அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday 22 December 2012

நீங்கா நினைவுகள்! (ஹ‌ஜ் ‍- 3)


முதல் பாகத்தை இங்கே காணலாம்
இரண்டாவது பாகம் இங்கே  

இதோ... சற்று தூரத்தில் அழகிய மின் அலங்காரத்தோடு கூடிய‌ ஆர்ச் ஒன்று மக்காவின் எல்லை வந்துவிட்டதை அடையாளம் காட்டுகிறது.




குர்ஆன் வைத்து ஓதும் ரேஹால் (ரைஹான்) பலகை வடிவில் அந்த ஆர்ச்! பிரம்மாண்ட அந்த ரேஹால் மீது திறந்து வைத்த திருக்குர்ஆன் வைத்தது போன்றும் வடிவ‌மைக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் திருக்குர்ஆன் இறங்கிய நகரல்லவா புனித மக்கா..!! அதை சிம்பாளிக்கா சொல்றாங்களோ? :)


இந்த ஆர்ச்சைத் தாண்டி மாற்று மதத்தவர்கள் போக அனுமதி கிடையாது என்பதை ஹைவேயின் ட்ராஃபிக் போர்டுகள் முன்கூட்டியே அறிவிக்கின்றன. செல்லும் வழியெல்லாம் ஹாஜிகளை வரவேற்கும் முகமாக‌ வாழ்த்துக் கூறிக் கொண்டிருக்கும் வாசக போர்டுகளில் சில, இதோ!


சிறிது தூரத்திலேயே சுங்கப் பரிசோதனை நிலையத்துடன், ஜித்தாவிலிருந்து மக்கா நோக்கி வரும் ஹாஜிகளை வரவேற்கும் (அரசாங்க) தொண்டு நிறுவன‌மும் வரவேற்பு வாசகங்களோடு அமைக்கப்பட்டுள்ளது. அங்கே மக்காவின் இளைஞர்கள் த‌ன்னார்வத் தொண்டர்களாக இரவு பகல் பாராமல் இறைவனிடம் நன்மையை எதிர்ப்பார்த்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்!


எல்லா வாகனங்களும் நிறுத்தப்பட்டு, அனைவரின் பாஸ்போர்ட்களும் அங்கே சோதிக்கப்படுகின்றன. அதற்கு பிறகு அனைத்து ஹாஜிகளுக்கும் வெல்கம் மீல்ஸ் கிட் மற்றும் ஜம்ஜம் தண்ணீரும் பரிசளித்து அனுப்புகிறார்கள்.


இதனால் பேருந்துக்குள்ளே காத்திருந்து மக்கா நகருக்குள் செல்வதற்கான‌ நேரம் மேலும் கூடிக்கொண்டே சென்றாலும் இறை ஆலயத்தினை பார்க்கவிருக்கும் ஆவல் சற்றும் குறையவில்லை. அங்கிருந்து புறப்பட்ட பஸ்ஸினை 'முதவ்விஃப்' (Muthawwif) என்று சொல்லக்கூடிய பொறுப்பாளர் அலுவலக வாயிலில் மீண்டும் நிறுத்த.. ஹாஜிகளின் பொறுமை இங்கே மீண்டும் சோதிக்கப்படுகிறது.


தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள‌ ஒவ்வொருவரையும் பொறுப்பேற்றுள்ள அந்த பொறுப்பாளர், 'முஅல்லிம்' (Guide) கொண்டு வந்த‌ பாஸ்போர்ட்கள் மற்றும் இதர விபரங்கள் அனைத்தையும் பதிவுசெய்துக் கொண்டு, ஒவ்வொருவருக்கும் (அந்தந்த ஹாஜி சம்ப‌ந்தப்பட்ட அனைத்து விபரங்களும் அடங்கியிருக்கும்) வாட்ச் டேக் மற்றும் கிஃப்ட் மீல் பேக் (Gift Meal Pack) கொடுத்த பிறகு மீண்டும் பேருந்து நகர்கிறது மக்கா நகரை நோக்கி. இதெல்லாம் முடிந்தவுடன், 'ஸ்...ஸப்பா.. இனி அடுத்தது கஅபாவை பார்க்கப் போகிறோம்' என்ற ஆவலோடு ஜன்னலில் முகம் பதித்து பார்த்துக் கொண்டே வர.. இளம்பச்சை நிற விளக்கொளியில் இலங்கிக் கொண்டிருக்கும் மஸ்ஜிதுல் ஹரமின் மினாராக்கள் இதோ மிக அருகாமையில் நெருங்கிவிட்டோம் என்பதை சொல்லும் முகமாக பளிச்சிட்டுக் கொண்டிருக்கிறது!


ஏற்கனவே தூக்கத்தை மறந்திருந்த கண்கள் மேலும் தண்ணீர் ஊற்றி கழுவியதுபோல் ஃப்ரெஷ்ஷாகி அதையே பிரமிப்போடு பார்த்துக் கொண்டுவர‌.. மினாராக்களைவிட அருகில் வந்த பல மாடிக் கட்டிடங்கள் அவற்றை மறைத்துவிட‌... தங்கக்கூடிய லாட்ஜ் வந்துவிட்டது, இறங்க வேண்டும் என்பது புரிகிறது. 'ஆமால்ல...? இத்தனை லக்கேஜ்களோடு எப்படி இறை ஆலயத்திற்குள் செல்லமுடியும்?' என்று கனவு கலைந்ததுபோல் ஆவலை மனதில் தேக்கிக்கொண்டு லாட்ஜ் செல்ல இறங்கியாகிவிட்டது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின்போது மக்கா நகருக்குள் வரும் முன்பு குளித்துவிட்டுதான் வந்திருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் ஹாஜிகள் மக்கா நகருக்கு முன்பே குளித்து செல்லும் அத்தகைய வாய்ப்புகள் அநேக பேருக்கு இல்லாததால் தங்கப்போகும் லாட்ஜில் வந்துதான் குளித்துக் கொள்ள முடிகிறது. அப்படியானால் இந்த நள்ளிரவு நேரத்தில் அனைவரும் குளித்துவிட்டு செல்வது இயலாது என்பதால் உடனே செல்லாமல் கொஞ்சம் கண் அயர்ந்து பிறகு குளித்துவிட்டு ஹரம் செல்வதாய் முடிவு. அனைவரும் படுக்கச் சென்றாலும், கண்கள் மட்டும்தான் மூடிக்கிடந்ததே தவிர இறை ஆலய‌ சந்திப்பையெண்ணி உள்ளம் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது! வரும் வழியில் மின்னிக் கொண்டிருந்த அந்த ஹரம் ஷரீஃபின் மினாராக்கள் கண்முன்னே வந்து தெரிந்துக் கொண்டிருப்பதுபோல் உணர்வு!

மக்காவுக்குள் வந்த பிறகும் இன்னும் பொறுக்க வேண்டியுள்ளதே அந்த 'கஃஅபா'வைக் காண என்ற‌ வருத்தத்துடன் ஒரு வழியாக தூக்கம் மிகைக்க.. காலைத் தொழுகைக்கு எழுந்ததோடு எல்லோரும் குளித்து முடித்து, நெடுநேரப் பயணத்திற்கு பிறகு நீண்ட‌நாள் கனவு நனவாகப் போகிறது என்ற அதீத சந்தோஷத்துடனும் குதூகலத்துடனும், சுறுசுறுப்பும் ஆவலுமாய் புறப்பட்டுச் சென்று.. ஹரம் ஷரீஃபை நெருங்கும் தருணத்தில் ஏற்பட்ட ஒருவித அவசரம் கலந்த பரவசம் இதுவரை அனுபவித்திராத ஒரு புதுமை என்றுதான் சொல்லவேண்டும். இப்படி ஒவ்வொன்றும் அங்கே ஒவ்வொரு விதமான புதிய அனுபவமாகவே இருந்தது!

முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் 'பாபுஸ்ஸலாம்' என்ற வாயிலின் வழியாக மஸ்ஜிதுல் ஹரமில் நுழைந்தார்கள் என்பதால் மஸ்ஜித் எல்லைக்குள் அடியெடுத்து வைத்த‌து முதல் அந்த வாயிலை தேடிக்கொண்டே ஒவ்வொரு வாசலாக தாண்டி வந்தால், கட்டுமானப் பணிகளால் 'பாபுஸ்ஸலாம்' வழியில் தற்காலிகமாக தடுப்பு போடப்பட்டுள்ளது. நபியவர்கள் சென்ற வாசல் வழியாகவே செல்லவேண்டும் என்று மிகவும் விரும்பியதால்தான் சுற்றி சுற்றி தேடி முடிந்தது. அந்த வாசல் அடைக்கப்பட்டிருந்த‌து முன்பே தெரிந்திருந்தால் ஆழ்மனதின் ஆவலை அடக்கிக் கொண்டு அதைத்தேடி இவ்வளவு நேரம் சுற்றி வந்த நேரத்தில் அந்த கஃபாவைக் கண்டிருக்கலாமே.. என்று நினைத்துக் கொண்டு, எல்லா பள்ளிகளுக்குள்ளும் நுழையும் முன் வழக்கமாக என்ன துஆ (பிரார்த்தனை) செய்வோமோ அதை (அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்(B)வாப(B) ரஹ்ம(th)தி(K)க = இறைவா! உன் அருள்வாயில்களை எனக்காகத் திறப்பாயாக!) என ஓதிக்கொண்டு அருகில் உள்ள ஒரு வாசல் வழியே உள்ளே நுழைந்தாகிவிட்டது.

நுழைய ஆரம்பித்ததும் மனதுக்குள் பட்டாம்பூச்சி படபடப்பது போன்ற உணர்வுடன்.. கடுமையான அந்த வெயில் நேரத்திலும் கை கால்கள் சில்லிப்படைகின்றன!! உள்ளே செல்கிறோம்... செல்கிறோம்... சென்றுக் கொண்டே.. திடீரென்று.. இத்தனை வருடங்கள் அச்சுப் படங்களாகவும் ஒளிப் படங்களாகவும் மட்டுமே கண்ட நேசத்திற்குரிய‌ அந்த இறை ஆலயம், ஒவ்வொரு தொழுகைக்கு முன்பும் எதை நோக்கித் தொழுகிறோம் என மனக் கண்களால் மட்டுமே கண்டு தொழுதுக் கொண்டிருந்த அந்த இறை ஆலயம் கம்பீரமாக எங்கள் கண் முன்னே!! தன்னையும் அறியாமல் 'அல்ஹம்துலில்லாஹ்...! அல்ஹம்துலில்லாஹ்..!' என தேக்கி வைத்த உணர்ச்சிகள் இறைப்புகழ் வடிவில் வாய்விட்டு... அணை உடைத்த பெருவெள்ளமாக வெளியாக, உவகை தாளாமல் கண்கள் குளமாகி.. ஆறாகி.. மளமளவென வழிந்தோடுகின்றன!!


வார்த்தைகளில் வடிக்க இயலாத உணர்வுகள் இன்ப மின்சாரமாய் உடலுக்குள் பாய்கின்றன! அகல விரிந்த கண்கள் அதில் பதித்திருக்கும் செவ்வகக் கற்களையும் அதன் முழு உருவத்தையும் பிரமிப்போடு பார்த்து அதிலேயே நிலைக்குத்தி நிற்கின்றன! எத்தனை கலை வண்ணங்கள் கொண்ட அந்தப் பள்ளியில் தன்னைச் சுற்றியுள்ள எந்த அலங்காரத்தையும் காண கண்கள் நாடவில்லை! வாழ்வின் இன்பங்களோ வருத்திய துன்பங்களோ நினைவில் இல்லை!! ஒரு புதிய உலகில் நின்றுக் கொண்டிருப்பதுபோல் ஒரு திகைப்பு! உடலெல்லாம் சிலிர்த்து, மெல்ல அசையக்கூட மறுத்து நிற்கின்றன கால்கள்! பல வருடங்கள் ஏங்கியிருந்த மனமோ 'எங்களை இங்கு கொண்டு வந்து நிறுத்திய இறைவா! எல்லாப் புகழும் உனக்கே எங்கள் இறைவா..! என கேவி கேவி அழுகிறது மகிழ்ச்சிப் பெருக்கில்! இறைவனின் அருளுக்கு முன் சரணாகதி அடைந்துவிட்ட ஓர் உள்ளுணர்வு!!  இறைமேல் கொண்ட‌ காதல் என்பது இதுதானோ..?!! அல்லாஹு அக்பர்...!!! இதற்கு மேலும் அந்த உணர்வுகளை சொல்லத் தெரியவில்லை. அதை அனுபவத்தில் உணர்ந்தால்தான் முழுமையாய் புரியும்.. இறைவன் நாடினால் அனைவருக்கும்!

வந்திருந்த அத்தனை பேருக்கும் இத்தகைய அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை சில நாட்களுக்கு பிறகு யூகிக்க முடிந்தது. அங்கே மலைத்து நின்ற அந்நேரம்.. பல்லாயிரம் வருடங்களுக்கு பின்னோக்கி ஓடுகிறது மனக் குதிரை..!!

(நினைவுகள் தொடரும்... இன்ஷா அல்லாஹ்)

படங்கள்: இணையம்

36 comments:

  1. எத்தனை கலை வண்ணங்கள் கொண்ட அந்த பள்ளியில் தன்னைச் சுற்றியுள்ள எந்த அலங்காரத்தையும் காண கண்கள் நாடவில்லை!//

    உண்மைதான் அஸ்மா.அத்தனை பிரமாண்டமாக கலை நயத்தோடு கூடிய பார்க்கும் விழிகளை நிலை குத்த செய்யும் பேரழகோடு திகழும் ஹரம் சரீஃபுக்குள் முதல் முதல் நுழையும் பொழுது அதெல்லாம் நம் சிந்தனையில் படவில்லை அந்த கஃபாவை மட்டுமே மனம் பூராகவும் நிறைத்த படி,உள்ளே நுழைந்தோம்.

    உணர்சிபூர்வமாக நீங்கள் எழுதுவதைபடிக்க படிக்க சென்ற‌ மாதம் மக்காவில் கழித்த சிறப்பான நாட்கள் என் கண் முன்னே வந்து பரவசப்படுத்துகின்றது.அல்லாஹு அக்பர்

    ReplyDelete
    Replies
    1. //உண்மைதான் அஸ்மா.அத்தனை பிரமாண்டமாக கலை நயத்தோடு கூடிய பார்க்கும் விழிகளை நிலை குத்த செய்யும் பேரழகோடு திகழும் ஹரம் சரீஃபுக்குள் முதல் முதல் நுழையும் பொழுது அதெல்லாம் நம் சிந்தனையில் படவில்லை//

      அனைவரும் அனுபவிக்க வேண்டிய அனுபவம் :) சுப்ஹானல்லாஹ்!

      //உணர்சிபூர்வமாக நீங்கள் எழுதுவதைபடிக்க படிக்க சென்ற‌ மாதம் மக்காவில் கழித்த சிறப்பான நாட்கள் என் கண் முன்னே வந்து பரவசப்படுத்துகின்றது.//

      தொடர் வாசிப்புக்கு ஜஸாகல்லாஹ் ஹைரா! அடுத்த பகுதி நீங்கள் எப்போ போடுவீங்க ஸாதிகா லாத்தா?

      Delete
  2. Padikum pooluthey udalkalil silirupu varukerathu... Naanum ungaludan makka kul vanthathu pool oru onnarvu.. Insha allah hajiku poohum pooluthu ungalin intha pathivuhal nabaham varum.. Thoodarugal ..

    ReplyDelete
    Replies
    1. //Insha allah hajiku poohum pooluthu ungalin intha pathivuhal nabaham varum.. Thoodarugal ..//

      இன்ஷா அல்லாஹ் விரைவில் ஹஜ் சென்று எங்களுக்காகவும் துஆ செய்துக் கொள்ளுங்கள் :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஃபாயிஜா! ஜஸாகல்லாஹ் ஹைரா.

      Delete
  3. உலகிலேயே முதன்முதலாக நிறுவப்பட்ட புனித கஃபா ஆலயத்தைக் கண்ணாரக் கண்டுகளிப்பதற்கான பெரும்பாக்கியத்தை வழங்கிய அந்த வல்ல நாயனைப் புகழ வார்த்தைகளே இல்லை.

    நாமெல்லாம் முஸ்லிம்க‌ளாக‌ இல்லையென்றால்.......... இத்த‌கைய‌தொரு வாய்ப்பு கிடைக்குமா? நினைத்துப் பார்க்க‌வே ப‌ய‌மாக‌ உள்ள‌து. நம்மை இஸ்லாம் என்னும் உய‌ரிய‌ மார்க்க‌த்திலே பிற‌க்க‌ச்செய்து, அதிலேயே நிலைத்திருக்க‌ச்செய்த‌ வ‌ல்ல‌ நாய‌னுக்கு நாம் எவ்வ‌ள‌வுதான் ந‌ன்றி செலுத்தினாலும் ஈடாகாது.

    இந்த‌ப் ப‌திவைப் ப‌டித்த‌தும் என்னுடைய‌ க‌ண்க‌ளும் க‌ண்ணீரால் நிர‌ம்பி விட்ட‌ன‌. ஆம், ஆன‌ந்த‌க் க‌ண்ணீர்!

    ReplyDelete
    Replies
    1. //உலகிலேயே முதன்முதலாக நிறுவப்பட்ட புனித கஃபா ஆலயத்தைக் கண்ணாரக் கண்டுகளிப்பதற்கான பெரும்பாக்கியத்தை வழங்கிய அந்த வல்ல நாயனைப் புகழ வார்த்தைகளே இல்லை//

      'அல்ஹம்துலில்லாஹ்' எனச் சொல்லும் ஒற்றை வார்த்தையிலேயே நமது நன்றிக் கடனை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான், சுப்ஹானல்லாஹ்! அதற்கே நாம் மென்மேலும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தணும் :)

      //நம்மை இஸ்லாம் என்னும் உய‌ரிய‌ மார்க்க‌த்திலே பிற‌க்க‌ச்செய்து, அதிலேயே நிலைத்திருக்க‌ச்செய்த‌ வ‌ல்ல‌ நாய‌னுக்கு நாம் எவ்வ‌ள‌வுதான் ந‌ன்றி செலுத்தினாலும் ஈடாகாது//

      நிச்சயமா :) அதற்காக‌ கடைசி மூச்சுவரை அந்த வல்லோனுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருப்போம், இன்ஷா அல்லாஹ்!

      //இந்த‌ப் ப‌திவைப் ப‌டித்த‌தும் என்னுடைய‌ க‌ண்க‌ளும் க‌ண்ணீரால் நிர‌ம்பி விட்ட‌ன‌. ஆம், ஆன‌ந்த‌க் க‌ண்ணீர்!//

      நினைத்தாலே ஆனந்தக் கண்ணீர் வரும் தருணங்களல்லவா அவை? :) உன் வருகை ரொம்ப சந்தோஷமாக உள்ள‌து தோழி, ஜஸாகில்லாஹ் ஹைரா :) :) :)

      Delete
  4. ஆமாம் அஸ்மா,புனித கஃபாவை முதல் முறை பார்க்கும் பொழுது ஏற்படும் பிரமிப்பிற்கு அளவேது? தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. //ஆமாம் அஸ்மா,புனித கஃபாவை முதல் முறை பார்க்கும் பொழுது ஏற்படும் பிரமிப்பிற்கு அளவேது? தொடர்ந்து எழுதுங்கள்//

      அளவிட முடியாத பிரமிப்புதான் ஆசியாக்கா!! இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு இயன்ற நேரம் தொடர்ந்து வாங்க. உங்கள் வருகைக்கு ஜஸாகல்லாஹ் ஹைரா :)

      Delete
  5. 2-ம் பதிவுக்கு பிறகு அடுத்த பதிவு காணோமேன்னு காத்துகிட்டிருந்தேன்.படங்களும் பகிர்வும் கண்ணுக்கும் மனதுக்கும் நிறைவக இருக்கு

    ReplyDelete
    Replies
    1. //2-ம் பதிவுக்கு பிறகு அடுத்த பதிவு காணோமேன்னு காத்துகிட்டிருந்தேன்.படங்களும் பகிர்வும் கண்ணுக்கும் மனதுக்கும் நிறைவக இருக்கு//

      உங்களின் ஆர்வமான வருகையும் மனம் திறந்த கருத்துக்களும் மிக்க சந்தோஷமாக உள்ளது லஷ்மிமா :) ரொம்ப ரொம்ப நன்றி :)

      Delete
  6. மிகவும் எதார்த்தமான நடையில் பயண அனுபவங்களை மாற்றாரும் புரிந்து கொள்ளும் வகையில் தருவது சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. //மிகவும் எதார்த்தமான நடையில் பயண அனுபவங்களை மாற்றாரும் புரிந்து கொள்ளும் வகையில் தருவது சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.//

      அல்ஹம்துலில்லாஹ்! ஹஜ் பதிவுகளை எழுத‌ எல்லோரின் வேண்டுகோளுக்கும் வற்புறுத்தலுக்கும் முன்பே நீங்கள் த‌ந்த ஊக்கமும் தூண்டுகோலாய் அமைந்தது சகோ, ஜஸாகல்லாஹ் ஹைரா :)

      (இன்ஷா அல்லாஹ்) இதன் மூலம் கிடைக்கும் நன்மைகளில் உங்களுக்கும் பங்கு கிடைக்கட்டும் :)

      Delete
  7. மாஷா அல்லாஹ் படிக்கும்போதே மெய் சிலிர்க்கிறது.. மீண்டும் மீண்டும் போக வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகிறது.. தொடர்ந்து பகிருங்கள் உங்கள் அனுபவ அலைகளை...

    ReplyDelete
    Replies
    1. //மாஷா அல்லாஹ் படிக்கும்போதே மெய் சிலிர்க்கிறது.. மீண்டும் மீண்டும் போக வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகிறது..//

      இன்ஷா அல்லாஹ் மீண்டும் மீண்டும் அங்கே போக வல்ல நாயன் அருள்புரிவானாக! :) உங்கள் வருகைக்கு நன்றி யாஸ்மின், ஜஸாகல்லாஹ் ஹைரா :)

      Delete
  8. சலாம் சகோதரி,

    மாஷா அல்லா நான் உம்ராஹ் செய்யும் பொழுது எனக்கு ஏற்பட்ட அனுபவம் அப்படியே நினைவுக்கு வந்து என்னை அறியாமல் கண்களிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது.உண்மையாகவே முதல் முதலில் காபாவை பார்க்கும் பொழுது உடலில் ஏற்ப்படும் சிலிர்ப்புகள் வார்த்தைகளால் சொல்லி முடிக்க முடியாது.அது உணர்ந்தால் தான் தெரியும்.


    உங்கள் இந்த தொடர் படிக்கும் பொழுது நாங்களும் உங்களுடன் சேர்ந்து ஹஜ் செய்தது போல் ஒரு உணர்ச்சி ஏபடுகிறது.அடுத்த பதிவுக்கு waiting.


    ஜஜாகல்லாஹ் ஹைர் சகோதரி,

    ReplyDelete
    Replies
    1. சலாம் சகோ.

      //மாஷா அல்லா நான் உம்ராஹ் செய்யும் பொழுது எனக்கு ஏற்பட்ட அனுபவம் அப்படியே நினைவுக்கு வந்து என்னை அறியாமல் கண்களிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது//

      அற்புதமான அத்தகைய‌ அனுபவ‌ங்களை நினைத்தாலே அப்படிதான் இருக்கும் சகோ :)

      //உங்கள் இந்த தொடர் படிக்கும் பொழுது நாங்களும் உங்களுடன் சேர்ந்து ஹஜ் செய்தது போல் ஒரு உணர்ச்சி ஏபடுகிறது.அடுத்த பதிவுக்கு waiting//

      இன்ஷா அல்லாஹ் விரைவில் எழுதுகிறேன் சகோ. வருகைக்கு ஜஸாகல்லாஹ் ஹைரா :)

      Delete
  9. Replies
    1. வ அலைக்குமுஸ்ஸலாம்!

      //masha allaha//

      ஜஸாகல்லாஹ் ஹைரா :)

      Delete
  10. ஜஜாகல்லாஹ் ஹைர்...

    இந்த தொடர் படிக்கும் பொழுது வார்த்தைகளில் வடிக்க இயலாத உணர்வுகள் இன்ப மின்சாரமாய் உடலுக்குள் பாய்கின்றன! கண்கள் குளமாகின்றன...
    தொடர் படிக்கும் பொழுது நாங்களும் உங்களுடன் சேர்ந்து ஹஜ் செய்தது போல் ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. //இந்த தொடர் படிக்கும் பொழுது வார்த்தைகளில் வடிக்க இயலாத உணர்வுகள் இன்ப மின்சாரமாய் உடலுக்குள் பாய்கின்றன! கண்கள் குளமாகின்றன...//

      :):):)

      //தொடர் படிக்கும் பொழுது நாங்களும் உங்களுடன் சேர்ந்து ஹஜ் செய்தது போல் ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது//

      வாசிப்பிற்கு ஜஸாகல்லாஹ் ஹைரா :) தொடர்ந்து படிங்க சகோ.

      Delete
  11. Assalamu Alaikum ,
    ya Allah Muslim Makkal Anayvarukum Kahbathullavai tarusikkum pakkiyathhai thantarulvayaka

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்குமுஸ்ஸலாம் சகோ.

      //ya Allah Muslim Makkal Anayvarukum Kahbathullavai tarusikkum pakkiyathhai thantarulvayaka//

      இன்ஷா அல்லாஹ் எல்லோருக்கும் அந்த பாக்கியம் கிடைக்கட்டும்!

      ஜஸாகல்லாஹ் ஹைரா :)

      Delete
  12. //'ஆமால்ல...? இத்தனை லக்கேஜ்களோடு எப்படி இறை ஆலயத்திற்குள் செல்லமுடியும்?' // ஹி..ஹி.. என் ஆர்வமும் புஸ்ஸுன்னு ஆகிடுச்சு.

    /ஒரு புதிய உலகில் நின்றுக் கொண்டிருப்பதுபோல் ஒரு திகைப்பு! // ஆனந்தத்திகைப்போ?:)

    ReplyDelete
    Replies
    1. //ஹி..ஹி.. என் ஆர்வமும் புஸ்ஸுன்னு ஆகிடுச்சு//

      :-) :-)

      //ஆனந்தத்திகைப்போ?:)//

      ஆமா பானு, அதை எப்படி சொல்றதுன்னே தெரியல!! :) வருகைக்கு நன்றி பானு, ஜஸாகல்லாஹ் ஹைரா!

      Delete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி,

    மாஷா அல்லாஹ் அருமையான வர்ணனை..

    முதன்முதலில் கஃபாவை காணும் போது ஏற்படும் உணர்வுகளை எழுத்தால் முழுமையாக சொல்ல முடியாது.

    பொதுவாக குடும்பத்தில் மரணம் என்றால் மட்டுமே குடும்பமே ஒரே நேரத்தில் அழும். ஆனால் குடும்பத்தில் நிகழும் சந்தோச நிகழ்வுகளில் ஆனந்தத்தில் குடும்பத்தவர் அனைவரும் அழமாட்டார்கள். குடும்பத்தோடு ஹஜ்ஜோ உம்ராவோ சென்றவர்களுக்கு தெரியும், கஃபாவை முதன்முதலாக காணும்போது குடும்பமே சந்தோசத்தில் அழும். இது மறுக்க முடியாத உண்மை.

    ReplyDelete
    Replies
    1. //குடும்பத்தில் நிகழும் சந்தோச நிகழ்வுகளில் ஆனந்தத்தில் குடும்பத்தவர் அனைவரும் அழமாட்டார்கள். குடும்பத்தோடு ஹஜ்ஜோ உம்ராவோ சென்றவர்களுக்கு தெரியும், கஃபாவை முதன்முதலாக காணும்போது குடும்பமே சந்தோசத்தில் அழும். இது மறுக்க முடியாத உண்மை//

      உண்மைதான், இதைக் கண்கூடாகவே அங்கே பார்க்க முடிந்தது! ஏன்னா அங்கே ஆஜராகும் ஒவ்வொருவருக்குமான‌ தனிப்பட்ட அனுபவம் அது!! வருகைக்கு நன்றி சகோ, ஜஸாகல்லாஹ் ஹைரா :)

      Delete
  14. Mohamed Mohaideen has left a new comment on your post "நீங்கா நினைவுகள்! (ஹ‌ஜ் ‍- 3)":

    Assalamualaikum Akka... Alhamdulilah ur blog s soo nice and we really felt like we visited the Makkah.. Jazakallahu khair u shared ur experience with us which s soo exciting One :) and my periyama ( ur machi) eyes filled with tears on reading ur experience... By Shereen. Wassalam

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்குமுஸ்ஸலாம் டியர் ஷெரீன் :)

      //ur blog s soo nice//

      really...?! :-) Masha Allah! :)

      என் தளத்திற்கு உங்களின் வருகை ரொம்ப சந்தோஷமாக உள்ளதுமா!தொடர்ந்து வந்து பாருங்க. அப்படியே தமிழில் எழுதவும் சீக்கிரமா கத்துங்க இன்ஷா அல்லாஹ்.

      //Jazakallahu khair u shared ur experience with us which s soo exciting One :) and my periyama ( ur machi) eyes filled with tears on reading ur experience...//

      :):) அந்த அற்புதமான உணர்வுகளை அவங்களும் இந்த வருஷ ஹஜ்ஜில் அனுபவிச்சவங்கதானே? அதான்.. :)

      ஜஸாகல்லாஹ் ஹைரா ஷெரீன்.

      Delete
  15. insha allah surely i ll follow ur blogs aka but its much difficult for me to post my comments in tamil ka hehehe:):) really sorry, but if Allah wills one day surely i ll learn to write also aka.. take care wassalam

    ReplyDelete
    Replies
    1. //insha allah surely i ll follow ur blogs aka but its much difficult for me to post my comments in tamil ka hehehe:):)//

      தமிழ்ல அழகா பேசுற உங்களுக்கு கண்டிப்பா எழுதவும் ஈசியா வந்துடும் ஷெரீன். டேலண்ட்டான பொண்ணு நீங்க.. இன்ஷா அல்லாஹ் எழுதவும் சீக்கிரமா கற்றுக் கொள்வீங்கன்னு நம்பிக்கை இருக்கு :)

      //really sorry, but if Allah wills one day surely i ll learn to write also aka.. take care wassalam//

      இன்ஷா அல்லாஹ், முயற்சி பண்ணுங்கபா. டோண்ட் வொர்ரி ;) அப்படி தமிழில் எழுத நீங்க கற்றுக் கொண்ட பிறகு இங்க வந்துதான் முதல்ல எழுதணும் சொல்லிட்டேன் :))

      Delete
  16. முன்னமே பின்னூட்டம் கொடுத்தேன் வரலையா அஸ்மா?உங்கள் தளம் முன்பு எனக்கு கஷ்டமா இருந்தது ஸ்க்ராள் பண்ணி கீழே படிக்கலாம்னா அப்ப ஆகாது சில நிமிடம் எடுத்து ரொம்ப கீழ போயிடும்..இப்போ அந்த ப்ரச்சனை இல்லை ஆனால் கமென்ட் பகுதி சில நிமிடம் கழிச்சு தான் வருது..இதை எதேச்சையா தான் கண்டேன் கமென்ட் போடாம பண்ணி வெச்சிருக்கீங்கன்னு நெனச்சேன்.
    மா ஷா அல்லாஹ்..இவ்வளவு அழகா தெளிவா நாளைக்கே மூட்டை கட்டி போற மாதிரி ஆசையை தூண்ட இதுவரை நான் படிச்சதில் பெஸ்ட் உங்க பகிர்வு தான்...அனுபவித்த ஒன்றை அடுத்தவர்களையும் வார்த்தையால் அனுபவிக்க வைக்கவும் இரு திறமை வேணும்..மா ஷா அல்லாஹ்

    Thalika

    ReplyDelete
    Replies
    1. //முன்னமே பின்னூட்டம் கொடுத்தேன் வரலையா அஸ்மா?// இந்தப் பதிவில் வர‌லையே தளிகா! மற்ற பதிவுகளில்தான் உங்கள் கமெண்ட் இருந்தது.

      //உங்கள் தளம் முன்பு எனக்கு கஷ்டமா இருந்தது ஸ்க்ராள் பண்ணி கீழே படிக்கலாம்னா அப்ப ஆகாது சில நிமிடம் எடுத்து ரொம்ப கீழ போயிடும்..இப்போ அந்த ப்ரச்சனை இல்லை ஆனால் கமென்ட் பகுதி சில நிமிடம் கழிச்சு தான் வருது..இதை எதேச்சையா தான் கண்டேன் கமென்ட் போடாம பண்ணி வெச்சிருக்கீங்கன்னு நெனச்சேன்//

      ஆமாம்ப்பா.. load ஆகி முடிப்பதற்கு லேட் ஆவதால், கமெண்ட் பாக்ஸும் எல்லா கமெண்ட்ஸ்களும் லேட்டாவே ஓபன் ஆகுது. என்ன ப்ராப்ளம்னு இன்ஷா அல்லாஹ் பார்க்கிறேன்.

      //மா ஷா அல்லாஹ்..இவ்வளவு அழகா தெளிவா நாளைக்கே மூட்டை கட்டி போற மாதிரி ஆசையை தூண்ட இதுவரை நான் படிச்சதில் பெஸ்ட் உங்க பகிர்வு தான்...//

      அல்ஹம்துலில்லாஹ். அப்போ வர்ற வருஷமே முடிஞ்சா புறப்படுங்க, இன்ஷா அல்லாஹ் :-)

      //அனுபவித்த ஒன்றை அடுத்தவர்களையும் வார்த்தையால் அனுபவிக்க வைக்கவும் இரு திறமை வேணும்..மா ஷா அல்லாஹ்//

      லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்!! நிச்சயமா அல்லாஹ்வின் உதவியும், அருளுமில்லாவிட்டால் சொல்ல நினைப்பதை சரியா எழுத வராது ருபீனா! அந்த வகையிலும் அல்லாஹ்வுக்கே நன்றிகள் அனைத்தும் :)

      இன்ஷா அல்லாஹ் மீதியையும் விரைவில் எழுத முயற்சி செய்கிறேன். துஆ செய்யுங்க. உங்கள் ஊக்கத்திற்கு ஜஸாகல்லாஹ் ருபீ :)

      Delete
  17. அல்லாஹூஅக்பர்
    உங்கள் கட்டுரையைவிட நீங்கள் கொடுக்கும் comments தான் நீளமாக உள்ளது.

    நம் உயிரிலும் மேலான கண்மனி முஹம்மது ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் சொல்வார்கள்
    ﺍﻥ ﻣﻦ ﺍﻟﺒﻴﺎﻥ ﻟﺴﺤﺮﺍ
    "நிச்சயமாக பயானில் சூனியம் இருக்கிறது"
    என்ற வாக்கு தாங்கள் விஷயத்தில் பிரதிபளிக்கிறது.
    ﺍﻟﺤﻤﺪﻟﻠﻪ
    ﺑﺎﺭﻙ ﺍﻟﻠﻪ ﻓﻲ ﻋﻠﻤﻚ واهلك

    ReplyDelete
    Replies
    1. //அல்லாஹூஅக்பர்
      உங்கள் கட்டுரையைவிட நீங்கள் கொடுக்கும் comments தான் நீளமாக உள்ளது//

      :):)

      //நம் உயிரிலும் மேலான கண்மனி முஹம்மது ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் சொல்வார்கள்
      ﺍﻥ ﻣﻦ ﺍﻟﺒﻴﺎﻥ ﻟﺴﺤﺮﺍ
      "நிச்சயமாக பயானில் சூனியம் இருக்கிறது"
      என்ற வாக்கு தாங்கள் விஷயத்தில் பிரதிபளிக்கிறது//

      அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

      //ﺍﻟﺤﻤﺪﻟﻠﻪ
      ﺑﺎﺭﻙ ﺍﻟﻠﻪ ﻓﻲ ﻋﻠﻤﻚ واهلك//

      واياك واهلك يا اخي

      Delete
  18. allah akbar. enakku entha pakkiyam ketai patharuku (insha allah)nan kantippaka thuvaa saiven.ethai patikkum pothu en ullam anku sanndru veetathu,nnaanum anku salvatharrku insha allah arul puriugal. allahu akbar

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை