அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday 17 February 2011

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பும் அவச‌ர‌ கோரிக்கையும்!

அரசாங்கத்திற்கு அவசரத் தந்தியனுப்பி சமூக நலனுக்காக‌ உதவுங்க‌ள்!

இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி சென்ற மாதம் முதல் தொடங்கப்பட்டது. 120 கோடிக்கு மேற்பட்ட மக்களை தனித்தனியாக கணக்கெடுத்து, அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்குவது உலகிலேயே இதுதான் முதல் முறை. எந்தவொரு கிராமமும் விட்டுப்போகாத அளவுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கணக்கெடுப்புடன், முதல் முறையாக தேசிய மக்கள் தொகை பதிவேடும் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய திட்டமாக இது வகுக்கப்பட்டு மிக நுட்பமாக நிறைவேற்றப்படுகிறது.



குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் பதிவு செய்வதன் மூலம் இப்பணி தொடங்கப்பட்டது.


o தற்போது நடத்தப்படும் 2011-க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மொத்த பரப்பளவில் 2.7 சதவிகித பரப்பளவைக் கொண்டுள்ள இந்தியாவில், உலக மக்கள் தொகையில் 17.5 சதவிகித மக்கள் வசிக்கின்றனர். பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் நம் நாட்டில் 28 மாநிலங்கள், 7 யூனியன்கள், 640 மாவட்டங்கள், 7,742 நகரங்கள், 6 லட்சத்து 8 ஆயிரத்து 786 கிராமங்கள் மற்றும் 30 கோடிக்கும் அதிகமான வீடுகள் இந்தியாவில் உள்ளன.

o நடந்து வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி இந்தியாவில் 15 வது முறையாக நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு தனி மனிதன் குறித்த பல்வேறு தகவல்களும் பதிவு செய்யப்படும். 15 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் அடையாள அட்டையும், அடையாள எண்ணும் வழங்கப்படும். மேலும் அடையாள அட்டையில் புகைப்படம், அவரது கைரேகை ஆகியவை பதியப்படும். அது மட்டுமின்றி, ஒவ்வொருவரின் கண் விழிகளையும் பதிவு செய்வது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது.

o இந்த‌ மக்கள் தொகை கணக்கெடுப்பில் புதிய‌ முறையாக செல்போன்/லேண்ட்லைன் போன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் வசதி, வாகன வசதி, மின்சார வசதி, குடிநீர் பயன்பாடு, கழிவுநீர் வசதி, எரிவாயு இணைப்பு, மணமான தம்பதிகளின் எண்ணிக்கை, மாத வருமானம், வங்கிக் கணக்கு/சேமிப்பு, குடிசை வீடா, ஓட்டு வீடா, மாடி வீடா ஆகிய 35 தகவல்கள் இடம் பெறுகின்றன. இதில் வீடுகள் மட்டுமின்றி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற நிறுவனங்கள் தொடர்பான விவரங்களும் கணக்கெடுக்கப்படும். மேலும் தற்போதைய முகவரி மற்றும் நிரந்தர முகவரி என்ன, இந்தியரா அல்லது வெளிநாட்டவரா போன்ற தகவல்களும் சேகரிக்கப்படும்.

o இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின், விவரங்களை சேகரித்த அரசு ஊழியரும், குடியிருப்பில் இருப்பவரும் கையெழுத்து இடவேண்டும். இதற்கு ஒப்புகைச் சீட்டு ஒன்றும் குடியிருப்பில் இருப்பவருக்கு வழங்கப்படும். இந்த ஒப்புகைச் சீட்டை மக்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். வீடுகளில் கணக்கெடுப்பு முடிந்தவுடன், அந்த வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். இந்த கணக்கெடுப்புக்கு மட்டும் சுமார் 2300 கோடி ரூபாயும், பதிவேடுகள் தயாரிப்பதற்கு ஏறக்குறைய 3550 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அடையாள அட்டை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

o மேலும் இந்தியாவில் ஸ்திரமாக வசிக்கும் பாகிஸ்தான் குடிமக்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் உட்படுத்தப்படும். அதுபோல் கணக்கெடுப்பில் இலங்கை, பர்மா அகதிகளும் இடம் பெறுவர்.

o கணக்கெடுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பாளர்கள் போர்வையில் திருடர்கள் வீடுகளில் நுழைந்து விடும் அபாயமிருப்பதால், அடையாள அட்டை இல்லாமல் வருப‌வர்களிடம் கணக்கெடுப்பு குறித்த விபரங்களை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டாம் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் திரு. கோபால கிருஷ்ணன் கூறியுள்ளார்.

எனவே அடையாள அட்டையுடன் கணக்கெடுப்பு பணிக்காக வரும் அரசாங்க அதிகாரிகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து தகவல்களை அளிக்க வேண்டியது அவசிய‌மாகும். இந்தத் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். பொதுமக்கள் தங்களுடைய புகைப்படத்தையோ, வேறு நகல்களையோ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தகவல்களை மட்டும் தெரிவித்தால் போதும். அத்துடன் விபரமறியாத மக்கள் அதிகமிருக்கும் சமூகத்தில் உள்ளவர்களுக்கான‌ சரியான விளக்கங்களை முன் கூட்டியே கொடுத்தால் அவர்களது பெயர் விடுபட்டுப் போகாமல் இருக்கும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டில் உள்ள எல்லா கணக்கெடுப்புகளுக்கும் அடிப்படையானதாகும். எனவே மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை: 

o வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அல்லது வீட்டின் உரிமையாளர்கள் வெளியே செல்வதாக இருந்தால், தாசில்தார்/நகராட்சி/மாநகராட்சி அலுவலகங்களில் தகவல் கொடுத்தால், மற்றொரு நாளில் கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுக்க வருவர். இதனால் யாருடைய‌ பெயரும் விடுபட்டுப் போவதை தவிர்க்கலாம்.

o வெளிநாட்டு இந்தியர்கள் கணக்கெடுப்பில் இடம் பெற மாட்டார்கள். அவர்கள் மீண்டும் இந்தியாவில் குடியேறிவிட்டால், மக்கள் கணக்கெடுப்பில் விண்ணப்பித்து, தங்களது பெயரை இணைத்து கொள்ளலாம்.

இது சம்பந்தமாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தொடர்ந்து வாழ்பவர்களை மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்பில் உட்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பதிவேட்டில் பதிவுச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளது.

ஆனால் 'மீண்டும் இந்தியாவில் வந்து குடியேறிவிட்டால்' எனும்போது படிப்பு, தொழில், உத்தியோகம் சம்பந்தமாக மீண்டும், மீண்டும் வெளிநாடுகளில் சென்று வாழும் நிலையில் தள்ளப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் தங்களை கணக்கெடுப்பு பதிவேட்டில் பதிவு செய்ய முடியாமலே போய்விடும் வாய்ப்புள்ளது. எனவே வெளிநாடு வாழ் இந்தியர்களையும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்கக் கோரி குடியரசுத் தலைவர், சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு அவசரத் தந்தி அனுப்பி, இந்திய மண்ணின் மைந்தர்களாக வெளிநாட்டில் வாழும் எல்லோருடைய பெயரும் இந்த கணக்கெடுப்பில் இடம்பெற இந்த சிறிய உதவியைச் செய்து, சமுதாய நலனுக்கு உதவியதற்கான மிகப்பெரும் நன்மையை இறைவனிடத்தில் பெற்றுக் கொள்ளுங்கள்! 


சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு அனுப்ப வேண்டிய தந்தி வாசகம்:

Please urge the government to include emigrants also in Indian population final total


அனுப்ப வேண்டிய முகவரிகள்:
Smt. Sonia Gandhi
10, Janpath
New Delhi.
Tel. (O) : 23792263, 23019080
Tel. (R) : 23014161, 23014481
Fax : 23018651
Rahul Gandhi, MP
12, Tughlak Lane
New Delhi
Tel. (O) : 23019056, 23019080
Tel. (R) : 23795161
Fax (R) : 23012410
Tamil Nadu CM
New No.15, Old No.18,
4th Street, Gopalapuram,
Chennai 600086

பிரதமர், மற்றும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய தந்தி வாசகம்:

Please include emigrants also in Indian population final total

அனுப்ப வேண்டிய முகவரிகள்:
The Prime Minister’s Office
South Block, Raisina Hill,
New Delhi,
India-110 101.
Telephone: 91-11-23012312.
Fax: 91-11-23019545 / 91-11-23016857
The President of India
Rashtrapati Bhavan
New Delhi – 110 004



(செய்திக் கோவை)
source: tntj.net

13 comments:

  1. நல்ல தகவல் தொகுப்பு. 120 கோடி மக்களுக்கு 30 கோடி வீடுகளோ? அதுதான் எப்படிக் காணும் என யோசிக்கிறேன்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்...
    சகோ.அஸ்மா...!
    இதென்ன கொடுமை..?
    //Please include emigrants also in Indian population final total//---மக்கள்தொகை கணக்கெடுப்பின் சமயம், என் வீட்டில், என் பெற்றோர்கள்... நானும் என் குடும்பமும் வெளிநாட்டில் இருப்பதாக சொன்னால், எங்கள் பாஸ்போர்ட் காபி, ரேஷன் கார்ட், பிறப்புச்சான்றிதழ் இவற்றை எல்லாம் காண்பித்தால் அதிகாரிகள் எங்களை இந்தியர்கள் என்று கணக்கிட மாட்டார்களா? இது புரியாதா கணக்கெடுப்பவர்களுக்கு? அந்த ஆவனங்கள் போதாதா திகாரிகளுக்கு? நேரில்தான் வந்தாக வேண்டுமா, என்ன? இதென்ன அநியாயம்?

    முதலில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பெயரையும் விபரங்களையும் அவர்களின் குடும்பத்தாரிடம் கேட்டு மக்கள்தொகையில் சேர்த்து பதிந்து கொள்ளட்டும்... ஊர் செல்லும் சமயம் நம் முகத்தை காட்டி ஆவணங்களை (பாஸ்போர்ட்/வாக்காளர் அடையாள அட்டை)நேரில் காட்டி விட்டு... "மக்கள்தொகை அடையாள அட்டையை" பெற்றுக்கொள்வோம்..! சரிதானே?

    எனக்கு கொஞ்சம் விளக்குவீர்களா, சகோ? வெளிநாட்டில் வாழ்பவர்களை இந்தியர்களாய் கணக்கிட வேண்டாம் என்று ஏதும் G.O உள்ளதா,சகோ.? அப்புறம் எதற்கு தந்தி என்று புரியவில்லையே சகோ.அஸ்மா..!

    ReplyDelete
  3. நல்லொதொரு விளக்கம் சகோ...

    ஆனால் பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்கும் வகையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறுகிறார்கள். புகைப்படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கி 13 ஆண்டுகள் ஆகியும், இன்னும் எல்லோருக்கும் வழங்க முடியவில்லை. அதேபோல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, பயோ மெட்ரிக் அட்டை தர குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் என்பது பெரும்பாலரின் கருத்து, இந்த பத்தாண்டு இடைப்பட்ட காலங்களில் நாம் இந்தியா செல்லாமலாயா இருக்கப் போகிறோம் ?

    மக்கள் தொகை கணக்கென்பது அரசுக்குத்தான் முக்கியமே தவிர நமக்கு இல்லை என்றும் இருந்து விட முடியாது காரணம் தற்பொழுது ஜாதி ரீதியாக கணக்கெடுப்பிற்கு உயர் மட்டக் குழு பரிசிலித்திருப்பதால் சிருபானமையினரான நாமும் இதில் பங்கு பெறுவதுதான் புத்திசாலித்தனம்.

    காரணம் நமக்கு கிடைக்கவேண்டிய சழுகைகளும் உதவிகளும் இந்த கணக்கெடுப்பின் மூலமாகத்தான் தெரிய வரும்.

    முயற்சிதான் செய்து பார்ப்போமே...

    ஒரு தந்தி அனுப்புறதுக்கு எவ்வளவு நேரம் செலவாகிடப் போகிறது ?

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சகோ.அஸ்மா,
    சோனியா காந்தி, ராகுல்காந்திக்கும் அனுப்பவேண்டுமா?
    ஏன்?

    ReplyDelete
  5. தோழி அதிரா, சகோ முஹம்மத் ஆஷிக், சகோ (அய்யூப்) அந்நியன் 2, சகோ மு.ஜபருல்லாஹ், தோழி அன்னு அனைவருக்கும் இதன் மூலம் அறிவிப்பது என்னவென்றால் :),

    சிறிய ஒரு error னால் இரண்டு நாட்களாக டைப் பண்ண சிஸ்டம் இடம் கொடுக்காததால் யாருக்கும் உடனே பதில் கொடுக்க முடியவில்லை :( இப்போதுதான் சரியாகியது.(இறைவனுக்கே புகழனைத்தும்!) தாமதத்திற்கு அனைவரும் மனம் பொறுத்துக் கொள்ளவும்.

    ReplyDelete
  6. @ athira...

    //நல்ல தகவல் தொகுப்பு. 120 கோடி மக்களுக்கு 30 கோடி வீடுகளோ? அதுதான் எப்படிக் காணும் என யோசிக்கிறேன்//

    சராசரியாக ஒரு வீட்டிற்கு நான்கு பேர் என்று பார்த்தாலும் அது போதுமான அளவுதான் அதிரா. அப்படியிருந்தும் காடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு வீடுகள் இன்னும் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன‌!! அதனால் புதிய கணக்கெடுப்பில் இவை அதிகமாகலாம். 'எப்படிக் காணும்' என்ற உங்களின் கவலையும் குறையலாம் :))) வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அதிரா.

    ReplyDelete
  7. @ முஹம்மத் ஆஷிக்...

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    //மக்கள்தொகை கணக்கெடுப்பின் சமயம், என் வீட்டில், என் பெற்றோர்கள்... நானும் என் குடும்பமும் வெளிநாட்டில் இருப்பதாக சொன்னால், எங்கள் பாஸ்போர்ட் காபி, ரேஷன் கார்ட், பிறப்புச்சான்றிதழ் இவற்றை எல்லாம் காண்பித்தால் அதிகாரிகள் எங்களை இந்தியர்கள் என்று கணக்கிட மாட்டார்களா? இது புரியாதா கணக்கெடுப்பவர்களுக்கு?//

    //வெளிநாட்டில் வாழ்பவர்களை இந்தியர்களாய் கணக்கிட வேண்டாம் என்று ஏதும் G.O உள்ளதா,சகோ.?//

    பின்னுள்ள செய்தியைப் பாருங்க சகோ:

    "வெளிநாடு வாழ் இந்தியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் பதிவுச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளது. இதனை செயல்படுத்துவதில் சிரமம் உள்ளதால் தற்பொழுது இதனை பரிசீலிக்க இயலாது எனவும், பின்னர் இதனைக் குறித்து ஆலோசிக்கலாம் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடுச் செய்திருந்த தலைமைச் செயலாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் உயர்மட்டக் கூட்டத்தில் மத்திய அரசு உறுதிபட கூறியுள்ளது"

    அத்துடன் உங்களின் கேள்விகளுக்காக கூடுதல் விளக்கங்களும் பதிவில் சேர்த்துள்ளேன் சகோ. அவற்றை மீண்டும் ஒருமுறை படித்தால் உங்களுக்கு போதுமான பதில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். அப்படியே உங்களால் முடிந்தால் தந்தியும் அனுப்பிடுங்க :)

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  8. @ அந்நியன் 2...

    //நல்லொதொரு விளக்கம் சகோ...//

    இன்னும் சில செய்திகளும் விளக்கத்திற்காக சேர்த்துள்ளேன். முடிந்தால் இன்னொரு முறை கொஞ்சம் படிச்சிடுங்க சகோ.

    //ஆனால் பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்கும் வகையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறுகிறார்கள். புகைப்படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கி 13 ஆண்டுகள் ஆகியும், இன்னும் எல்லோருக்கும் வழங்க முடியவில்லை. அதேபோல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, பயோ மெட்ரிக் அட்டை தர குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் என்பது பெரும்பாலரின் கருத்து, இந்த பத்தாண்டு இடைப்பட்ட காலங்களில் நாம் இந்தியா செல்லாமலாயா இருக்கப் போகிறோம் ?//

    பயோ மெட்ரிக் முறையில் செய்து கொடுக்க‌ 10 ஆண்டுகள் ஆகலாம் சரி! அதற்குள் நீங்கள் ஒன்வேயில் போய் செட்டில் ஆகுவீர்கள் என்றால்.. :)) ஓகேதான். இல்லாவிட்டால் சேர்ப்பார்களா என்பது சந்தேகமே!

    //மக்கள் தொகை கணக்கென்பது அரசுக்குத்தான் முக்கியமே தவிர நமக்கு இல்லை என்றும் இருந்து விட முடியாது காரணம் தற்பொழுது ஜாதி ரீதியாக கணக்கெடுப்பிற்கு உயர் மட்டக் குழு பரிசிலித்திருப்பதால் சிருபானமையினரான நாமும் இதில் பங்கு பெறுவதுதான் புத்திசாலித்தனம். காரணம் நமக்கு கிடைக்கவேண்டிய சழுகைகளும் உதவிகளும் இந்த கணக்கெடுப்பின் மூலமாகத்தான் தெரிய வரும்.//

    மிகச் சரியான கருத்து சகோ. கவனமாக இருந்து கண்டிப்பாக பெயரைச் சேர்க்கவேண்டும்.

    //முயற்சிதான் செய்து பார்ப்போமே... ஒரு தந்தி அனுப்புறதுக்கு எவ்வளவு நேரம் செலவாகிடப் போகிறது ?//

    அதானே..? இதுக்கெல்லாம் கணக்கு பார்க்கலாமா? :‍-)

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  9. @ மு.ஜபருல்லாஹ்...

    //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சகோ.அஸ்மா,
    சோனியா காந்தி, ராகுல்காந்திக்கும் அனுப்பவேண்டுமா? ஏன்?//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்.. அவங்க ஆட்சிதானே இப்போ நடக்குது.. அதனால் அவங்க பார்வைக்கும் நமது கோரிக்கை சேரவேண்டும். வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  10. வெளிநாட்டில் இருக்கிறவங்களைச் சேர்க்காமலேயே 120 கோடின்னா... சேர்த்து கணக்கு போட்டா?:(

    ReplyDelete
  11. @ enrenrum16...

    //வெளிநாட்டில் இருக்கிறவங்களைச் சேர்க்காமலேயே 120 கோடின்னா... சேர்த்து கணக்கு போட்டா?:(//

    ஏம்ப்பா.. இவ்வளவு கவலை..? :)))

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    சகோ.அஸ்மா,

    அப்பாடா..!
    ஒருவழியா விஷயம் தெளிவாயிடுச்சு.

    என்னன்னா...

    நேற்று, என் தங்கை வீட்டுக்கு மக்கள் தொகை கணக்கெடுக்க வந்த அதிகாரிகள், "வெளிநாட்டில் இருப்பவர்களை தவிர மற்றவர்களின் பெயர்களை மட்டும் சொல்லுங்கள்" என்று கூற...

    உடனே என் தங்கை வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டு இருக்கும் இந்தியர் எல்லாம் மக்கள் இல்லையா? அவர்களை ஏன் மக்கள் தொகையில் சேர்க்க மாட்டேன் என்கிறீர்கள்?" என்று கேட்க...

    அந்த அதிகாரி சிரித்துக்கொண்டே, "அது அப்படி இல்லைமா, ஒவ்வொரு நாட்டு தூதரகமும் அந்தந்த நாட்டில் வாழும் இந்தியர்களின் முழு விபரத்தையும் எங்களுக்கு அனுப்பி விடும். அது தனியாக ஏற்கனவே கூட்டப்பட்டு இருக்கிறது. இங்கே நானும் மீண்டும் அதே நபர்களை கூட்டினால் கணக்கு தவறாகிவிடும் அல்லவா..?" என்று கேட்டிருக்கின்றனர்.

    மேலும், "அதெப்படி நம்ம மக்களை இந்தியர் இல்லை என்று விட்டுவிட முடியும்..? எந்த நாட்டில் இருந்தாலும் மக்கல்தொகையில் சேர்த்து விடுவோம். கவலை வேண்டாம்.." என்றும் கூறி இருக்கின்றனர்.

    இப்போது தெளிவாகி விட்டதா? நாமெல்லாம் வெளிநாட்டில் பணிபுரிந்தாலும் வாழ்ந்தாலும் இந்தியா பாஸ்போர்ட் வைத்திருந்தால் இந்தியர்தான்... இந்தியர்தான்... இந்தியர்தான்...

    ReplyDelete
  13. @ முஹம்மத் ஆஷிக்...

    வ‌ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... ஏற்கனவே உங்களுக்காக கூடுதல் விளக்கங்கள் பதிவில் சேர்த்துள்ளேன். படித்தீர்களா சகோ? சரி, மீண்டும் சொல்கிறேன்.

    மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபால கிருஷ்ணன் 2010 ஜூன் மாதம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி, பத்திரிக்கைகளில் வந்தது. அதில் "வெளிநாட்டு இந்தியர்கள் கணக்கெடுப்பில் இடம்பெற மாட்டார்கள். அவர்கள் மீண்டும் இந்தியாவில் குடியேறிவிட்டால், மக்கள் கணக்கெடுப்பில் விண்ணப்பித்து, தங்களது பெயரை இணைத்துக் கொள்ளலாம்" என்று அவர் கூறியுள்ள செய்தியையும், 'தேஜஸ் மலையாள நாளிதழ்' வெளியிட்ட பின்வரும் செய்தியையும் பாருங்கள்.

    "புதுடெல்லி: வெளிநாட்டு வாழ் இந்தியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் பதிவுச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. இதனை செயல்படுத்துவதில் சிரமம் உள்ளதால் தற்பொழுது இதனை பரிசீலிக்க இயலாது எனவும், பின்னர் இதனைக் குறித்து ஆலோசிக்கலாம் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடுச் செய்திருந்த தலைமைச் செயலாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் உயர்மட்டக் கூட்டத்தில் மத்திய அரசு உறுதிப்பட கூறியுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து வாழ்பவர்களை மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்பில் உட்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் ஸ்திரமாக வசிக்கும் பாகிஸ்தான் குடிமக்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் உட்படுத்தப்படும்."

    இந்த செய்திக்கு பிறகு.. மக்கள் வைத்த கோரிக்கைக்கு அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லாமலே கணக்கெடுப்பு துவங்கப்பட்ட பிறகுதான், டி.என்.டி.ஜே அமைப்பினர் இந்த கோரிக்கையை அவசர தந்தியாக அனுப்பக் கோரியிருந்தனர். அதன் அவசியத்தை உணர்ந்ததால், நாமும் மற்றவர்களுக்கு அறியக் கொடுப்போமே என்று சற்று விளக்கமாக இந்த பதிவு இடப்பட்டது.

    கணக்கெடுக்க உங்கள் தங்கை வீட்டிற்கு வந்த அதிகாரிகள் சொன்னது சரிதான் என்றால், இந்திய தூதரக‌ங்கள் கணக்கெடுப்பிற்கான தகவல்களை அனுப்பி வைப்பதன் மூலம், அரசாங்கம் இதுவரை பரிசீலனையில் வைத்திருந்த கோரிக்கை நிறைவேற்றப்படலாம். அல்லது உங்கள் தங்கை கேட்டதற்காக‌ அவர்கள் சமாதானமாக சொல்லிவிட்டு சென்றிருக்கலாம். அல்லது இந்த கோரிக்கையை அரசு மறுத்திருந்த விஷயம் அவர்க‌ளுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். எது எப்படியோ, இந்த கோரிக்கைக்காக மேலே (பதிவில்) சொல்லப்பட்டவை தெளிவான விஷயங்களே!

    //இப்போது தெளிவாகி விட்டதா? நாமெல்லாம் வெளிநாட்டில் பணிபுரிந்தாலும் வாழ்ந்தாலும் இந்தியா பாஸ்போர்ட் வைத்திருந்தால் இந்தியர்தான்... இந்தியர்தான்... இந்தியர்தான்...//

    இதுகூட‌ தெரியாத பச்ச்ச்..ச பிள்ளைன்னு நினைச்சிட்டீங்களோ..? :)) கணக்கெடுப்பில் நம்மை சேர்க்கக் கோருவதால் நாம் இந்தியர்கள் அல்ல என்று சொல்லவில்லை சகோ. இந்தியர்களாக இருந்தும், வெளிநாட்டில் இருப்ப‌தால் 'செயல்படுத்துவதில் சிரமம்' என்று காரணம் கூறிக்கொண்டு, க‌ணக்கெடுப்பில் சேர்ப்பதற்கு அரசு மறுப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றுதான் அரசிடம் பலரும் பல விதங்களில் கோரிக்கை வைக்கிறோம். அதில் ஒன்றுதான் இந்த தந்தி மூலம் வைக்கும் கோரிக்கையும். கணக்கெடுப்பு துவங்கிவிட்டதால் அவசரமாக அனுப்பக் கோரினோம், அவ்வளவுதான்! இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஓகேவா? நன்றி சகோ.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை