றை) விடுவித்துக் கொள்வார்கள்.

வீரர் ஹுஸைன்(ரலி)அவர்களின் நினைவாக இவ்வாறு செய்வதாக கூறும் இவர்கள், நபி(ஸல்)அவர்களையும் அவர்களின் குடும்பத்தார்களையும் சேர்த்து ஐந்து பேர்களை கடவுள்களாக உருவகப்படுத்துகிறார்கள். ஏக இறைவனை மட்டுமே அவனுக்கு இணையேதும் கற்பிக்காமல் வணங்கக் கூறும் இஸ்லாத்தில் இவர்களின் இந்த ஐதெய்வக் கொள்கை எப்படி சாத்தியமாகும்?

மூன்றாம் பகுதியைக் காண‌

(தொடரும்...இன்ஷா அல்லாஹ்)

26 comments:

  1. இரத்த காட்சியை பார்க்கும் போது வேதனைபடுவதா அல்லது அவர்களில் செயலையும் செய்ய தூண்டுபவர்களையும் நினைத்து கோபம் கொள்வதா என்றே தெரியவில்லை. //ஏக இறைவனை மட்டுமே அவனுக்கு இணையேதும் கற்பிக்காமல் வணங்கக் கூறும் இஸ்லாத்தில் இவர்களின் இந்த ஐதெய்வக் கொள்கை எப்படி சாத்தியமாகும்?// மடஜனங்கள் இனியேனும் நல்வழியை நாடட்டும்...

    ReplyDelete
  2. துணிச்சலாகவும், தெளிவாகவும் அமைந்துள்ளது கட்டுரை..


    ” இஸ்லாத்தின் உண்மை நிலை இதுவல்ல என்பதையும் மாற்றுமத மக்களும் உணரத்தான் செய்கிறார்கள்.”

    உண்மை

    ReplyDelete
  3. நான் பகரைனில் வேலையில் இருந்த போது இவைகளை நிறய பார்த்துள்ளேன். மற்ற அணைத்து மத வழிகளில் எவ்வாறு ஒரு தனிப்பட்ட அல்லது ஒரு கூட்டத்தின் கற்பனை வளம் மூட பழக்கங்களை பல்கிப்பெருக உதவியது போல இஸ்லாத்திலும் இவைகள் மிகுந்து காணப்படுவது கண்டு மொத்த மதங்கள் மீதும் வெறுப்பே வந்தது.

    ReplyDelete
  4. ஊரில் எங்க பக்கத்து வீட்டில்தான் இதுபோலவெல்லாம் நடக்கும். உப்பு-மிளகு மலைபோல குவிந்து சேரும் அப்போ. வருடா வருடம் எல்லாவற்றையும் நேரில் பார்த்த பாக்கிய(!!)சாலி நான். ஊரை விட்டு வந்ததில் இதைப் பார்க்கமுடியாது என்ற ஒன்றுதான் நிம்மதி. எனினும் தற்காலங்களில் வெகுவாகக் குறைந்துவிட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

    ReplyDelete
  5. நல்ல பதிவு.. தொடருங்கள்..

    ReplyDelete
  6. @ ஆமினா...

    //இரத்த காட்சியை பார்க்கும் போது வேதனைபடுவதா அல்லது அவர்களில் செயலையும் செய்ய தூண்டுபவர்களையும் நினைத்து கோபம் கொள்வதா என்றே தெரியவில்லை//

    கோபம் கோபமாகதான் வருகிறது. நம்மால் இயன்ற வகையில் எல்லாம் சொல்வது நம் கடமை! அதற்கு மேல் இறைவனின் நாட்டம் இருந்தால் திருந்துவார்கள்.

    //மடஜனங்கள் இனியேனும் நல்வழியை நாடட்டும்...// துஆ செய்வோம்!

    ReplyDelete
  7. @ பார்வையாளன்...

    //துணிச்சலாகவும், தெளிவாகவும் அமைந்துள்ளது கட்டுரை..


    ” இஸ்லாத்தின் உண்மை நிலை இதுவல்ல என்பதையும் மாற்றுமத மக்களும் உணரத்தான் செய்கிறார்கள்.”

    உண்மை//

    திருந்தவேண்டியவர்கள் இதன் மூலம் தெளிவடைந்து பயனடைய துஆ செய்யுங்கள்! கருத்துக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  8. @ கக்கு - மாணிக்கம்...

    //நான் பகரைனில் வேலையில் இருந்த போது இவைகளை நிறய பார்த்துள்ளேன். மற்ற அணைத்து மத வழிகளில் எவ்வாறு ஒரு தனிப்பட்ட அல்லது ஒரு கூட்டத்தின் கற்பனை வளம் மூட பழக்கங்களை பல்கிப்பெருக உதவியது போல இஸ்லாத்திலும் இவைகள் மிகுந்து காணப்படுவது கண்டு மொத்த மதங்கள் மீதும் வெறுப்பே வந்தது//

    ஓ.... அப்படியா சகோ? :( வருந்தத்தக்க விஷயம்தான்! மக்கள் செய்யும் தவறுகளுக்கு மார்க்கம் பொறுப்பேற்காதல்லவா? உங்களின் வெறுப்புக்கு இங்கு தெளிவு கிடைத்ததா? உங்களுக்கு முடியும்போது வந்து கொஞ்சம் சொல்லுங்க சகோ. இன்னும் அடுத்தடுத்த பதிவுகளையும் தொடர்ந்து பாருங்க. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  9. @ ஹுஸைனம்மா...

    //ஊரில் எங்க பக்கத்து வீட்டில்தான் இதுபோலவெல்லாம் நடக்கும். உப்பு-மிளகு மலைபோல குவிந்து சேரும் அப்போ. வருடா வருடம் எல்லாவற்றையும் நேரில் பார்த்த பாக்கிய(!!)சாலி நான்//

    அப்படியா..? இவங்க பண்ணுகிற அட்டகாசங்கள் எல்லாம் சில வருடங்களுக்கு முன்புதான் எனக்கு முழுமையாக தெரியும்.

    //ஊரை விட்டு வந்ததில் இதைப் பார்க்கமுடியாது என்ற ஒன்றுதான் நிம்மதி. எனினும் தற்காலங்களில் வெகுவாகக் குறைந்துவிட்டது, அல்ஹம்துலில்லாஹ்//

    உண்மைதான் என்றாலும் அதை தொடர்ந்து செய்துவரும் பகுதிகளும் இன்னும் உள்ளன. அதுவும் இன்ஷா அல்லாஹ் மாறிப்போக இறைவன் உதவி செய்யட்டும்!

    ReplyDelete
  10. @ பதிவுலகில் பாபு...

    //நல்ல பதிவு.. தொடருங்கள்..//

    வருகைக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  11. இவ்வளவு கீழ்தரமான பழக்கங்கள் கூட நடந்து கொண்டிருக்கிறதா..கொஞ்சமாவது புத்தி இருப்பவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள்..இறைவன் நல்வழிகாட்டட்டும்

    ReplyDelete
  12. அன்புதோழியே!
    மூடப்பலக்கவழக்கங்களை புரையோடவைத்துவிட்டார்கள்.அதிலிலேயே மூழ்கிக்கிடக்கும் கூட்டமாக இறைவனின் முன் அவர்கள் பதில்சொல்லவேண்டியதை மறந்து திறிகிறார்கள்.

    எல்லாம் வல்ல இறைவன் இதகைய எவ்வித மூடப்பலக்கங்களிலும் நம்மை ஈடுபடுத்திவிடாதவாறு காப்பானாக..

    ReplyDelete
  13. @ தளிகா...

    //இவ்வளவு கீழ்தரமான பழக்கங்கள் கூட நடந்து கொண்டிருக்கிறதா..கொஞ்சமாவது புத்தி இருப்பவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள்..இறைவன் நல்வழிகாட்டட்டும்//

    ஆமா தளிகா..! அல்லாஹ் நாடினால் அவர்களுக்கும் மார்க்கத்தில் தெளிவு கிடைத்து நேர்வழி பெறலாம், இன்ஷா அல்லாஹ்!

    ReplyDelete
  14. @ அன்புடன் மலிக்கா...

    //அன்புதோழியே!
    மூடப்பலக்கவழக்கங்களை புரையோடவைத்துவிட்டார்கள்.அதிலிலேயே மூழ்கிக்கிடக்கும் கூட்டமாக இறைவனின் முன் அவர்கள் பதில்சொல்லவேண்டியதை மறந்து திறிகிறார்கள்//

    ஆமா தோழி, அல்லாஹ்வுடைய அச்சம் இருந்தால்தான் எது சரி, எது தவறு என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவார்களே..!

    //எல்லாம் வல்ல இறைவன் இதகைய எவ்வித மூடப்பலக்கங்களிலும் நம்மை ஈடுபடுத்திவிடாதவாறு காப்பானாக..//

    அல்லாஹ்தான் நம் அனைவரையும் இறுதி மூச்சுவரை இதுபோன்ற தீங்குகளை விட்டும் காப்பற்றணும். நன்றி மலிக்கா!

    ReplyDelete
  15. யா அல்லாஹ், எமது சகோதரர்களுக்கு நேர்வழியை தந்தருள்வாயாக.

    ReplyDelete
  16. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    இங்கு முஹர்ரம் குறித்த சிறப்பான பதிவு என்பதை விட இஸ்லாமிய பெயர் தாங்கிகளுக்கு முஹர்ரம் குறித்த தெளிவான ஒரு நினைவூட்டல்! நபிப்பேரர்களான இமாம் ஹூசைனும் ,ஹசனும் (ரலியுல்லாஹ் அன்ஹூம்) அல்லாஹ்விற்கு பொருத்தமான வாழ்வை மேற்கொண்டார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் எவருக்கும் கிடையாது.எனினும் இஸ்லாத்தில் இமாம் ஹூசைன் (ரலி) அவர்கள் போலவே நபித்தோழர்கள் பலர் நியாயமின்றி கொல்லப்பட்டு ஷஹீதாக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக ஹம்ஸா(ரலி) அவர்கள் ஹுஹது யுத்தக்களத்திலே வஹ்ஷி என்ற அடிமையால் ஈட்டியால் கொல்லப்பட்டு உறுப்புக்கள் சிதைக்கப்பட்டு அவர்களது ஈரல்குளையும் வெளியே பிறித்தெறியப்பட்ட காட்சி இன்னும் வரலாற்று பக்கங்களில் இன்னும் ஈரமாகவே இருக்கிறது. அதைப்போலவே நபித்தோழியர் சுமையா(ரலி) அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு அபூஜஹலால் அவர்களின் மர்ம உறுப்பில் ஈட்டியினால் குத்தப்பட்டு மிகக்கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
    அவர்களின் கணவர் யாஸிர் (ரலி) அவர்களோ இருகால்களும் ஒட்டகங்கங்களின் கால்களில் பிணைக்கப்பட்டு எதிரும் புதிருமாக ஓட்டப்பட்டு இருகூராக பிளந்த நிலையில் கொல்லப்பட்டனர். இதைப்போன்ற சம்பவங்கள் வரலாற்று நெடுக்க நிறைந்து கிடக்கிறது எனினும் இவர்களின் தியாயகங்கள் முன்னிலைப்படுத்தப்படாமல் ஹூசைன்(ரலி) அவர்களை மட்டும் மையப்படுத்தி அவர்கள் மேல் ஒரு தெய்வீக தன்மையே ஏற்படுத்தி இஸ்லாத்திற்குள் பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தும் இந்த கயவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி வழங்குவானாக! ,

    ReplyDelete
  17. @ மு.ஜபருல்லாஹ்...

    //யா அல்லாஹ், எமது சகோதரர்களுக்கு நேர்வழியை தந்தருள்வாயாக//

    அல்லாஹ் நாடினால் திருந்துவார்கள். அவர்களுக்கு நேர்வழி கிடைக்க துஆ செய்வோம். வருகைக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  18. @ G u l a m...

    இஸ்லாமிய வரலாற்றின் உயிர்த் தியாகங்களைக் கூறி, ஒரு குட்டி பயானே பண்ணிவிட்டீர்கள். நன்றி சகோ. எப்படியாவது அவர்கள் திருந்தி தூய இஸ்லாத்திற்குள் வந்தால் சரிதான்!

    ReplyDelete
  19. உங்களது பதிவு மிக அருமையாக இருக்கு.
    காட்டில் வாழக்கூடிய மனிதர் இனத்தை சார்ந்தவராகவே சியா மக்கள் திகழ்கிறார்கள், இவர்கள் கெட்டதும் இல்லாமல் அவர்களின் சந்ததியனையும் கெடுத்து இஸ்லாத்திற்கும் கெட்டப் பெயரை உண்டாக்கும் இவர்கள், நிச்சயமாக அறியாமை என்னும் திரையால் மறைக்கப் பட்டுள்ளார்கள்.இறைவன் இவர்களை நல் வழி படுத்தட்டும்.

    என்னுடைய கேள்வி ?

    இஸ்லாத்தில் இருந்து கொண்டே தர்காக்களை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துக் கொண்டு சந்தனக்கூடு தூக்கி அநியாயம் செய்யும் லப்பைமார்களை என்ன செய்வது ?

    ReplyDelete
  20. @ அந்நியன் 2...

    //என்னுடைய கேள்வி ?

    இஸ்லாத்தில் இருந்து கொண்டே தர்காக்களை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துக் கொண்டு சந்தனக்கூடு தூக்கி அநியாயம் செய்யும் லப்பைமார்களை என்ன செய்வது ?//

    நல்ல கேள்வி சகோ. தர்காக்களுக்கு சப்போர்ட் பண்ணி, தானே முன் நின்று சந்தனக்கூடு நடத்தும் ஆலிம்களும் இந்த ஷியாக்களும் ஒரே லிஸ்ட்டில் உள்ளவர்கள்தான்! இன்னும் சொல்லப் போனால் அறியாமையினால் அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களைவிட, 7 வருஷங்கள் படித்துவிட்டு வந்து அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்கள் மகா கீழ்த்தரமானவர்கள்! இரண்டு கும்பல்களுக்கும் செயல்களில் வித்தியாசம் இருந்தாலும், எந்த கண்ணோட்டத்தில் ஷியாக்களைப் பார்க்கிறோமோ அதே கண்ணோட்டத்தில்தான் இவர்களையும் தள்ளிவைத்துப் பார்க்கவேண்டும். இதைப் பற்றி விளக்கமாக ஒரு தனிப் பதிவு போடலாம், இன்ஷா அல்லாஹ்! அல்லாஹ்தான் அனைவருக்கும் நேர்வழி கொடுக்கணும். நன்றி சகோ.

    ReplyDelete
  21. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ அஸ்மா அவர்களுக்கு
    எனது ப்ளாக்கில் பக்கீர்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன் அது சம்பந்தமான உங்களுடைய கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  22. @ ஹைதர் அலி...

    //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ அஸ்மா அவர்களுக்கு
    எனது ப்ளாக்கில் பக்கீர்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன் அது சம்பந்தமான உங்களுடைய கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... இப்போதுதான் பார்த்தேன், நல்ல தொகுப்பு. தொடர்ந்து எழுதுங்க சகோ, வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. பல தகவல்கள் தெரியாதவை. நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

    ReplyDelete
  24. @ திண்டுக்கல் தனபாலன்...

    //பல தகவல்கள் தெரியாதவை. நன்றி நண்பரே!//

    கருத்துக்கு நன்றி சகோ. ஆனால் அவர்கள் செய்யும் இந்த அனாச்சாரங்கள் அனைத்தும் இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாதவை என்பதையும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

    ReplyDelete
  25. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

    மூடநம்பிக்கைகளை ஒலித்த இஸ்லாத்தின் பெயராலேயே அவர்கள் இவ்வாறு செயல்படுவது வருத்தமளிக்கிறது.

    ReplyDelete
  26. @ Abdul Basith...

    வ‌ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    //மூடநம்பிக்கைகளை ஒலித்த இஸ்லாத்தின் பெயராலேயே அவர்கள் இவ்வாறு செயல்படுவது வருத்தமளிக்கிறது//

    இஸ்லாத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லாமல் ஆனபிறகும், தங்களை இஸ்லாத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பதால்தான் அவர்களின் மூட நம்பிக்கைகளுக்கு இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்த முடிகிறது. இருப்பினும் அவர்களின் நிலையும் இஸ்லாத்தின் தெளிவும் உலகமறிந்ததே!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை