அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday 9 August 2012

திருக்குர்ஆனைத் தொடக் கூடாதாமே?!!

ள்ளிக்குச் சென்று ரமலானின் இரவுத் தொழுகையை முடித்துவிட்டு வீட்டில் நுழைந்த‌ ரமீஸா, இளைய மகள் ஷாஹினா திருக்குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தவளாக அவளை நோக்கி வேகவேகமாக சென்றாள்.

ரமீஸா: என்னடி... ஷாஹின்..! இப்படி குர்ஆனை ஓதிட்டிருக்கே..? நோன்பு நேரத்தில் இப்படி ஹராமான காரியத்த செய்துட்டியேடி...! இங்கே கொடு அதை!

என குர்ஆனைப் பிடுங்கி ஷெல்ஃபில் வைக்க....

ஷாஹினா: என்னமா சொல்றீங்க...?! குர்ஆன்தானே ஓதினேன்..? இது ஹராமா.. ம்மா?

ரமீஸா: ஆமா.. வேறென்னவாம்? நீதான் இப்போ சுத்தமில்லாம இருக்கியே? சுத்தமில்லாதவங்கள்லாம் குர்ஆனைத் தொடக் கூடாதுன்னு அந்த காலத்துலேர்ந்து கேள்விப்பட்டிருக்கேன். இன்னிக்குகூட‌ பயான்ல ஹஜ்ரத் அதைதான் சொன்னாரு. அதனால சுத்தமான பிறகு ஓதிக்கலாம்... தூக்கத்திற்கான துஆவெல்லாம் ஓதிக்கிட்டு போய் படு..! இல்லன்னா ஏதாவது திக்ரு, ஸலவாத், தஸ்பீஹ்னு ஓதிக்கிட்டு இரு!

ஷாஹினா: நீங்கள்லாம் பள்ளிக்குச் சென்று தொழுதுட்டு வர்றீங்கமா! என்னால நோன்பும் வைக்க முடியாது; தொழவும் முடியாது இந்த நாட்கள்ல‌. இந்த ஒரு வாரத்துல குர்ஆனையாவது அதிகமதிகமா ஓதிக்கலாமே, அதோடு அர்த்தங்களும் படிச்சுக்கலாமேன்னு பார்த்தேன். நீங்க என்னடான்னா... தொட்டா ஹராம்னு பயம் காட்டுறீங்களேமா? நானாவது 'சிறு தொடக்கு' (ஹைள்)னு சொல்ற மாதவிடாயிலதான் இருக்கேன். பக்கத்து வீட்டு ஃபாத்திமா ஆன்ட்டி குழந்தைப் பெற்று 3 நாட்கள்தான் ஆகுது... அவங்க 'நிஃபாஸ்'னு சொல்ற 'பெருந்தொடக்கு'ல இருந்திட்டே குர்ஆன ஓதிட்டிருந்தாங்களே...?!

ரமீஸா: ம்ம்க்கும்...! அவங்கள்லாம் அப்படிதாம்மா... ஹஜ்ரத் சொன்னாங்கன்னு சொன்னா உடனே கேட்டுக்கவா போறாங்க..? ஒண்ணு சொன்னா அதுக்கு ஆதாரம் என்ன.. சேதாரம் என்ன..ன்னு  கேள்வி கேட்டே நம்மள பேசவிடாம ஆக்கிடுவாங்க, உன்னோட அக்கா மாதிரி. நீயாச்சும் சொன்னத கேட்டுட்டு போமா! உம்மா சொல்றேன்ல...?

இந்த வருட ரமலான், ஷாஹினா பருவமடைந்த பிறகு வந்த முத‌ல் ரமலான் என்பதால் மாதவிடாய் நேரத்தில் குர்ஆனை எடுத்து அவள் ஓதுவது இதுவே முதல்முறை. மற்ற நாட்களில் ஸ்கூல், ஹோம் வொர்க் என்று அதிலேயே கவனம் செலுத்தியதால், மாதவிடாய் நேரமாக இருந்தாலும் குர்ஆனை ஓதலாமே என்ற ஆர்வம் வந்ததில்லை அவளுக்கு. தூங்கச் சென்ற‌ ஷாஹினாவுக்கு தனது தாயார் சொன்னதைக் கேட்டு தூக்கமே வரவில்லை. கேள்விகள் மனதில் குவிந்தன.

"அதெப்படி மாதவிடாய் சமயம் குர்ஆனைத் தொடுவது ஹராமாகும்? சுத்தமில்லாத அந்த நாட்கள்ல நாம எதையாவது குர்ஆனிலேருந்து படிச்சு தெரிஞ்சிக்கணும்னா சுத்தமாகும் வரை வெயிட் பண்ணினாதான் முடியுமா? அல்லது அடுத்தவர்கள் உதவிலதான் அந்த நேரங்களில் நாம அர்த்தம்கூட படிக்க முடியுமா? இதற்கெல்லாம் விடை தெரிந்தாகணும்; ஆனா இதப்போய் வாப்பாவிடமா கேட்க முடியும்? நாளை அக்கா ஊரிலிருந்து வந்தவுடன் முதல் வேலையா அவளிடம் இத கேட்டாதான் நிம்மதியா இருக்கும்" என்று தன்னை சற்று ஆறுதல்படுத்திக் கொண்டு அமைதியானாள்.

(மறுநாள் காலை...) குர்ஆனையும் ஹதீஸையும் மட்டுமே மார்க்கமாக கற்றுக் கொடுக்கும் இஸ்லாமியக் கல்லூரியில் கல்வி பயின்ற, அவள் ஆவலோடு எதிர்ப்பார்த்திருந்த தன் அக்கா காமிலா வந்திறங்கிய‌ கொஞ்ச நேரத்திலேயே தன்னுள் உருவான கேள்விகளைக் கேட்க அவளருகில் சென்று அமர்ந்துக் கொண்டாள் ஷாஹினா. முதல் கேள்வியாய் (தன் தாயார் 'ஹராம்' எனச் சொன்னது தன் மனதை உறுத்திக் கொண்டிருக்க அதைப்பற்றி) கேட்க‌ ஆரம்பித்தாள்.

ஷாஹினா: அக்கா..! நேற்றிலிருந்து எனக்கு மனசே சரியில்லக்கா...

காமிலா: என்னப்பா ஆச்சு..?

ஷாஹினா: நேற்றிலிருந்து எனக்கு மென்சஸ்னால நோன்பு விடுபட்டு போச்சுக்கா. உம்மாவோட சேர்ந்து பள்ளிக்கு தொழ‌ப் போகவும் முடியல. சரி.. பத்து நாளாகியும் இன்னும் குர்ஆனை நாம ஓதி முடிக்கலயே... இந்த நேரத்திலாவது உட்கார்ந்து நிறைய ஓதலாமேன்னு குர்ஆனை எடுத்து ஓதிட்டிருந்தேனா... உம்மா வந்து குர்ஆனை பிடுங்கி வச்சுட்டு, நா(ன்) இப்போதைக்கு அத தொடுறது ஹராம்னு வேற சொல்லிட்டாங்க.. அதெப்படி.. க்கா ஹராமாகும்? அவங்க சொல்றது சரிதானாக்கா?

காமிலா: இல்ல ஷாஹின்... அப்படிலாம் இல்லபா!

(மகள்கள் பேசிக் கொள்வதைக் காதில் போட்டுக் கொள்ளாத மாதிரி ரமீஸா மௌனமாக இருந்தாள்.)

காமிலா: என்னம்மா...! தொடக்கில் இருப்பவங்க குர்ஆனைத் தொடுவதும், ஓதுவதும் ஹராம்னுதான் இன்னும் நீங்க நினைச்சிட்டிருக்கீங்களா.. ம்மா? யார் வேண்டுமானாலும் எந்த நிலையிலும் தொடலாம், ஓதலாம்னு நாந்தான் பலமுறை சொல்லியிருக்கேனே...ம்மா?

ரமீஸா: இதையே எப்போ பார்த்தாலும் சொல்றியே... உளூ இல்லாதவங்ககூட‌ குர்ஆனைத் தொடக் கூடாதுன்னு ஹஜ்ரத் சொல்லிட்டார். உளூ இல்லாதவங்களுக்கே தடை இருக்குன்னா தொடக்கானவங்கள்லாம் எப்படி தொடலாம்ங்குறே நீ?

காமிலா: உங்களுக்கு வெளக்கமா சொல்ற அளவுக்கு போதிய வாய்ப்பை இதுவரை நா(ன்) எடுத்துக்காம விட்டது என் தப்புதான். இப்பவாவது அந்த வாய்ப்பை அல்லாஹ்தஆலா எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தானேன்னு நினைத்து சந்தோஷப் பட்டுக்கிறேன், அல்ஹம்துலில்லாஹ்! சரி..ம்மா, 'தடை இருக்கு'ன்னு மட்டுந்தானே ஹஜ்ரத் சொன்னார்? ஏதாவது ஆதாரத்தோடு சொன்னாரா..ம்மா?

ரமீஸா: போற போக்குல சும்மாவா சொல்லுவாங்க யாரும்? அவர் குர்ஆன்லேர்ந்து அழகா ஆயத்துலாம் எடுத்துச் சொல்லிதான் சொன்னார். நீதான் எதற்கெடுத்தாலும் 'ஆதாரம் என்ன'ன்னு கேட்பியே?  இதோ குர்ஆன்லயே சொல்லியிருக்குதுன்னு அவர் சொல்லிட்டார்... அந்த ஆதாரத்துக்கு இப்போ என்ன சொல்லப் போறே?

காமிலா: குர்ஆன்லேர்ந்து எடுத்துச் சொன்னாரா...? சரி.. என்ன ஆயத்த ஆதாரமா சொன்னார்..மா?

ரமீஸா: அதெல்லாம் சரியா சொல்ல எனக்கு ஞாபகமில்ல... யாரும் அதுமாதிரி உள்ளவங்க தொட்டுவிடக் கூடாதுன்னுதான் முன்னெச்சரிக்கையா, குர்ஆன்ல உள்ள‌ அட்டை முகப்பிலயே அந்த ஆயத்த அச்சிட்டிருக்காங்க. எனக்கு இப்போ ஒளூ இல்ல... வேணும்னா நீயே எடுத்துப் பாரேன்..!

(குர்ஆனின் முகப்பில் எழுதப்பட்டிருந்த ஆயத்தைப் படித்த காமிலா தொடர்கிறாள்)

காமிலா: "தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள்".  (அல்குர்ஆன் 56:79) ஓ...!  இந்த ஆயத்ததான் ஹஜ்ரத் சொன்னாரா? இத மேலோட்டமா பார்த்தீங்கன்னா ஹஜ்ரத் சொல்றது சரிதான்னு நினைப்பீங்க..மா! ஆனா...

"தூய்மையானவர்கள்"னு அல்லாஹ்தஆலா இந்த ஆய‌த்திலே யாரைச் சொல்கிறான் தெரியுமா..ம்மா?

ரமீஸா: அதான் அவரே சொல்லிட்டாரே... உளூ இல்லாதவர்கள்,  மாத‌விடாய்ப் பெண்கள், குழந்தைப் பெற்ற பிறகுள்ள தொடக்கான 'நிஃபாஸ்' காலத்தில் இருப்பவர்கள், தொடர் உதிரப் போக்குள்ள (இஸ்திஹாளா) பெண்கள், தாம்பத்யத்திற்கான குளிப்பு கடமையானவர்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் ஆகிய யாரும் தொடக் கூடாதுன்னு இந்த ஆயத்தை வைத்துதானே சொன்னார்?

காமிலா: இல்ல‌ம்மா! அவர் அப்படி சொல்லியிருந்தாலும் அந்த ஆயத் அப்படி சொல்லலை. அவங்கள்லாம் இந்த ஆயத்த தப்பாவே புரிஞ்சிட்டு இருக்காங்க...ம்மா. நீங்க பொறுமையா கேட்டீங்கன்னா உங்களுக்கு நா(ன்) வெளக்கமா சொல்றேம்மா..!

ரமீஸா: ம்..சொல்லு...!

(ரமீஸாவும் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். குர்ஆன் தர்ஜுமாவை காமிலா புரட்டிவிட்டு விளக்க ஆரம்பித்தாள்.)

காமிலா: முதல்ல "பாதுகாக்கப்பட்ட ஏடு"ன்னு திருக்குர்ஆன் எதப்பத்திப் பேசுதுன்னு பா(ர்)ப்போம். இப்போ... 56 வது அத்தியாயத்தின் அந்த 79 வது வசனம் இருக்கே... அதற்கு முந்தய ரெண்டு வசனங்களோடு சேர்த்து நா(ன்) உங்களுக்கு வாசித்துக் காட்டுறேன்.
"இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும்.  தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள்". (அல்குர்ஆன் 56:77-79)
ம்மா...! இதில் சொல்லப்பட்டுள்ள "பாதுகாக்கப்பட்ட பதிவேடு"ன்னா அது "லவ்ஹுல் மஹ்ஃபூல்"தாம்மா! இதுவரை நடந்தவை, நடந்துக் கொண்டிருப்பவை, நடக்க இருப்பவை எல்லாத்தையும் அல்லாஹுதஆலா ஒண்ணு விடாம அவன்கிட்ட உள்ள அந்த பதிவேட்டில பதிஞ்சு வச்சிருக்கானில்லயா? அதன்படிதான் எல்லாமே நடக்குது, இனிமே நடக்கவும் போகுது. இந்தக் குர்ஆனக்கூட அந்த பதிவேட்டிலேர்ந்து எடுத்துதான் நபி(ஸல்) அவர்களுக்கு கொஞ்ச கொஞ்சமா இறைவன் அருளினான்.

அப்படீன்னா.. பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள திருக்குர்ஆன், எங்கிருந்து நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதோ அங்குள்ளது மட்டுந்தான் அதன் மூலப்பிரதி. இவ்வுலகத்துக்கு ஒலி வடிவில் அருளப்பட்ட குர்ஆன் அல்ல..ங்கிறத முதல்ல நாம புரிஞ்சிக்கணும்.  ஆக... 56:79 ல் "அதை"ன்னு சொல்றது நம்ம‌ கையில புத்தக வடிவில இருக்கிற‌ திருக்குர்ஆன் அல்ல. சரியா..ம்மா?

ரமீஸா: ம்ம்...! அப்படீங்கிற?!

காமிலா: நா(ன்) என் இஷ்டத்துக்கு சொல்லலை..ம்மா! இதோ இன்னொரு (80:11-14) வசன‌த்துலயும் குர்ஆனின் மூலப்பிரதி 'எது'..ங்கிறத, அது 'எங்கிருக்கு'..ங்கிறத அல்லாஹ்தஆலாவே உண்மைப்படுத்துறான் பாருங்க, சுப்ஹானல்லாஹ்!
"அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார்.  இது தூய்மைப்படுத்தப்பட்டு, உயர்வாக்கப்பட்ட மதிப்பு மிக்க ஏடுகளில் உள்ளது".
இறைவனிடமிருந்து நபி(ஸல்) அவங்களுக்கு இறங்கிய எல்லா வசனங்களுமே அவங்களுக்கு மலக்கு மூலமா ஓதிக் காட்டப்பட்டு ஒலி வடிவமாதாம்மா இறங்கிச்சு. அந்த இறைச் செய்திகள, எழுதத் தெரிந்தவ‌ங்களிடம் சொல்லி நபி(ஸல்) அவங்க எழுதி வச்சதுனாலதான் திருக்குர்ஆன் எழுத்து வடிவமாச்சு. ஆக 'தூய்மைப்படுத்தப்பட்டு, உயர்வாக்கப்பட்ட மதிப்புமிக்க ஏடு'ன்னா... வானத்தில் பாதுகாக்கப்பட்ட ஏடான "லவ்ஹுல் மஹ்ஃபூல்" மட்டுந்தான். நம்ம‌ கையில இருக்கிற‌ திருக்குர்ஆன் அனைத்தும் எழுத்து வடிவமா, பயன்பாட்டு வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட அதன் பிரதிகள்தா..ம்மா! அதிலுள்ள அல்லாஹ்வின் வார்த்தைகள் மட்டுமே மதிப்பு மிக்கதாகுமே தவிர, அதன் பேப்பரோ, அச்சிடப்பட்ட அரபி எழுத்துக்களோ, அட்டையுடன் கூடிய அதன் ஒட்டு மொத்த உருவமோ அல்லமா..! அதுனாலதான் குர்ஆனை ஓதினால் ஒரு எழுத்துக்கு பத்து நன்மைன்னு நம்ம நபி நாயகம்(ஸ‌ல்) சொல்லியிருக்காங்க.
"அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)
இந்த ஹதீஸுல‌.. குர்ஆன ஓதுறவங்களுக்குதான் நன்மைன்னு சொல்லப்பட்டிருக்கு பாருங்கம்மா!

ரமீஸா: ஓதுறவங்களுக்கு நன்மை கிடைக்கும்னுதான் தெரியுமே...! அதுக்குதான் ஒளூ தேவையில்லயே? இப்போ குர்ஆன ஒளூ இல்லாம தொடலாமா? கூடாதா?ன்னுதான நாம பேசிட்டிருக்கோம்...?

(இன்னும் முழுமையான தெளிவில்லாமல் கேட்கிறாள்.)

காமிலா: என்னம்மா நீங்க பேசுறத பா(ர்)த்தா, எந்தளவுக்கு இந்த ஹஜ்ரத்மாருங்க நம்மள யோசிக்கவிடாம செஞ்சிருக்காங்கன்னு புரியுதுமா :(

சரி..ம்மா, நா(ன்) ஒண்ணு கேட்கிறே(ன்)... திருக்குர்ஆன ஓதுறதுக்கு நன்மையா? தொடுறதுக்கு நன்மையா? சொல்லுங்க....!

ரமீஸா: அதான்... ஓதுறதுக்குதா(ன்) நன்ம! இதுல என்ன சந்தேக(ம்) ஒனக்கு?

காமிலா: உங்களுக்கே அது புரியிதுல்ல...? திருக்குர்ஆன்..ங்கிறதால‌ ஒளூ செஞ்சிட்டு ஒரு நாளைக்கு பல தடவ அத நீங்க தொட்டுத் தொட்டுப் பா(ர்)க்குறீங்கன்னா... அதுக்கு எந்த நன்மையும் கிடைக்காதுல்ல..?

ரமீஸா: அதெப்படி கிடைக்கும்..? குர்ஆன வாய்விட்டு ஓதாம தொடுறதுக்கா நன்மை கிடைக்கப் போகுது? இது என்னடி இப்புடி கேட்குறே..?

காமிலா: ஆங்...! இப்ப கேளுங்கம்மா நா(ன்) சொல்றத..!  நன்மை கெடக்கிற அமல் ஓதுறதா, தொடுறதான்னா... ஓதுறதுதான். அதுக்கே ஒளூ அவசியமில்லன்னா... நன்மை கிடைக்காத காரியமான அதை தொடுற‌துக்கு மட்டும் ஒளூ அவசியம்..ங்கிறதுல எந்த லாஜிக்கும் கிடையாதுமா. அதவிட முக்கியமா அல்லாஹ்வும் நமக்கு அப்படி கட்டளையிடல.. நபி(ஸல்) அவங்களும் அதுமாதிரி சொல்லித் தரல.

ரமீஸா: ம்ம்....!?! சரி.. அப்போ ஒளூ இல்லாதவங்கள விடு... மற்ற விதத்துல சுத்தமில்லாதவங்க...?

காமிலா: நீங்க‌தானமா சொன்னீங்க... அந்த எல்லோரையுமே ஒரே லிஸ்ட்டுல வச்சுதான ஹஜ்ரத் சொன்னாருன்னு? அப்புறம் எதுக்கு தனியா வேற பிரிச்சு சட்டம் கேக்குறீங்க? அப்படியே நீங்க கேட்பதுக்கு நா(ன்) பதில் சொல்றதா இருந்தாலும் அல்லாஹ், ரசூல் சொல்லியிருந்தாதானே நா(ன்) சொல்ல முடியும்? நீங்க சொல்ற மாதிரியும், ஹஜ்ரத் சொல்ற மாதிரியும்லாம் இல்லாத சட்டத்த எங்க போய் தேட சொல்றீங்கம்மா..? நம்ம மார்க்கம் ஒண்ணும் நாமளா உருவாக்கிட்டதில்லயே?

ரமீஸா: ஆமா.., அதுவும் சரிதான்....

காமிலா: சரிதான்னு உங்களுக்கு இப்போ புரியிற மாதிரி அந்த ஹஜ்ரத்மார்களுக்கு இன்னும் புரியமாட்டேங்குதே..? :((

ம்மா..! சொல்லப்போனா... குர்ஆன தொடுவதப் பத்தி நபி(ஸல்) அவங்க ஒரு மேட்டராவே நினக்கலன்னுதான் சொல்லணும். இதோ அதுக்கும் ஹதீஸ்ல உள்ள‌ சில சம்பவங்கள சொல்றேன் கேளுங்க!

ஷாஹின்...! அந்த புஹாரி கிதாப‌ எடுத்துட்டு வாயேன்...!

(இதுவரை கண்கொட்டாமல் தன் அக்கா சொல்வதையே பார்த்துக் கொண்டிருந்த ஷாஹின் இன்னும் உற்சாகம் கூடியவளாய் புகாரி கிரந்தத்தை எடுத்து வருகிறாள்.)

ஷாஹினா: இதுக்கு ஒரு வழி கெடச்சாகணும் எனக்கு! இந்தாக்கா... புஹாரி. ஒண்ணால முடிஞ்சவரைக்கும் எல்லாத்தையும் சொல்லிடுக்கா, ப்ளீஸ்!

காமிலா: இன்ஷா அல்லாஹ்.. சொல்றேம்ப்பா.. :)

ம்..! இதோ அந்த ஹதீஸ எடுத்துட்டேன். புஹாரியில 2941 வது ஹதீஸா இருக்குற இதுல.. நபி(ஸல்) அவங்க ரோமாபுரி மன்னருக்கு எழுதுன‌ கடிதத்தோட வெப‌ரம் இருக்கு, வாசிக்கிறேன் பாருங்க.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ரோமாபுரியின் அரசர் ஹெர்குலிஸுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது:

நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக! நிற்க, இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான். நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும்.

"வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!'' என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் "நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!'' எனக் கூறி விடுங்கள்! (அல்குர்ஆன் 3:64)
பாருங்கமா... முழுமையான ஒரு ஆயத்தான‌ 'பிஸ்மி'யை நபி(ஸல்) அவங்க இதுல எழுதி, குர்ஆனின் 3:64 வது வசனத்தயும் முழுமையா அதோடு எழுதி அனுப்பியிருக்காங்க! திருக்குர்ஆன சுத்தமில்லாம தொடவோ, ஓதவோ கூடாதுன்னா... இஸ்லாத்தை ஏற்காத அந்த ரோமாபுரி மன்னருக்கு எப்படி நபி(ஸல்) அவங்க திருக்குர்ஆன் வசனத்த எழுதி அனுப்பியிருப்பாங்க? இஸ்லாத்தை ஏற்காதவங்க இஸ்லாம் சொல்லியிருக்கிற‌ முறைப்படி அங்க சுத்தி (ஒளூ) செய்துக் கொள்வதையோ, கடமையான குளிப்பை முறையா செய்யவோ தெரிஞ்ச‌வங்களாக இருந்திருப்பாங்களா?

இஸ்லாத்த ஏற்காத ரோமாபுரி மன்னரும் அந்த வசனத்த படிக்கணும், அதன் மூலம் இஸ்லாத்தை ஏற்று நேர்வழிக்கு வரணும்..ங்கிற எண்ணத்துலதான‌ நபி(ஸல்) அவங்க திருக்குர்ஆன் வசனத்த எழுதி அனுப்புனாங்க? இதல்லாம... இன்னும் நபி(ஸல்) அவங்க பல நாடுகளின் தலைவர்களுக்கும் திருக்குர்ஆன் வசனங்கள எழுதிதான் இஸ்லாத்துக்கு வர அழைப்புக் கொடுத்திருக்காங்க. இதோ இந்த புஹாரியிலேயே 4553 வது ஹதீஸையும் பாருங்க. அந்த மன்னர்கள் அவங்களோட கையால அதைத் தொட்டு வாசிப்பாங்கன்னு நபி(ஸல்) அவங்களுக்கு தெரியதானே செய்யும்? அப்படீன்னா... யார் வேணும்னாலும் எந்த நேரத்துலயும் திருக்குர்ஆன தொடலாம், ஓதலாம்..ங்கிறது தெளிவாகுதா இப்போ..?

ரமீஸா: என்ன காமிலா சொல்ற நீ? இந்த 2941 வது ஹதீஸுல‌ நபி(ஸல்) எழுதி அனுப்புன‌து 'பிஸ்மி'யும், கூட ஒரு வசனமும்'னுதானே வ‌ருது? முழுக் குர்ஆனையுமா அனுப்புனாங்க.. அந்த மன்னர் குர்ஆனயே தொட்டார், ஓதினார்..ங்கிறதுக்கு?

காமிலா: என்னம்மா நீங்க... இன்னும் சின்ன புள்ள மாதிரி பேசிக்கிட்டிருக்கீங்க..? திருக்குர்ஆனில உள்ள 'பிஸ்மி' உட்பட ஒவ்வொரு வசனமும் அல்லாஹ்வின் வார்த்தைதானமா? இதில் தனி ஒரு வசனத்திற்கு ஒரு சட்டமும் முழு குர்ஆனுக்கு வேறஒரு சட்டமும்னு எப்படிமா பிரிச்சு பாக்கிறீங்க? அதுக்கு என்ன அளவுகோல், எங்க இருக்கு மார்க்கத்துல?

இன்னொண்ணு தெரியுமாம்மா உங்களுக்கு? எந்த வசனத்த வச்சு திருக்குர்ஆன சுத்தமில்லாம‌ தொடக்கூடாதுன்னு சொல்லிட்டிருக்காங்களோ... அந்த 56:79 வது வசனத்த அல்லாஹுதஆலா இறக்கிய‌ப்போ, குர்ஆன் முழுமையா இறங்கி முடிக்கல‌மா. ஆனா அப்பவும் அதை 'குர்ஆன்' என்றுதான அல்லாஹ் சொல்றான். அதுமாதிரி மொதமொதல்ல இறங்கிய "அலக்" அத்தியாய‌த்தோட முதல் ஐந்து வசனங்கள் மட்டும் இறங்கியத சொல்லும்போதும் 'குர்ஆன்' இறங்கியதுன்னுதான சொல்லப்ப‌டுது? அப்போ.. திருக்குர்ஆனுல உள்ள ஒரே ஒரு வசனமா இருந்தாலும் அல்லது "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்கிற, சர்வ சாதாரணமா நாம் எப்போதும் யூஸ் பண்ணுற அந்த‌ வசனமாவே இருந்தாலும் அது ஒவ்வொண்ணும் அல்லாஹ்வின் வார்த்தைதானமா? அது எல்லாத்துக்கும் ஒரே சட்டம்தா(ன்)ங்கிறத மட்டும் ஏன் மறுக்கணும்?

ரமீஸா: அப்போ.. அந்த 56:79 வது ஆயத்துல "தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் குர்ஆனைத் தொடக் கூடாது" ன்னு சொல்லியிருக்கிற‌து அல்லாஹ்வோட தடையில்லையா?

காமிலா: ம்மா...! அந்த ஆயத்துல அல்லாஹ்தஆலா அப்படியா சொல்லியிருக்கான்? நல்லா படிச்சு பாருங்க... 'சுத்தமில்லாம குர்ஆன தொடுறது தடை'ன்னு நீங்க கேட்டு கேட்டே அது உங்க மனசுல பதிஞ்சு போனதால வர்றதுதான் இதெல்லாம்! அதுனால‌ ஆயத்தையே வேறு விதமா மாத்தி சொல்றீங்க நீங்க! அதுக்குதான் நா(ன்) சொல்றது... "பயான்'னு சொல்லி அழைக்கிற எல்லாத்தையும் போய் கேட்டீங்கன்னா குழம்பிப் போய்டுவீங்கம்மா... அதனால் குர்ஆன், ஹதீஸ மட்டும் சொல்ற பயானுக்கு போங்கம்மா'ன்னு!

ரமீஸா: ஏன்.. அவங்களும் குர்ஆன் ஆயத்துகள‌ சொல்றாங்க... ஹதீஸ்களயும் சொல்றாங்களே..?

காமிலா: குர்ஆன் ஆயத்துகள‌ சொல்வாங்கதான்... ஆனா இப்படிதான் கூடவே எதையாவது இல்லாத சட்டமெல்லாம் சேர்த்து, தப்பான‌ விளக்கம் சொல்வாங்க.. ஹதீஸ்கள சொல்றேன்னு அது ஆதாரப் பூர்வமானதா, இல்லையான்னுலாம் மெனக்கெட்டு பார்க்கமாட்டாங்க. அப்படி ஏதும் பார்த்திருந்தாலும் ஏற்கனவே சொன்னத எப்படி மாத்திக்கிறதுன்னு ஈகோ பார்த்துக்கிட்டு, தப்பா சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிட்டிருப்பாங்க... இதெல்லாம் கேட்குற உங்கள மாதிரி அப்பாவிங்களுக்கு அது புரியாம 'சரிதான்'னு நினைச்சிட்டு வந்துடுவீங்க... சரி.. சரி.., இப்போ அது மேட்டரில்ல. நீங்க அந்த ஆயத் பத்தி கேட்டதுக்கு வர்றேன்..

அந்த ஆயத்துல "தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள்"னு அல்லாஹ் சொல்றான். நல்லா கவனிங்கமா! இங்கே "தொட மாட்டார்கள்"னு சொல்றது "தொடக் கூடாது"ன்ற அர்த்தத்தையா கொடுக்கும்? இதுக்கு பெரிய ஆராய்ச்சிலாம் தேவையில்லாம சாதாரணமாவே புரியுமே..ம்மா?

உதாரணமா... "அந்த இனிப்பை அவன் சாப்பிட மாட்டான்"னு சொல்றீங்கன்னு வச்சுங்க. அதுக்கு ரெண்டு விதமா மீனிங் எடுக்க முடியும். ஒண்ணு... 'அந்த இனிப்பு அவனுக்கு பிடிக்காது, அதனால அவன் சாப்பிட மாட்டான்'னு எடுத்துக்கலாம். அல்லது 'அந்த இனிப்பை அவனால சாப்பிட முடியாது, சுகர் இருக்குறதுனால'ன்னும் எடுத்துக்கலாம்.  ஆக 'சாப்பிடக் கூடாது'ன்னு தடை விதிக்கிறதா அதை எடுத்துக்க மாட்டோம். அவனுக்கும் இனிப்புக்கும் சம்பந்தப்பட்ட ஒரு செய்தியாதான் அத எடுத்துக்குவோம். அது மாதிரிதான்... இங்கேயும் தெளிவான வித்தியாசம் உள்ளது.

"தொடக் கூடாது"ன்னு சொல்லியிருந்தா நிச்சயமா அது நீங்க சொல்ற மாதிரி தடையாதான் இருந்திருக்கும். இந்த ஆயத்துலே "தொட மாட்டார்கள்"னு அல்லாஹ் சொல்வது ஒரு மெஸேஜ்மா! அதாவது, "தொட மாட்டார்கள்"னா "தொட முடியாது", "தொடுறதுக்கு சக்தி பெறமாட்டார்கள்"ங்கிறதுதான் சுலபமா புரிந்துக் கொள்ள முடிகிற, உண்மையான/சரியான மெஸேஜ். இந்த மெஸேஜுக்கு ஒரு பிண்ணனியும் இருக்குமா!

ரமீஸா: அப்டியா...?!! என்ன பிண்ணனி அது..? இப்போ குர்ஆன யார் வேணும்னாலும் எந்த நிலையிலும் தொடலாம்ங்கிறதுக்கு நீ சொல்ற விளக்கம்லாம் சரியாதான் இருக்கு..! அப்போ "தூய்மையானவர்கள்"னா யாரதான் அந்த ஆயத்துல சொல்லப்படுதுன்னும் சொல்லேன்..?

காமிலா: இருங்கமா.. ஒவ்வொண்ணா சொல்றேன். இப்போ லுஹருக்கு பாங்கு சொல்லுதே.. முதல்ல தொழுதுக்கலாம். மிச்சத்த இன்ஷா அல்லாஹ் வந்து சொல்லட்டா... ம்மா?

ரமீஸா: இன்ஷா அல்லாஹ், தொழுதுட்டு வந்து ஒடனே சொல்லு. ஒரே குழப்பமா இருந்தது, இப்போ ஓரளவு புரிஞ்ச மாதிரி இருக்கு. இரு நானும் வர்றேன் தொழுதுக்க...

தாயாரின் கேள்விக்கு அக்கா சொல்லப்போகிற அந்த விளக்கத்தையும் தவறாம கேட்க வேண்டும் என்ற ஆவலுடன் ஷாஹினாவும் எழுந்து செல்கிறாள். நீங்களும் தவறாம வந்து அடுத்த பாகத்தைப் படிங்க :) அதற்கு முன் இந்த பாகத்திலும் கருத்துக்கள் ஏதேனும் இருந்தால் சொல்லி வைங்க :)

(தொடரும்.. இன்ஷா அல்லாஹ்!) 

தொடர்ச்சி:- குர்ஆனைத் தொடமுடிந்த தூய்மையானவர்கள்!

 

11 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    புரியும் விதத்தில் எளிமையான நடை.
    மாஸா அல்லாஹ்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. @ மு.ஜபருல்லாஹ்

      வ‌அலைக்குமுஸ்ஸலாம்.

      //புரியும் விதத்தில் எளிமையான நடை.
      மாஸா அல்லாஹ்
      தொடருங்கள்//

      அல்ஹம்துலில்லாஹ்! துஆ செய்யுங்கள் சகோ. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  2. மாஷா அல்லாஹ்.. மிகத் தெளிவாக சொல்லியிருக்கிங்க. நேற்று கூட என் தோழியுடன் இதன் பற்றி பேசினேன். விளக்கம் முழுமையாக எனக்கு கொடுக்க தெரியலை.. இப்ப எனக்கு சொல்லமுடியும்.. தொடருங்கள் அடுத்த பதிவினை

    ReplyDelete
    Replies
    1. @ சிநேகிதி

      //நேற்று கூட என் தோழியுடன் இதன் பற்றி பேசினேன். விளக்கம் முழுமையாக எனக்கு கொடுக்க தெரியலை.. இப்ப எனக்கு சொல்லமுடியும்.. தொடருங்கள் அடுத்த பதிவினை//

      இன்ஷா அல்லாஹ் உங்கள் தோழியிடம் இப்போது விளக்கம் சொல்லுங்கள் :) அடுத்த பாகமும் போட்டாச்சு, பாருங்க ஃபாயிஜா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா!

      Delete
  3. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பயனுள்ள விஷயம். தெளிவான விளக்கங்கள்.அற்புதமான சொல்லாடல். எல்லோருக்கும் புரியும் எளிய நடை. அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. @ மஸ்தூக்கா

      //பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பயனுள்ள விஷயம்//

      நிச்சயமா சகோ! ஆண்/பெண் இருவருக்கும் சேர்ந்தத‌ல்லவா மார்க்கம்?

      //தெளிவான விளக்கங்கள்.அற்புதமான சொல்லாடல். எல்லோருக்கும் புரியும் எளிய நடை. அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்//

      என்னால் இயன்றளவு விளக்கங்களை எனக்குத் தெரிந்த எளிய நடையில் கொடுத்தேன், அல்ஹம்துலில்லாஹ்! ஆவலுடன் எதிர்பார்த்த அடுத்த பகுதியையும் பாருங்கள். "குர்ஆனைத் தொடமுடிந்த தூய்மையானவர்கள்!" என்ற தலைப்பில் 2 வது பகுதியைத் தொடர்ந்திருக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  4. தோழி மிக அருமையாக தெளிவாக புரியாதவங்களுக்கு புரியவைத்திருக்கும் எழுத்துநடை மாசாஅல்லாஹ். அடுத்த பகுதியை எதிர்பாத்தபடி நானும்..

    ReplyDelete
    Replies
    1. @ அன்புடன் மலிக்கா

      //தோழி மிக அருமையாக தெளிவாக புரியாதவங்களுக்கு புரியவைத்திருக்கும் எழுத்துநடை மாசாஅல்லாஹ்//

      அல்ஹம்துலில்லாஹ்!

      //அடுத்த பகுதியை எதிர்பாத்தபடி நானும்..//

      அடுத்த பகுதி "குர்ஆனைத் தொடமுடிந்த தூய்மையானவர்கள்!" என்ற தலைப்பில் கொடுத்துள்ளேன். பாருங்க மலிக்கா!

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி!

      Delete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்..

    அருமையான, மிகத் தேவையான பதிவு...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.............

    ReplyDelete
    Replies
    1. @ யாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன்

      வ‌அலைக்குமுஸ்ஸலாம்..

      //அருமையான, மிகத் தேவையான பதிவு...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.............//

      அல்ஹம்துலில்லாஹ்! நான் இங்கே பதில் தருவதற்குள் அடுத்த பகுதியையும் படித்துவிட்டு பின்னூட்டமிட்டுவிட்டீர்கள் :) ஜஸாகல்லாஹ் தோழி!

      Delete
  6. உங்களுடைய அனுமதி இல்லாமல் எனது இணையதளத்திற்கு இந்த ஆக்கத்தை எடுத்துள்ளேன். நல்ல எளிய நடையில் உள்ள ஆக்கம் என்பதால் எல்லோரும் பயன்படட்டுமே என்ற நல்ல என்னத்தில் பயன் படுத்தியுள்ளேன் தவறென்றால் மண்ணிக்கவும்..
    ஜா. முஹம்மது அலி
    http://kallaru.com/

    குர்பானின் சட்டங்கள்கூட உங்கள் இணையதளத்தில் இருந்துதான் எடுத்தேன்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை