அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday 5 July 2012

பராஅத் இரவு ‍- பாவமா புண்ணியமா?


நம் இஸ்லாமிய மக்களில் இன்னும் அறியாத நிலையிலுள்ளவர்களுக்கு, ஷஃபான் மாதம் 15ஆம் இரவு, "ஷபே பராஅத்" அல்லது "பராஅத் இரவு" என்று மிக கோலாகலமாக கண்ணியப்படுத்தப்படும் ஒரு விழா கொண்டாட்டம்! இதை கொண்டாடுவதில் அறியாத மக்களோடு சேர்ந்து, ஹஜ்ரத்மார்கள் என்று சொல்லப்படும் ஆலிம்களும்(?) ஆர்வத்துடன் முன்னின்று நடத்தி வருகின்றனர். மார்க்கத்தின் பெயராலும், அமல்களின் பெயராலும் முன்னோர்கள் ஏற்படுத்தியவற்றை எல்லாம், அல்லாஹ்வும் அவனது ரசூலும் சொல்லியவைதானா என்று பார்க்காமல், இதற்கும் நன்மையுண்டு என்று தாங்களே தீர்மானித்துக் கொண்டு, அவற்றை குறிப்பிட்ட சில தினத்தில் நம் சமுதாய மக்கள் செய்து வருகின்றனர்.

அன்று காலையிலேயே நம் பெண்கள் வீடு வாசல் கழுவி, கறி வாங்கி சமைத்து வைத்து, ரொட்டி சுட்டு ரெடி பண்ணி, மஃக்ரிப் ஆனவுடன் (காலம் முழுக்க ஃபர்ளான தொழுகையில் அலட்சியம் செய்தவர்கள் கூட‌) ஃபாத்திஹா ஓதும் இடத்தில் பயபக்தியோடு அமர்ந்து, ஃபாத்திஹாவை ஆரம்பித்து, யாஸீன் மூன்று முறை ஓதி முடித்து, துஆ செய்வார்கள். பள்ளிவாசல்களிலும் வீதிகளிலும் மின் விளக்குகளின் அலங்காரமாக காட்சியளிக்கும். ஆண்களும் சிறுவர்களும் புத்தாடை அணிந்து பள்ளிக்கு சென்று, அங்கே அரங்கேறும் மார்க்கத்திற்கு முரணான இந்த வழிபாட்டில் கலந்துக்கொள்வார்கள். சிலர் அதற்கும் அந்த ஹஜ்ரத்மார்களை எதிர்ப்பார்த்து வீட்டில் காத்திருப்பார்கள். மூன்று தடவை ஓதக்கூடிய யாசீன் சூராவில், முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காகவும், இரண்டாவது யாசீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும், இருப்பவர்களின் நீண்ட ஆயுளுக்காகவும், மூன்றாவது யாசீன் பரக்கத் கிடைப்பதற்காகவும் என்று ஓதுவார்கள்.

இந்த நாளை "சீட்டுக் கிழிக்கப்படும் நாள்" என்றும் சொல்வார்கள். அதாவது, இந்த நாளில்தான் அடுத்த ஒரு வருஷத்தில் இறக்கக்கூடியவர்கள் மற்றும் பிறப்பவர்களின் லிஸ்ட்டையும், அந்த வருடத்திற்கான ரிஸ்க்கையும் அல்லாஹ் தீர்மானிப்பானாம்! இந்த இரவுக்கு முந்திய நாளில் யாரும் மரணித்துவிட்டால், இவர்கள் சென்ற வருஷ லிஸ்ட்டின் கடைசி நபர் என்று தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். இந்த நம்பிக்கைகளை ஊட்டியது யார்? இதற்கு வழிகாட்டியது யார்? மேலும் வல்ல அல்லாஹ் வணக்கங்களை இலகுவானதாகவும் வழமையாக செயல்படுத்தும் விதத்திலும் மக்களுக்கு ஆக்கியிருக்கும்போது, இந்த இரவிலோ இதற்காக 100 ரக்அத்கள் கொண்ட விசேஷத் தொழுகைகளையும் தொழுதுக்கொள்வார்கள்.

ஒரு தினத்தை சிறப்பான தினம் அல்லது சிறப்பான இரவு என்று நாம் கூறவேண்டுமானால், அதை நம்மைப் படைத்த இறைவன் நமக்கருளிய வேதத்தில் கூறியிருக்கவேண்டும். அல்லது அவனது திருத்தூதர் நபி(ஸல்) அவர்கள் அதற்கு வழிகாட்டியிருக்க வேண்டும். ஆனால், குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ இவற்றுக்கு ஆதாரமிருக்கிறதா என்று மார்க்கம் கற்றவர்கள்கூட யோசிக்க‌வில்லை. அதற்காக முயற்சிகளையும்கூட‌ எடுப்பதில்லை. ஏழு வருடங்கள் படித்த ஆலிம்களின் நிலைமையே இப்படியென்றால், மார்க்கத்தை படிக்காத மக்கள் எப்படிதான் உண்மையை உணர்வார்கள்? "பராஅத்" இரவு என்றால், பாவம் நீக்கப்படும் இரவு, அதனால் இரவு முழுதும் இறைவனை வணங்கி, பகல் முழுதும் நோன்பு வைக்கவேண்டும் என்று மக்களுக்கு அந்த ஆலிம்கள் சொல்லி வைத்துள்ளார்கள். ஆனால், இந்த நாளுக்கு இப்படியொரு பெயரை அல்லாஹ்வோ, அவனது தூதர்(ஸல்) அவர்களோ சூட்டியதற்கு ஆதாரம் எதுவுமே இல்லை. மாறாக, சுன்னத் என்ற பெயரில் நம் முன்னோர்களில் யாரோ சிலர் பிற்காலத்தில் இதனை உருவாக்கி வைத்த ஒரு பித்அத்தாகும்.

சகோதர, சகோதரிகளே! சற்று சிந்தித்து பாருங்கள்! 
லைலத்துல் கத்ர் இரவை மகத்தான இரவாக அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் கூறியிருக்கிறார்கள். அதுபோல், ஜும்ஆ தினத்தை சிறந்த தினமாக அறிவித்துக் கொடுத்த இறைவன், ஹஜ்ஜுடைய தினங்களை கண்ணியமானது என்று அறிவித்த‌ இறைவன், குர்ஆன் அருளப்பட்ட ரமலான் மாதத்தின் சிறப்பை விவரித்த இறைவன், போர் செய்யக்கூடாத மாதங்களை புனிதமாதங்கள் என்று வரையறுத்துச் சொன்ன இறைவன், இந்த பராஅத் இரவைப்பற்றி எங்காவது சொல்லியிருக்கிறானா?
இரு பெருநாட்களுடைய தினங்களை புனித நாட்களாக அறிவித்த நபி(ஸல்), ஆஷூரா தினத்தின் சிறப்பை பற்றிக்கூறியுள்ள நபி(ஸல்), ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பு பற்றி சிலாகித்துச் சொன்ன நபி(ஸல்), பராஅத் இரவு என்ற ஒரு இரவைப்பற்றி எங்குமே ஏன் சொன்னதில்லை? சிந்தித்து பார்க்கவேண்டாமா, என் இஸ்லாமிய‌ சொந்தங்களே?

நன்மை என்ற பெயரில் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட, அல்லாஹ்வும் ரசூலும் காட்டித்தராத‌ நாம் செய்யும் எந்த அமலாக இருந்தாலும், அவை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்றால், நிச்சமயமாக இல்லை. மாறாக அப்படிப்பட்ட அமல்களுக்கு நரகமே கூலி என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்:

"செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகளாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்."

(அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: நஸயீ 1560)

"எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது" என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

(அறிவிப்பவர்: அலி (ரலி) நூல்: அபூதாவூது, நஸாயீ)

"எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)

குர்ஆனில் சொல்லப்படாத‌, நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத எந்த அமல்களும் இறைவனால் தள்ளுபடி செய்யப்படும் என்பதை மேலேயுள்ள ஹதீஸ்கள் தெளிவாக அறிவிக்கின்றன‌. 'இதில் என்ன தப்பு இருக்கிறது, நல்ல அமல்கள்தானே செய்கிறோம்' என்று சிலர் கூறுகிறார்கள். எதை, எப்படி, எந்த நேரத்தில், எந்த இடத்தில், எந்த முறையில் செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்திக் கூறுவதற்காக‌தான் அல்லாஹ்தஆலா நபி(ஸல்)அவர்களை அனுப்பி வைத்தானே தவிர, அமல் என்றாலே அது எதுவாக இருந்தாலும், எப்படியிருந்தாலும், எந்த நேரத்தில் செய்தாலும் நன்மைதான் என்று நாமாக தீர்மானிப்பதற்கு எந்த அதிகாரத்தையும் இறைவன் நமக்கு வழங்கவில்லை.

ஆனால், பராஅத் இரவு என்பது மார்க்கத்தில் இல்லாத‌ ஒரு புதுமை என்று இவ்வளவு தெளிவாக தெரிந்த பின்னும், பராஅத் இரவுக்கு ஆதாரங்கள் இருப்பதாக, சுன்னத் ஜமாஅத்தின் ஆலிம்கள் கூறிவருகிறார்கள். அவர்கள் எடுத்து வைக்கும் அனைத்து ஆதாரங்களும் இஸ்லாம் கூறும் அளவுகோல்களின்படி சரியான ஆதாரங்களாக இல்லை என்பதை சற்று நிதானமாக படித்து சிந்தித்துக்கொள்ளுங்கள். அவர்கள் காட்டும் ஆதாரங்கள் எப்படி உருப்படியில்லாதவை என்பதை அடுத்த பதிவில் தொடர்கிறேன், இன்ஷா அல்லாஹ்!

21 comments:

  1. சகோதரி உங்கள் தளத்திற்கு முதன் முதலாக வருகை தருகிறேன். ரொம்ப அருமையாக விளக்கம் கொடுத்துள்ளிர்கள்.
    உண்மை தெரிந்து அதை தவிர்ப்பது சிறந்தது. அனாச்சாரங்கள் இஸ்லாத்தில் இல்லாத அனுமதிக்க படாத அனைத்தும்
    கோடி கட்டி பரகின்றது.எடுத்து சொன்னால் நம்மையே திட்டுவது.
    அருமையாக தெளிவாக இதைவிட இவர்களுக்கு என்ன வேண்டும். உங்கள் அழைப்பு பனி தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வாங்க இளம் தூயவன்! //அனாச்சாரங்கள் இஸ்லாத்தில் இல்லாத அனுமதிக்க படாத அனைத்தும் கொடி கட்டி பரகின்றது.எடுத்து சொன்னால் நம்மையே திட்டுவது.// உண்மைதான். மார்க்கத்தை பொறுத்தவரை திட்டுக்கு பயப்படுவதில்லை, தயவு தாட்சணையும் பார்ப்பதில்லை. சொல்லக்கூடிய முறையில் சொல்லிட்டே இருக்கவேண்டியதுதான். உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!

    உங்க ப்ரொஃபைலில் நாகூர், நாகப்பட்டிணம் என்று பார்த்தேன். நம்ம வட்டாரம்தானா...?

    ReplyDelete
  3. சகோதரி என் ஊர் நாகூர் என் உறவினரும் ,பிரான்ஸ் நாட்டில் உள்ளார்கள்.தற்பொழுது நான் தமாம் நகரில் பணியாற்றி வருகிறேன்.

    ReplyDelete
  4. அப்படியா...? அல்ஹம்துலில்லாஹ்!

    ReplyDelete
  5. தொடருங்கள் அஸ்மா!ஆர்வத்துடன் அடுத்த பகுதிக்காக காத்திருக்கின்றேன்.

    ReplyDelete
  6. ஸாதிகா அக்கா வாங்க‌, உங்கள் வருகைக்கும் ஆர்வத்திற்கும் நன்றி!

    இதோ, இன்று அதன் தொடர்ச்சி வரும் இன்ஷா அல்லாஹ்!

    ReplyDelete
  7. அச்ஸலாமு அலைக்கும்.
    முதலில் வெகு சிறப்பாக அமையப்பெற்ற தங்களின் பிளாகிற்கு நன்றி. சிறந்த முயற்சி.மனம் திறந்த பாராட்டுக்கள். தங்களிடமிருந்து இத்தகையதோர் பணியை வெகு நாட்களாக எதிர்பார்த்தேன். எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. தொடருட்டும் தங்களின் பணி. வளமுடன் வாழ வாழ்த்துகிறேன். இனி எனது கருத்துக்களும், விமர்சனங்களும் தொடரும்...இன்ஷா அல்லாஹ்.
    குலசை சுல்தான்.
    குறிப்பு: comments போன்ற ஆணைகள் frenchல் உள்ளன. புரியவில்லை. கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.ஆங்கிலத்தில் இருந்தால் நல்லது.

    ReplyDelete
  8. பராஅத் இரவில் அல்லாஹ்வை வணங்கி,அவனுக்கு நோன்பு வைப்பதை நீங்கள் தடுப்பதனால் என்ன இன்னும் ஒரு இரவு தமிழ் சினிமா, கூத்து, கும்மாளம் என பல பேருக்கு பொழுது கழியப் போகிறது.

    நீங்கள் விரலை ஆட்டுவதா, நீட்டுவதா என சண்டை செய்து கொண்டிருங்கள். இஸ்லாத்தின் எதிரிகள் உங்கள் கரங்களையே வெட்ட காத்திருக்கின்றார்கள் என மக்கா மஸ்ஜித் இமாம் சம்சுதீன் காசிமி கூறியது தான் ஞாபகத்திற்கு வருகின்றது.

    தனக்கு ஒரு வலைப்பக்கம் கிடைத்து விட்டது என்பதனால் இஸ்லாத்தை பற்றியும்,நமது நபியவர்களயும் தாறுமாறாக எழுதி வருகின்றார்கள். இந்த நிலையில் இஸ்லாத்தின் உண்மையை உங்கள் எழுத்தின் மூலம் வெளிப்படுத்துங்கள். நமக்குள் இருக்கும் சச்சரவை பிறகு பார்த்து கொள்ளலாம்.

    ReplyDelete
  9. வ அலைக்குமுஸ்ஸலாம், சுல்தான் நானா! தங்களின் வருகைக்கு நன்றி! அப்படியா... நீங்கள் எதிர்ப்பார்த்தீர்களா? இது எனது நீண்ட நாள் கனவாக இருந்து, இப்போது அல்லாஹ் அதை நிறைவேற்றியுள்ளான். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! மீண்டும் மீண்டும் நீங்கள் வாழ்த்தியிருப்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது! உங்களைப் போன்ற பெரியவர்களின் வாழ்த்துக்கள் நிச்சயம் வேண்டுமல்லவா? அடிக்கடி வாருங்கள். கற்றதை பிறருக்கு எடுத்து சொல்ல வாய்ப்பாக இருப்பதற்கு, இதன் மூலம் வல்ல ரஹ்மான் துணைபுரிய மேலும் துஆ செய்யுங்கள்! நீங்கள் சொன்ன French எழுத்துக்களை மாற்ற முயற்சி செய்கிறேன், இன்ஷா அல்லாஹ்! சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
  10. அனானிமஸ், தயவுசெய்து உங்கள் பெயருடன் பதிவுசெய்யுங்கள்.

    //பராஅத் இரவில் அல்லாஹ்வை வணங்கி,அவனுக்கு நோன்பு வைப்பதை நீங்கள் தடுப்பதனால் என்ன இன்னும் ஒரு இரவு தமிழ் சினிமா, கூத்து, கும்மாளம் என பல பேருக்கு பொழுது கழியப் போகிறது.//

    நாம் சுயமாக‌ தடுக்கவில்லை. அல்லாஹ்வும் ரசூலும் காட்டித்த‌ராதவை கண்டிப்பாக தடுக்கப்பட்ட பித்அத்கள் அல்லவா? இதன் தொடர்ச்சியான அடுத்த பதிவைப் பாருங்கள், இன்ஷா அல்லாஹ் புரியும்! இஸ்லாத்தின் உண்மையை இதன் மூலம் வெளிப்படுத்த, நிச்சயம் இறைவன் துணைசெய்வான், இன்ஷா அல்லாஹ். அது நமக்குள் இருக்கும் பிரச்சனையாக இருந்தாலும் சரியே!

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும்
    நல்ல முயற்சி.. அருமையான பதிவுகள்.. இன்னும் முழுமையாக மற்ற பதிவுகளை படிக்கவில்லை... தொடர்ந்து எழுதுங்கள்..... வாழ்த்துக்கள் அஸ்மா

    ReplyDelete
  12. வ அலைக்குமுஸ்ஸலாம்! வாங்க சிநேகிதி ஃபாயிஜா, நலமா? உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்ந்து வாருங்கள். கதீஜாவுக்கு சலாம் சொல்லுங்கள்.

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும்

    ''இந்த நாளை "சீட்டுக் கிழிக்கப்படும் நாள்" என்றும் சொல்வார்கள்''...........
    புதிய செய்திகள்

    ReplyDelete
  14. @ bat...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    //''இந்த நாளை "சீட்டுக் கிழிக்கப்படும் நாள்" என்றும் சொல்வார்கள்''...........
    புதிய செய்திகள்//

    "சீட்டுக் கிழிக்கப்படும்" என்ற‌ இதுபோன்ற நம்பிக்கை சில இடங்களில் இல்லாததால் உங்களுக்கு புதிய செய்தியாக‌ இருக்கலாம் சகோ. இந்த நாளில் சீட்டு கிழிந்து (மௌத்தாகி) விடாமல் (?) இருப்பதற்காக எங்க பகுதிகளில் எல்லாம் மிகவும் அச்சத்தோடு வணக்கங்கள் செய்வார்கள்.

    வணக்க வழிபாடுகளில் பயபக்தியும் அச்சமும் இருக்க வேண்டிய ஒன்றுதான். அதற்காக இஸ்லாம் சொல்லித் தராத, மனிதர்கள் தாமாக உருவாக்கிக் கொண்ட ஒன்றை மையப்படுத்தி செய்யும் வணக்கங்களும், தேவையில்லாத வழிபாடுகளுமே அவசியம் தவிர்க்கப்பட வேண்டியதாகிவிடுகிறது. இறைவன் அனைவருக்கும் நேர்வழியைக் கொடுக்கட்டும்! தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அலைக்கும்

    நல்ல முயற்சி அருமையான பதிவுகள் இன்னும் முழுமையாக மற்ற பதிவுகளை படிக்கவில்லை தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் அஸ்மா சகோ ,,!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்குமுஸ்ஸலாம் சகோ.

      //நல்ல முயற்சி அருமையான பதிவுகள் இன்னும் முழுமையாக மற்ற பதிவுகளை படிக்கவில்லை தொடர்ந்து எழுதுங்கள்//

      என்ன புது வருகை மாதிரி இருக்கு? :) இன்ஷா அல்லாஹ் மற்ற பதிவுகளையும் முழுமையாக படித்துவிடுங்கள். ஜஸாகல்லாஹ் ஹைரா.

      Delete
  16. அஸ்ஸலாமு அலைக்கும்

    நல்ல முயற்சி அருமையான பதிவுகள் இன்னும் முழுமையாக மற்ற பதிவுகளை படிக்கவில்லை தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் அஸ்மா சகோ ..!

    ReplyDelete
  17. மாஷா அல்லாஹ் தற்போதுதான் உங்கள் தளத்திற்கு வருகிறேன் சகோ, சிறந்த பதிவுகள்,அதிகம் இருக்கிறது, தொடருங்கள் அல்லாஹ்வின் உதவியோடு,இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
    Replies
    1. //மாஷா அல்லாஹ் தற்போதுதான் உங்கள் தளத்திற்கு வருகிறேன் சகோ,//

      வாங்க உம்மு ஸமீஹா :) உங்களின் புது வரவுக்கு நன்றி :)

      //சிறந்த பதிவுகள்,அதிகம் இருக்கிறது தொடருங்கள் அல்லாஹ்வின் உதவியோடு,இன்ஷா அல்லாஹ்//

      பதிவுகள் அதிகம் இல்லையென்றுதான் எனக்கு தோன்றுகிறது :( சொல்லவேண்டியவை இதைவிட அதிகமாக‌ பெண்டிங்ல இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் விரைவில் எழுத துஆ செய்யுங்கள்.

      ஜஸாகல்லாஹ் ஹைரா.

      Delete
  18. மாஷா அல்லாஹ் அருமை சகோ தொடருங்கள் அல்லாஹ்வின் உதவியுடன் இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
    Replies
    1. இன்ஷா அல்லாஹ், அல்லாஹ்வின் உதவியுடன்..! :)

      Delete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை