அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday 16 March 2011

இயற்கைச் சீற்றங்கள் சொல்லும் செய்தி!

உலகின் தொழில் நுட்பங்களில் முன்னேறிவரும் நாடுகளில் முக்கியமான நாடு ஜப்பான். சுமார் 20, 25 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு முழ நீள‌முள்ள குட்டி விமானத்தை ரிமோட் மூலம் பறக்கச் செய்து லாவகமாக தரையிறங்கும் விளையாட்டுப் பொருளை, தானே கண்டுபிடித்து விளையாடிப் பார்த்து நம்மை வியப்பில் ஆழ்த்திய சின்னஞ்சிறு சிறுவர்கள் ஜப்பான் மண்ணின் மைந்தர்களே! எந்தவொரு வெளிநாட்டுப் பொருட்களும், குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்கள் நமக்கு அறிமுகம் ஆனபோது, அது "Made in Japan" என்றால் அதற்குதான் முதலிடம். அந்தளவுக்கு தரமும், நுட்பமும் நிறைந்த உற்பத்திகளுக்கு சொந்தக்காரர்கள் ஜப்பானியர்கள். உயரத்தால் குறைந்தவர்கள் என்றாலும் இறைவன் அவர்களுக்கு கொடுத்திருக்கும் அறிவினால் நிறைந்தவர்கள்! அவர்களின் நாடெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களிலும், சாலை அமைப்புகளிலும் மின்னும் தொழில் நுட்பங்கள்,  நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அவர்களின் நவீன கண்டுபிடிப்புகளுக்கு சாட்சி சொல்லும்!



அப்படிப்பட்ட விஞ்ஞான முன்னேற்றம் மிகுந்த ஜப்பானில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுவதால் பெரும்பாலான கட்டிடங்களை பூகம்பத்தால் பாதிக்காத வகையில் அமைத்துள்ளனர். இருந்தும் கடந்த 11 ம் தேதி அங்கு என்ன நடந்தது, அதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதை உலகமே கவலைக் கண்கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறது. ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட 8.9 ரிக்டர் அளவில் பதிவான பூகம்ப‌தைத் தொடர்ந்து தாக்கிய இந்த மிகப் பெரிய சுனாமி, இதுவரை உலகம் சந்தித்த பெரிய அளவிலான சுனாமிகளில் இரண்டாவது பெரிய சுனாமி என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பாதிப்பினால் அணு உலைகள் வெடித்து சிதறிக் கொண்டிருக்கின்றன. இன்றைய செய்தி, 4-ம் பிரிவில் தீ பிடித்த பிறகு கதிர்வீச்சு காற்றில் கலப்பது அதிகரித்துவிட்டதால், ஜப்பானில் அவசரநிலை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, மக்கள் மிகவும் உஷாராக இருக்கவேண்டும் என்று ஜப்பான் அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்தப் பகுதி மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடைக்கிறார்கள். இந்த செய்திகளைக் கண்டும், கேட்டும் மனித இனமே கலங்கிப் போயிருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு இந்த நிகழ்வு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதற்கிடையில் வரக்கூடிய‌ 19 ம் தேதி 'சூப்பர் மூன்' ஏற்படப் போவதாக அறிவித்துள்ளனர். அதாவது பூமியிலிருந்து சுமார் 2,38,857 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள சந்திரன், தன் சுற்றுவட்டப் பாதையில் மிகக் குறுகிய தூரத்தில் ஏறத்தாழ 2,21,567 மைல்கள் வரை பூமியை நெருங்குகிறது. சந்திரன் க‌டந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமிக்கு மிக அருகில் வரும் விண்வெளியில் நிகழும் இந்த அரிய நிகழ்வினால் மிகப் பெரிய அளவில் அழிவுகள் ஏற்படலாம் என வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு முன் இந்த சூப்பர் மூன் நிகழ்வு நடந்த 1955, 1974, 1992 ம் ஆண்டுகளில் மோசமான வானிலை ஏற்பட்டது எனவும், மற்றும் 2005 ல் ஏற்பட்ட‌ சூப்பர் மூன் நிகழ்வினால்தான் 2004 ன் கடைசியில் இந்தியப் பெருங்கடலில் சுனாமி வந்தது, அதுபோல் இந்த முறை ஜப்பானை சுனாமி தாக்கியிருக்கிறது எனவும் பரவலாக கூறப்படுகிறது.


மேலும் சந்திரனால் பூகம்பத்தை ஏற்படுத்த முடியாது; ஆனால் கடல் அலைகளில் மாற்றத்தை அது ஏற்படுத்தும். இந்த மாற்றம் வானிலையோடு சேர்ந்தால் கடலோரப் பகுதிகளில் பேரழிவுகள் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர் ஜான் கெட்லி தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மற்றொரு புறமோ அதன் விளைவுகள் பற்றிய செய்திகள் வெறும் புரளி என்றும் கூறப்படுகிறது.

எது எப்படியோ... இயற்கைச் சீற்றங்கள் தரும் இதுபோன்ற பேரழிவுகளை இன்றைய விஞ்ஞானத்தைக் கொண்டு தடுக்க மனிதனால் இயலவில்லை. ஏதோ சில முன்னெச்சரிக்கைகளை ஓரளவுக்கு கூறமுடியுமே தவிர, அவையும் 'புலி வருகிறது...' என்ற கதையாகத்தான் போகிறது :( இப்படியான‌ பேரழிவுகள் எப்போது ஏற்படும் என்பதைத் துல்லியமாகக் கணிக்க‌வோ, தடுக்க‌வோ யாருக்கும் சக்தியில்லை என்பதை விஞ்ஞானிக‌ளும் ஒப்புக்கொள்கின்றனர்.

அப்படியிருக்க, இந்த இயற்கைச் சீரழிவுகளில் பாதிக்கப்பட்ட மக்களின் பொருட்சேதங்களை சிறுக சிறுக நிவர்த்தி செய்யலாம் என்றாலும், அவர்களின் உயிர்ச் சேதங்களுக்கு உலக மக்கள் அனைவரும் சேர்ந்து ஆலோசித்தாலும், உதவினாலும் போன உயிர்களுக்கு அவை தீர்வாகுமா? அவர்களின் உள்ளத்தில் ஏற்பட்டுள்ள கலக்கங்களையும் துக்கங்களையும் துடைத்து சரியானதொரு ஆறுதலையும், எதிர்கால வாழ்வுக்கான நிம்மதியையும் அளிப்பதற்கு இவ்வுலகைப் படைத்து ஆட்சி செய்யும் ஏக இறைவனால் மட்டுமே முடியும். அவர்களுக்காக‌வும், இன்று அவ‌ர்களுக்கு ஏற்பட்ட நிலை நமக்கும் உலகின் அனைத்து மாந்தருக்கும் ஏற்படாதவாறும் இருக்க‌ நாம் வல்ல‌ இறைவனை இறைஞ்சுவோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை உரிய முறையில் செய்வோம். அதேசமயம் இப்படிப்பட்ட‌ இயற்கைச் சீற்றங்களால் இந்த மனித சமுதாயம் இன்னும் பாடம் படிக்கவில்லை என்பது வருத்தமான உண்மை! இதற்கு முன்னால் நடந்த பேரழிவுகளைக் கண்ணால் கண்டவர்களின் வாழ்க்கையில் எந்த திருத்தங்களையும் நாம் காணமுடியவில்லை.

இயற்கைக் கொஞ்சும் அலைகடலாக இருந்தாலும், எதையும் மிச்சம் வைக்காமல் நொடிக் கணக்கில் எல்லாவற்றையும் இழக்க வைத்துவிடும்! அல்லது கண்ணிமைக்கும் நேரத்தில் நம்மோடு சேர்த்து அனைத்தையும் வாரிச்சென்றுவிடும். பிறந்து வளர்ந்த பூமியாக இருந்தாலும் பூகம்பம் வந்தால் விழுங்கவே செய்யும்! இதமாய் வருடும் தென்றலும் எதிர்ப்பார்க்காத விதத்தில் சூறாவளியாய் மாறி சீரழிக்கும்! இவற்றையெல்லாம் தெரிந்த மனிதன் மட்டும் தன் வாழ்வில் இன்னும் மாற்றம் செய்துக் கொள்ள‌வில்லை. அடுத்த வினாடி தான் உயிரோடு இருப்பதற்கு அவனிடத்தில் ஏதும் உத்திரவாதம் உள்ளதா? இயற்கைச் சீற்றங்கள் என்றும், தலைவிதி என்றும், தோஷம் என்றும் அவற்றிற்கு பெயர் சூட்டி காலப்போக்கில் மற‌ந்து போனாலும், அவை நமக்கு சொல்லும் செய்திதான் என்ன...? உலகம் அழியப்போகும் நாள் மிக அருகில் வந்துக் கொண்டிருப்பதன் அடையாளமல்லவா இவை? 

இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்துமே மிகப் பெரிய சூப்பர் பவரான ஒரே இறைவனின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகின்றன என்பதையும், இப்பிரபஞ்சம் முழுவதும் ஒருநாள் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள சக்தியை முற்றிலுமாக இழந்து அழிந்து போகும் என்பதையும் பகுத்தறிவுள்ள ஒவ்வொரு மனிதனும் நம்புவான். வந்தே தீரும் அந்த நாள்தான் யுக முடிவு நாள்! அந்த நாளில் இதுவரை சுனாமியும் பூகம்பமும் நிகழ்த்திய‌ பேரழிவை விட பல்லாயிரக்கணக்கான மடங்கு பயங்கரமான, நம் சிறு அறிவினால் சிந்தித்துக்கூட பார்க்க முடியாத அளவுக்குள்ள‌ பாதிப்புகள் உலகில் மோசமான விளைவுகளையும், பேரழிவுகளையும் ஏற்படுத்துமே.... அதுதான் இவ்வுலகத்தின் இறுதிநாள்!

ஜாதி, மத, இனவெறியால் தன் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அப்பாவி மக்களைக் கொத்துக் கொத்தாக குடும்பத்தோடு கொன்று குவிக்கும் அராஜகர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையை நெருப்பில் வீசிய அரக்கர்களுக்கும், அவர்களை தண்டனையிலிருந்து தப்பிக்கவிட்ட கயவர்களுக்கும், பாதுகாவலன்போல் நடித்து முதுகில் குத்தும் பாதகர்களுக்கும் படைத்த இறைவன் முன்னால் நரம்பு நரம்பாக‌ சுளுக்கு எடுக்கப்படும் நாள் அது! அந்த நாள் பற்றிய வல்ல இறைவனின் எச்சரிக்கையை திருக்குர்ஆன் கூறுகிறது, பாருங்கள்!

வானம் பிளந்துவிடும்போது.. நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது.. கடல்கள் கொதிக்க வைக்கப்படும்போது..மண்ணறைகள் புரட்டப்படும்போது... ஒருவன் தான் முற்படுத்தியதையும் பிற்படுத்தியதையும் அறிந்துக் கொள்வான்! (அல்குர்ஆன்: 82: 1-5)



இன்றைய சுனாமியும் பூகம்பங்களும் அதற்கு ஒரு சேம்பிள்தான்! ஏனெனில் இவை பூமியில் மேல்பரப்பிலும், நீர்ப்பரப்பிலும் மட்டுமே பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஆனால் அன்று...? வானத்திலிருந்து வரும் பாதிப்புகளும், மலைகள் சிதறி ஏற்படுத்தும் விளைவுகளும் நம்மால் கற்பனை செய்யதான் மனம் தாங்குகிறதா? திருமறைக் குர்ஆனை பொய்ப்பிப்பவர்கள் இனியாவது சிந்திக்க மாட்டார்களா? அனுபவங்களின் அடிப்படையில்கூட‌ மனிதன் பாடம் படிக்கவிட்டால்..... அந்த இறைவனுக்கா நஷ்டம்?

திருக்குர்ஆனின் மற்ற எச்சரிக்கைகளையும் பார்ப்போம்!

சூரியன் சுருட்டப்படும்போது... நட்சத்திரங்கள் உதிரும்போது... மலைகள் பெயர்க்கப்படும்போது... கருவுற்ற‌ ஒட்டகைகள் கவனிப்பாரற்று விடப்படும்போது... காட்டு விலங்குகள் ஒன்று திரட்டப்படும்போது...
கடல்கள் தீ மூட்டப்படும்போது.... உயிர்கள் மீண்டும் (உடல்களோடு)ஒன்றிணைக்கப்படும்போது...(அல்குர்ஆன் 81:1-7)

பூமி பேரதிர்ச்சியாக குலுக்கப்படும்போது... பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும்போது... இதற்கு என்ன நேர்ந்துவிட்டது என்று மனிதன் கேட்கும்போது... அந்நாளில், தனது இறைவன் இவ்வாறு அறிவித்ததாக தனது செய்திகளை அது அறிவிக்கும்!(அல்குர்ஆன் – 99:1-5)

அன்று நடப்ப‌வையெல்லாம் ஏற்கனவே இறைச்செய்தி மூலம் அறிவிக்கப்பட்ட‌வைதான் என தெரியவரும்போது, இன்று இயற்கைச் சீற்றங்களிலிருந்து தப்பியவர்களைப் போல் அன்றைய நாள் இறைவனின் கோரப்பிடியிலிருந்து ஒருவரும் தப்பமுடியாது. ஏக இறைவனை மட்டும் நம்பி, அவ‌னுக்கு அஞ்சி வாழ்ந்தவர்களைத் தவிர! தான் செய்த குற்றங்களுக்கான தடயங்களை மறைத்துவிட்டு, பதியப்பட்ட ஆவணங்களை அழித்துவிட்டு நல்லவனாக‌ இன்றுபோல் நாடகம் போட அன்று யாராலும் முடியாது. இன்றுள்ள ஆட்சியும் அதிகாரமும் அன்று பயன் தராது! அன்று இறைவனின் பிடி கடுமையாக இருக்கும். அதற்கு முன் தன் தவறுகளிலிருந்து திருந்தி, எது செய்தாலும் என்னைக் கேட்க ஆளில்லை என்ற இறுமாப்பை விடுத்து, இயற்கை பேரழிவுகள் மூலம் கிடைக்கும் இறை எச்சரிக்கையில் படிப்பினைப் பெற்று, மனித நேயத்தோடு பிறர் நலன் காத்து, நேர்மையும் நல்லொழுக்கமும் பேணி, நல்வழியில் நல்லறங்கள் செய்து வாழ்வோமாக!

20 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    மிக நல்லதொரு விழிப்புணர்வு ஊட்டும் பதிவு, சகோ.அஸ்மா.

    இதுபோன்ற இயற்கை சீற்றங்களுக்கு முன்னாள் மனித சக்தி ஒன்றுமில்லை என்று இவை ஏற்படும்போதுதான் மனிதன் இறைசக்தி பற்றி
    உணருகிறான்.

    வெள்ளம், சூறாவளி, எரிமலை, நிலநடுக்கம், சுனாமி, அமெரிக்காவின் அணுகுண்டுகள் என தொடர்ந்து பல சோதனைகளை ஜப்பானியர் காண்பதும், அவர்கள் தொடர்ந்து அதிலிருந்து எல்லாம் மீண்டு வருவதும், அவர்களின் முயற்சியையும் முதிர்ச்சியையும் உழைப்பையும் உலகிற்கு நன்கு எடுத்துரைக்கிறது.

    பொதுவாக ஜப்பானியர், சோதனைகளிலும் மனம் தளராமால், எதிர்நீச்சலிட்டு முன்னேறுவதெப்படி என்று உலக மக்களுக்கு படிப்பினை பெறுவதற்கான நல்ல முன்னுதாரணம். இனி, ஃபீனிக்ஸ் பறவைக்கு யாரும் உதாரணம் கேட்டால் ஜப்பானியர்கள்தான் எனலாம்....!

    ஆனால், சமீபத்தில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டு துயரத்திலிருக்கும் நம் ஜப்பானிய சகோதர்களுக்கு மேலும் அதிக துயரமாக மூன்று அணு உலைகள் வெடித்து அதனால் ஏற்பட்ட அணுக்கதிர்வீச்சு கசிவால் மற்ற அனைத்து இயற்கை சோதனைகளை விட பெருத்த நஷ்டத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    அவர்களுக்கு பெருங்கவலையுடன் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்வோம். துயரத்தில் இருக்கும் இந்நேரத்தில்... ஏற்பட்ட அனைத்து சோதனைகளையும் அவர்களுக்கு இலகுவாக்கி, அவர்கள் நலன் பெறவும், அவர்களின் மன அமைதிக்காகவும், அதிலிருந்து மீண்டு பழையபடி அவர்கள் இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம் சகோதரர்களே..!

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,
    என்மனதில் நினைத்தேன், நீங்கள் அருமையாக இந்த பதிவை போட்டுவிட்டிர்கள். திருமறையின் மூலம் இறைவன் அருமையாக வெளிபடுத்தியுள்ளான். நல்ல பதிவு.

    ReplyDelete
  3. //எது செய்தாலும் என்னைக் கேட்க ஆளில்லை என்ற இறுமாப்பை விடுத்து, இயற்கை பேரழிவுகள் மூலம் கிடைக்கும் இறை எச்சரிக்கையில் படிப்பினைப் பெற்று, //

    இப்பேர்ப்பட்டவர்களுக்கு ஒரு முறை மரண பீதி வரச் செய்ய வேண்டும் இறைவன்.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா...,நலமா..?
    மிகவும் அழகிய முறையில் பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உங்கள் பதிவு இருக்கின்றது அஸ்மா...
    இப்படி ஒரு பேரழிவையே நம்மால் அதுவும் படகாட்சிகள் மூலமே பார்க்க முடியவில்லை.சுபஹானல்லாஹ்... இறுதி நாளின் அழிவை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
    இந்த பேரழிவில் பாதிக்கப்பட்டிருக்கும்,பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் மக்களுக்காக இறைவனிடம் துஆ மட்டுமே செய்ய முடிகின்றது.மிகவும் கொடுமையிலும்,கொடுமை அஸ்மா...அவர்களெல்லாம் இத்துயரத்திலிருந்து மீண்டு வர வேண்டும்.(இன்ஷா அல்லாஹ்)
    இப்போது நீங்கள் (வரும் சனி அன்று)சொல்லிருக்கும் சூப்பர் மூன் நிகழ்வு இன்னும் என் காதுகளுக்கு எட்டாத ஒன்று. அப்படி ஒரு நாளின் பாதிப்பிலிருந்து காக்க இந்த உலக மக்களான நாம் அனைவரும் நீங்கள் சொல்லியிருப்பது போல் ஏக இறைவனிடமே துஆ செய்ய வேண்டும்.அவனே போதுமானவன்.
    நல்லதொரு விஷயங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி அஸ்மா...

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    இதையெல்லாம் பார்த்தும் சிலருக்கு படிப்பினை வரவில்லையென்றால் அது அவர்கள் துரதிஷ்டமே.

    :-(

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு.என் பிள்ளைங்க பேசிகிட்டாங்க,ஜப்பான் சுனாமியை பார்த்து இப்படி தான் உலகம் அழியும் போலன்னு.

    ReplyDelete
  7. @ முஹம்மத் ஆஷிக்...

    வ‌ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    //இதுபோன்ற இயற்கை சீற்றங்களுக்கு முன்னாள் மனித சக்தி ஒன்றுமில்லை என்று இவை ஏற்படும்போதுதான் மனிதன் இறைசக்தி பற்றி உணருகிறான்//

    அப்போதுகூட இறைவனை மறுப்பவர்களும் உண்டு சகோ. என்னதான் படித்த பட்டதாரிகளாக இருந்தாலும் இறைவன் விஷயத்தில் இப்படிப்பட்ட‌வர்கள் நிறைய பேர்! வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  8. @ இளம் தூயவன்...

    வ‌ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    //என்மனதில் நினைத்தேன்,......
    திருமறையின் மூலம் இறைவன் அருமையாக வெளிபடுத்தியுள்ளான்//

    குர்ஆன்- ஹதீஸ் மூலம் சொல்ல இன்னும் நிறைய இருந்தும் பதிவின் விரிவஞ்சியதால் திருக்குர்ஆனின் சில‌ வசனங்களை மட்டும் சொல்லி முடிக்கும்படி ஆகிவிட்டது. தேடத் தேட அறிவுரைகளும் ஆதாரங்களும் முன்னெச்செரிக்கைகளும் வழிகாட்டுதல்களும் படிப்பினைகளும் ஊற்றெடுக்கும் அற்புதக் களஞ்சியமல்லவா இறைவனின் வேதம்? சுப்ஹானல்லாஹ்!

    வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  9. @ ஹுஸைனம்மா...

    //இப்பேர்ப்பட்டவர்களுக்கு ஒரு முறை மரண பீதி வரச் செய்ய வேண்டும் இறைவன்//

    தங்கள் நிலையிலிருந்து திருந்தாமல் அதே நிலையில் நீடிப்பவர்களுக்கு நிச்சயமா அதுபோன்ற ஒரு மரண பீதியை இன்று இல்லாவிட்டாலும் ஒருநாள் இறைவன் கொடுப்பான், இன்ஷா அல்லாஹ்! வருகைக்கு நன்றி ஹுஸைனம்மா.

    ReplyDelete
  10. @ apsara-illam...

    வ‌ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... அல்ஹம்துலில்லாஹ் நலமே! :)

    //இப்படி ஒரு பேரழிவையே நம்மால் அதுவும் படகாட்சிகள் மூலமே பார்க்க முடியவில்லை.சுபஹானல்லாஹ்... இறுதி நாளின் அழிவை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை//

    இறையச்சமுடைய அடியார்களுக்கு இன்ஷா அல்லாஹ் அந்த நாளில் இறைவன் ஆதரவளிப்பான். அதற்காக இப்போதே நம்மை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். வருகைக்கு நன்றி அப்சரா!

    ReplyDelete
  11. @ ஜெய்லானி...

    வ‌ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    //இதையெல்லாம் பார்த்தும் சிலருக்கு படிப்பினை வரவில்லையென்றால் அது அவர்கள் துரதிஷ்டமே.

    :‍(//

    நிச்சயமா சகோ. ஆனால் தான் செய்வதெல்லாம் சரி என்று நினைப்பவர்களுக்கு அது துரதிஷ்டம் என்பதும் இப்போது புரியாது. இவ்வுலகில் படிப்பினை பெறாதவர்கள் இறைவனின் இறுதிக்கட்ட (மறுமையின்) தண்டனையில்தான் உணர்வார்கள். வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  12. @ asiya omar...

    //என் பிள்ளைங்க பேசிகிட்டாங்க,ஜப்பான் சுனாமியை பார்த்து இப்படி தான் உலகம் அழியும் போலன்னு//

    பிள்ளைகள் மறுமையின் அச்சத்தோடு வளர்வது இவ்வுலக வாழ்விலும்கூட நலன் தரும், இன்ஷா அல்லாஹ்! வருகைக்கு நன்றி ஆசியாக்கா.

    ReplyDelete
  13. மாஷா அல்லாஹ்........
    அச்சமூட்டி எச்சரிக்கை செய்ததற்கு மிக்க நன்றி சகோ.....

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    சகோதரி அவர்களுக்கு
    நல்ல விழிப்புணர்வு பதிவு

    ReplyDelete
  15. @ Hasan1...

    அல்ஹம்துலில்லாஹ்... வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  16. @ ஹைதர் அலி...

    வ‌ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்.. கருத்துக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  17. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா,

    இதுவரை நான் இந்த வீடியோ கண்டதில்லை..அப்படியே உறைந்து போய்விட்டேன்..இப்படிப்பட்ட இயற்கை அழிவுகள் தான் அதிகப்படியான நம்பிக்கையை வளர்க்க செய்கிறது..ஒரு வித பீதி போல உண்டாகிவிட்டது.சொந்தபந்தங்களை இழந்து கஷ்டங்களில் வாடும் அம்மக்களுக்கு இறைவன் தைரியத்தை கொடுக்கட்டும்

    Thalika

    ReplyDelete
  18. @ Thalika...

    வ‌ அலைக்குமுஸ்ஸலாம் தளிகா.

    //இதுவரை நான் இந்த வீடியோ கண்டதில்லை..அப்படியே உறைந்து போய்விட்டேன்..இப்படிப்பட்ட இயற்கை அழிவுகள் தான் அதிகப்படியான நம்பிக்கையை வளர்க்க செய்கிறது..//

    உறைய வைக்கும் அதிர்ச்சிகள் தரக்கூடிய‌ அழிவுகளைதான் சமகாலத்தில் வாழும் மக்களுக்கும், பின்வரும் மக்களுக்கும் இறைவன் படிப்பினையாக்கி வைக்கிறான் தளிகா. அந்த படிப்பினைகள் மூலம் நம்முடைய இறைய‌ச்சமும் இறை நம்பிக்கையும் நிச்சயம் வளரவே செய்யும்! நீங்கள் சொல்வது மிகச் சரியே.

    //சொந்தபந்தங்களை இழந்து கஷ்டங்களில் வாடும் அம்மக்களுக்கு இறைவன் தைரியத்தை கொடுக்கட்டும்//

    அவர்களுக்காக பிரார்த்திப்போம். வருகைக்கு நன்றி தளிகா.

    ReplyDelete
  19. அஸ்மா நான் பிரௌஸ் செய்யும் பொது
    நீங்கள் கேட்ட மாதிரி ஒரே ஷாட்டில்
    புகைப்படங்கள் போட முடியுமானு..
    இதோ உங்க புகை படங்களுக்கு வியூ
    பன்ண ,புகை பட காலெரி உருவாக்க
    http://min.us/ செல்லவும்

    இந்தத்தளத்திற்கு சென்று நாம் புதிதாக
    ஒரு இலவச கணக்கு நொடியில் உருவாக்கி
    கொள்ளலாம் .படங்களை அப்லோட் செய்து
    காலெரி உருவாக்கலாம்.இதை ஈசி ஆக ஷேர் பண்நலாம்.இது உதவுமா என்று கருத்து சொல்லுங்க.

    ReplyDelete
  20. ட்ரை பண்ணிப் பார்த்துவிட்டு சொல்கிறேன் கீதா. நன்றிபா!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை