ரமலான் மாத்தில் தொழப்படும் இரவுத் தொழுகை மக்களின் வழக்கத்தில் "தராவீஹ்" என்றழைக்கப்படுகிறது. இரவில் தொழப்படும் இந்த தொழுகைக்கு,
•"ஸலாத்துல் லைல்" (இரவுத் தொழுகை),
•"கியாமுல் லைல்"(இரவில் நின்று வணங்குதல்),
•"வித்ரு" (ஒற்றைப்படைத் தொழுகை),
•"தஹஜ்ஜுத்(விழித்து தொழும் தொழுகை) போன்ற பெயர்கள்தான் ஹதீஸ்களில் காணப்படுகின்றன. "வித்ரு' என்பதும் இரவுத் தொழுகைக்குரிய பெயர்களில் ஒன்றுதான். ஆனால்,"தராவீஹ் தொழுகை" என்ற பெயர், பிற்காலத்தில் ரமலானுடைய மாதத்தில் இரவின் முற்பகுதியில் மக்கள் தாங்களாகவே அதிகப்படுத்தித் தொழும் 20 ரக்அத் தொழுகைக்கு மக்கள் சூட்டிக்கொண்ட பெயராகும். ஆனால், "தராவீஹ்" என்ற இந்த பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை.
இரவுத்தொழுகையின் சிறப்புகள்:
இந்த இரவுத்தொழுகையானது, நமக்கு விதிக்கப்பட்ட கடமையான தொழுகைகளுக்கு பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், அதிக நன்மையை பெற்றுத்தரக்கூடியதாகவும் விளங்குகிறது.
ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி); நூல்:முஸ்லிம்
ஒரு முறை நபி(ஸல்)அவர்கள் நடுநிசியின் போது புறப்பட்டு பள்ளியில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர் அவர்களைப் பின்பற்றி தொழுதார்கள். காலையில் மக்கள் (இதுபற்றி) பேச ஆரம்பித்துவிடவே (மறுநாள்) அவர்களைவிட அதிகமானோர் கூடிவிட்டார்கள். அப்போது நபி(ஸல்)அவர்கள் தொழ, அவர்களைப் பின்பற்றி (மக்களும்) தொழுதார்கள். காலையில்(முன்போல்) மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். மூன்றாம் நாள் இரவு பள்ளிக்கு வந்தவர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அன்றும் நபி(ஸல்)அவர்கள் புறப்பட்டு வந்து, அவர்களின் தொழுகையைப் பின்பற்றி தொழப்பட்டது.
நான்காம் நாள் இரவு வந்த மக்களால் பள்ளி கொள்ளாத நிலை ஏற்பட்டுவிட்டது. அன்று நபி(ஸல்)அவர்கள் சுப்ஹு தொழுகைக்குத்தான் வந்தார்கள். (இரவுத்தொழுகைக்கு வரவில்லை.) சுப்ஹு தொழுகை தொழவைத்து முடித்தவுடன் (எப்போதும் சொற்பொழிவுக்குமுன் ஓதக்கூடிய) "தஷஹ்ஹுது, அம்மா பஃது" ஆகியவற்றை ஓதிவிட்டு மக்களை நோக்கி, உங்கள் நிலை எனக்கு மறையவில்லை, எனினும் நான் உங்கள் மீது இவ்விரவுத் தொழுகை கடமையாக்கப்பட்டு அவற்றை நீங்கள் தொழ இயலாது போய்விடுவீர்களோ என்று பயந்தே (நான் இரவு வெளியில் வராமல்) இருந்துவிட்டேன் என்று கூறினார்கள். இவ்வாறு ரமழானில் நிகழ்ந்தது.
அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி); நூல்: புகாரி
நபி(ஸல்)அவர்கள் இரவுத்தொழுகை விஷயமாக (மக்களுக்கு) வலியுறுத்திக் கட்டளையிடாமல், "ரமலானில் ஈமானோடும், நன்மைகிட்டும் என்ற நல்லாதரவோடும் நின்று வணக்கம் புரிவோரின் முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்" என்று கூறி ஆர்வமூட்டிக்கொண்டிருந்தார்கள். இந்நிலையில் நபி(ஸல்)அவர்கள் மரணித்துவிட்டார்கள். பின்னர் அபூபக்ர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்திலும், உமர்(ரலி)அவர்களின் ஆட்சியின் ஆரம்ப கட்டத்திலும் நிலைமை இவ்வாறே நீடித்திருந்து வந்தது என்று இதன் அறிவிப்பாளரில் ஒருவரான இமாம் ஜுஹ்ரி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
அறிவிப்பாளார்: அபூஹுரைரா(ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்
மேற்காணும் அறிவிப்புகளின் மூலம் ரமலான் இரவுத்தொழுகையின் மகத்தான பலன்களை நாம் அறியலாம்.
இரவுத் தொழுகையின் நேரம்:
இஷா தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம். நபி (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் இரவின் அனைத்து நேரத்திலும் வித்ரு தொழுதுள்ளார்கள். அவர்களின் வித்ரு (சில நேரங்களில்) ஸஹர் வரை நீடித்துள்ளது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி
இரண்டிரண்டு ரக்அத்களாக தொழ வேண்டும்:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி
ஆக, இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாக தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கைக் கொண்ட வித்ரு தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.
வித்ரு தொழுகை ஸலாம் கொடுத்தபிறகு ஓதும் துஆ:
سُبْحاَنَ مَلِكِ الْقُدُّوْسُ
"ஸுப்ஹான மலிக்கில் குத்தூஸ்" என்று மூன்று முறை கூற வேண்டும். (நஸயீ)
பொருள்: பரிசுத்தமான ரப்பு தூய்மையானவன்
இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதல்:
இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது மிகச் சிறந்ததாகும். ஜமாஅத்தாகத் தொழுதல் என்பது பள்ளிவாசல்தான் என்பது அவசியமில்லை. வீட்டிலும் ஜமாஅத்தாகத் தொழுதுக் கொள்ளலாம். நபியவர்கள் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதற்கு மிகப் பெரும் சிறப்பைக் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் இரவுத் தொழுகையை இமாம் முடிக்கின்றவரை அவரோடு நின்று தொழுகின்றாரோ அவருக்கு இரவு முழுவதும் நின்று தொழுத நன்மை எழுதப்படுகின்றது.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி); நூல் : திர்மிதி
வீட்டில் தொழுவதே சிறந்தது:
நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் பாயினால் ஒரு அறையை அமைத்துக் கொண்டார்கள். சில இரவுகள் அதனுள் தொழுதார்கள். அவர்களது தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இதைப் பற்றி அறிந்து நபி (ஸல்) அவர்கள் (அந்த அறைக்கு வராமல்) உட்கார்ந்து விட்டார்கள். பின்பு மக்களை நோக்கி வந்து ''உங்களது செயல்களை நான் கண்டேன். மக்களே உங்களது இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள். கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி); நூல்: புகாரி
இரவுத் தொழுகை தவறி விட்டால்...
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு நோய் முதலியவற்றால் இரவுத் தொழுகை தவறி விட்டால் (அதற்கு ஈடாகப்) பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். நூல்: முஸ்லிம்
இரவுத் தொழுகையை பேணித் தொழல்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர லி); நூல் : புகாரி
தராவீஹ் தொழுகையும் இரவுத் தொழுகையும் வெவ்வேறானதா?
நபி (ஸல்) முன்னேரத்தில் ஒரு தொழுகையும் பின்னேரத்தில் ஒரு தொழுகையும் தொழுதுள்ளனர்; எனவே தராவீஹ் என்பது வேறு, தஹஜ்ஜுத் என்பது வேறு என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது தவறான கருத்து என்பதைப் பின்வரக்கூடிய ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். நபி (ஸல்) அவர்கள் ஒரே தொழுகையைத் தான் பல நிலைகளில் தொழ வைத்திருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அல்அத்தமா என மக்கள் அழைக்கும் இஷா தொழுகையை முடித்ததிலிருந்து ஃபஜ்ர் வரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். நூல்: முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையிலிருந்து பஜ்ர் வரையிலும் தொழுத மொத்த ரக்அத்களின் எண்ணிக்கை 11 ஆகும் என்று அன்னை ஆயிஷா (ரலி) குறிப்பிடுகிறார்கள். இந்தத் தொழுகை தஹஜ்ஜுத் தொழுகை என்றால் தராவீஹ் தொழுகை எங்கே? ஆக இந்தச் செய்தி, நபி(ஸல்) அவர்கள் இரவில் தொழுதது பல பெயர்களில் உள்ள ஒரே தொழுகையைத் தான் என்பது தெளிவுபடுத்துகிறது.
இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்துகள்?
அபூலைமத் இப்னு அப்திர்ரஹ்மான்(ரலி) அவர்கள் ஒருமுறை ஆயிஷா(ரலி) அவர்களிடம் ரமழானில் நபி(ஸல்) அவர்களின் இரவுத்தொழுகை எவ்வாறிருந்தது? என்று கேட்டதற்கு "ரமலானிலும் அது அல்லாத மற்ற காலங்களிலும் 11 ரக்அத்துகளைவிட அதிகமாக அறவே தொழுததில்லை" என்று கூறிவிட்டு (முதலில்) 4 ரக்அத்துகள் தொழுதார்கள்; அவற்றின் அழகையும், நீளத்தையும் கேட்காதீர். (என்னால் அதனழகை எடுத்தியம்ப இயலாது) பிறகு 4 ரக்அத்துகள் தொழுதார்கள். அவற்றின் அழகையும், நீளத்தையும் கேட்காதீர். பிறகு 3 ரக்அத்துகள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: அபூலைமத் இப்னு அப்திர்ரஹ்மான்(ரலி); புகாரி
ஆயிஷா(ரலி)அவர்களிடம் நபி(ஸல்)அவர்களின் இரவுத்தொழுகை ரமலானில் எவ்வாறிருந்தது என்று கேட்கப்பட்டபோது "ரமலானிலும் அது அல்லாத காலங்களிலும் 11 ரக்அத்துகளுக்கு மேல் அதிகமாக அவர்கள் தொழுததில்லை" என்று அவர்கள் பதில் அளித்திருப்பதன் மூலம், ரமலானுக்கென்று அவர்கள் விசேஷமாக எதுவும் தொழாமல், தினசரி வழக்கமாகவும் 8+3=11 ரக்அத்துகள் மட்டுமே அவர்கள் தொழுதுள்ளார்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள். அதேசமயம், நபி(ஸல்)அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு முறைகளில் தொழுது நமக்கு வழிகாட்டியுள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.
இரண்டிரண்டு ரக்அத்களாக 12 ரக்அத்கள் +1 ரக்அத் :
நபி (ஸல்) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ரு தொழுவார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரு ரக்அத்கள் தொழுதுவிட்டு சுப்ஹுத் தொழுகைக்காக (வீட்டை விட்டு) வெளியே சென்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள் : புகாரி, முஸ்லிம்
13 ரக்அத்கள்:
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி); நூல்கள் : புகாரி, முஸ்லிம்
8+5 ரக்அத்கள்:
நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி); நூல்கள் : முஸ்லிம், திர்மிதீ
மேற்கண்ட (ஹதீஸ்களில்) இந்த 13 ரக்அத்களில், இரவுத் தொழுகை என்பது 8 ரக்அத்கள்தான். வித்ருத் தொழுகையைதான் நபி(ஸல்) 1, 3, 5 என்ற விதங்களில் சேர்த்து தொழுதுள்ளார்கள். இன்னும் சிலவேளை ஃபஜ்ருடைய முந்திய சுன்னத் 2 ரக்அத்கள் சேர்த்தும் தொழுதுள்ளார்கள்.
10+1 ரக்அத்கள்:
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி); நூல்கள் : முஸ்லிம்,திர்மிதீ
11 ரக்அத்கள் அல்லது 9 ரக்அத்கள் அல்லது 7 ரக்அத்கள்:
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி)அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் 'நபி (ஸல்)அவர்கள், ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : மஸ்ரூக்; நூல்: புகாரி
வித்ரு 5 ரக்அத்கள் அல்லது 3 ரக்அத்கள் அல்லது 1 ரக்அத்:
வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ரு தொழட்டும். யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ரு தொழட்டும், யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஅய்யூப்(ரலி); நூல்கள்: நஸயீ, அபூதாவூத்
மேற்கூறப்பட்ட முறைகளில் ஏதேனும் ஒரு முறையில் நாம் இரவுத் தொழுகையை நிறைவேற்ற நமக்கு நபி(ஸல்)அவர்களின் வழிகாட்டுதலும் அனுமதியும் உள்ளது.(அதிகபட்சமாக 11 ரக்அத்கள் தொழுதுக்கொள்வது நமக்கு அதிக நன்மைகள் கொண்டதாக அமையும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.)
"என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள்" என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: மாலிக் இப்னுல் ஹுவைரிஸ்(ரலி); நூற்கள்:புகாரி, முஸ்லிம்
ஆக, இரவுத்தொழுகை அதிகபட்சமாக 11 ரக்அத்கள் தொழுவதுதான் நபி(ஸல்)அவர்களின் வழிமுறையாகும். 20 ரக்அத்கள் என்பது நபி(ஸல்)அவர்கள் காட்டித் தராத நடைமுறையாகும். ஆனால், நீண்ட காலமாக முஸ்லிம்கள் ரமலான் இரவுகளில் தராவீஹ் என்ற பெயரால் 20 ரக்அத்துகள் தொழுது வருகிறார்கள். பரம்பரை பரம்பரையாக 20 ரக்அத்துகள் தொழுது வருவதால் அதை நியாயப்படுத்தவே மனித மனம் விரும்புகின்றது. ஆனால் மனித விருப்பம் மார்க்கம் ஆக முடியாது. அல்லாஹ்தஆலா நபி(ஸல்) அவர்களைக் கொண்டு மார்க்கமாகக் காட்டித் தந்தது மட்டும்தான் நமக்கு மார்க்கமாக முடியும்.
தராவீஹ் என்று அழைக்கப்படும் இரவுத் தொழுகை 20 ரக்அத்கள் அல்ல:
நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் ஜமாஅத்துடன் அல்லாமல் இருபது ரக்அத்களும் வித்ரும் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ர லி); நூல்: பைஹகீ
இந்தச் செய்தி மட்டும் தான் தராவீஹ் 20 ரக்அத்கள் என்பதற்கு நபி (ஸல்) அவர்களுடன் தொடர்புப்படுத்தி வரும் ஹதீஸாகும். ஆனால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல என்பதற்கு,'இந்தச் செய்தியில் இடம் பெறும் அபூஷைபா என்பவர் பலவீனமானவர்' என்று அந்த ஹதீஸின் அடிக்குறிப்பில் இதைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.
அடுத்தாக அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரம் உமர் (ரலி) அவர்கள் தொடர்புடையதாகும்.
உமர் (ரலி) அவர்கள் காலத்தில் மக்கள் 20 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர் என்று யஸீத் பின் ரூமான் என்பவர் கூறுகிறார். நூல்: முஅத்தா
இந்தச் செய்தியைப் பற்றி விமர்சனம் செய்யும் இமாம் பைஹகீ அவர்கள் யஸீத் பின் ரூமான் என்பவர் உமர் (ரலி) அவர்கள் காலத்தை அடையவில்லை. அதாவது உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறக்கவில்லை என்று தனது அல்மரிஃபா என்ற நூ ல் குறிப்பிடுவதாக ஹனஃபி மத்ஹபைச் சார்ந்த ஸைலயீ அவர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள். (நூல்: நஸபுர் ராயா, பாகம்: 2, பக்கம்: 154)
உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறக்காத ஒருவர் அவர்கள் காலத்தில் நடந்த செய்தியை எவ்வாறு கூற முடியும்? எனவே இந்தச் செய்தியும் பலவீனமானதாகிறது. மேலும் இதற்கு மாற்றமாக உமர் (ரலி) அவர்கள் 8+3 ரக்அத்கள் தொழுமாறு கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான செய்தி இமாம் மாலிக் அவர்களின் அல்முஅத்தா என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உபை பின் கஅப் (ரலி), தமீமுத்தாரீ (ர லி) ஆகிய இருவரையும் (8+3) 11 ரக்அத்கள் மக்களுக்குத் தொழுவிக்குமாறு உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத்(ர லி); நூல்: முஅத்தா
ஆக, மக்களால் தராவீஹ் என்று அழைக்கப்படும் இரவுத் தொழுகை, 20 ரக்அத்கள் என்பதற்கு கூறப்படும் எந்த செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல. அதுபோல், ஒவ்வொரு ஸலாமுக்கு பிறகும் ஸலவாத்தோ மற்ற திக்ருகளோ ஓதக்கூடிய பழக்கமும் நபி(ஸல்)அவர்கள் காட்டித் தராதவையாகும்.
மார்க்கத்தில் அதிகப்படுத்தலாமா?
அடுத்து, நபி(ஸல்)அவர்கள் தொழுதது 11 ரக்அத்துகள் என்பது சரிதான். ஆனாலும், ரமலான் மாதத்தில் இரவு காலங்களில் அதிக ரக்அத்துகள் தொழுவது நல்லதுதானே, அதிலே என்ன கெடுதி இருக்கிறது? நன்மைதானே என்று சொல்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்களால் "பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் அனைத்தும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்" என்று தெளிவாக இனம் காட்டப்பட்டவை, நாம் நினைப்பது போல் கடிகாரம் கட்டுவதோ, கான்கிரீட் கட்டிடத்தில் வசிப்பதோ, பிளேனில் பறப்பதோ அல்ல. மார்க்கத்தில் நன்மை கிடைக்கும் என்ற நோக்கத்தோடு நபி(ஸல்)அவர்களால் காட்டித் தரப்படாத அமல்களைச் செய்வதும், அதிகப்படுத்துவதும் கேடுதான் என்பதை இந்த முஸ்லிம் சமுதாயம் நன்கு உணர்ந்து கொள்ளவேண்டும். இதற்கு ஹதீஸ்களில் நிறைய ஆதாரங்கள் உள்ளன. உதாரணத்திற்கு கீழேயுள்ள இந்த ஹதீஸைப் பார்த்து, மார்க்கத்தில் அதிகப்படுத்தலாமா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு காட்டரபி நபி(ஸல்) அவர்களிடம் வந்து உளுவின் விவரத்தைக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் மும்மூன்று முறைகளாக உளூச் செய்து காட்டி," இவ்விதமாகத்தான் உளூச் செய்ய வேண்டும்"என்று கூறி, பின்னர் "எவர் இதைவிட அதிகமாகச் செய்கிறரோ அவர் நிச்சயமாகத் தீமையைச் செய்தவராகவும், அளவு மீறியவராகவும், அநியாயம் செய்பவராகவும் ஆவார்"என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரழி); நூல்:அபூதாவூது, நஸயீ
நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தை நிறைவாகக் கற்றுத்தந்து விட்டார்கள், எதனையும் மறைக்கவில்லை, மறக்கவில்லை, சொன்னதையே செய்து காட்டினார்கள், குர்ஆனின் வாழ்க்கையை முழுமையாக பிரதிபலித்தார்கள் என்று பூரணமாக நம்புகிறவர்கள், நபி(ஸல்) அவர்கள் செய்ததற்கு மேல் அதிகமாக நன்மை என்ற பெயரில் ஒருபோதும் செய்யமாட்டார்கள். தொழுகையாக இருக்கட்டும், திக்ராக இருக்கட்டும், எதுவாக இருக்கட்டும் நபி(ஸல்) அவர்கள் எதை, எப்படி, எந்த அளவு செய்து காட்டினார்களோ அதை அப்படியே அந்த அளவு மட்டுமே செய்வது கொண்டு திருப்தி அடைவார்கள். அதுவே பூரணமான மார்க்கமென்று உறுதியாக நம்புவார்கள். அல்லாஹ்தஆலா அப்படிப்பட்ட நல்லடியார்கள் கூட்டத்தில் நம்மையும் இணைத்து வைப்பானாக, ஆமீன்.
(இந்த தொகுப்புக்கு எனக்கு உதவிய ஆக்கங்களை உருவாக்கியவர்களுக்கு இறைவன் நற்கூலி வழங்குவானாக!)