அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday 20 April 2017

"ஸலஃப் கொள்கை" என்னும் வார்த்தை விளையாட்டு!

'ஸலஃபு கொள்கையில் உள்ளவர்கள் நாங்கள்' என்று கூறிக் கொள்வோருடன் ஒரு வாட்ஸ்அப் குழுமத்தில் கலந்துரையாடல் ஒன்று சமீபத்தில் நடந்தது. அதில் ஸலஃப் கொள்கை என்றால் என்ன என்று பேச ஆரம்பித்து, முடிவின்றி பாதியில் நின்று போனது. அதில் பேசப்பட்ட விடயங்களையும், சொல்லப்படாமல் விடுபட்ட விஷயங்களையும் இதில் தெளிவுபடுத்தலாம் என்ற நல்லெண்ணத்தில் முழுக்க முழுக்க அல்லாஹ்வை மட்டுமே அஞ்சி இந்த பதிவை எழுதுகிறோம். அவசியம் இதை முழுமையாக படியுங்கள்!

மார்க்கத்தின் மூன்றாவது ஆதாரமாக நபித்தோழர்களை பின்பற்றும் கொள்கையில் உள்ளவர்களான "ஸலஃபிகள்" என்று தங்களை சொல்லிக் கொள்வோரிடம், ஸலஃப் கொள்கை என்பது ஸஹாபாக்களை பின்பற்றுவதுதானே என்று நாம் கேட்டால், இல்லவே இல்லை என்றும் நாங்கள் அப்படி சொன்னோமா என்று தற்சமயம் ஸலஃப் கொள்கைப் பற்றி பேசுவோர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியா..?!! சரி, சலஃப் கொள்கை என்றால் என்ன என்று நீங்களே சொல்லிவிடுங்கள் என்று கேட்டால், சஹாபாக்கள் எவ்வாறு விளங்கினார்களோ அவ்வாறே விளங்க வேண்டும்; அதுதான் சலஃப் கொள்கை என்கிறார்கள்.


இதுதானேப்பா ஸஹாபிய மத்ஹப்..?

இமாம் அபூஹனீஃபா எவ்வாறு விளங்கிக் கொண்டார்களோ அவ்வாறுதான் விளங்கவேண்டும் என்போர் ஹனஃபி மத்ஹப்.
இமாம் ஷாஃபி எவ்வாறு விளங்கிக் கொண்டார்களோ அவ்வாறுதான் விளங்கிக் கொள்ள வேண்டும் என்போர் ஷாஃபி மத்ஹப்.
இமாம் மாலிக் எவ்வாறு விளங்கிக் கொண்டார்களோ அவ்வாறு விளங்கிக் கொள்ள வேண்டும் என்போர் மாலிக்கி மத்ஹப்.
இமாம் அஹ்மது பின் ஹம்பல் எவ்வாறு விளங்கிக் கொண்டார்களோ அவ்வாறு விளங்கிக் கொள்ள வேண்டும் என்போர் ஹம்பலி மத்ஹப் என்று நீங்களும் சொல்வீர்கள்தானே? அதேபோலதான்..

ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கிக் கொண்டார்களோ அவ்வாறுதான் விளங்கவேண்டும் என்று சொல்பவர்களிடம் அதற்கு பெயர்தான் 'ஸஹாபிய மத்ஹப்' என்று நாம் புரிய வைக்கத் துவங்கினால், 'நாங்கள் அப்படி சொன்னோமோ..? சஹாபாக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம்' என்கிறார்கள். அப்பாடா...! இப்பவாவது தங்களின் நிலைபாட்டை தெளிவாக சொல்லும் திசைக்கு திரும்பி வருகிறார்கள்போல் இருக்கிறதே என்று நினைத்து, "ஸஹாபாக்களுக்கு முன்னுரிமையா அல்லது ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கினார்களோ அவ்வாறுதான் விளங்க வேண்டுமா?" என்று நாம் கேட்டால் மீண்டும் பல்ட்டி அடிக்கிறார்கள், சஹாபாக்கள் எவ்வாறு விளங்கினார்களோ அவ்வாறுதான் விளங்கவேண்டும் என்று..!

அதன்பின் ஒரு வரலாற்றைப் பேச ஆரம்பித்து அதிலுள்ள ஒரு உண்மையை சொல்லி, "சலஃப் கொள்கை என்றால் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கினார்களோ அவ்வாறே விளங்கவேண்டும் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் சொல்லியுள்ளார்கள் என்று சொன்னார்கள். "அடடே..! இதைதான் சொல்ல வர்றீங்களோ? சரி, இமாம் அஹ்மத் பின் ஹம்பல் சொன்னது உண்மைதான்; ஆனால் அவர் எப்படி சொன்னார்கள், எதை சொன்னார்கள் என்பதை சொல்லுங்கள்" என்று கேட்டால், 'ம்ம்.. உங்களுக்கு ஏன் இந்த கெட்ட எண்ணம்..? அதை இப்போது சொல்லமாட்டோம்; விவாதம் ஒன்று ஏற்பாடு பண்ணுங்கள், அப்போது சொல்கிறோம்' என்கிறார்கள்!

கேட்ட கேள்விக்கு பதில் இருக்குமானால் எப்போது வேண்டுமானாலும் சொல்ல முடியும். நாம் கேட்டதில் கெட்ட எண்ணத்துக்கு என்ன இடமிருக்கிறதோ தெரியவில்லை. நமக்கு எந்த கெட்ட எண்ணமும் இல்லை என்பதாலும், இந்த வள வளா.. கொழ கொழா.. பேச்சிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதாலும் அங்கே நிறுத்திவிட்டு இங்கே சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

ஸலஃப் கொள்கை

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் ஸஹாபாக்கள் காலத்தில் பெரிய  பிரச்சனைகள் எதுவும் எழவில்லை. பிறகு 'தாபிஈன்கள்' காலத்திலும் பெரிய  குழப்பம் இல்லை. அதன்பின் 'தபஉத் தாபிஈன்கள்' காலத்தில் சில கொள்கைக் குழப்பம் ஏற்பட்டது. அதுபற்றி நாம் கொஞ்சம் விளங்கிக் கொள்வது நல்லது.

அகராதியில் "ஸலஃபு" எனும் சொல்லுக்கு "முன்னோர்" என்பது பொருள். நம்முடைய தந்தையின் காலத்தைச் சேர்ந்தவர்கள் முதல், பின்னோக்கிச் சென்றால் ஆதம்(அலை) அவர்கள் வரை வாழ்ந்த அனைவருமே அகராதிப்படி நமக்கு "ஸலஃபுகள்" ஆவார்கள். நம்முடைய பிள்ளைகளுக்கு நாம்கூட ஸலஃபுகளாக ஆகிவிடுவோம். ஆனால் குர்ஆனிலோ நபிமொழியிலோ 'ஸலஃபுக் கொள்கை' என்றோ 'ஸலஃபிய்யாக்கள்' என்றோ எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. வரலாற்று ரீதியாக மட்டும், குறிப்பிட்ட ஒரு பிரச்சனையில் முஸ்லிம் சமுதாயத்தில் பிளவு ஏற்பட்டபோதுதான் 'ஸலஃபுக் கொள்கை' என்பது உருவாக்கப்பட்டது. அதை சற்று விரிவாக பார்ப்போம்.

அல்லாஹ் தன்னைப்பற்றி பேசும்போது தனது ஆற்றலைப் பற்றியும் பேசுகிறான். தனது தோற்றத்தைப் பற்றியும் பேசுகிறான். ஆற்றலைப் பற்றிப் பேசும் வசனங்களில் யாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவில்லை. திருமறைக் குர்ஆனிலே 'எனது கை', 'எனது முகம்' என்பன போன்ற சொற்களை அல்லாஹ் பயன்படுத்துகிறான். 'அல்லாஹ்வின் கை' என்றால் 'கை' என்றே நபித்தோழர்கள் காலத்தில் புரிந்துக் கொள்ளப்பட்டது. 'கை' என்றால் 'அல்லாஹ்வின் ஆற்றல்' என்ற கருத்து கொடுக்கப்படவில்லை. நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களும் இவ்வாறே பொருள் கொண்டனர்.

ஆனால் 'தபஉத் தாபியீன்கள்' காலத்தில் நேரடி அர்த்தம் கொள்ளாமல் இதுபோன்ற சொற்களுக்கு வேறு கருத்தை சில அறிஞர்கள் கொடுக்கலானார்கள். அப்போதுதான் இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி நம்முடைய 'ஸலஃபுகள்' அதாவது 'சஹாபாக்கள்' மற்றும் 'தாபியீன்கள்' எவ்வாறு புரிந்துக் கொண்டார்களோ அப்படித்தான் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி, முதன்முதலில் "ஸலஃபு" என்பதை கொள்கையுடன் தொடர்புபடுத்தி அந்த வார்த்தையை பயன்படுத்தினார்கள். இதன் பிறகுதான் நபித்தோழர்கள் அல்லாஹ்வைப் புரிந்துக் கொண்டதுபோல் யார் புரிந்துக் கொண்டார்களோ அவர்கள் "ஸலஃபுகள்" என்று குறிப்பிடப்பட்டனர்.

பொதுவாக, தனக்கு எந்தத் தன்மைகள் இருப்பதாக இறைவன் கூறுகின்றானோ அவற்றுக்கு நாம் மாற்று விளக்கம் கொடுக்காமல் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். இறைவன் தனக்கு இருப்பதாகக் கூறிய எந்த அம்சத்தையும் மறுத்துவிடக் கூடாது என்பதே நபித்தோழர்களின் கொள்கை. இறைவனுக்கு கை, கால், முகம் ஆகிய உறுப்புகள் இருப்பதாகவும், உருவம் இருப்பதாகவும் குர்ஆன் கூறுகின்றது. இறைவன் அர்ஷின் மீது அமர்ந்திருக்கின்றான் எனவும், அவன் பார்க்கின்றான், கேட்கின்றான் எனவும் அவன் நடந்து வருவான் எனவும், மறுமையில் இறைவனை நல்லவர்கள் காண்பார்கள் எனவும் குர்ஆன் கூறுகின்றது.

இவ்விஷயங்கள் அனைத்தையும் அப்படியே நம்பிக்கைக் கொள்ளவேண்டும். அவற்றுக்கு மாற்று விளக்கம் கொடுப்பதோ, அவை எப்படி இருக்கும் என்று வியாக்கியானம் கற்பிப்பதோ கூடாது என்பதே சஹாபாக்களின் கொள்கை. "ஆதம்(அலை) அவர்களை எனது கையால் படைத்தேன்" என்று அல்லாஹ் சொல்வதை, "கையால் படைத்தான்" என்ற அர்த்தத்தில்தான் புரிந்துக் கொள்ளவேண்டும் என்பது ஸஹாபாக்களின் கொள்கை. ஆனால், "எனது வலிமையைக் கொண்டு படைத்தோம்" என்றே அர்த்தம் செய்யவேண்டும் என்று பிற்காலத்தவர்கள் விளக்கம் கூறினார்கள்.

இவ்வாறு அல்லாஹ்வுடைய பண்புகளில், தன்மைகளில் அல்லாஹ்வுடைய உருவம் சம்பந்தப்பட்டதாக வரும் விஷயங்களில் அவர்கள் வியாக்கியானம் கொடுத்து வந்தனர். ஆனால் ஸலஃபுகள் - அதாவது ஸஹாபாக்களோ, "கண்" என்றால் கண் என்றும் "காது" என்றால் காது என்றும் வேறு வியாக்கியானம் செய்யாமல் அப்படியே எழுதிக் கொண்டார்கள். அல்லாஹ்வின் உறுப்புகள் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வதும், அதற்கு விதம் கற்பிப்பதும் கூடாது; மறுமையில் அவனை காணும்போதே இந்த விபரங்கள் புலப்படும் என்று கூறிவிட்டார்கள். இதுதான் "உண்மையான ஸலஃபி கொள்கை"யாகும்.

ஆனால் அதற்கு பின்னால் வந்த தபஉத் தாபியீன்கள் இதற்கு மாற்றமாக அல்லாஹ்வின் "முகம்" என்றால் 'திருப்தி' என்றும், "கை" என்றால் 'சக்தி' என்றும், "அர்ஷ்" என்றால் 'அதிகாரம்' என்றும் வியாக்கியானம் செய்தனர். இது "ஹலஃபு"களின் - அதாவது பின்வந்தவர்களின் கொள்கையாகும். குர்ஆனில் "அல்லாஹ்வின் கை" என்றால் "அல்லாஹ்வின் கை"தான் என்றும் 'சக்தி' என்று பொருள் கொள்ளக் கூடாது என்றுதான் சஹாபாக்களும் கூறினார்கள். அதுதான் நமது கொள்கையும்; அதைத்தான் நாமும் கூறுகிறோம் என்பதை விளக்கி ஒரு விவாதமே நடத்தினோம்.

அதில், 'அல்லாஹ்வின் கை' என்றால் கைதான் என்று சஹாபாக்கள் புரிந்துக் கொண்டது போன்றுதான் நாமும் அதை விளங்க வேண்டும் என்பதே எங்களின் கொள்கை என்பதை பல ஆதாரங்களோடு தெளிவுபடுத்தினோம். ஆனால் 'கை' என்றால் கை அல்ல, அதனை 'சக்தி' என்று புரிந்துக்கொள்ள வேண்டும் என்று கூறிய ஹலஃபுகளின் கொள்கையை இன்றைய 'சுன்னத் வல்ஜமாஅத்' என்பவர்கள் அந்த விவாதத்தில் கூறினார்கள். அதுதான் 'ஹலஃப் கொள்கை' என்பதையும் அங்கே பறைசாற்றினோம்.

ஆக "சஹாபாக்கள் எவ்வாறு விளங்கிக் கொண்டார்களோ" என்பது, குர்ஆனில் அல்லாஹ் தன் ஆற்றலைப் பற்றி சொன்ன விஷயங்கள் சம்பந்தப்பட்டவையே தவிர, 'மார்க்கம் சம்பந்தமான அனைத்தையுமே சஹாபாக்கள் எவ்வாறு விளங்கிக் கொண்டார்களோ அவ்வாறே நாமும் விளங்க வேண்டும் என்பதுதான் சஹாபாக்களை விளங்குவது ' என்று யாராவது சொன்னால் அவர்களிடமிருந்து நாங்கள் மாறுபடுகிறோம். அதற்கு பெயர்தான் "சஹாபாக்களைப் பின்பற்றுவது" என்று அர்த்தம் என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்கிறோம். இதை மறுத்தும், வைக்கப்படும் கேள்விகளுக்கு நேரடி பதில் சொல்லாமலும் எத்தனை மழுப்பல் வேலைகள் பார்த்தாலும், உண்மை நிலையை மறைத்து.. சொன்ன பொய்யையே திரும்பத் திரும்ப சொல்லும் கோயபல்ஸ் தத்துவத்தை கையில் எடுத்தாலும், இன்றைய ஸலஃபிகள் குர்ஆன், சுன்னாவை மட்டும் பின்பற்றுவதை விட்டும் தடம்புரண்ட வழிகேடர்களே என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். 

அதேசமயம் சஹாபாக்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்க வேண்டுமா அல்லது கேட்கக் கூடாதா என்பதில் இன்னமும் பலர் குழப்பத்திலேயே உள்ளனர். அதைப்பற்றி பார்ப்போம்.

இன்று நமக்கு வந்த குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் சஹாபாக்கள் மூலமே நமக்கு வந்தது. ஒவ்வொரு ஹதீஸிலும் ரசூலுல்லாஹ்விடமிருந்து நான் கேட்டேன் என்றோ, ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்றோ, செய்தார்கள் அல்லது அங்கீகரித்தார்கள் என்றோ ஸஹாபாக்கள் ஒரு தகவலை எடுத்து வைப்பார்கள். அதை 'தாபிஈன்கள்' கேட்டு, பின் 'தபஉத் தாபிஈன்கள்' மூலம் தொடர்ந்து, சுமார் ஐந்து அல்லது ஆறு அறிவிப்பாளர் தொடருடன் அந்த தகவல்கள் நம்மை வந்தடைகின்றன. அப்படி எடுத்து வைக்கப்படும் அத்தனை செய்திகளையும், அறிவிப்பாளர்களின் தரத்தை உறுதி செய்துக்கொண்ட பிறகு நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்; அப்படிதான் ஏற்றுக் கொள்கிறோம்.

அதே நேரத்தில் குர்ஆனுடன் மோதும் சில ஹதீஸ்களும் இருக்கின்றது; அவற்றை நாம் நிராகரிக்கிறோம். அப்படி குர்ஆனுக்கு முரண்படுபவற்றை நிராகரிப்பதுதான் 'வஹீயின் அடிப்படை'யை தெளிவாக விளங்கிய ஒவ்வொரு முஃமினும் செய்யவேண்டியதாகும். ஒரு குர்ஆன் வசனத்திற்கோ, ஹதீஸுக்கோ விளக்கம் என்று வரும்போது ஸஹாபாக்கள் முதற்கொண்டு இமாம்கள் வரை அனைவரின் விளக்கத்தையும் எடுத்துப் பார்க்கிறோம். அவர்களின் விளக்கங்கள் குர்ஆனுடன் ஒத்திருக்கும் பட்சத்தில் அவற்றிற்கு முன்னுரிமைக் கொடுத்து நாம் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். அதில் குர்ஆனுடன் ஒத்த கருத்து இல்லாமல் முரண்பட்டால் அவற்றை தூக்கி வீசுகிறோம். அதேபோன்றுதான் ஹதீஸ் என்ற பெயரில் சொல்லப்பட்டவற்றில் சில செய்திகள் குர்ஆனுக்கு தெளிவாகவே முரண்படும்போது அவற்றை புறக்கணிக்கிறோம். ஏனெனில் அப்படிப்பட்டவை ஹதீஸே அல்ல! ஆக "ஹதீஸ்" என்ற வஹீயானது "குர்ஆன்" என்ற வஹீயுடன் ஒருபோதும், எந்த வகையிலும் மோதவே மோதாது என்ற அடிப்படையை நாம் இங்கே தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும். (சமீபத்தில் நடந்த SLTJ - Vs - நஸ்ரி விவாத ஒப்பந்தத்தில் கூட இந்த அடிப்படை சொல்லப்பட்டதைப் பார்த்திருப்பீர்கள்.)

ஆக ஒரு கருத்து குர்ஆனுடன் ஒத்திருக்கின்றதா, இல்லை குர்ஆனுடன் மோதுகிறதா என்பதை இறையச்சத்துடன் ஆய்வு செய்து முடிவு செய்யும் பொறுப்பு நமக்குதான் உள்ளது. அத்துடன், குர்ஆனை விளங்க நம் முன்னோர்களின் உதவி நமக்கு தேவையா என்றால்.. தேவையே! ஆனால் அவர்கள் சொல்லியதுதான் இறுதி முடிவா என்றால், இல்லவே இல்லை! நமது சிந்தனை குர்ஆனுக்கு ஏற்ப சரியாக இருந்து, சஹாபாக்களின் சிந்தனை அவர்களின் சில தவறான புரிதலில் உள்ளதாக இருக்குமானால் அல்லது அவர்களின் கவனக்குறைவினால் ஏற்பட்ட தவறாக இருக்குமானால் அவர்களின் அத்தகைய தவறினால் ஏற்பட்டவற்றை  ஏற்றுக்கொள்ள கூடாது என்று சொல்லும்போதே, நாம் சிந்திக்காமல்/ நமக்கு விளங்காமல் எதையும் சுயமாக முடிவெடுக்க முடியாது என்பதையும் புரிந்துக் கொள்ளலாம்.

ஹதீஸ்களை ஏற்றுக் கொள்வதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான வழிமுறை

ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் சரியாக இருந்தும் அதிலுள்ள செய்திகள் குர்ஆனுக்கு முரண்படுமானால் நாம் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்ற அடிப்படையை நம் இஷ்டத்துக்கு சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதரே இந்த வழிமுறையை சொல்லி விட்டார்கள். (அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இதே வழிமுறையை சொல்லி அதை ஸஹாபாக்கள் ஏற்றுக் கொண்ட சம்பவங்களும் உண்டு. அதை பின்னால் பார்ப்போம்.)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும்போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதற்கு) உங்களைவிட நான் மிகத் தகுதி வாய்ந்தவனே. என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும்போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், உங்களது தோல்களும் முடிகளும் விரண்டு ஓடுமானால், அச்செய்தி உங்களுக்குத் தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களை விட அதைவிட்டும் நான் மிக தூரமானவன்.

அறிவிப்பவர்: அபூ உஸைத்(ரலி); நூல்: அஹ்மத்(15478)

(இந்த
ஹதீஸை பலஹீனமாக்க சிலர் பல்வேறு முயற்சிகள் செய்துக் கொண்டு இருக்கிறார்கள். இது பலஹீனம் என்போரின் கூற்று பொய்யானது என்பதை நிரூபிக்க அல்லாஹ்வின் உதவியால் தயாராக இருக்கிறோம்)

மேலேயுள்ள அந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் சொல்வதை கவனியுங்கள். தமது  பெயரால் சொல்லப்படும் சில செய்திகளில் பொய்யானவை கலந்துவிடதான் செய்யும் என்பதையும், அதை எவ்வாறு கண்டறிவது என்பதையும் நபி(ஸல்) அவர்கள் இங்கே விளக்குகிறார்கள்.

அதாவது, ஒரு செய்தியை மனசாட்சியுடன் சிந்திக்கும்போது குர்ஆனுக்கு முரண்படாத காரணங்களுடன் அவை அமைந்திருக்குமானால் அதை நபி(ஸல்) அவர்கள்தான் சொல்லி இருப்பார்கள் என்று தெளிவாக தெரிந்துவிடும். வேறொரு செய்தியை அதேபோன்று மனசாட்சியுடன் சிந்திக்கும்போது தக்க காரணங்களுடன் அது குர்ஆனுக்கு முரண்படுமானால், அதை நபி(ஸல்) அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள்; அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்று புரிந்துவிடும். இதுதான் அந்த அணுகுமுறை என்பதை தெளிவாக விளக்கிவிட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் திருமறைக் குர்ஆனில், "நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?" என்று அல்லாஹ்தஆலா பல இடங்களில் கேட்கிறான் என்றால், ஏன் கேட்கிறான்? ஸஹாபாக்கள் சொல்வதை அல்லாஹ்வின் வேதத்தில் அடிப்படையில் சிந்திக்காமல் நீங்கள் அப்படியே  ஏற்றுக்கொண்டு போய்விட வேண்டும் என்றிருந்தால் அல்லாஹ் நம்மை சிந்திக்க சொல்லியிருப்பானா? 'இமாம் புஹாரி சொல்லிவிட்டால் நான் மறுபேச்சு பேசவே மாட்டேன்' என்றெல்லாம் சிலர் சொல்லிக் கொண்டிருப்பதுபோல நாங்கள் ஒருபோதும் சொல்ல மாட்டோம். ஏனெனில் அல்லாஹ்தஆலா முஃமின்களின் பண்பைப் பற்றி சொல்லும்போது, 'அல்லாஹ்வின் வசனம் சொல்லப்பட்டால் அவர்கள் குருடர்களாகவும் செவிடர்களாகவும் அதன்மேல் விழ மாட்டார்கள்' என்கிறான். நீங்கள் அதைக்கூட சிந்திக்க மாட்டீர்களா?

"அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்". (அல்குர்ஆன் 25:73)

குருடர்களாகவும் செவிடர்களாகவும் விழுவது என்றால் என்ன?

ஒரு வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும்போது அது பல வசனங்களுக்கு முரணாக தெரிகிறது என்று வைத்துக் கொள்வோம். அது இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமாகவும் உள்ளதுபோல் தெரிகிறது. அப்படி மாற்றமாக இருந்தால் இருந்துவிட்டு போகட்டும் என்று சிந்திக்காமல் ஏனோதானோவென்று நம்புவதுதான் குருடர்களாக செவிடர்களாக விழுவது என்பதன் கருத்தாகும். அந்த வசனம் பல வசனங்களுக்கு முரணாக உள்ளதுபோல் தோன்றினால் அதை முரணில்லாத வகையில், இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்காத வகையில், எந்த வகையான சுயலாபமும் பார்க்காமல், இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை மட்டும் முன்னிறுத்தி சிந்தித்து அதை பொருத்தமான பொருள் கொள்பவர்கள்தான் குருடர்களாகவும் செவிடர்களாகவும் விழாதவர்கள்!

குர்ஆனின் ஒட்டுமொத்த வசனங்களும் அல்லாஹ்வின் வஹீ என்பதில் எந்தவொரு முஃமினுக்கும் மாற்றுக் கருத்தும் இருக்காது. அது அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டது.

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். அல்குர்ஆன் (15 : 9)

இப்படிப்பட்ட உயரிய தகுதிகள் கொண்ட அல்லாஹ்வின் வசனங்களையே இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமில்லாத முறையில்தான் பொருள் கொள்ளவேண்டும் எனும்போது, அறிந்தோ அறியாமலோ தவறுகள் செய்யும் பலதரப்பட்ட மனிதர்கள் மூலமாக படிப்படியாக, பல தலைமுறைகளாக கொண்டு வரப்பட்ட (ஹதீஸ் என்ற) தகவல்களில் அல்லாஹ்வின் வசனங்களுக்கு எந்தவித முரண்பாடும் இல்லாதபோது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் சொல்லும் அதேவேளை...

அதில் ஏதாவது ஒரு வகையில் முரண்பாடுகள் இருந்தாலும் அதை சிந்திக்காமல் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்று சொல்லி, அப்படி தெளிவாக முரண்படும் சிலவற்றை அது ஹதீஸே இல்லையென்று ஆதாரங்களோடு நாம் தெளிவுபடுத்தியும், நாம் என்ன சொன்னாலும் அதை கண்மூடி எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக, அதைக் கட்டிக் காக்கிறோம் என்ற பெயரில் அல்லாஹ்வின் வேத வசனங்களையே மறைமுகமாக நீங்கள் மறுக்கும் ஆபத்தான அவல நிலையைதான் கண்கூடாக காண்கிறோம். (அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்கட்டும்)

இன்ன வசனத்துக்கு இவ்வாறு முரண்படுகிறீர்களே என்று நாம் அதைப்பற்றி கேட்கும்போது எந்த பதிலும் இல்லாத மௌனங்கள் அல்லது கேட்க வந்ததையே குழப்பிவிட்டு திசை திருப்பும் பதில்கள்! இது யாருடைய மார்க்கம்? யாருக்காக இந்த மார்க்கம்? சொல்பவர்கள் யாரென்று பார்த்து பின்பற்றுவதுதான் மார்க்கமா? சொல்லப்படும் விஷயத்தை கவனித்து பின்பற்றுவதுதான் மார்க்கமா? மார்க்க விஷயத்தில்  ஏனிந்த கெட்ட எண்ணங்கள்?? இவை மறுமை வெற்றிக்கு வழி தருமா?!

கொண்ட கொள்கையில் உறுதியற்றவர்களின் நிலை, தங்களின் தவறான கொள்கையினால்தான்

சரி, ஸஹாபாக்கள் ஒரு விஷயத்தை எவ்வாறு விளங்கினார்களோ அவ்வாறுதான் நாமும் விளங்கவேண்டும் என்று சொல்வது முற்றிலும் தவறான கொள்கை என்றாலும், அப்படி நீங்கள் சொல்லித் திரிவதில் உண்மையில் தெளிவானவர்களாகதான் இருக்கிறீர்களா என்றால் அதுவுமில்லை. நீங்கள் சொல்லும் இந்த கொள்கையில் உறுதியற்று தடுமாறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை, சமூக வலைதளங்களில் மட்டும் நீங்கள் வண்டியோட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆன்லைன் விவாதத்திலும் காணப்படும் உங்களின் திசை திருப்பல்களும், நேரடி விவாதத்திற்கு வரத் தயங்கி உப்பு சப்பில்லாத காரணங்களைக் கூறி தப்பிச்செல்ல பின்வாங்கும் போக்குகளும் வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கின்றன. தடுமாறும் உங்கள் கொள்கையின் உதாரணத்திற்கு ஒரே ஒரு ஹதீஸை மட்டும் சொல்லி இப்போது ஒரு கேள்வியை உங்கள் முன் வைக்கிறோம்.

ஸஹாபாக்கள் அத்தனை பேரையும் அவர்களுக்கு உரிய அந்தஸ்தோடு நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவர்கள் ஒரு மார்க்க விஷயத்தை எவ்வாறு விளங்கினார்களோ அவ்வாறு நாமும் விளங்கவேண்டும் என்று நீங்கள் சொல்லும்போது, ஒரு ஸஹாபியின் கருத்தை ஏற்று இன்னொரு ஸஹாபியின் கருத்தை மறுப்பீர்களா? அல்லது அத்தனை பேருடைய கருத்துக்களையும் ஏற்பீர்களா? கீழுள்ள ஹதீஸை படித்துவிட்டு பதில் சொல்லுங்கள்.

"இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் மண்ணறையில் (கப்ரு) வேதனை செய்யப்படுகிறார்" என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

இப்னு உமர் இதை தவறாக விளங்கிக் கொண்டார். [நபி(ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவில்லை.] "இறந்தவர் தன் (வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தாரோ, இப்போது அவருக்காக அழுதுக் கொண்டிருக்கின்றனர்" என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இ(ப்னு உமர் அறிவித்திருப்ப)து எப்படியிருக்கிறதென்றால், (குறைஷித் தலைவர்களான) இணைவைப்பாளர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த பாழுங்கிணற்றுக்கு அருகில் நின்றுக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?" என்று உமர் (ரலி) அவர்கள் கேட்க,) "நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் தவறாகவே விளங்கிக் கொண்டார்.

"நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மை என்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்" என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ("இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்" என்று சொல்லவில்லை). பிறகு, (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியுறுவதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும்) வசனங்களை ஓதினார்கள்:

⇀ (நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது (27:80)
⇀ (நபியே!) மண்ணறைகளில் (கப்று) இருப்பவர்களை உங்களால் செவியுறச்செய்ய முடியாது (35:22)

"நரகத்தில் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் ஒதுங்கும்போது (இந்நிலை ஏற்படும்)" என ஆயிஷா (ரலி) அவர்கள் (விளக்கம்) கூறினார்கள்.


அறிவிப்பவர்: உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)
நூல்: முஸ்லிம் (1697)

இப்போது இப்னு உமர் (ரலி) அவர்களின் கருத்தை ஏற்பீர்களா? மறுப்பீர்களா?

ஆயிஷா (ரலி) அவர்கள் குர்ஆனின் வசனங்களை மேற்கோள் காட்டி இப்னு உமர் (ரலி) அவர்களின் கூற்றை மறுத்து விளக்கம் சொல்கிறார்களே, அதை ஏற்பீர்களா? மறுப்பீர்களா? உங்களால் பதில் சொல்ல இயலாத இதுபோன்ற பலப்பல கேள்விகள், நீங்கள் சொல்லும் ஸலஃபிக் கொள்கையை உண்மைப்படுத்த முடியாமல் நீங்கள் கொள்கையற்றவர்கள் என்பதை உறுதியாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை ஈகோ பார்க்காமல் அல்லாஹ்வுக்கு அஞ்சி ஒப்புக் கொள்வீர்களா..??

இவ்வாறு குர்ஆனுக்கு முரண்படும் கருத்துக்கள் முஃமின்கள் யாரும் ஏற்றுக்கொள்ள துளியும் தகுதியற்றவை என்பதை அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஸஹாபாக்களுக்கு மத்தியில் எவ்வாறு தெளிபடுத்தினார்களோ, அவ்வாறு முடிவு செய்வதுதான் சரியான அணுகுமுறை. அதுதான் எங்கள் கொள்கையும் கூட! இதில் உங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தால், "ஸஹாபாக்கள் எவ்வாறு புரிந்தார்களோ..." என்று பொத்தாம் பொதுவாக சொல்லி பழைய பல்லவியை பாடிக் கொண்டு மீண்டும் யாராவது வருவீர்களானால், நீங்கள் சொல்ல வருவதை எச்சில் கூட்டி விழுங்கி மழுப்பிக் கொண்டிருக்காமல் தெளிவாக சொல்லிவிட்டு உங்கள் கொள்கையை நிலைநாட்ட முயற்சி செய்யுங்கள்.  அதை விடுத்து  "நாங்கள்  அப்படி  சொன்னோமா..?" என்று ஒன்றும் புரியாததுபோல் திரும்ப திரும்ப அங்கேயே கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நிற்காதீர்கள்.

இதில் அதிகபட்ச கொடுமை என்னவென்றால், ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கினார்களோ அவ்வாறுதான் எல்லாவற்றையும் நாம் விளங்க வேண்டும் என்று (இன்றைய ஸலஃபிகள்) சொல்வது மட்டுமின்றி.. ஒரு சுன்னத்தையோ, ஒரு ஃபர்ளையோ ரசூலுல்லாஹ் சொல்லிவிட்டப் பின், அதை சஹாபாக்கள் செய்திருந்தால்தான் அது சுன்னத்தாகும் என்று சொல்லும் "ஜாக்"கிகள் இருக்கும் தமிழுலகம் இது..! மக்களே ஜாக்கிரதை..!

ஸலஃபிகள் என்ற பெயர் சூட்டிக் கொண்டு வார்த்தை விளையாட்டுகள் செய்யும் குழப்பிகள் நிறைந்த தமிழுலகம் இது..! அன்பு இஸ்லாமிய பெருமக்களே..! மார்க்கத்தை அப்படியெல்லாம் இவர்களைப்போல் குழப்பிக் கொள்ளாமல் குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் மட்டும் உங்கள் பாதையை தெளிவாக அமைத்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழியைக் காட்டட்டும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை