அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday 13 January 2012

ஒழியட்டும் 'ஒடுக்கத்து புதன்'!

ஸஃபர் மாதம் பிறந்து பாதி நாட்களுக்கும் மேல் ஓடிவிட்டன. இஸ்லாமிய வீடுகளில் ஒரே பரபரப்பு! அரிசியைக் கழுவி, காய வைத்து, இடித்து, சலித்து, பக்குவப்படுத்தி..... என்று ஏகப்பட்ட‌ முன்னேற்பாடுகள்! இருக்கும் உடுப்புகளில் பழைய துணிமணிகளைப் பொறுக்கி ஏழைகளுக்கு கொடுத்து கழித்துவிட வேண்டும் என்று ஓரம்கட்டி வைப்பார்கள். இதெல்லாம் எதற்காக..? ஸஃபர் மாதத்தின் கடைசி புதன் கிழமையான 'ஒடுக்கத்து புதன்' கிழமையைக் கொண்டாடவே! தயார்படுத்திய அரிசி மாவில் அன்றைய தினம் 'ஒரட்டி' என்று சொல்லப்படும் ஒரு வகை ரொட்டியைத் தயாரித்து, அதனுடன் சேவல் குழம்பு செய்வார்கள். அதற்காக கோழி வியாபாரிகளிடம் முன் கூட்டியே நாட்டுச் சேவல் ஆர்டர் பண்ணி வைக்கப்படும். முந்திய நாள் ஒட்டடை அடித்து, பழசு பட்டு நீக்கி, வீடு வாசல் கழுவி சுத்தம் செய்வார்கள்.


இது ஒரு பக்கமிருக்க...  ஹஜ்ரத்மார்களுக்கோ வேறு விதமான பிசி! அவர்கள் பனை ஓலைகள், மாவிலைகளை சுத்தம் செய்து, காய வைத்து தயார்படுத்தி வைப்பார்கள். அரிசியைக் கருக்கி, தண்ணீர் சேர்த்து தீய வைத்து மைப் போலாக்கி, அதில் தொட்டு அந்த ஓலை, மாவிலை அல்லது பீங்கான் தட்டுகளில் 'ஸலாமுன் அலா நூஹுன் ஃபில் ஆலமீன்', 'ஸலாமுன் அலா இல்யாஸீன்' அல்லது 'ஸலாமுன் கவ்லம் மிர்ரப்பிர்ரஹீம்' போன்ற 'ஸலாம்' என்று ஆரம்பிக்கும் குர்ஆன் வசனங்களில் ஏதாவது ஒன்றை எழுதி காய வைத்து விற்பனைக்காக (தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காக) வைத்திருப்பார்கள். அன்றைய தினம் மக்கள் அவரவர் தகுதிக்கு தகுந்தவாறு சில, பல ஓலைகளை வாங்கி குளிக்கும் தண்ணீரிலும், குடிப்பதற்காக வைத்திருக்கும் தண்ணீரிலும் கரைத்து கலந்து வைப்பார்கள். அதை ஊற்றி குளிப்பதால்/குடிப்பதால், வீடுகளில் தெளிப்பதால் பீடை நாள் என்று கருதப்படும் 'ஒடுக்கத்து புதன்' அன்று இறங்கும் எல்லா முஸீபத்துகளும் தன் மீது இறங்காமல் தடுக்கப்படுமாம். அதாவது நோய்க்கு தடுப்பூசி மாதிரி, ஸஃபர் மாதத்தின் பீடையை தடுக்கப் பயன்படும் ஒரு எதிர்ப்பு மருந்தாக‌(?) இந்த இலையிலிருந்து கரைக்கப்படும் தண்ணீரை நம்புகிறார்கள்!

அத்துடன் பல வகையான பண்டம், பதார்த்தங்களை செய்து மாலை நேரமானதும் அவற்றை எடுத்துக் கொண்டு குடும்பத்தோடு சேர்ந்து கடற்கரைக்குச் சென்று குளித்துவிட்டு அல்லது காலை நனைத்து முஸீபத்துகளை கடலோடு கரைத்துவிட்டு(?), எடுத்துச் சென்ற பார்சல்களையும் காலி பண்ணிவிட்டு வருவார்கள்.

புல்வெளியில் சென்று காலை வைத்துவிட்டும் வருவார்கள். அதிலும் கட்டுக் கதைகளை மட்டுமே மார்க்கமாக நம்பி மடமையில் ரொம்ப மூழ்கிப் போனவர்கள், நபி ஹிள்ரு(அலை)அவர்கள் கடலில் வாழ்வதாக நம்பி, அவர்களுக்கு கொடுப்பதாக நிய்யத் வைத்துக் கொண்டு, அந்த‌ 'ஒரட்டி'யை கடலில் உருட்டிவிடுவார்கள். 'ஸஃபர் குளியல்' என்று சொல்லி ஆற்றில் போய் குளித்தும் பீடைகள் நீங்கிவிட்டதாக நிம்மதி அடைவார்கள். இவை ஊருக்கு ஊர் வித்தியாசப்படுகின்றன.

இன்னும் சில ஊர்களில் அரிசி மாவு கொழுக்கட்டைகளை செய்து, நோய்வாய்ப் பட்டிருந்தவர்கள், வாழ்க்கையில் சில சோதனைகளை அடைந்திருப்பவர்கள் போன்றவர்களை உட்கார வைத்து தலையில் கொட்டி, அதை எடுத்து யாசிக்க வரும் ஏழை மக்களுக்கு விநியோகம் செய்வார்கள். இந்த ஸ‌ஃபர் மாதம் கெட்ட‌ மாதம் என்று, இந்த மாதத்தில் திருமணம் போன்ற நல்ல காரியங்களை செய்வதற்கு கூட‌ தயங்குவார்கள். இதெல்லாம் யார் சொல்லித் தந்தது? இறைவன் தன் திருமறைக் குர்ஆனிலே கட்டளையிட்டுள்ளானா? குர்ஆனின் விளக்கவுரையாக அமைந்த அண்ணல் நபி(ஸல்)அவர்களின் வாழ்விலே இதற்கான வழி காட்டுதல்கள் எதுவும் உள்ளதா? பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாத்திலே இருந்துக் கொண்டு இஸ்லாம் சொல்லாத, அனுமதிக்காத‌ மூட நம்பிக்கைகளைச் செய்து வருகிறோமே...  இதனால் ஏதாவது மறுமையின் நன்மைகள் உண்டா? அல்லது இதன் மூலம் பாவத்தை மட்டும்தான் சம்பாத்தித்துக் கொள்கிறோமா? சிந்திக்க வேண்டாமா இஸ்லாமியர்களே..?

இந்த மாதத்தின் நாட்கள் கெட்டவை என்றால் உலகிலுள்ள எல்லோருக்கும் துன்பங்களும் துயரங்களும் கேடுகளும் மட்டுமே ஏற்படும் நாட்க‌ளாக அவை இருக்கவேண்டும். அப்படியானால், அந்த நாட்களில் யாருக்கும் எந்த நல்லவையும் நடப்பதில்லையா? அந்த மாதத்தில் குழந்தை பிறக்கும் சந்தோஷம் நடக்காமல், வெறும் இறப்புகள்தான் நடக்கின்றனவா? உலகில் நடக்கும் எந்த விளைவுகளும் மனிதர்களின் செயல்பாடுகளைப் பொருத்துதான் இறைவனால் தீர்மானிக்கப்படுமே தவிர நாட்களைப் பொருத்தல்ல! எல்லோருக்கும் நன்மைகள் மட்டுமே தரக்கூடிய‌ எந்த நாளும் இல்லை; அதுபோல் எல்லோருக்கும் தீமை செய்யும் நாளும் உலகில் இல்லை. பிறப்புகளும்/இறப்புகளும், வெற்றியும்/தோல்வியும், சந்தோஷங்களும்/துக்கங்களும், திருப்தியும்/ஏமாற்றமும், திருமணமும்/விவாகரத்தும், நோயும்/நிவாரணமும், லாப‌மும்/நஷ்டமும் என்று ஒரு நாளின் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் எதிர்மறையான நிகழ்வுகள் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதை யாரும் மறுக்க‌ இயலாது. இவை அனைத்தும் 'நேரம்', 'காலம்' என்பதில் நல்லது, கெட்டது இல்லை என்பதைத் தெளிவாக பறைசாற்றுகின்றன.

ஆக, உலகின் எதார்த்த வாழ்க்கையில் ஒருவருக்கு நல்லதும் மற்றொருவருக்கு கெட்டதும் நடப்பது என்பது அல்லாஹ்வின் விதிப்படி அன்றாடம் நிகழும் நிகழ்வுகளாகும். இதில் நல்ல நாள், கெட்ட நாள் என்று பிரிப்பது அறியாமையினால் ஏற்பட்ட நம்பிக்கையாகும். இதுபோன்ற‌ நம்பிக்கை அறியாமைக்கால அரபு மக்களிடம் காணப்பட்டது. தங்களுக்கு எது நடந்தாலும் அதைக் காலத்துடன் இணைத்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 'காலம்தான் அவருக்கு அழிவை கொடுத்துவிட்டது', 'கெட்ட நேரம்' என்றெல்லாம் அந்த மக்கள் கூறி வந்தனர். அதுவும் ஷவ்வால் மாதத்தை பீடை மாதமாகக் கருதியதால், அந்த மாதம் வந்துவிட்டால் கஷ்டங்களும் சோதனைகளும் வந்துவிடும் என்று நம்பி, அந்த நாளில் எந்த நற்காரியங்களையும் செய்யாமல் இருந்தனர். இந்த மூட நம்பிக்கையினை தகர்த்தெறியும் விதமாக‌ அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா(ரலி)அவர்கள் கூறினார்கள்,

"நான் ஷவ்வால் மாதத்தில்தான் திருமணம் செய்ய‌ப்பட்டேன். ஷவ்வாலில்தான் என் இல்லற வாழ்வையும் துவக்கினேன். (அப்படியிருக்கும்போது) நபி(ஸல்)அவர்களுக்கு என்னை விட உகந்த மனைவியாக யார் இருந்தார்கள்?" என்று கூறினார்கள். 

ஆதாரம்: முஸ்லிம், அஹ்மத்.


'பீடை மாதமாக கருதப்படும் ஷவ்வாலில் திருமணம் செய்த என் வாழ்க்கை அவ்வளவு மகிழ்வாக உள்ள‌தே' என்று அன்னை ஆயிஷா(ரலி)அவர்கள் சுட்டிக்காட்டியது, அதேபோல் இன்று பீடையாகக் கருதும் ஸஃபர் மாதத்திற்கும்தான் பொருந்தும்! ஆனால் அணுவளவும் மூடநம்பிக்கைக்கு இடமில்லாத இஸ்லாத்தில், "நாங்களும் இஸ்லாமியர்கள்" என்று கூறிக்கொண்டு இதுபோன்ற மூடநம்பிக்கைகளில் மூழ்கியுள்ள‌ முஸ்லிம்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது கைச்சேதமானதே!

இந்த ஸ‌ஃபர் மாத சடங்கு, சம்பிரதாயங்களுக்கு இவர்கள் எடுத்து வைக்கும் காரணங்கள் என்னவென்று பார்ப்போம்!

முதல் காரணம்: நபி (ஸல்) அவர்கள் ஸஃபர் மாதத்தில் நோய்வாய்ப்பட்டு அந்த மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்றுதான் அவர்கள் குணமடைந்து குளித்தார்களாம். அதனால் நாமும் ஒடுக்கத்து புதனில் குளித்து நமது முஸீபத்தை நீக்கவேண்டும் என்கிறார்கள். இது ஆதாரமற்றது என்பது ஒருபுறமிருக்கட்டும். நபி(ஸல்)அவர்கள் ஸஃபர் மாதத்தில் நோயுற்றிருந்தார்கள் என்றால் அது பீடை மாதமாகிவிடுமா? அதைத் தொடர்ந்த ரபீஉல் அவ்வல் மாதத்திலும்தான் நோயுற்றிருந்தார்கள். ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 ல் மரணித்த நபி(ஸல்)அவர்கள், அதற்கு முன் கிட்டத்தட்ட 17 நாட்கள் நோயுற்றிருந்தார்கள். ஆனால் ரபீஉல் அவ்வலை யாரும் பீடை மாதம் என்பதில்லையே? சொல்லப் போனால் அந்த மாதத்தில்தான் நபி(ஸல்)அவர்கள் மரணிக்கவும் செய்தார்கள்.

மேலும் நபி(ஸல்)அவர்கள் நோய் வாய்ப்பட்டதினால் அந்த மாதமே பீடை மாதம் என்றால், ஸஃபர் மாதத்தில் நபியவர்கள் மேற்கொண்ட ஹிஜ்ரத் பயணம் மகத்தான வெற்றியை ஏற்படுத்தி, இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்து, இஸ்லாத்திற்கென ஒரு நாட்டையே நிறுவ காரணமாக அமைந்ததே! சிந்திப்பதற்கு இது ஒன்று போதாதா சகோதர, சகோதரிகளே..? இவையெல்லாம் மக்கள் தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்டவை என்று சொல்வதை விட, கற்றறிந்த ஆலிம்களுக்கு இதில் பெரும்பங்குண்டு என்றுதான் சொல்லவேண்டும்.

இரண்டாவது காரணம்: அல்லாஹ் "ஆது" கூட்டத்தாரை புதன்கிழமை அன்றுதான் பலமான காற்றைவிட்டு அழித்து நாசப்படுத்தினான். அல்லாஹ் அதுபற்றி "அய்யாமின் னஹிஸாத்தின்" ("பீடை நாட்களில்") என்று குர்ஆனில் கூறியிருக்கிறான் என்றும், அதன் காரணமாகவே நாங்கள் இதைப் "பீடை நாள்" என்று கூறுகிறோம் என்கிறார்கள்.

அல்லாஹுதஆலா ஆது கூட்டத்தின‌ரை 'ஷவ்வால்' மாதத்தின் கடைசி வாரத்தின் புதன்கிழமை காலையிலிருந்து அடுத்த புதன் மாலை வரை ஏழிரவும், எட்டுப் பகலும் தொடர்ந்து பலமான காற்றைய‌னுப்பி, அவர்கள் செய்த அக்கிரமங்களுக்கு தண்டனையாக அவர்களை அழித்தான். ஆனால் அக்கூட்டத்தாரின் நபியாகிய ஹுது(அலை)அவர்களையும், அவர்களைப் பின்பற்றிய நன்மக்களையும் காப்பாற்றினான். இந்த சம்பவம் கூட ஷவ்வால் மாதம், 'அந்த தீயவர்களின் தண்டனைக்காகவே' நடந்தது.

இவ்வாறு அவர்கள் 'ஷவ்வால்' மாதத்தின் கடைசி புதனில் கிழமையில் அழிக்கப்பட்ட‌தற்கும், அதன் பெயரால் இவர்கள் 'ஸஃபர்' மாதத்தின் கடைசி புதன் கிழமையில் இந்த அனாச்சாரங்களைச் செய்வதற்கும் ஏதாவது சம்பந்தமுள்ள‌தா? இப்படிதான் அல்லாஹ்வோ, நபி(ஸல்)அவர்களோ முன்னோர்களின் தண்டனைகளை நினைவு கூறச் சொன்னார்களா?

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறிய‌ வழியில் செல்லாமல், காலம் காலமாக முன்னோர்கள் செய்த செயல் என்று ஒன்றை நாம் செய்வோமேயானால் நாளை மறுமையில் அதற்கு எந்த பயனும் கிடைக்காமல், மார்க்கத்தில் புதுமையை புகுத்திய குற்றத்திற்காக அவை தண்டனையைதான் பெற்றுத் தரும். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக!)

இதோ நபி(ஸல்)அவர்களின் பொன்மொழியைப் பாருங்கள்:

எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்வாறு ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள் மற்றும் மனிதர்களின் சாபம் உண்டாகிறது என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அலி(ரலி); ஆதாரம்:அபூதாவூத், நஸாயீ)

மேலும் அல்லாஹ் படைத்திருக்கக்கூடிய நாட்களை நல்ல நாள், கெட்ட நாள் என்று கூறுவது அல்லாஹ்வைக் குறைக் கூறுவதாகும்.

"ஆதமுடைய மகன்(மனிதன்) காலத்தைக் குறை கூறுவதன் மூலம் என்னை (அல்லாஹ்வை) குறை கூறுகிறான். ஏனெனில் நானே காலமாக (காலத்தை இயக்குபவனாக) இருக்கிறேன்" என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
              அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்:புகாரி(4826)

மற்றவர்களுக்கு நல்ல நாள் பார்த்துக் கொடுப்ப‌வர்களில் பெரும்பாலோர் வசதியான, சந்தோஷமான‌ நிலையில் இல்லை என்பதை கவனத்தால், அவர்கள் தனக்கே ஒரு நல்ல நாளைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்பதை உணரலாம். ஆக, பீடை நாள் என்று நம்பி நாம் எங்கு ஓடி, ஒளிந்தாலும் நமக்கு வரவேண்டிய துன்பம் வந்தே தீரும். இரும்புக் கோட்டைக்குள் நாம் பத்திரப்படுத்தப்பட்டாலும் வரக்கூடிய தீங்கு வந்தே தீரும்! அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரும் அதை தடுக்க‌ முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

"அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது." (அல்குர்ஆன் 10:107)

"ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன்தான் எங்கள் பாதுகாவலன் என்று (நபியே) கூறுவீராக!" (அல்குர்ஆன் 9:51)


எனவே, இந்த ஸஃபர் மாதத்தை பீடை என்பதற்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்த ஆதாரமும் இல்லை என்பதையும், இவை அனைத்தும் வெறும் வயிற்றுப் பிழைப்பிற்காக, சுய நலம் கொண்டவர்க‌ளால் உருவாக்கப்பட்டவை என்பதையும் விளங்கி, முழு மனித சமுதாயத்திற்கும் நேர்வழிக் காட்டிட ஏக இறைவனால் வழங்கப்பட்ட இஸ்லாம் மார்க்கத்தில் குர்ஆன் மற்றும் நபிவழிகளில் மட்டுமே மக்கள் வாழ, இத்தகைய மூடப் பழக்கங்கள‌னைத்தும் நமது சமுதாயத்தை விட்டும் அடியோடு ஒழிய அனைவரும் பாடுபடுவோம். எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு துணைச் செய்வானாக!

15 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    மிக நல்ல அவசியமான ஒரு பதிவு சகோ.அஸ்மா.

    ஃபிலாஷ்பேக்: ஒருகாலத்தில் எண்பதுகளில் எங்கள் வீட்டிலேயே இது நடந்தது. அதிரை அல்லது மனோரா கடற்கரைக்கு நாங்கள் கூட்டம் கூட்டமாக செல்வதுமுன்டு. ஆனால், தொன்னூறுகளிலேயே கிட்டத்தட்ட எங்கும் ஒழிந்துவிட்டது.

    கடற்கரை இல்லாத எங்கள் பாபநாசம் பகுதியில் இம்மாதத்தில் ஆறுகள் வறண்டு விட்டதாலும்,(கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் கோடையில் அல்லவா ஸஃபர்?) 'அப்பாடா... நாகூர் கடற்கரைக்கு செல்லும் செலவும் மிச்சம்' என்றும் கறுதி(!) வெகு சீக்கிரம் மக்களில் பெரும்பான்மையோர் இதனை விட்டு விலகி விட்டனர்.

    எனினும், ஒருசிலர் இந்த மூடநம்பிக்கையில் இன்னும் மூழ்கி இருப்பார்களேயானால், குற்றுயிரும் குலையுயிருமாய் கோமா நிலையில் இருக்கும் இந்த ஒடுக்கத்து புதன் மூடநம்பிக்கை ஷைத்தானை குழிதோண்டி புதைத்து விட ஒரு சிறந்த மரணஅடி பதிவு. மிக்க நன்றி.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ.அஸ்மா, ஏற்கனவே குற்றுயிரும் குலையுயிருமாய் கோமா நிலையில் இருக்கும் இந்த ஒடுக்கத்து புதன் மூடநம்பிக்கை ஷைத்தானை குழிதோண்டி புதைத்து விடும்படியான நேரத்திற்கு ஏற்ற ஒரு அவசியமான நல்ல பதிவு. மிக்க நன்றி.

    ReplyDelete
  3. @ முஹம்மத் ஆஷிக்...

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    //ஒருசிலர் இந்த மூடநம்பிக்கையில் இன்னும் மூழ்கி இருப்பார்களேயானால், குற்றுயிரும் குலையுயிருமாய் கோமா நிலையில் இருக்கும் இந்த ஒடுக்கத்து புதன் மூடநம்பிக்கை ஷைத்தானை குழிதோண்டி புதைத்து விட...//

    அல்லாஹ்வின் உதவியால், தவ்ஹீத் விழிப்புணர்ச்சியின் பலனாய் பெரும்பாலும் இவை குறைந்திருந்தாலும் முழுமையாக ஒழியவில்லை சகோ. கணிசமான அளவு குறைந்துள்ளதால் பிரபலமின்றி, நீங்கள் சொல்வதுபோல் கோமா நிலையில் :) இருக்கலாம். எந்தக் கூட்டம் தர்கா, கந்தூரியை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளதோ அவர்கள் இதை இன்னும் கைவிடவில்லை. இதை இப்படியே விட்டால் மீண்டும் தலைத் தூக்கலாம். சுத்தமாக துடைத்தெறியும் ஆவலில்தான் இந்த பதிவு. அல்லாஹ்தஆலா இதுபோன்றவற்றை முற்றிலும் ஒழிப்பானாக!

    கருத்திற்கு நன்றி சகோ.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ அவர்களுக்கு

    அறிவிப்பாளர்: அம்ருபின் அவ்ஃப் (ரலி)

    நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்

    இஸ்லாமிய மார்க்கம் தொடக்கத்தில் மக்களுக்கு அந்நியமானதாக இருந்தது,விரைவில் இது முன்போலவே அந்நியமானதாகிவிடும்;
    எனவே அந்நியமானவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!
    இவர்கள் எனக்குப் பின்னால் மக்கள் சீர்குலைத்துவிட்ட என் வழிமுறைகளை உயிர்ப்பிப்பதற்காக எழக்கூடியவர்கள் ஆவார்கள்.
    (நூல்:மிஷ்காத்)

    நபியவர்கள் முன்னறிப்பு செய்த கூட்டத்தில் நீங்களும் உங்களுடைய பங்களிப்பை செய்திருக்கிறீர்கள்
    அல்ஹம்துலில்ல்லாஹ்
    தொடர்ந்து நேர்வழி செல்ல அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக

    சகோதரன்
    ஹைதர் அலி

    ReplyDelete
  5. @ ஹைதர் அலி...

    //தொடர்ந்து நேர்வழி செல்ல அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... இன்ஷா அல்லாஹ், இறுதி மூச்சுவரை நேர்வழியில் வாழ்ந்து நேர்வ‌ழியில் மரணிக்க நம்மனைவருக்கும் அல்லாஹ்வே போதுமானவன்! உங்களின் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  6. ஸலாம் சகோ அஸ்மா...
    அருமையான பதிவு..முதலில் எனது வாழ்த்துக்கள்,அல்லாஹ் உங்களின் அறிவை மேலும் விசாலமாக்க போதுமானவன்..

    இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்..ஒடுக்கத்து புதன்'ல இவ்ளோ மூடநம்பிக்கைகள் இருக்கா....

    எனது சிறு வயதுகளில் ஒடுக்கத்து புதன் கேள்விப்பட்டு இருக்கிறேன்..அன்னாளில் வீட்டை சுத்தம் செய்வார்கள்..ரொட்டி சுட்டு,வசதியற்றவர்களுக்கு அம்மா கொடுக்க சொல்வார்கள்,கொடுத்து விட்டு வருவேன்..அதை தவிர வேரெதும் செய்ததாக நியாபகம் இல்லை.ரெண்டாவது எங்கூர்ல கடல் ஆறு எல்லா இல்லாததால இது போல குளியல் இல்லையோ என்னவோ..ஆனா ஊரணி இருந்துச்சே..ம்ம்...ஊரணி இதுக்கு எலிஜிபிள் இல்லையோ என்னவோ..

    இதெல்லா எந்த ஊர் பழக்கம் சகோ...இன்னும் கடைப்பிடிக்கப்படுதா என்ன?

    காலமாக வல்லோன் இருக்க.காலத்தை பழிப்பது எத்துனை பெரிய மூடத்தனம்..அல்லாஹ் பாதுகாக்கனும்...

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    இதற்கு முற்று புள்ளி வைக்கும் நேரம் வந்து விட்டது, நம் இளைய தலைமுறை இவற்றை எல்லாம் புறகணிக்க ஆரம்பித்து விட்டார்கள். சில ஜென்மங்களை திருத்த முடியாது.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் இது போன்ற பதிவுகள் வாசிப்பவரை சிந்திக்க வைக்கும் அல்ஹம்துலில்லாஹ்.

    ReplyDelete
  9. @ RAZIN ABDUL RAHMAN...

    //ஸலாம் சகோ அஸ்மா...
    அல்லாஹ் உங்களின் அறிவை மேலும் விசாலமாக்க போதுமானவன்..//

    ஸலாம் ரஜின்! தங்களின் பிரார்த்தனைக்கு நன்றி சகோ. மேலும் துஆ செய்யுங்கள்.

    //வீட்டை சுத்தம் செய்வார்கள்..ரொட்டி சுட்டு,வசதியற்றவர்களுக்கு அம்மா கொடுக்க சொல்வார்கள்,கொடுத்து விட்டு வருவேன்..அதை தவிர வேரெதும் செய்ததாக நியாபகம் இல்லை//

    இதுபோன்று சிம்பிளான பாவம் :) செய்யும் சிலரும் உள்ளனர். நாங்களும் அதுபோல்தான் இருந்தோம். நேர்வழிக்கு கொண்டு வந்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!

    //ரெண்டாவது எங்கூர்ல கடல் ஆறு எல்லா இல்லாததால இது போல குளியல் இல்லையோ என்னவோ..//

    இருக்கலாம் சகோ. ஆனா அக்கம் பக்கத்து ஊர்கள்ல இருந்தா கூட மூட்டைக் கட்டிக் கொண்டு போவார்கள். அதற்கும் சாத்தியப்படாவிட்டால்,(தர்காவாதிகள்)அட்லீஸ்ட் தர்காவுக்காவது போவார்கள் :( உங்க பக்கம் அந்தளவுக்கு தீவிரமாக இல்லையென்று நினைக்கிறேன்.

    //இதெல்லா எந்த ஊர் பழக்கம் சகோ...இன்னும் கடைப்பிடிக்கப்படுதா என்ன?//

    ஆரம்பத்தில் சொன்னவை (எங்க பக்கம்) தஞ்சை மாவட்டங்களில் நடக்கும். "இன்னும் சில ஊர்களில் அரிசி மாவு கொழுக்கட்டைகளை செய்து..." - இந்த கூத்தெல்லாம் கிராமப் புறங்களில் நடப்பதாக கேள்விப்பட்டிருக்கேன் சகோ.

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  10. @ இளம் தூயவன்...

    //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    இதற்கு முற்று புள்ளி வைக்கும் நேரம் வந்து விட்டது, நம் இளைய தலைமுறை இவற்றை எல்லாம் புறகணிக்க ஆரம்பித்து விட்டார்கள். சில ஜென்மங்களை திருத்த முடியாது//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... திருந்திய மக்களை நினைத்து அல்லாஹ்வுக்குதான் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். திருந்தாத கூட்டத்திற்கு இன்ஷா அல்லாஹ் 'அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்' என்ற நம்பிக்கையில் எடுத்துச் சொல்லிக் கொண்டே இருப்போம்! அல்லாஹ் போதுமானவன். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  11. @ ராஜவம்சம்...

    //வாழ்த்துக்கள் இது போன்ற பதிவுகள் வாசிப்பவரை சிந்திக்க வைக்கும் அல்ஹம்துலில்லாஹ்//

    எல்லாப் புகழும் இறைவனுக்கே! திருந்த வேண்டியவர்கள் சிந்தித்தால் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் இறைவன் பலன் தருவான். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா..,
    ரொமப அருமையாக சொல்லியிருக்கின்றீர்கள்....
    இதை படிக்கின்ற ஒவ்வொருவரும் இத புரிந்து நடந்து கொள்ளட்டும்.
    \\\அணுவளவும் மூடநம்பிக்கைக்கு இடமில்லாத இஸ்லாத்தில், "நாங்களும் இஸ்லாமியர்கள்" என்று கூறிக்கொண்டு இதுபோன்ற மூடநம்பிக்கைகளில் மூழ்கியுள்ள‌ முஸ்லிம்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள் ////
    ரொம்ப சரியாக சொன்னீங்க....அல்லாஹ்வின் மீதுள்ள பற்றில் செய்யும் காரியங்கள் என்று கூறி கொண்டு இதுபோன்ற இழிவான காரியங்களை எப்போது சிலர் நிறுத்தபோகிறார்கள் என்று தெரியவில்லை.
    இன்னும் ஒண்ணு சொல்லவில்லையே அஸ்மா....
    இன்னும் சில பேர் பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுன்னு சொல்லிட்டு அன்னைக்குதான் திருமணங்களுக்கு வேண்டியதை வாங்குவது,இன்னும் சில காரியங்களெல்லாம் செய்வார்களே.....
    இவையெல்லாம் மாற வேண்டும் என்று நாம் அனைவரும் அல்லாஹ்விடம் துஆ செய்வோமாகா....உங்கள் அருமையான எழுத்துக்கு எனது பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் அஸ்மா...

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  13. @ apsara-illam...

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    //அல்லாஹ்வின் மீதுள்ள பற்றில் செய்யும் காரியங்கள் என்று கூறி கொண்டு இதுபோன்ற இழிவான காரியங்களை எப்போது சிலர் நிறுத்தபோகிறார்கள் என்று தெரியவில்லை//

    அல்லாஹ் நாடினால் எப்படியும் திருந்திவிடுவார்கள், இன்ஷா அல்லாஹ்!

    //இன்னும் ஒண்ணு சொல்லவில்லையே அஸ்மா....
    இன்னும் சில பேர் பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுன்னு சொல்லிட்டு அன்னைக்குதான் திருமணங்களுக்கு வேண்டியதை வாங்குவது,இன்னும் சில காரியங்களெல்லாம் செய்வார்களே.....//

    ஆமா அப்சரா.. ஆனா அது மற்ற புதன் கிழமைகளில்தான் புதனை நல்ல நாளாக கொண்டாடுவார்கள். அதே சமயம் இந்த‌ ஒடுக்கத்து புதனும் ஸஃபர் மாதமும் அவர்களுக்கு கெட்ட நாட்கள்(?)!

    //இவையெல்லாம் மாற வேண்டும் என்று நாம் அனைவரும் அல்லாஹ்விடம் துஆ செய்வோமாகா....//

    கண்டிப்பாக துஆ செய்வோம். கருத்திற்கு நன்றி அப்சரா! இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு உங்கள் கருத்தையெல்லாம் அதிகமா பார்க்க முடியாது :( அப்போ நெட் பக்கம் வரும்போதெல்லாம் இங்கே வராமல் போய்டாதீங்க அப்சரா!

    ReplyDelete
  14. Assalaamu alaikum wr wb..
    Alhamdulillah. Nalla oru pathivu annaalaiya niyabagam ninaivukku kondu vanthu vitteergal ennavo "peedai kazhindaal sari" ha ha ha..! Iruntha pothilum Rotti oru thani teste thaan !

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி

    அழகிய பதிவு ஒடுக்கத்து புதன் ஒடுக்கப்பட்டு ஒடுங்கி கொண்டு இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் ஆனால் இன்றளவும் எங்கள் ஊரில் சில தர்கா பைத்தியங்கள் இதை பற்றி பிடித்து தொங்கி கொண்டு தான் இருக்கிறார்கள்

    அரிசிமாவு ,கொழுக்கட்டை .கடலில் கரைப்பது ....... ஆமாம் இந்த பிள்ளையார் சதுர்த்தி நம் தமிழகத்தில் இப்போ தானே நுழைந்து இருக்கிறது அதற்கு முன்னே நம்ம ஆலிம்கள் இதை எங்கே இருந்து காப்பி அடித்து இருப்பார்கள் ??

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை