அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday 13 February 2012

'காதலர் தினம்' இளைஞர்களுக்கு சாபக்கேடு!

வாழ்க்கையில் எந்த ஒரு நெறிமுறைகளும் இல்லாமல் எதையும் பின்பற்றி, எப்படியும் வாழலாம் என்பவர்களைப் பற்றி நமக்கு கவலையில்லை. ஆனால் உண்ணும் முறையிலிருந்து வாழ்க்கையின் அத்தனை விஷயங்களுக்கும் அழகிய வழிமுறைகள் வகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கும் சமுதாய மக்களே இந்த கேடுகெட்ட காதலர் தினக் கொண்டாட்டங்களைக் கொண்டாடுவது என்பது மிகவும் வேதனையான விஷயம்தான்!




'பிப்ரவரி 14' அன்று கொண்டாடப்படும் 'வேலன்டைன் டே' என்ற இந்த 'காதலர் தினம்', ரோமப் பாரம்பரியத்தில் சீரழிந்துப் போன கலாச்சாரத்தின் சிந்தனையால் வணிக நோக்கத்திற்காக உருவானதாகும். இளம்வயது மக்களின் உணர்வுகளைத் தூண்டி அதைப் பணமாக்கத் துடிக்கக்கூடிய‌, வியாபரம் மட்டுமே நோக்கமாகக் கொண்ட மேற்கத்திய பண‌ முதலைகளினால் உருவாக்கப்பட்ட இந்த தினம், சமீப காலமாக நம் இந்திய மக்களிடையேயும் ஊடுருவி, பெரும் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி வருகிறது.

'டீன் ஏஜ்' என்று சொல்லப்படும் பருவமானது தனக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒரு செயல் அது சரியா அல்லது தவறா, அதனால் வரக்கூடிய பின்விளைவுகள் என்ன‌ என்பதையெல்லாம் தூர நோக்கோடு சிந்திப்பதற்கு தடைக்கல்லாக இருக்கும் ஒரு பருவமாகும். அத்தகைய வயதுடையவர்கள்தான் நிதானமில்லாத தன் சிந்தனைகளினால் காதல், கத்தரிக்காய் என்று வெகு சுலபமாக சீரழிவின் படுகுழியில் விழுந்துவிடுகின்றனர். பெரும்பாலும் மாணவ, மாணவிகள் இதில் முதலிடம் என்று சொல்லலாம். இவற்றுக்கெல்லாம் மீடியாக்களின் அட்டூழிய‌ங்களும் தூண்டுகோல்கள் என்றால் அது மிகையாகாது! காதலை ஊக்கப்படுத்தும் விதமாக‌ பல நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவதன் மூலம் சமூக சீரழிவிற்காக‌ ஆற்றும் மீடியாக்களின் அரிய(?)பங்கைத் தட்டிக் கேட்கவோ, தடுத்து நிறுத்தவோ அரசாங்கமே முயல்வதில்லை.

சரி அவர்கள் போகட்டும், பெற்றோர்களுக்காவது பொறுப்பு வரவேண்டாமா? சினிமாக்களும், டிவி சீரியல்களும் இப்படிதான் காதலிக்க வேண்டும் என்ற கேடுகெட்ட கலாச்சாரத்தைக் கற்றுக் கொடுக்கும்போது அதைப் புறக்கணிக்காமல், பெற்றோரும் தங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து அவற்றைப் பார்ப்பது, பற்றாக்குறைக்கு பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வு பாழாக துணை நிற்கும் செல்ஃபோன்களை வாங்கிக் கொடுத்துவிட்டு, அதன் மூலம் தன் பிள்ளைகள் வெளியுலகில் தொடர்புக் கொண்டிருப்பதை அறியாமல் ஒரு கட்டத்தில் யாருடனாவது ஓடிப்போன பிறகு ஒப்பாரி வைத்து என்ன பயன்?

SMS மூலம் பரிமாறப்ப‌டும் ஆபாச உரையாடல்கள், மானங்கெட்ட‌ காதல்(கழிசடைக்) கவிதைகளினால் இன்றைக்கு இளைய தலைமுறைகள் பயன்படுத்தும் செல்ஃபோன்கள் எல்லாம் செக்ஸ் போன்களாக மாறிவருகின்றன என்பதை, தங்களின் பிள்ளைகளின் மீதுள்ள அபரிமிதமான நம்பிக்கையில் பெற்றோர்கள் அறிவதில்லை. ஆக தங்கு தடையில்லாமல் கிடைக்கும் இந்த செல்ஃபோன் காதலோடு, சினிமாவின் காட்சிகளைக் கற்பனையில் கொண்டு வந்து கலந்து, கடைசியில் இந்தக் காதலெனும் நோய் முற்றிப்போய் பெற்றோர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அவர்களைப் பிரிந்து செல்கின்றனர். ஆனால் இதுவல்ல வாழ்க்கை முறை என்பதை அவர்களுக்கு தலையில் கொட்டி புரிய வைக்கவேண்டிய சமுதாயம், அவர்களையெல்லாம் தட்டிக் கொடுத்து வளர்க்கவே இன்று காதலர் தினத்தை அங்கீகரித்துக் கொண்டிருக்கிற‌து. 'காதல்' என்பது கணவன், மனைவிக்கு இடையேயான  'தூய்மையான நேசம்' மட்டுமே என்ற நிலை மாறிப்போன இக்காலத்தில், 'காதலர் தினம்' என்று சொல்வதைவிட 'கழிசடைகள் தினம்' என்று சொல்வதுதான் ரொம்ப பொருத்தமாக இருக்கும்.

இந்த காதல் கலாச்சாரத்தினால் ஒழுக்கக் கேடுகள் ஒருபுறம் என்றால், பல‌ உயிர்கள் பறிபோகும் கொலைகளும் தற்கொலைகளும் மறுபுறம்! கடந்த 2009 ஆம் ஆண்டு மட்டும் (தமிழ்நாட்டில்) காதல் விவகாரத்தினால் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 217! (தினமணி: 8-5-2010). கடந்த(2010 ஆம்) ஆண்டின் கணக்கெடுப்பு வெளிவந்தால் இந்த எண்ணிக்கை இன்னும் கூடலாம்!

- பிள்ளை ஓடிப்போன‌தால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை

- காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை அல்லது காதலியின் முகத்தில் ஆசிட் ஊற்றி கொலை

- வீட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை

- தன் காதலியைக் காதலித்ததால் காதலனால் செய்யப்படும் கொலை அல்லது மற்றவனைக் காதலித்ததால் தன் காதலியைக் கொல்வது!

- தான் காதலிக்கும் திருமணமான ஒரு பெண் அந்த காதலுக்கு சம்மதிக்காததால் ஆத்திரம் தீர அவளின் குழந்தையைக் கடத்திக் கொலை!

- கள்ளக் காதலன் கொலை அல்லது கள்ளக் காதலி கொலை

- கள்ளக் காதலால் வந்த குழந்தை குப்பைத் தொட்டியில் வீசி கொலை

- காதலை ஏற்க மறுத்த மாணவி ஆசிரியனால் கற்பழிக்கப்பட்டு கொலை

- கள்ளக் காதலன்/காதலி சேர்ந்து அவர்களின் கணவன்/மனைவி கொலை

இதுபோன்ற செய்திகளைப் பத்திரிக்கைகளில் படிக்காத நாள் உண்டா? பிள்ளைகளை வளர்க்கும்போதே ஒழுக்கத்தை முறையாக சொல்லி வளர்த்திருந்தால் இந்த அவல நிலைகள் ஏற்படுமா? அனுமதிக்கப்படாத காதல் என்பது வாழ்வின் சீர்கேடு என்பதை பிள்ளைகளுக்கு ஆரம்பத்திலேயே புரிய வைத்திருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகுமா?

தமிழ்க் கலாச்சாரத்தை நாங்கள்தான் கட்டிக் காக்கிறோம் என்று சொல்லும் தமிழ்க் காவலர்கள்(?) இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? சமுதாய அக்கறை கொஞ்சமும் இல்லாமல், 'எவன் செத்தால் எங்களுக்கு என்ன, மீடியாக்கள் மூலம் சம்பாதிக்கும் பணம்தான் எங்களுக்கு முக்கியம்' என்று செயல்படும் மீடியாக்களின் உத்தமர்கள் இந்த காதலை இனியும் ஊக்கப்படுத்தாமல் இருப்பார்களா?

மேற்கத்தியர்களுக்கு வேண்டுமானால் இதெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கலாம். ஏனெனில், அவர்கள் யாரும் கற்பைப் பற்றி கவலைப் படுவதில்லை.

மாடலிங் என்னும் பெயரில் இளம் பெண்களின் உடைகளை இயன்றவரைக் குறைத்து அதற்கு மார்க்குகள் போடுவதும், 'அழகு ராணி'யைத் தேர்ந்தெடுக்கிறோம் என்று அங்கங்களை அள‌ந்துப் பார்த்து கிரீடம் சூட்டுவதும் அவர்களின் நாறிப்போன நாகரிகம்! அங்கெல்லாம் ஒரு தாய், வளர்ந்த தன் பிள்ளைகளை தன்னந்தனியே வெளியில் அனுப்பி வைக்கும்போது சொல்லும் முதல் அட்வைஸ் என்ன தெரியுமா? 'நீ யாரோடு கூடினாலும் கருத்தடை உறையை பயன்படுத்த‌ மறவாதே!' என்பதுதான். இதனால் கல்லூரி செல்லும் பிள்ளைகளும் வேலைக்கு செல்லும் பெண்களும் ஹேண்ட் பேக்குகளில் கருத்தடை சாதனங்கள் வைத்துக் கொள்ளும் நாகரிகம்(?) உடையவர்கள் அவர்கள்!

ஆனால் அவர்களின் கேடுகெட்ட இதுபோன்ற‌ (அ)நாகரிகத்தினை அங்கீகரிக்கும் ஒரு கொண்டாட்டமான இந்த 'காதலர் தினம்', இந்தியாவிலும் இற‌க்குமதி செய்யப்பட்டுவிட்டதின் விபரீதத்தை இன்னும் நாம் உணராமல், மேலை நாகரிகத்தினைப் பின்பற்றி புதுமையாக வாழ்கிறோம் என்ற பெயரில் இதை நீடிக்க விட்டோமானால், அப்பன் பெயர் தெரியாமல் அநாதை இல்லங்களுக்கு அனுப்பப்பட்டு தாயின் பாசமும் கிடைக்காமல் ஏங்கும் குழந்தைகளின் எண்ணிக்கை நம் நாட்டிலும் அதிகமாகலாம்! அத்தகைய மோசமான நிலையை விட்டும் நம் சமுதாயத்தைப் பாதுகாக்க‌வேண்டிய பொறுப்பு நம்மீது உள்ளது.

பொதுவாகவே எல்லா வயதுடைய ஆண், பெண் இருபாலரும் கவனிக்கவேண்டியது,

சொந்தத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் அல்லது ஏற்கனவே பழக்கப்பட்ட நபர்களோ யாராக இருந்தாலும் அவர்கள் அந்நிய‌வர்களாக இருக்கும் பட்சத்தில், ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக நினைத்து எல்லை மீறிய வார்த்தைகளில் உரையாடுவது முதல், தேவையில்லாத கற்பனைகளை உருவாக்கும் ஆசை வார்த்தைகள் அனைத்தும்தான், தன்னையும் தன் பெற்றோர்களையும் கண்ணியமாக வாழும் தன் குடும்பத்தையும் மறந்து தறிகெட்டுப்போக வழி வகுக்கிறது. இதனால்தான் 'தவறான சிந்தனையும், தவறான பார்வையும், அசிங்கமான பேச்சுகளும் விபச்சாரத்தின் ஒரு பகுதி' என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். ஒரு அந்நிய ஆணும் ஒரு பெண்ணும் தன் அத்தியாவசிய தேவைகளில் கூட, உதாரணமாக கடைகளுக்குச் செல்லும்போது, வாடகைக் கார்/ஆட்டோ போன்ற வாகனங்களில் செல்லும்போது, அலுவலக வேலையாக செல்லும்போது போன்ற சந்தர்ப்பங்களிலும் சரி, தெருக்களில் அன்றாடம் வரும் வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்கும்போது கூட‌ தன் நடை/உடை, பேச்சு/பாவனை, பார்வைகளில் மிக மிக ஜாக்கிரதையாக நடந்துக் கொள்ள வேண்டும்.

'விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் (கெட்ட) பார்வையாகும்! நாவு செய்யும் விபச்சாரம் (கெட்ட) பேச்சாகும்! மனம் ஏங்குகின்றது; இச்சைக் கொள்கின்றது; பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது அல்லது பொய்யாக்குகின்றது' என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி);  நூல்: புகாரி(6243)


ஆணும் பெண்ணும் தனிமையில் சந்திப்பதும், ஊர் சுற்றுவதும், உலா வருவதும்தான் காதல் என்றால், அப்படிப்பட்ட‌வர்களை ஊக்குவிப்ப‌தற்காகத்தான் காதலர் தினம் என்றால் அத்தகைய‌ ஒரு கலாச்சார‌த்தை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. கற்பு என்பது புனிதமானது; அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. எனவே இருவரும் கற்பைப் பாதுகாக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை!

"தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கைக் கொண்ட‌ ஆண்களுக்கும் பெண்களுக்கும் (நபியே!)நீர் கூறுவீராக!" (அல்குர்ஆன் 24:30-31 வசன‌ங்களின் சுருக்கம்)

"உங்களில் ஒருவர் ஓர் அந்நியப் பெண்ணிடம் அவளுடைய (தந்தை, மகன், பேரன், சகோதரன், தந்தையின் சகோதரன், தாயின் சகோதரன்) போன்ற மஹ்ரமான உறவினர்களுடன் இருந்தாலே தவிர‌ தனியே இருக்க வேண்டாம்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி);  நூல்:புகாரி,முஸ்லிம்


பலஹீனமாகப் படைக்கப்பட்ட‌ பெண்களின் நன்மை கருதிதான் இஸ்லாம் எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பது, பேசுவது, பிரயாணிப்பது போன்றவற்றைத் தடுக்கிறது. அதே சமயம் தவிர்க்க முடியாத அவசிய/அவசரத் தேவைகள் தனிமை நிலையில் ஏற்பட்டாலும் ஆண், பெண்ணுடன் பேசக் கூடாது என இஸ்லாம் கூறவில்லை. அதுபோன்ற‌ சந்தர்ப்பங்களில் கற்புக்கு பங்கம் ஏற்படாதவாறு, இறைவனை அஞ்சி கண்ணியத்துடன் நடந்துக் கொள்ளுமாறு இஸ்லாம் கட்டளையிடுகிறது. எனவே இஸ்லாம் கூறும் ஆண்/பெண் நடந்துக் கொள்ளவேண்டிய சட்ட முறைகள் மிகவும் தெளிவானவை, அர்த்தம் நிறைந்தவை, மனிதன் மனிதனாக வாழ்வதற்கு வழிவகுக்கக் கூடியவை. அவற்றைத் தாண்டி வரம்பு மீறும்போதுதான் விபரீதங்கள் உருவெடுக்கின்றன.

ஆகவே சமுதாய அக்கறையுள்ள சகோதர, சகோதரிகளே! எய்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணவு பிரச்சாரத்திற்காக 'டிசம்பர் 1' ஆம் தேதி உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதே, அந்த உயிர்க் கொல்லி நோய்க்கு அடிப்படையான காதலைக் கொண்டாடும் 'பிப்ரவரி 14' கொண்டாட்டத்தை இல்லாமல் ஆக்குவதற்குதான் மக்களிடத்தில் முதலில் விழிப்புணர்வு வரவேண்டும். அதற்காக நாமனைவரும் இந்த 'பிப்ரவரி 14' -ஐ புறக்கணிக்கவேண்டும். அதனால் ஏற்படும் தீமைகளை எடுத்துச் சொல்லி, நம் சமுதாயத்தின் உயிர் பலிகளும், சமூக சீர்கேடுகளும், அசிங்கங்களும் மற்றும் திருமணத்திற்கு முன்பே கற்பு பறிபோகும் நிலையும் ஏற்படாமல் இருக்க இந்த நன்மையான காரியத்தில் ஒன்றுபடுவோம்! இறைவன் உதவியால் நமது சமுதாயத்தை காப்பாற்றுவோம்!

42 comments:

  1. நியாயமான அர்த்தமுள்ள பதிவு. ஆனால் இதை பின்பற்றுவர் இஸ்லாமியரில் கூட குறைவாகவே இருக்கிறார்கள்.

    ReplyDelete
  2. அக்கா, காதலினால் விளையும் வகைவகையான கொலைகளில் கள்ளக்காதலன்/காதலி சேர்ந்து தத்தம் கணவன்/மனைவியைப் போட்டுத் தள்ளும் வகையை விட்டுட்டீங்களே?? ;-))))))

    இம்மாதிரி கொலைகள்,தற்கொலைகள், கற்பழிப்புகள், சிறுவர்களையும்கூட விட்டுவைக்காத மாபாதகர்கள் என்று கொடூரங்களைப் பார்க்கும்போது, இஸ்லாம் கூறும் கண்ணியமான ஆடை/பார்வை/நடத்தைதான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி என்பது மீண்டும் நிரூபனமாகிறது.

    ReplyDelete
  3. @ கே. ஆர்.விஜயன்...

    //நியாயமான அர்த்தமுள்ள பதிவு// நன்றி சகோ.

    //ஆனால் இதை பின்பற்றுவர் இஸ்லாமியரில் கூட குறைவாகவே இருக்கிறார்கள்//

    இஸ்லாமியர்களில் சிலரும் இதில் விதிவிக்கல்ல என்பதை மறுப்பதற்கில்லை. அதுபோன்றவர்கள் திருந்தி வாழ்ந்தால் சந்தோஷமே! ஆனாலும் கணிசமான அளவு இஸ்லாமியர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஒழுக்க முறைகளைப் பின்பற்றுவதால், இதுபோன்ற ஒழுக்கக் கேடுகள் மிகவும் குறைவு என்பது நிதர்சனமான உண்மை. வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  4. @ ஹுஸைனம்மா...

    //காதலினால் விளையும் வகைவகையான கொலைகளில் கள்ளக்காதலன்/காதலி சேர்ந்து தத்தம் கணவன்/மனைவியைப் போட்டுத் தள்ளும் வகையை விட்டுட்டீங்களே?? ;-))))))//

    தூக்க கலக்கத்தில் அதிகம் யோசிக்க முடியவில்லை :) நீங்கள் நினைவூட்டிய அந்த பாயிண்ட்டை அப்படியே சேர்த்துவிட்டேன். நன்றி ஹுஸைனம்மா! இன்னும் யோசிக்க யோசிக்க அந்த லிஸ்ட் நீண்டுக் கொண்டுதான் போகும் :(

    //.... இஸ்லாம் கூறும் கண்ணியமான ஆடை/பார்வை/நடத்தைதான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி என்பது மீண்டும் நிரூபனமாகிறது//

    வல்ல‌ இறைவனுக்கே எல்லாப் புகழும்! கருத்துக்கு நன்றி ஹுஸைனம்மா.

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ் நல்ல பதிவு சகோ...
    இனியாவது இதைக் கொடாடுவோர் திருந்தினால் சரி.
    அப்புறம் 15-ஐ விட்டுடீங்களே.

    ReplyDelete
  6. சொல்லவேண்டிய நேரத்தில் சரியாக சொன்னீர்கள்,தாங்கள் அனுமதிக்கொடுத்தால் இதை எனது வலைப்பூவில் நன்றியுடன் பதிவுசெய்வேன்.

    ReplyDelete
  7. @ HASAN...

    //இனியாவது இதைக் கொடாடுவோர் திருந்தினால் சரி// இறைவன் நாடட்டும்!

    //அப்புறம் 15-ஐ விட்டுடீங்களே// 15 - ஆ? ட்யூப்லைட் சரியா எரிய மாட்டேங்குது :) கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன். வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  8. ஸலாமுன் அலைக்கும் சகோ.அஸ்மா.

    நல்ல நோக்கில், சரியான கருத்துக்கள் மிக்க
    தக்க தருணத்தில் தக்க பதிவு ...

    ///'காதலர் தினம்' என்று சொல்வதைவிட 'கழிசடைகள் தினம்' என்று சொல்வதுதான் ரொம்ப பொருத்தமாக இருக்கும்.///--இதை மட்டும் என் ட்விட்டரில் விடலாமா உங்கள் அனுமதியுடன்...?

    ReplyDelete
  9. ட்யூப்லைட் சரியா எரிய மாட்டேங்குது :) கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.///

    மன்னிக்கவும், நான் தான் 16-ஐ 15-என்று தவறாக குறிப்பிட்டு விட்டேன்.பிப் 14 இஸ்லாம் தடை செய்யும் ஒரு கொண்டாட்டம் என்றால் பிப் 16 இஸ்லாம் அனுமதிக்காத ஒரு விழாவை கொண்டாடுவார்களே.அதைதான் சொன்னேன்.

    ReplyDelete
  10. சிந்திக்கும் சமுதாயத்துக்கு இதில் சில அத்தாட்சிகள் இருக்கிறது.

    ReplyDelete
  11. //15 - ஆ? ட்யூப்லைட் சரியா எரிய மாட்டேங்குது :) //

    பிப்ரவரி - 15, மீலாதுந் நபி. அதத்தான் சொல்றார்னு நினைக்கிறேன்!! :-)))))

    ReplyDelete
  12. @ முஹம்மத் ஆஷிக்...

    //'காதலர் தினம்' என்று சொல்வதைவிட 'கழிசடைகள் தினம்' என்று சொல்வதுதான் ரொம்ப பொருத்தமாக இருக்கும்.///--இதை மட்டும் என் ட்விட்டரில் விடலாமா உங்கள் அனுமதியுடன்...?//

    வ அலைக்குமுஸ்ஸலாம. ok சகோ, டபுள் ok :) நாளைக்குள் உடனே ட்விட்டுங்கள். நோ ப்ராப்ளம் :) வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  13. @ HASAN...

    //பிப் 14 இஸ்லாம் தடை செய்யும் ஒரு கொண்டாட்டம் என்றால் பிப் 16 இஸ்லாம் அனுமதிக்காத ஒரு விழாவை கொண்டாடுவார்களே//

    மீலாது விழாவை சொல்கிறீர்களோ என்று ஹுஸைனம்மா நினைத்ததுபோல் நானும் நினைத்தேன். ஆனால் அது பிறையைக் கணக்கு வைத்தல்லவா கொண்டாடுவார்கள், பிப் 15 என்கிறீர்களே.. அப்போ அது இருக்காது, இந்த தலைப்போடு சம்பந்தப்பட்ட ஏதோ முக்கிய கொண்டாட்டம் போல என்று குழம்பிதான் கேட்டேன்.

    மீலாதைதான் கேட்கிறீர்கள் என்றால், இன்ஷா அல்லாஹ் நாளை மறுநாள் வெளியிட தயாராகிக் கொண்டிருக்கிறது. யார் விட்டா.. :) சொல்ல வேண்டிய‌தை சொல்லிடணும். நேரமின்மையால் கொஞ்சம் தாமதமாகலாமே தவிர, அதையெல்லாம் பார்த்துட்டு சும்மா விட முடியுமா? நன்றி சகோ.

    ReplyDelete
  14. @ ராஜவம்சம்...

    //சிந்திக்கும் சமுதாயத்துக்கு இதில் சில அத்தாட்சிகள் இருக்கிறது//

    இதில் கூறப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளுமே சிந்திக்க போதுமானவை, அல்ஹம்துலில்லாஹ்! நன்றி சகோ.

    ReplyDelete
  15. @ ஹுஸைனம்மா...

    //பிப்ரவரி - 15, மீலாதுந் நபி. அதத்தான் சொல்றார்னு நினைக்கிறேன்!! :-)))))//

    '100 W' லைட் ஹுஸைனம்மா.. :)) நன்றிமா! தேதியைக் குறிப்பிட்டு சொன்னவுடன் கொஞ்சம் குழப்பம். அதான் :)

    ReplyDelete
  16. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா...,
    அப்பா சும்மா நச்சுன்னு இருக்கு உங்கள் பதிவு... இந்த தினத்தை கொண்டாடும் ஒவ்வொருவரும் இதை படித்தால் சும்மா வெட்கி தலை குனிய வேண்டும்.
    என்னமா எழுதுறீங்க அஸ்மா.... எதையும் சொல்வதற்க்கு அழகான எழுத்து நடை வேண்டும்.அது உங்களிடம் நிறைய இருப்பதை பாராட்டுகிறேன்.(பட்டம் வாங்கியவராச்சே.... சும்மாவா...)
    உலகம் போகும் அதுவும் நமது தமிழ்நாடு போகும் போக்கை நினைத்தால் ரொம்ப பயமாக தான் இருக்கின்றது.வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு இருகிறோம் என்று சொல்லும் காலம் இது.எல்லோர் மீதும் இறைவன் நல்வழி காட்டுவானாக...
    நல்ல பயனுள்ள பதிவை பலரோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அஸ்மா...

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  17. @ பந்தர்.அலி ஆபிதீன்....

    //சொல்லவேண்டிய நேரத்தில் சரியாக சொன்னீர்கள்,தாங்கள் அனுமதிக்கொடுத்தால் இதை எனது வலைப்பூவில் நன்றியுடன் பதிவுசெய்வேன்//

    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ. நல்ல விஷயங்கள் பரவுவது வரவேற்க வேண்டியது. சந்தோஷமான அனுமதியுடன் தாராளமாக உங்கள் வலைப்பூவிலும் பதிந்துக் கொள்ளுங்கள் :) நன்றி சகோ.

    உங்கள் ப்ளாக்கின் அட்ரஸ் தந்தால் நாங்களும் பார்க்கலாமே சகோ? 'Profile Not Available' என்று மெஸ்ஸேஜ் வருகிறதே?

    ReplyDelete
  18. @ apsara-illam...

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

    //உலகம் போகும் அதுவும் நமது தமிழ்நாடு போகும் போக்கை நினைத்தால் ரொம்ப பயமாக தான் இருக்கின்றது.வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு இருகிறோம் என்று சொல்லும் காலம் இது.எல்லோர் மீதும் இறைவன் நல்வழி காட்டுவானாக...//

    ஆமா அப்சரா.. நம்மால் முடிந்தவரை நன்மையை ஏவி, தீமையை தடுப்போம்; இறைவனின் உதவி நிச்சயம் நமக்கு கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்சரா!

    ReplyDelete
  19. //'காதல்' என்பது கணவன், மனைவிக்கு இடையேயான 'தூய்மையான நேசம்' மட்டுமே என்ற நிலை மாறிப்போன இக்காலத்தில், 'காதலர் தினம்' என்று சொல்வதைவிட 'கழிசடைகள் தினம்' என்று சொல்வதுதான் ரொம்ப பொருத்தமாக இருக்கும்//

    வாவ்.. நடு மண்டையில சும்மா நச்சுன்னு அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க :-)

    ReplyDelete
  20. அஸ்மா,எதைச்சொன்னாலும் ரொம்பத்தீவிரமா சொல்லறீங்கங்க நீங்க! :(

    நீங்க சொன்ன விஷயங்களெல்லாம் உண்மைதான்,மறுக்கவில்லை.ஆனால் காதலில் இவை 'மட்டுமே' உண்டு என்பது மாதிரி நீங்க எழுதியிருப்பதுதான் ஏற்றுக்கொள்ளமுடியாததாக இருக்கு.

    காதலுக்கு மென்மையான இன்னொரு பக்கமும் உண்டு.காதல் கனிந்து,திருமணத்தில் முடிந்து வெற்றிகரமாக வாழ்வை நடத்திக்கொண்டிருக்கும் எத்தனயெத்தனை பேர்கள் உலகில் இல்லையா?!!

    ReplyDelete
  21. @ ஜெய்லானி...

    //வாவ்.. நடு மண்டையில சும்மா நச்சுன்னு அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க :‍)//

    உணர வேண்டியவர்கள் உணர்ந்து திருந்தினால் சரிதான். கருத்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி சகோ :)

    ReplyDelete
  22. ஸலாம் சகோ அஸ்மா?
    காதலர் தினம்.இது குறித்து ஒரு பதிவு போடலாம் என நினைப்புத்தான்..ஆனால் பயன் ஒன்றும் இருக்காது என்பது எனது எண்ணம்.
    ஏனென்றால்.இதன் பின் புலத்தை உணர்ந்த எவரும் இதை கொண்டாடுவதில்லை.வயது கோளாரிலும்,மேற்கத்திய கலாச்சார மோகத்திலும் திளைக்க முயலும் மக்கள் மட்டுமே இதை கொண்டாடுகிறார்கள்.

    காதல் கடந்த லிவிங் டு கெதர் கலாச்சாரத்தையே,இப்போ பெருசா யாரும் எடுத்துக்கிறதில்ல..என்னத்த சொல்ல..

    இருந்தாலும் சொல்லவேண்டிய கடமைக்கு..சொல்லலாம்..அதை தெளிவாக அருமையாக தாங்கள் சொல்லிவிட்டீர்கள்..

    வாழ்த்துக்கள்..

    அல்லாஹ் உங்களின் அறிவை மேலும் விசாலமாக்க போதுமானவன்.

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  23. @ Mahi...

    //அஸ்மா,எதைச்சொன்னாலும் ரொம்பத்தீவிரமா சொல்லறீங்கங்க நீங்க! :( //

    தீவிரம் காட்டவேண்டிய விஷயங்களை அதிகம் சொல்வதால் 'எதைச் சொன்னாலும்' என்று உங்களுக்கு தோன்றுகிறது ம‌ஹி..! வெறும் பொழுது போக்கான பதிவாக‌ இருந்தால் எதையும் ஜோவியலாக சொல்லிக் கொண்டிருக்கலாம். சமுதாய நலனுக்காக சொல்லப்படுபவை, கண்டன‌ம் தெரிவிக்கும் கட்டாயத்தில் உள்ளவை, விழிப்புணர்வு ஏற்படுத்த சொல்ல‌ப்படுபவைப் போன்ற‌ பெரும்பாலான தலைப்புகளில் நாம் சொல்லும் விஷயத்தின் உடனடி பாதிப்புகள் மற்றும் பின் விளைவுகளை தீவிரமாக சொல்லியே ஆகவேண்டும்.

    //நீங்க சொன்ன விஷயங்களெல்லாம் உண்மைதான்,மறுக்கவில்லை.ஆனால் காதலில் இவை 'மட்டுமே' உண்டு என்பது மாதிரி நீங்க எழுதியிருப்பதுதான் ஏற்றுக்கொள்ளமுடியாததாக இருக்கு//

    'உண்மைதான்... ஆனா உண்மையில்லை' என்ற ரகமா இருக்கு நீங்க சொல்வது :))) நடக்கும் உண்மைகளை ஒப்புக் கொண்ட நீங்கள் தீமைகள் அதிகமாக, மிக மிக அதிகமாக இருக்கும் ஒன்றுதான் இந்த 'காதல் கலாச்சாரம்' என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஆச்சரியமாக உள்ளது மஹி!

    //காதலுக்கு மென்மையான இன்னொரு பக்கமும் உண்டு.காதல் கனிந்து,திருமணத்தில் முடிந்து வெற்றிகரமாக வாழ்வை நடத்திக்கொண்டிருக்கும் எத்தனயெத்தனை பேர்கள் உலகில் இல்லையா?!!//

    எல்லாவற்றிலுமே விதிவிலக்காக நடப்பது உண்டுதான். அதற்காக அதுவே எல்லோருக்கும் முன்மாதிரி என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும் மஹி? 2% பேருக்கு நல்ல முடிவு கிடைப்பதற்காக அதை அனுமதித்தால், 98% பேருக்கு கிடைக்கும் தீய முடிவுகளை எப்படி தடுக்கப் போகிறீர்கள்? அதுவும் வெற்றி, தோல்வியைப் பற்றி நமக்கு பிரச்சனையில்லை. அந்த வெற்றி/தோல்விக்கு முன் அதன் பெயரால் அன்றாடம் நடக்கும் அட்டூழியங்களை நீங்கள் ஏன் கவனிக்க தவறுகிறீர்கள்?

    லைசன்ஸ் வாங்கிவிட்டு அழகான முறையில‌ வண்டி ஓட்டுங்கள் என்று சொல்வது தப்பா? இல்ல நாங்க வண்டிய முதல்ல ஓட்டிப் பார்த்து, முட்டி, மோதி, குறுக்க வர்றவங்களையும் ஒரு தூக்கு தூக்கி, வண்டியோடு நாங்க தேறினா மட்டும் லைசன்ஸ் வாங்கிக்குவோம், இல்லாட்டி காயலாங்கடைக்கு அனுப்பிட்டு நாங்களும் கம்பி எண்ணுவோம் அல்லது மொத்தமா மேலே போய் சேர்ந்துடுறோம்னு சொல்றதுதான் சரியா? நீங்களே முடிவு பண்ணிக்கோங்கபா :)

    வருகைக்கு நன்றி மஹி.

    ReplyDelete
  24. காதலின் பெயரை வைத்துக்கொண்டு நீங்கள் சொல்லும் சீரழிவுகளைச் செய்பவர்களை 'மட்டுமே' பார்க்கறீங்க என்றுதான் தோன்றுகிறது அஸ்மா.

    /2% பேருக்கு நல்ல முடிவு கிடைப்பதற்காக அதை அனுமதித்தால், 98% பேருக்கு கிடைக்கும் தீய முடிவுகளை எப்படி தடுக்கப் போகிறீர்கள்?/இதனை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடில.அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை காதலித்துத்திருமணம் செய்து(பெற்றோரின் மனம் புண்படாமல்தான்) கடைசிவரை சந்தோஷமாக இருக்கும் பலபேரை நான் என் வாழ்க்கையில் பார்த்திருக்கேன்,பார்த்துக்கொண்டும் இருக்கிறேன். அவங்களை எல்லாம் வெறும் 2%-க்குள்ளே அடக்கினா எப்படிங்க? :)

    /லைசன்ஸ் வாங்கிவிட்டு அழகான முறையில‌ வண்டி ஓட்டுங்கள் என்று சொல்வது தப்பா?/லைசென்ஸ் வாங்கிட்டு வண்டி ஓட்டும் ஆட்களில் எத்தனைபேரின் வண்டி நீங்க சொன்னமாதிரி //முட்டி, மோதி, குறுக்க வர்றவங்களையும் ஒரு தூக்கு தூக்கி,// ஓடிகிட்டு இருப்பது இல்லையா? ஒவ்வொன்றும் அவரவர் இருக்கும் சூழ்நிலை,ஆண்டவனின் விருப்பம் இவற்றைப் பொறுத்ததுங்க.

    /வண்டியோடு நாங்க தேறினா மட்டும் லைசன்ஸ் வாங்கிக்குவோம், இல்லாட்டி காயலாங்கடைக்கு அனுப்பிட்டு நாங்களும் கம்பி எண்ணுவோம் அல்லது மொத்தமா மேலே போய் சேர்ந்துடுறோம்னு சொல்றதுதான் சரியா? /இப்படி நான் சொல்லவே இல்ல.காதல் உண்மையாய் இருக்கும் பட்சத்தில், அது நிச்சயம் யாருக்கும் வலிகொடுக்காமல் வெற்றிபெறும் என்றுதான் சொல்லவந்தேன்.காதல்னா கல்யாணத்துக்கு அப்புறம்தான் என்று நீங்கள் "உறுதியாக" நினைக்கும் விஷயத்தை என்னால் என்ன செய்யமுடியும்? :)

    எனிவேஸ்,உங்கள் பார்வைகள் வேறு,எனது பார்வைகள் வேறு. உங்க கருத்தை நீங்க சொல்லறீங்க,என்னுடையதை நான் சொன்னேன். போதும்,இதனுடன் என் விவாதத்தை நிறுத்திக்கறேன்.

    /சமுதாய நலனுக்காக சொல்லப்படுபவை, கண்டன‌ம் தெரிவிக்கும் கட்டாயத்தில் உள்ளவை, விழிப்புணர்வு ஏற்படுத்த சொல்ல‌ப்படுபவை../உங்க சமுதாய அக்கறைக்குப் பாராட்டுக்கள்! உங்கள் பதிவு படித்து என்னைப்போல் நினைப்பவர்கள் இருக்கையில் கட்டாயம் நீங்க சொல்லும் விஷயங்களால் விழிப்புணர்வு பெறுபவர்களும் இருக்கக்கூடும்.

    நன்றி!

    ReplyDelete
  25. @ RAZIN ABDUL RAHMAN...

    ஸலாம் சகோ.

    //...ஆனால் பயன் ஒன்றும் இருக்காது என்பது எனது எண்ணம்.
    ஏனென்றால்.இதன் பின் புலத்தை உணர்ந்த எவரும் இதை கொண்டாடுவதில்லை.வயது கோளாரிலும்,மேற்கத்திய கலாச்சார மோகத்திலும் திளைக்க முயலும் மக்கள் மட்டுமே இதை கொண்டாடுகிறார்கள்//

    'பயன் ஒன்றும் இருக்காது' என்று வெக்ஸாகி ஓரமாக நிற்பதைவிட, இறைவன் நாடுபவர்களுக்கு பயன் கிடைக்கட்டும் என்று நம்மால் முடிந்தததை சொல்வதே நல்லது சகோ.

    பொதுவாக ஒரு தினத்தைக் கொண்டாட்ட நாளாக அங்கீகரித்துக் கொள்ளும்போது அதற்கு ஒரு ஆதரவு கிடைக்கிறது. அந்த ஆதரவு சமூக சீரழிவுகளை ஏற்படுத்தும் ஒரு விஷயத்திற்காக என்றால், அதைக் கொண்டாடுபவர்கள் அந்த சீரழிவுக்கு அறிந்தோ/அறியாமலோ துணைபோகிறார்கள். ஸோ... இது ஒரு சந்தோஷத்திற்காக‌ மட்டும்தானே என்று நினைத்து கொண்டாடுபவர்களுக்கும், வயது கோளாறினால் அறியாமையில் இருப்பவர்களுக்கும் இறைவன் நாடினால் இந்த பதிவு உதவலாம். தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  26. @ Mahi...

    //காதலின் பெயரை வைத்துக்கொண்டு நீங்கள் சொல்லும் சீரழிவுகளைச் செய்பவர்களை 'மட்டுமே' பார்க்கறீங்க என்றுதான் தோன்றுகிறது அஸ்மா//

    நிச்சயமா அப்படி பார்க்கல மஹி! அனுதினம் நடக்கும் அறுதிப் பெரும்பான்மையைப் பார்த்துதான் சொல்கிறேன். ஆனா நீங்கதான் மஹி விதிவிலக்காக நடப்பதை மட்டுமே பார்க்கிறீங்க :)

    //...அவங்களை எல்லாம் வெறும் 2%-க்குள்ளே அடக்கினா எப்படிங்க?

    அட... வேணுன்னா 3% னு வச்சுக்கோங்க :-) நடக்கும் மொத்த நிகழ்வுகளில் சந்தேகமில்லாம மிக சொற்ப அளவுதான் நீங்கள் சொல்வதுபோல் நடக்கும். உங்கள் பார்வைக்கு அவை அதிகமாக தெரிந்திருக்கலாம்.

    //அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை காதலித்துத்திருமணம் செய்து(பெற்றோரின் மனம் புண்படாமல்தான்) கடைசிவரை சந்தோஷமாக இருக்கும் பலபேரை நான் என் வாழ்க்கையில் பார்த்திருக்கேன்,பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்//

    நீங்களோ, உங்கள் குடும்பத்தில் ஒருவரோ, உங்கள் நண்பர்களோ யாரும் பாதிக்கப்படாதவரை அந்த சீரழிவின் வலி உங்களுக்கு புரியாது மஹி. (இங்கு 'நீங்கள்' என்று குறிப்பிட்டுள்ளது உங்களைப் போன்று நினைப்பவர்கள்)

    அப்படியே நீங்க சொல்வதுபோல் காதலித்துத் திருமணம் செய்து, கடைசிவரை சந்தோஷமாக இருப்பவர்கள் 100% என்றே வைத்துக் கொள்வோம். அந்த திருமணத்திற்கு முன் அந்த‌ அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பது, பேசுவது, டூர் அடிப்பது போன்றவை அநாகரிகம் இல்லையா மஹி? 'இல்லை' என்று நீங்கள் சொன்னால் அதற்குமேல் நான் சொல்ல ஒன்றுமில்லை... :(

    //லைசென்ஸ் வாங்கிட்டு வண்டி ஓட்டும் ஆட்களில் எத்தனைபேரின் வண்டி நீங்க சொன்னமாதிரி //முட்டி, மோதி, குறுக்க வர்றவங்களையும் ஒரு தூக்கு தூக்கி,// ஓடிகிட்டு இருப்பது இல்லையா?//

    மறுக்கலயே..! ஆனா இங்கேயும் விதிவிலக்காக நடப்ப‌வையே உங்கள் பார்வையில் படுகிறது பாருங்க‌ :)

    //காதல்னா கல்யாணத்துக்கு அப்புறம்தான் என்று நீங்கள் "உறுதியாக" நினைக்கும் விஷயத்தை என்னால் என்ன செய்யமுடியும்? :)//

    என்னுடைய உறுதியான நிலைப்பாடு அதுதான் மஹி. நீங்க அதற்காக ஃபீல் பண்ணாதீங்க‌பா :-)

    //எனிவேஸ்,உங்கள் பார்வைகள் வேறு,எனது பார்வைகள் வேறு. உங்க கருத்தை நீங்க சொல்லறீங்க,என்னுடையதை நான் சொன்னேன்//

    முந்திய கருத்திலேயே இதைதான் நானும் சொல்ல வந்தேன். உங்களின் மற்ற கருத்துக்களையும் சொல்வதற்கு அது முற்றுப் புள்ளியாகிவிடும் என்றுதான் வெயிட் பண்ணினேன். கருத்து சொல்வது அனைவருக்கும் பொதுவான உரிமை! ஆனா ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை :)

    //உங்க சமுதாய அக்கறைக்குப் பாராட்டுக்கள்! உங்கள் பதிவு படித்து என்னைப்போல் நினைப்பவர்கள் இருக்கையில் கட்டாயம் நீங்க சொல்லும் விஷயங்களால் விழிப்புணர்வு பெறுபவர்களும் இருக்கக்கூடும்//

    பாராட்டுக்களைப் பெறுவதை விட இன்றைய சமூகமும், வருங்கால தலைமுறையினரும் சீரும் சிறப்பும் பெற்ற நாகரிகத்தோடு வாழ்வதையே விரும்புகிறேன். இறைவன் அதற்கு துணை செய்யட்டும்!

    ஒரு எதிர்க் கருத்துக்கு பதில் சொல்லும்போது அது விவாதக் களம்போல் ஆகிவிடுவது சகஜமே! இந்த கருத்துப் பரிமாற்றம் ஒரு புறமிருக்கட்டும்; நம் நட்பு என்றும்போல் தொடரட்டும் மஹி..! :):) மிக்க நன்றி

    ReplyDelete
  27. அஸ்மா,இதைப்பற்றி விவாதிப்பதை நிறுத்திட்டேன்னு நேத்தே சொல்லிட்டேன். நீங்க போல்ட் லெட்டர்ஸ்ல ஹைலைட் பண்ணி கேட்டாலும் 2%-ஐ 3 சதவீதமாக 'உயர்த்தினாலும்'இனிமேல் நான் உங்களுடன் இதுபற்றி பேசமாட்டேன். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்-னு உறுதியான கருத்துக்களுடன் இருக்கும் இருவர் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. :)

    /இந்த கருத்துப் பரிமாற்றம் ஒரு புறமிருக்கட்டும்; நம் நட்பு என்றும்போல் தொடரட்டும் மஹி..! :):) / கண்டிப்பாக! :)

    ReplyDelete
  28. @ Mahi...

    //அஸ்மா,இதைப்பற்றி விவாதிப்பதை நிறுத்திட்டேன்னு நேத்தே சொல்லிட்டேன்//

    நானும்தான் முற்றுப்புள்ளி வைத்துவிட்டேனே மஹி? :) விவாதக்களம் என்று முடிவு செய்யப்பட்ட ஒரு இடத்தில் விவாதிப்பேனே தவிர, பின்னூட்டமே விவாதமாவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்வேன் அல்லது குறைத்துக் கொள்வேன். மேலும் என் ப்ளாக்கில் எந்த பின்னூட்டத்திற்கும் நான் பதில் கொடுக்காமல் இருந்ததில்லை. அதுபோல் உங்களுக்கும் பதில் கொடுத்தேனே தவிர, மீண்டும் இதுபற்றி விவாதிக்க உங்களிடம் கேட்கவில்லையே? :)

    //நீங்க போல்ட் லெட்டர்ஸ்ல ஹைலைட் பண்ணி கேட்டாலும் 2%-ஐ 3 சதவீதமாக 'உயர்த்தினாலும்'இனிமேல் நான் உங்களுடன் இதுபற்றி பேசமாட்டேன்//

    'தவறுதான்' என்று நினைக்கும் என் அழுத்தமான கருத்தைப் பதிய‌ வைக்கவே போல்ட் லெட்டர்! அதுபோல் % என்பது இரண்டோ மூன்றோ.. அப்படி நடப்பது மிக சொற்ப அளவே என்பதை எடுத்துச் சொல்வதற்காக சொன்னதே தவிர, % கூட்டினால் நீங்கள் என் கருத்துக்கு ஆதரவு தர பேசுவீர்கள் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை மஹி :-)

    //தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்-னு உறுதியான கருத்துக்களுடன் இருக்கும் இருவர் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. :)//

    அதனால்தான் நானும் சொல்லியிருந்தேன் "கருத்து சொல்வது அனைவருக்கும் பொதுவான உரிமை! ஆனா ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை" என்று! ஸோ.. நாமிருவருமே அவரவர்களின் கருத்தில் நிலைத்து நிற்கும் உரிமையோடு இந்த விவாதத்தை நிறுத்திக் கொள்வோம் :)

    /// கண்டிப்பாக! :)// ஓகே, தேங்க்ஸ் :‍-)

    ReplyDelete
  29. லேட்டவந்துட்டேன் ..

    தோழி மிக அழகாக அருமையாக தெளிவாக புரிந்துக்கொள்ளகூடியவர்களுக்கு தோதாக எழுதியுள்ளீர்கள்.

    சீரழிய நினைப்பவர்களை
    சீர்திருத்த முடியாவிட்டாலும். நம்முடையை
    சிறு செய்தியாவது அவர்களை
    சென்றடைந்தால் போதும் என்ற
    நல்ல நோக்கோடு எழுதப்பட்ட
    சீரான சீரியஸான பதிவு..
    தொடரட்டும் நல்லெண்ணங்களின் அணிவகுப்புகள்..

    இறைவன் அனைவரையும் பாதுகாக்கப்போதுமானவன்..

    ReplyDelete
  30. @ அன்புடன் மலிக்கா said...

    //லேட்டவந்துட்டேன் ..

    சீரழிய நினைப்பவர்களை
    சீர்திருத்த முடியாவிட்டாலும். நம்முடையை
    சிறு செய்தியாவது அவர்களை
    சென்றடைந்தால் போதும் என்ற
    நல்ல நோக்கோடு எழுதப்பட்ட
    சீரான சீரியஸான பதிவு..
    தொடரட்டும் நல்லெண்ணங்களின் அணிவகுப்புகள்..//

    சலாம் தோழி மலிக்கா! லேட்டா வந்தாலும் உங்க கவிதை பாணியிலேயே லேட்டஸ்ட்டா உங்க கருத்தைத் தெரிவிச்சிட்டீங்களே தோழி ;) அதுவே போதும்! :)

    //இறைவன் அனைவரையும் பாதுகாக்கப்போதுமானவன்..// இன்ஷா அல்லாஹ்! ரொம்ப நன்றி மலிக்கா!

    ReplyDelete
  31. Replies
    1. @ MR. VANJOOR

      அவசியமான பகிர்வு, ஜஸாகல்லாஹ் ஹைரா!

      Delete
  32. சலாம் சகோ அஸ்மா,

    நல்ல பதிவு, தக்க நேரத்தில் பதியப்பட்ட பதிவு. காதலர் தினத்தை தாராளமாக கொண்டாடட்டும் அல்லது கொண்டாடுவதை ஆதரிக்கட்டும். ஆனால், தன் பிள்ளைகள் காதலிக்கும் பொழுது எந்த நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்படி முடியாதவர்கள், மனசாட்சி இருந்தால், காதலர் தினம் கொண்டாடுவதில் இருந்து விலகிக்கொள்ளட்டும்.

    ReplyDelete
    Replies
    1. @ சிராஜ்

      சலாம் சகோ.

      //காதலர் தினத்தை தாராளமாக கொண்டாடட்டும் அல்லது கொண்டாடுவதை ஆதரிக்கட்டும். ஆனால், தன் பிள்ளைகள் காதலிக்கும் பொழுது எந்த நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும்//

      தனக்கென பாதிப்புகள் வரும்போதுதான் அதன் மோசமான விளைவுகளை உணர்வார்கள். அதுவரை இதை ஆதரிப்பவர்களுக்கு இதுபற்றிய சமூக சிந்தனையே இல்லாத நிலையைதான் பார்க்கிறோம் :( வருகைக்கு நன்றி சகோ.

      Delete
  33. அஸ்ஸலாமு அலைக்கும்,

    கிருஸ்தவ துரவிகள் தினமே வியாபார யுக்தியுடய அயோக்கியர்களால் கழுசடை தினமாக ஒருவெடுத்து கண்ணியமான இஸ்லாமியர்களையும் கெடுத்து வருவது அன்றாட சில நிகழ்வுகளாகிவிட்டது என்பதை வேதனையுடன் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

    நல்ல விழிப்புணர்வு பதிவு.

    காதலர் தினம் இஸ்லாமிய பார்வை மார்க்க சொற்பொழிவை அதிரைநிருபர் வலைத்தளத்தில் http://adirainirubar.blogspot.com இன்று இரவு இந்திய நேரம் 10:30 மணி முதல் 11:30 வரை கேட்டு பயன்பெறலாம். நம்மை எப்படி யூத சக்திகள் முட்டல்களாக்குகிறார்கள் என்பதை அறியாத வரலாற்று தகவல்களுடன் அறிந்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. @ தாஜுதீன்

      வ‌அலைக்குமுஸ்ஸலாம் சகோ,

      //கிருஸ்தவ துரவிகள் தினமே வியாபார யுக்தியுடய அயோக்கியர்களால் கழுசடை தினமாக ஒருவெடுத்து கண்ணியமான இஸ்லாமியர்களையும் கெடுத்து வருவது அன்றாட சில நிகழ்வுகளாகிவிட்டது என்பதை வேதனையுடன் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

      நல்ல விழிப்புணர்வு பதிவு//

      எவற்றைக் கொண்டாடுவதென விவஸ்தை இல்லாத மக்களோடு சேர்ந்து, நீங்கள் சொல்வதுபோல் சில இஸ்லாமியர்களும் நெறிகெட்டுப் போகும் நிலை மாறவேண்டும், இன்ஷா அல்லாஹ்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

      Delete
  34. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

    மாஷா அல்லாஹ். இன்றைய கால கட்டத்திற்கு தேவையான மிக தெளிவான பதிவு சகோ..உண்மையில் சில நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது மிக கவலையாக இருக்கிறது.முன்பு காலேஜ் படிக்கும் போது கேள்விப்பட்ட காதல் என்ற வார்த்தை இப்போது எட்டாவது.ஒன்பதாவது படிக்கும் பிள்ளைகள் மத்தியிலேயே பரிமாறிக்கொள்ளும் போக்கு அதிகளவு காணப்படுகிறது.வீட்டில் அளவுக்கு அதிகமாக கொடுக்கப் படும் சுதந்திரம் அவர்களை மீளாத வழிகேட்டில் விடுகிறது.இதை பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லை என்றால்,வரும் சமுதாயம் மிகப் பெரும் கலாசார சீரழிவை சந்திக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

    ReplyDelete
    Replies
    1. @ Ayushabegum

      வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

      //உண்மையில் சில நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது மிக கவலையாக இருக்கிறது.முன்பு காலேஜ் படிக்கும் போது கேள்விப்பட்ட காதல் என்ற வார்த்தை இப்போது எட்டாவது.ஒன்பதாவது படிக்கும் பிள்ளைகள் மத்தியிலேயே பரிமாறிக்கொள்ளும் போக்கு அதிகளவு காணப்படுகிறது//

      வருத்தப்பட வைக்கும் உண்மை சகோதரி :(

      //இதை பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லை என்றால்,வரும் சமுதாயம் மிகப் பெரும் கலாசார சீரழிவை சந்திக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை//

      அதுபோன்ற பெரும் சீரழிவுகள் ஏற்படும்வரை அலட்சியப்படுத்தாமல், எல்லா பக்கங்களிலும் நம்மால் இயன்றவரை விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா.

      Delete
  35. அஸ்ஸலாமுஅலைக்கும் சகோதரி!
    //'கழிசடைகள் தினம்' என்று சொல்வதுதான் ரொம்ப பொருத்தமாக இருக்கும்.//
    நச் நச் பதிவு
    என்ன செய்ய நம்மை போன்று புத்தி தெளிவாக இருந்தால் புரிந்து கொள்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. @ zalha

      வ‌அலைக்குமுஸ்ஸலாம் சகோ!

      //நச் நச் பதிவு
      என்ன செய்ய நம்மை போன்று புத்தி தெளிவாக இருந்தால் புரிந்து கொள்வார்கள்//

      :))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

      Delete
  36. சலாம்! விழிப்புணர்வூட்டம் பதிவு!

    திருமணத்துக்குப் பிறகு மனைவியை காதலித்தால் அதுதான் உண்மையான காதலாகும். இதை பலர் ஏனோ உணர்வதில்லை.

    ReplyDelete
    Replies
    1. @ சுவனப்பிரியன்

      சலாம் சகோ!

      //திருமணத்துக்குப் பிறகு மனைவியை காதலித்தால் அதுதான் உண்மையான காதலாகும். இதை பலர் ஏனோ உணர்வதில்லை//

      இன்ஷா அல்லாஹ் விரைவில் உணரட்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

      Delete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை