அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday 10 August 2011

நோன்புக் கஞ்சி



இந்தியாவைப் பொறுத்தவரை வீட்டில் தயாரிக்க தேவையில்லாத அளவுக்கு பள்ளிவாசல்களிலிருந்து வரக்கூடிய நோன்புக் கஞ்சியே போதுமானதாகவும், சில சமயங்களில் அதிகமாகவும் கூட இருக்கும். ஆனால் வெளிநாடுவாழ் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் இந்திய (தமிழக) நோன்புக் கஞ்சியை வீட்டில்தான் தயார் செய்துக் கொள்ளவேண்டும். அவர்களுக்காக இந்த நோன்புக் கஞ்சி ரெசிபியை பகிர்ந்துக் கொள்கிறேன். நாமே தயார் செய்யும் ஒரு ஸ்பெஷல் உணவு சுவையாக அமையும்போது கூடுதல் சந்தோஷமும் கிடைக்கும் :) அதனால் இந்த செய்முறையை ட்ரை பண்ணிப் பாருங்கள்.

பரிமாறும் அள‌வு: 8 - 10 நபர்களுக்கு

தேவையான பொருட்கள்:


1)
பச்சரிசி (உடைசல்) - 500 மில்லி (1/2 படி)
கடலைப் பருப்பு (ஊற வைத்தது) - 50 மில்லி
பச்சை பட்டாணி (ஊற வைத்தது) - 50 மில்லி
வெந்தயம் (ஊற வைத்தது) - 4 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் (திக்கானது) - சுமார் 300 மில்லி
பசும்பால் - சுமார் 200 மில்லி
உப்பு - தேவைக்கு


2)
மட்டன் அல்லது பீஃப்(எலும்பு நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டியது)- 400 கிராம்
உருளைக்கிழங்கு (சிறிய கட்டங்களாக நறுக்கியது) - 1 (சுமார் 100 கிராம்)
கேரட் (நறுக்கியது) - 1 (சுமார் 50 கிராம்)
தக்காளி (வெட்டியது) - 1 (சுமார் 100 கிராம்)
பாதாம் பருப்பு (ஊற வைத்து தோல் உரித்தது) - 50 கிராம்

3)
வெங்காயம் (மெலிதாக நறுக்கியது) - சுமார் 100 கிராம்
பச்சை மிளகாய் (கீறியது) - 3
பட்டை - 2 இன்ச் அளவு
கிராம்பு, ஏலக்காய் - தலா 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்
மல்லி, பொதினா - தலா 1 பிடி


செய்முறை:



1) பிரஷ்ஷர் குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெயும் 1 ஸ்பூன் நெய்யும் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.

2) மிளகாய் பொரிந்து வெண்மையாகும்போது வெங்காயத்தைக் கொட்டவும்.

3) வெங்காயம் முறுகி வந்தவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தீயாமல் தாளிக்கவும்.

4) இப்போது மல்லி, பொதினாவைப் போட்டு வதக்கவும்.

           
1) நறுக்கி வைத்துள்ள உ. கிழங்கு, கேரட், தக்காளியைப் போட்டு 2, 3 நிமிடங்கள் வதக்கவும்.

2) காய்கறிகள் வதங்கியவுடன் க. பருப்பு, ப. பட்டாணி, பாதாம் பருப்பு அனைத்தையும் கொட்டவும்.

3) தானியங்களை 2, 3 நிமிடங்கள் வதக்கியவுடன் வெட்டி வைத்துள்ள மட்டன் மற்றும் ஊறிய வெந்தயத்தை (தண்ணீருடன்) கொட்டி நன்கு வதக்கவும்.

4) இப்போது சுமார் 1½ லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.




1) அரிசியை 2, 3 முறை தண்ணீரில் களைந்து கொட்டவும்.

2) நன்கு கொதித்து தண்ணீர் கொஞ்சம் குறையும் வரை மரக்கரண்டியால் இடையிடையே கிண்டவும். இப்போது அரிசி பாதி வெந்திருக்கும்

3) குக்கர் வெயிட் போட்டு, அடுப்பு தணலைக் குறைத்து (சிம்மில்) வைக்கவும்.


1) 2 விசில்கள் வந்த பிறகு அல்லது சுமார் 10, 15 நிமிடங்கள் கழித்து திறந்து மேலுள்ள ஏலக்காய், கிராம்புகளை எடுத்துவிட்டு நன்கு கிண்டவும்.

2) முருங்கைக் கீரை இருந்தால் ஒரு பிடி சேர்க்கலாம். அத்துடன் அளந்து வைத்துள்ள பசும்பாலைச் சேர்க்கவும். (இப்போது அடுப்பை நடுத்தர தீயில் வைத்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் கஞ்சி நீர்த்தது போல் ஆகிவிடும்.)

3) தேங்காய்ப்பாலையும் உப்பையும் சேர்க்கவும். இப்போது கஞ்சி பதம் வராமல் திக்காக இருக்கும். அதனால் நன்கு கொதிக்கும் தண்ணீரை தேவைக்கு சிறிது, சிறிதாக சேர்த்து அடுப்பை அணைக்கவும். (பெரிய பாத்திரத்தில் கஞ்சி செய்வதாக இருந்தாலோ, கொஞ்சமாக செய்வதாக இருந்தாலோ ஆரம்பத்திலேயே தண்ணீரை கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.)


கோப்பைகளில் ஊற்றி வைக்கவும். ஆறிய பிறகு வெது வெதுப்பாக இருக்கும் நிலையில் (சமோசா, வாடா, கறிவடை, ஸ்ப்ரிங் ரோல்ஸ் போன்றவற்றுடன்) பரிமாற அருமையாக இருக்கும். கூடவே புதினா சம்பல், நெய் சம்பல், கறிவடகம் சம்பல், மல்லி சம்பல், கறிவேப்பிலை சம்பல், ஆரஞ்சு தோல் சம்பல் இதில் ஏதாவது ஒன்று நல்ல காம்பினேஷன்!

குறிப்பு:

o ஊற வைக்கும் பொருட்கள் குறைந்தது 5, 6 மணி நேரமாவது ஊறவேண்டும்.

o தேங்காய்ப்பாலைக் குறைப்பதற்காக பசும்பால் சேர்க்கப்பட்டுள்ளது. தேங்காய்ப்பால் மட்டும் விரும்பினால் பசும்பால் சேர்க்காமல், அதன் அளவுக்கு தேங்காய்ப்பாலைக் கூடுதலாக்கிக் கொள்ளலாம்.

o கடலைப் பருப்புக்கு பதிலாக கறுப்புக் கொண்டைக் கடலையும் சேர்க்கலாம்.

o பாதாம் பருப்பு சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை. அல்லது முந்திரிப் பருப்பு சேர்க்கலாம்.

o சிலர் 3 ஸ்பூன் ஜவ்வரியை ஊறவைத்து, தனியாக வேகவைத்து சேர்ப்பார்கள். விரும்பினால் அவ்வாறு சேர்க்கலாம்.

o முருங்கைக் கீரை இல்லாவிட்டால் பரவாயில்லை. சேர்த்தால் மணம் கூடுதலாக இருக்கும்.

o இதே முறையில் வெஜ் கஞ்சி விரும்புபவர்கள் இதிலுள்ள மட்டனை மட்டும் நீக்கிவிட்டால் போதும்.

தகவல்:

படத்தில் உள்ளது 'சிக்லா' என்று சொல்லப்படும் மண் கோப்பைகள்.
காரைக்கால், நாகூர், நாகை போன்ற பகுதிகளில் பள்ளிவாசல்களில் இந்த சிக்லாவில்தான் ஊற்றி வைப்பார்கள். இதை அப்படியே தூக்கி குடிப்பதால் அத்தனை பேருக்கும் ஸ்பூன் வைக்க தேவையில்லையாம் :) அடிக்கடி உடைந்து போவதால் இப்போது எவர்சில்வர் கோப்பைகள் பயன்படுத்தினாலும், இந்த சிக்லா (மண் கோப்பைகள்)தான் (அதன் மணத்திற்காக) அனைவரும் விரும்பக்கூடியது என்பதால், இந்த மண் பாத்திரம் இன்னும் நடைமுறையில் மறைந்து போகாமல் உள்ளது :)

நோன்பாளிகளுக்கான‌ டிப்ஸ்:

நோன்பு நேரங்களில் அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதால் தினமும் சமையலறையில் நேரம் விரயமாவதை தவிர்ந்துக் கொள்வ‌தற்காக, இதுபோன்ற நேரம் மெனக்கெடும் சமையலில் ஒன்றான நோன்புக் கஞ்சியை 3 நாட்களுக்கு ஒருமுறை தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். முதல் நாள் தயார் செய்யும்போது பால் ஊற்றுவதற்கு முன்பே மீதி 2 நாட்களுக்கான கஞ்சியை எடுத்து வைத்துக் கொண்டு அன்றைய தேவைக்கு மட்டும் பால் ஊற்றிக் கொள்ளலாம். எடுத்து வைத்த கஞ்சி ஆறிய பிறகு ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டால் மறுநாள் அடுப்பில் வைத்து, கொதிக்கும் தண்ணீர் ஊற்றி இளக்கி, பிறகு பால் சேர்த்தால் புதிய கஞ்சியாகிவிடும்.

21 comments:

  1. கஞ்சி சூப்பரா இருக்குங்க அஸ்மா! இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    வித்தியாசமா இருக்கு. குக்கர்ல நோன்பு கஞ்சி செய்ய பயம் :) இது மாதிரி ஒரு முறை செய்து பாக்குறேன்

    ReplyDelete
  3. அஸ்மா, இந்த நோன்பு கஞ்சி பல்முறைகளில் செய்
    வீங்களா. போனவாரம் ஆமினா ப்ளாக்ல பாத்தேன்.
    அது வெஜ் கஞ்சி. நாங்கல்லாம் ப்யூர் வெஜ்
    அதனால இங்க எதுவும் சொல்ல முடியல்லே.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
    உங்களது நோன்பு கஞ்சி சற்றே வித்தியாசமாக உள்ளது..பசும்பால் சேர்க்கிறீர்கள்...

    நாங்களூம் இங்கு அமீரகத்தில் நோன்புக்கஞ்சி காய்ச்சி சிறப்பாகவே நோன்பு திறக்கிறோம்..

    ரமலானில் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிய போதுமானவன்,

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் தோழி..

    எப்படி இருக்கீங்க. உங்கள் பிளாக் பக்கம் வந்து நீண்ட நாட்களாச்சு கஞ்சி, செய்முறை விளக்கம் அருமை.ரமலான் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. இனிய ரமலான் வாழ்த்துக்கள் அஸ்மா.

    ReplyDelete
  7. செய்முறை வித்தியாசமா இருக்கு அஸ்மா,ரமலான் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  8. @ மகி...

    //கஞ்சி சூப்பரா இருக்குங்க அஸ்மா! இனிய ரமலான் வாழ்த்துக்கள்!//

    சூப்பரா இருக்கா.. அப்போ ஒருநாள் செய்து பாருங்க :) வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மகி!

    ReplyDelete
  9. @ ஆமினா...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

    //குக்கர்ல நோன்பு கஞ்சி செய்ய பயம் :) இது மாதிரி ஒரு முறை செய்து பாக்குறேன்//

    முதலில் குக்கரின் 'கேஸ்கட்'டும் 'சேஃப்டி வாஷரு'ம் பழுதடையாமலுள்ளதா என்று செக் பண்ணிக் கொள்ளுங்கள். இது கஞ்சிக்கு மட்டுமில்ல, எல்லா சமையலுக்கும்தான் :)

    கஞ்சிக்கு குக்கர் ஃபுல்லா நிரம்பியிருக்கும் அளவுக்கு வைத்து செய்தால்தான் அது பயம் ஆமினா. ஏன்னா ஃபோர்ஸாக‌ பொங்கும்போது அது நம் மேலேயே பீய்ச்சடித்துவிடும். அதனால் அதிகபட்சம் முக்கால் அளவு இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். அதுவும் 'தண்ணீர் கொஞ்சம் குறையும் வரை' என்று கொடுத்திருக்கேன் பாருங்க. அதுவரை அடிபிடிக்காமல் கிண்டிக் கொண்டிருந்து, பிறகு வெயிட் போட்டு, முக்கியமா வெயிட் போட்டவுடனே தணலைக் குறைத்து வைத்துவிட்டால் பயமில்லை ஆமினா. இந்த மெதடில் பலவருஷமா குக்கரில்தான் கஞ்சி போடுகிறோம். அதேபோல் நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க.

    நன்றி ஆமினா.

    ReplyDelete
  10. @ Lakshmi...

    //அஸ்மா, இந்த நோன்பு கஞ்சி பல்முறைகளில் செய்
    வீங்களா//

    ஆமா லஷ்மிம்மா. இந்த நோன்பில் கண்டிப்பா நான் வெஜ் சேர்த்துதான் செய்வோம் :)

    //போனவாரம் ஆமினா ப்ளாக்ல பாத்தேன்.
    அது வெஜ் கஞ்சி//

    அப்படியா.. வெஜ் கஞ்சி கொடுத்திருந்தாங்களா? அப்படியும் செய்யலாம்தான். நோன்பு நேரமாதலால் அதிகமா யார் ப்ளாக்குக்கும் சரியா வரமுடியல.

    //நாங்கல்லாம் ப்யூர் வெஜ்
    அதனால இங்க எதுவும் சொல்ல முடியல்லே//

    பரவாயில்லம்மா, நீங்கள் வந்ததே சந்தோஷம் :) அதுபோன்று வெஜ் கஞ்சி ஒன்று முடிந்தால் நானும் கொடுக்கிறேன். நன்றி லஷ்மிம்மா!

    ReplyDelete
  11. @ RAZIN ABDUL RAHMAN...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

    //உங்களது நோன்பு கஞ்சி சற்றே வித்தியாசமாக உள்ளது..பசும்பால் சேர்க்கிறீர்கள்...//

    தேங்காய்ப்பாலை குறைத்து யூஸ் பண்ணிக்குவோமே என்றுதான் இப்படி பசும்பாலுக்கு (பாதி) மாறியாச்சு சகோ :)

    //நாங்களூம் இங்கு அமீரகத்தில் நோன்புக்கஞ்சி காய்ச்சி சிறப்பாகவே நோன்பு திறக்கிறோம்..//

    வீட்டிலா, பொது இடத்தில் சேர்ந்து செய்கிறீர்களா? வீட்டில் செய்தா நீங்களும் உங்க மெதட் (முடிந்தால்) கொடுக்கலாமே?

    //ரமலானில் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிய போதுமானவன்// ஆமீன்!

    நன்றி சகோ.

    ReplyDelete
  12. @ ஆயிஷா அபுல்...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் தோழி..

    //எப்படி இருக்கீங்க. உங்கள் பிளாக் பக்கம் வந்து நீண்ட நாட்களாச்சு கஞ்சி, செய்முறை விளக்கம் அருமை.ரமலான் வாழ்த்துக்கள்!//

    அல்ஹம்துலில்லாஹ், நாங்க நலமே! பிசியா இருப்பதால்தான் இந்தப் பக்கம் நீங்கள் வரவில்லையென நினைத்தேன் :) தங்கள் வருகைக்கு சந்தோஷம். நன்றி ஆயிஷா :)

    ReplyDelete
  13. @ இமா...

    //இனிய ரமலான் வாழ்த்துக்கள் அஸ்மா//

    நன்றி இமா :)

    ReplyDelete
  14. @ S.Menaga...

    //செய்முறை வித்தியாசமா இருக்கு அஸ்மா,ரமலான் வாழ்த்துக்கள்!!//

    வித்தியாசமா இருக்கா..? டேஸ்ட்டும் அருமையா இருக்கும்! நன்றி மேனகா :)

    ReplyDelete
  15. அஸ்மா, இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. வாவ்...ரொம்ப ரொம்ப சூப்பர்ப்...

    விளக்கமாக தெளிவாக எழுதி எங்களையும் செய்ய வேண்டும் என்று ஆசையினை தூண்டிவிட்டிங்க...

    ReplyDelete
  17. @ vanathy...

    //அஸ்மா, இனிய ரமலான் வாழ்த்துக்கள்!//

    நன்றி வானதி.

    ReplyDelete
  18. @ GEETHA ACHAL...

    //வாவ்...ரொம்ப ரொம்ப சூப்பர்ப்...// நன்றி கீதாச்சல்.

    //விளக்கமாக தெளிவாக எழுதி எங்களையும் செய்ய வேண்டும் என்று ஆசையினை தூண்டிவிட்டிங்க...//

    ;))) அப்போ செய்தே பார்த்துடுங்க. எப்படி இருந்ததுன்னு மறக்காம வந்து சொல்லிடுங்க :) நன்றிபா!

    ReplyDelete
  19. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

    //உங்களது நோன்பு கஞ்சி சற்றே வித்தியாசமாக உள்ளது..பசும்பால் சேர்க்கிறீர்கள்...

    நாங்களூம் இங்கு அமீரகத்தில் நோன்புக்கஞ்சி காய்ச்சி சிறப்பாகவே நோன்பு திறக்கிறோம்..//

    ரிப்பீட்டு.

    நாங்கள் இங்கு அமீரகத்தில் பட்டையெல்லாம் சேர்ப்பது இல்லை. ஆனால் சேர்த்தால் வாடையாக நன்றாகத்தான் இருக்கும்.

    அபு நிஹான்

    ReplyDelete
  20. @ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் சகோ.

    //நாங்கள் இங்கு அமீரகத்தில் பட்டையெல்லாம் சேர்ப்பது இல்லை. ஆனால் சேர்த்தால் வாடையாக நன்றாகத்தான் இருக்கும்//

    அதிகமான தாளிப்பு வாசனை விரும்பாதவர்கள் வாசனைப் பொருட்களைக் குறைத்துக் கொள்ளலாம். ஆனாலும் இதெல்லாம் சேர்த்தால் அருமையாக இருக்கும் :) கருத்துக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  21. கஞ்சில வெஜிடபில் பிரியாணி அளவுக்கு காய்கறி இருக்கு. உருளை, கேரட்டெல்லாம் போட்டு செய்வது ஆச்சரியம்தான். செய்முறை விளக்கம் அருமை. - noor

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை