அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!
Showing posts with label தொழுகை. Show all posts
Showing posts with label தொழுகை. Show all posts

Sunday, 13 July 2025

இஷா தொழுகையின் இறுதி நேரம் எது?

கேள்வி: இஷா தொழுகை எத்தனை மணி வரை தொழலாம்? இஷா தொழுகையின் வக்து எப்போது முடிவடைகிறது?

பதில்: இஷா தொழுகையின் இறுதி நேரம் பற்றி இரண்டு விதமான ஆதாரங்கள் உள்ளன. அவற்றை சற்று விரிவாகப் பார்ப்போம்,

«« மூன்றில் ஒரு பகுதி வரை »»

صحيح مسلم

عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَجُلًا سَأَلَهُ عَنْ وَقْتِ الصَّلَاةِ، فَقَالَ لَهُ: «صَلِّ مَعَنَا هَذَيْنِ - يَعْنِي الْيَوْمَيْنِ - ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ،… وَصَلَّى الْعِشَاءَ بَعْدَمَا ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ.. ثُمَّ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ؟» فَقَالَ الرَّجُلُ: أَنَا، يَا رَسُولَ اللهِ، قَالَ: 

«وَقْتُ صَلَاتِكُمْ بَيْنَ مَا رَأَيْتُمْ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து தொழுகை நேரங்கள் பற்றி வினவினார். (அவரிடம்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நம்முடன் தொழுகையில் கலந்துக் கொள்வீராக!" என்று கூறினார்கள்.

இதையடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம், (மேற்கு வானத்தின்) செம்மை மறைந்ததும் இஷாத் தொழுகைக்காகக் கட்டளையிட்டார்கள். மறுநாள் பிலால் (ரலி) அவர்களிடம், இரவின் மூன்றில் ஒரு பகுதி கடந்தப் பின் இஷாத் தொழுகைக்குக் கட்டளையிட்டார்கள்.

பின்னர், "கேள்வி கேட்டவர் எங்கே? இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நேரமே தொழுகையின் நேரமாகும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: முஸ்லிம் (1078, 1079)

       «« இரவின் பாதிவரை »»

"وَقْتُ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ"

"இஷா தொழுகையின் நேரம் இரவின் பாதிவரை உண்டு" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

நூல்: முஸ்லிம் (1074, 1075, 1076)


Friday, 4 July 2025

டயாபர் (Diaper) கட்டியிருக்கும் நபர் எப்படி தொழுவது?

கேள்வி: உடம்பு சரியில்லாமல் டயாபர் கட்டி இருக்கும் நபர் தொழுவது எப்படி?  என்பதனைப் பற்றி விளக்கம் தாருங்கள்.

பதில்: இதுபற்றி நேரடியாக எந்த ஆதாரமும் குர்ஆன், ஹதீஸ்களில் இல்லாவிட்டாலும், இதற்கு நாம் எந்த முடிவை எடுப்பது என்பதை மறைமுகமாகச் சொல்லக்கூடிய, வேறு வடிவத்திலுள்ள இதுபோன்ற ஒரு பிரச்சனைக்கு நபி(ஸல்) அவர்கள் தீர்வு சொன்ன ஆதாரம் உள்ளது.

Saturday, 27 August 2011

பெருநாள் தொழுகையின் சட்டங்கள் (பகுதி 1)

இஸ்லாமிய மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்டுள்ள‌ வருடத்தின் இரண்டு பெருநாட்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். அண்ணல் நபி(ஸல்) அவர்களும் இந்த நாட்களைப் பற்றி சிலாகித்துக் கூறியுள்ளார்கள்.

"நபி(ஸல்)அவர்கள் மதீனா நகருக்கு வருகைத் தந்தபோது மதீனாவாழ் மக்களுக்கு இரண்டு (திரு)நாட்கள் இருந்தன. அவ்விரண்டு நாட்களிலே மக்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவார்கள். அப்போது நபி(ஸல்)அவர்கள் "இவ்விரண்டு நாட்களைவிடச் சிறந்த (இரண்டு) நாட்களை உங்களுக்கு இறைவன் ஏற்படுத்தியுள்ளான். அவை குர்பானிப் பெருநாள், மற்றும் ஃபித்ரு பெருநாளாகும்" என்றார்கள். 
                   அறிவிப்பவர்: அனஸ்(ரலி; நூல்: அபூதாவூத், நஸாயீ

இந்தப் பெருநாட்களை நாம் கொண்டாடத் துவங்குவதே தொழுகையைக் கொண்டுதான்! பருவமடைந்த ஒவ்வொரு ஆண், பெண்ணும் பெருநாள் தொழுகைத் தொழுவது அவசியமானதாகும்.

பெண்களுக்கும் அவசியமான பெருநாள் தொழுகை

Tuesday, 16 November 2010

பெருநாள் தொழுகையின் சட்டங்கள் (பகுதி 3)

பெருநாள் தக்பீர் கூறுதல்

இரு பெருநாட்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும்.

பெருநாள் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டும் எனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்யவேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச்செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
          அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி); நூல்:புகாரி(971)

இந்த ஹதீஸில் பெருநாள் தினத்தில் ஆண்களும், பெண்களும் தக்பீர் சொல்வோம் என்று கூறப்பட்டுள்ளது. 'தக்பீர்' என்பது 'அல்லாஹு அக்பர்' என்று கூறுவது தான் என்பதை முன்னர் பார்த்தோம்.

ஆனால், '..... அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா.....' என்ற ஒரு நீண்ட பைத்தை ஓதும் வழக்கம் நம் மக்களிடம் உள்ளது. இவ்வாறு பெருநாட்களில் ஓத வேண்டும் என்பதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. இன்ன தக்பீர் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு வரக்கூடிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகும். ஆகவே 'அல்லாஹு அக்பர்' என்பது மட்டும்தான் பெருநாளுக்கென நாம் கூறவேண்டிய தக்பீர் ஆகும். நம்மால் எவ்வளவு முடியுமோ அந்தளவு (அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று) பெருநாளில் தக்பீர் கூறிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஒரு வழியில் சென்று மறுவழியில் திரும்புதல்

பெருநாள் வந்துவிட்டால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் (போவதற்கும், வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள். 
             அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி); நூல்: புகாரி(986)

இந்த முறையை நபி(ஸல்)அவர்கள் காட்டித் தந்தார்கள் என்பதால் நாமும் கடைப்பிடிப்பது சுன்னத்தாகும். ஆக, இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் வீட்டை விட்டுக் கிளம்பும்போதே, மாற்று வழியைத் தீர்மானித்துக் கொண்டு பெருநாள் தொழுகைக்குப் புறப்படவேண்டும்.

சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டுமா?


நோன்பு பெருநாள் தினத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உண்ணாமல்(தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ் பெருநாள் தொழுது விட்டு, தமது குர்பானிப் பிராணியை (அறுத்து அதிலிருந்து) முதலில் சாப்பிடுவார்கள்.
            அறிவிப்பவர்: புரைதா(ரலி); நூல்: தாரகுத்னீ

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் சாப்பிட்டுவிட்டுதான் செல்வார்கள் என்று வேறு பல ஹதீஸ்களிலும் நாம் காணமுடிகின்றது. ஆனால் ஹஜ் பெருநாள் அன்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுதுவிட்டுச் சாப்பிடுவார்கள் என்று வந்திருந்தாலும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுமுன் சாப்பிடுவதை அங்கீகரித்துள்ளதையும் புகாரியில் வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'யார் நமது தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பதுபோல் கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர்' என்று குறிப்பிட்டார்கள். அப்போது அபூபுர்தா இப்னு நியார்(ரலி), 'அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்துவிட்டேன். என் வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் எனது ஆடே முதன் முதலில் அறுக்கப்படுவதாக அமையவேண்டும் என்றும் விரும்பி (அறுத்து)விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாகவும் உட்கொண்டுவிட்டேன் என்றார். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) 'அவர்கள் உம்முடைய ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்' என்று கூறினார்கள். அப்போது அவர் 'அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக் குட்டி உள்ளது. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமாக ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா?' என்று கேட்டார். 'ஆம்! இனி மேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
                     அறிவிப்பவர்: பராஃ(ரலி); நூல்:புகாரி

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ஹஜ் பெருநாளில் தொழுதுவிட்டு வந்து சாப்பிட்டார்கள் என்ற அடிப்படையில் தொழுதுவிட்டு சாப்பிடலாம். சாப்பிட்டு விட்டு தொழச்சென்றால் அதுவும் தவறில்லை. காரணம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்பு குர்பானிப் பிராணியை அறுத்ததைக் கண்டிக்கிறார்கள். ஆனால் அவர் சாப்பிட்டுவிட்டு வந்ததைக் கண்டிக்கவில்லை. எனவே, அவரது அச்செயலை அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்ற அடிப்படையில் ஒருவர் சாப்பிட்டு வருவதில் தவறில்லை.

ஒற்றைப்படை எண்ணிக்கையில் சாப்பிடுதல்

நோன்புப் பெருநாள் அன்று நபி(ஸல்) அவர்கள் காலை உணவாக பேரீத்தம் பழங்களை ஒற்றைப்படையாக உண்பார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுதுவிட்டு வந்த பின்னரே குர்பானி இறைச்சியிலிருந்து உண்பார்கள்.
              அறிவிப்பவர் : அனஸ்(ரலி);  நூல்: புகாரி (953)

பெருநாளின் மற்ற‌ கொண்டாட்டங்கள்:

புத்தாடை அணிதல்

தகுந்த ஆடை இல்லாத நிலையில் இருந்தால் இரவல் ஆடை வாங்கியாவது பெருநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ளவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

கடைவீதியில் விற்பனை செய்யப்பட்ட பட்டுக் குளிராடை ஒன்றை உமர் (ரலி) எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! இதை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்; பெருநாளிலும், தூதுக் குழுவினரைச் சந்திக்கும் பொழுதும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம்' என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'இது (மறுமைப்) பேறு அற்றவர்களின் ஆடையாகும்' எனக் கூறினார்கள். நூல்: புகாரி 948, 3054

ஆண்களுக்கு பட்டாடை மார்க்கத்தில் தடுக்கப்பட்டதால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வாங்க மறுக்கின்றார்கள். ஆனால் இந்த ஹதீஸில் பெருநாளைக்குப் புது ஆடை அணியும் நடைமுறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்திருக்கின்றது என்பதை இந்த ஹதீஸில் அறிய முடிகின்றது. அதே சமயம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனாவில் வாழ்ந்த பத்தாண்டு காலத்தில் எந்தப் பெருநாளுக்கும் புத்தாடை வாங்கியதாக எந்தக் குறிப்பையும் நாம் பார்க்க முடியவில்லை.

பெருநாள் என்பதே சந்தோஷமாக இருக்கவேண்டிய நாள்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஒவ்வொரு பெருநாளிலும் புது ஆடை வாங்கி அணிந்தால்தான் பெருநாள், இல்லையேல் அது பெருநாள் இல்லை என்ற நம்பிக்கை மக்களிடத்தில் பலமாக பதிந்துவிட்டது. அதனால் பல்லாயிரக்கணக்கான ரூபாயைக் கடன் வாங்கியாவது புத்தாடை வாங்கவேண்டும் என்று மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அதனால் வாங்க வசதியற்றவர்கள் கடன்பட்டு அவஸ்தைக்கு ஆளாகாமல், தன்னிடம் இருப்பதில் நல்ல ஆடையை அணிந்து கொண்டால் போதுமானது.

பெருநாளில் பொழுது போக்கு அம்சங்கள்

திரைப்படங்கள் போன்ற‌ மார்க்கத்தில் அனுமதிக்கப்படாதவற்றை பெருநாளன்று பொழுபோக்குகளாக அமைத்துக் கொள்ளக்கூடாது. வீர சாகச விளையாட்டுகள் போன்று விளையாடுவதை பெருநாளன்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அனுமதித்திருக்கின்றார்கள்.

ஒரு பெருநாளின்போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தாமாகவோ, அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ 'நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?' எனக் கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின் புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி), 'அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்' என்று கூறினார்கள். நான் பார்த்துச் சளித்தபோது 'உனக்குப் போதுமா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். 'அப்படியானால் (உள்ளே) போ!' என்று கூறினார்கள்.
                   அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி); நூல்: புகாரி(950, 2907)

பெருநாள் தினத்தில் இது போன்ற வீர விளையாட்டுகளை ஊர்தோறும் ஏற்பாடு செய்வதன் மூலம் மக்கள் ஹராமான காரியங்களில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும்.

அபூபக்ர்(ரலி)அவர்கள், ஆயிஷா(ரலி)அவர்களிடம் வந்தார்கள். அவர் அருகே இரண்டு சிறுமியர் 'தஃப்' அடித்துக் கொண்டிருந்தனர். அவ்விருவரையும் அபூபக்ர்(ரலி) அதட்டினார்கள். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'அந்தச் சிறுமியர்களை (பாடுவ‌தற்கு) விட்டு விடுங்கள். ஏனெனில், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள் உண்டு' என்று கூறினார்கள்.
             அறிவிப்பவர்: உத்வா; நூல்: நஸாயீ (1575)

இந்த ஹதீஸில் 'தஃப்' (கொட்டு) என்று விளக்கமாக வருவதால், அந்தச் சிறுமிகள் இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு பாடவில்லை என்பதையும், அபூபக்ர்(ரலி) இந்தக் கொட்டையே இசைக் கருவிகள் போன்று கருதி கடுமையாகக் கண்டித்திருக்கின்றார்கள் என்பதும் நமக்குத் தெரிகின்றது. எனவே, மார்க்கத்தில் தடுக்கப்படாத இது போன்ற அனுமதிக்கப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களைச் செயல்படுத்துவதின் மூலம் சினிமா, பாட்டுக் கச்சேரி போன்ற ஹராமான காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம்.

நாமனைவரும் நபி(ஸல்)அவர்கள் காட்டித்தந்த‌ முறையில் பெருநாளைக் கொண்டாடி ஈருலக பயன்களையும் அடைந்துக் கொள்வோமாக!

(முற்றும்)


முதல் பகுதி மற்றும் இரண்டாவது பகுதிகளைப் பார்க்கவும்.




(இந்த தொகுப்புக்கு உதவியவர்களுக்கு இறைவன் அருள்புரிவானாக!)

பெருநாள் தொழுகையின் சட்டங்கள் (பகுதி 2)

தக்பீரின்போது கைகளை உயர்த்தவேண்டுமா?            

'தக்பீர்' என்ற சொல்லை 'தக்பீர் கட்டுதல்' என்ற அர்த்தத்தில் மக்கள் தவறாக விளங்கியிருப்பதால், ஒவ்வொரு தக்பீருக்கும் மக்கள் கைகளை அவிழ்த்துக் கட்டும் வழக்கம் இருந்து வருகின்றது. ஆனால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவ்வாறு கைகளை உயர்த்தியதாக எந்த ஹதீசும் இல்லை.

'தஹ்லீல்' என்றால் 'லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுதல்' என்பதும், 'தஸ்பீஹ்' என்றால் 'சுப்ஹானல்லாஹ் என்று சொல்லுதல்' என்பதும், 'தஹ்மீத்' என்றால் 'அல்ஹம்துல்லாஹ் என்று சொல்லுதல்' என்பதுதான் பொருள்.

இதே போல் 'தக்பீர்' என்றால் 'அல்லாஹு அக்பர் என்று சொல்லுதல்' என்றுதான் பொருளாகும். உதாரணமாக, தொழுகைக்குப் பிறகு 33 தடவை தக்பீர் சொல்ல வேண்டும் என்றால், 33 தடவை கைகளை நெஞ்சின் மீது அவிழ்த்துக் கட்டுதல் என்று விளங்கமாட்டோம். இதுபோன்றுதான் 7+5 தக்பீர்கள் சொல்வார்கள் என்பதற்கு கைகளை அவிழ்த்துக் கட்டுதல் என்று பொருள் கொள்ளக்கூடாது. 7+5 தடவை 'அல்லாஹு அக்பர்' என்று கூற வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.  எனவே முதல் தக்பீரின் போது மட்டும் கைகளை உயர்த்தி நெஞ்சில் கட்டிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு கைகளைக் கட்டிய நிலையிலேயே (கைகளை உயர்த்தவோ, அவிழ்க்கவோ செய்யாமல்) 'அல்லாஹு அக்பர்' என ஏழு தடவை கூற வேண்டும். இரண்டாம் ரக்அத்திலும் கைகளைக் கட்டிய நிலையிலேயே ஐந்து தடவை 'அல்லாஹு அக்பர்' என்று கூறவேண்டும். மேலும் கைகளை உயர்த்தவோ, அவிழ்க்கவோ நபி வழியில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

தக்பீர்களுக்கிடையில் திக்ருகள் சொல்லவேண்டுமா?

சில பகுதிகளில், பெருநாளுக்கென்று கூடுதலாக சொல்லப்படும் இந்தக் தக்பீர்களுக்கு இடையில் 'சுப்ஹானல்லாஹி வல்ஹம்துல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ்' என்ற திக்ரை சொல்லவேண்டும் என்று கூறுகின்றார்கள். அவ்வாறு ஓதவேண்டும் என எந்த ஒரு திக்ரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. எனவே இடையில் எதையும் ஓதக் கூடாது.

எந்த சூராக்களை ஓதுவது சிறந்தது?

பெருநாள் தொழுகையில் தக்பீர்கள் கூறிய பின் சூரத்துல் ஃபாத்திஹா ஓதிவிட்டு ஓதக்கூடிய துணை சூராக்கள் குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா' (அத்தியாயம்: 87), 'ஹல் அதாக ஹதீசுல் காஷியா' (அத்தியாயம்: 88) ஆகிய அத்தியாயங்களை ஓதுபவர்களாக இருந்தனர். பெருநாளும், ஜும்ஆவும் ஒரே நாளில் வந்துவிட்டால் அவ்விரண்டிலுமே மேற்கண்ட அத்தியாயங்களை ஓதுவார்கள்.
        அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி); நூல்:முஸ்லிம்(1452)

அபூ வாகித் அல்லைஸி(ரலி)யிடம், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஹஜ் பெருநாள் தொழுகையிலும், நோன்புப் பெருநாள் தொழுகையிலும் என்ன ஓதுவார்கள்? என்று உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் கேட்டபோது, அவ்விரு தொழுகைகளிலும் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' (அத்தியாயம்: 50) 'இக்தர பதிஸ் ஸாஅ' (அத்தியாயம்: 54) ஆகிய அத்தியாயங்களை ஓதுவார்கள் என்று பதிலளித்தார்கள்.
                         நூல்: முஸ்லிம் 1477

மேற்கண்ட ஹதீஸ்கள் என்னென்ன அத்தியாயங்களை பெருநாள் தொழுகையில் ஓதவேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றன. இவ்வாறு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஓதிய சூராக்களை நபித்தோழர்கள் அறிவிப்பதிலிருந்து கிராஅத்தைச் சப்தமிட்டு ஓதவேண்டும் என்பதும் தெளிவாகின்றது.

பெருநாள் தொழுகைக்கு முன்/பின் சுன்னத் உண்டா?

சில ஊர்களில் பெருநாள் தொழுகைக்கு முன் சுன்னத் என்ற பெயரில் இரண்டு ரக்அத் தொழும் வழக்கம் இருந்து வருகின்றது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய, நபிவழிக்கு மாற்றமான நடைமுறையாகும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் முஸல்லா என்ற திடலுக்குச் செல்வார்கள். அவர்கள் முதன் முதல் (பெருநாள்) தொழுகையைதான் துவக்குவார்கள்.
              அறிவிப்பவர்: அபூஸயீத் அல் குத்ரீ (ரலி); நூல்: புகாரி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதற்கு முன்பும், பின்பும் அவர்கள் எதையும் தொழவில்லை.
                   அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்:புகாரி

முதலில் தொழுகையா? 'குத்பா' என்ற‌ உரையா?

ஜும்ஆ தொழுகையைப் போன்றே பெருநாள் தொழுகையும் இரண்டு ரக்அத்துகள் தொழுகையுட‌ன், சொற்பொழிவும் அடங்கியதாகும். ஜும்ஆவின்போது முதலில் இமாம் உரை நிகழ்த்திவிட்டுப் பின்னர் தொழுகை நடத்தவேண்டும். ஆனால் பெருநாள் தொழுகையில் முதலில் தொழுகை நடத்திவிட்டு அதன் பிறகு இமாம் உரை நிகழ்த்த வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடன் நான் பெருநாள் தொழுகையில் பங்கு எடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர்.
            அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்: புகாரி

நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள், அபூபக்கர்(ரலி), உமர்(ரலி) ஆகியோர் இரு பெருநாட்களிலும் உரை நிகழ்த்துவதற்கு முன்பு தொழுபவர்களாக இருந்தனர்.
                அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி); நூல்:புகாரி (962)

முதலில் தொழவேண்டும், அதன் பிறகுதான் உரை நிகழ்த்தவேண்டும் என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறியலாம். ஆனால் இன்று சில‌ ஊர்களில் தொழுவதற்கு முன்பாக ஒரு அரை மணி நேர உரை முதலில் நடைபெறும். அதன் பிறகு தொழுகையும், அதற்குப் பிறகு இரண்டு உரைகளும் நடைபெறும். இது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைக்கு மாற்றமான செயலாகும். எனவே, பெருநாள் தொழுகை முடிந்ததும் மக்களுக்கு இமாம் உரையாற்றுவதுதான் நபிவழியாகும்.

ஒரே உரையின் இடையில் இமாம் அமரவேண்டுமா?

இரு பெருநாட்களிலும் நிகழ்த்தப்படக்கூடிய உரையின்போது இடையில் உட்காருவதற்கு நபி வழியில் ஆதாரமில்லை. இரு உரைகளுக்கு இடையில் பிரித்துக் காட்டும் விதமாக அமர்வது நபிவழி (சுன்னத்) என்று இமாம் ஷாபி அறிவிப்பதாக ஒரு செய்தி கூறப்படுகின்றது. அந்தச் செய்தியை அறிவிக்கும் உபைதுல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு உத்பா என்பவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவரல்ல என்பதால், இந்த ஹதீஸ் ஏற்கத்தக்க முடியாத வகை ஹதீஸ்களில் சார்ந்தவையாகிவிடுகிறது. இதுபோன்ற இன்னும் ஒரு பலகீனமான ஹதீஸும் உள்ளதே தவிர, ஆதாரப் பூர்வமான எந்த ஹதீஸும் இல்லாததால், ஜும்ஆவைப் போன்று இரண்டு உரைகள் ஆற்றக்கூடாது என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மிம்பர் (மேடை) உண்டா?


வழக்கமாக ஜும்ஆவின் இரு உரைகளும் பள்ளியில் உள்ள மிம்பரில் ஆற்றப்படும். ஆனால் பெருநாள் தொழுகையில் இமாம் தரையில் நின்றுதான் உரையாற்ற வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாளன்று தரையில் நின்று உரையாற்றினார்கள். 
          அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ(ரலி); நூல்:இப்னு குஸைமா

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்கு) தயாராகி தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் (உரையை) முடித்து, (அங்கிருந்து) நகர்ந்து பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கை மீது சாய்ந்துக் கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். 
             அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி); நூல்: புகாரி(978)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தரையில் நின்று உரையாற்றியுள்ளதால் நாமும் பெருநாள் தொழுகையில் மிம்பர் பயன்படுத்தக்கூடாது.

பெண்களுக்குத் தனியாகப் பிரச்சாரம் செய்யவேண்டுமா?

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தாம் பேசியது பெண்களுக்குக் கேட்கவில்லை என்று கருதியதும் பெண்கள் பகுதிக்கு வந்தார்கள்.
           அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: புகாரி(98)

இமாம் பேசுவது பெண்களுக்கு எட்டிவிடுமானால் அந்த உரையே போதுமானதாகும். இல்லையேல் பெண்கள் பகுதிக்கு வந்து உரையாற்ற வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

பெருநாள் குத்பாவைக் கேட்பதன் அவசியம்

விரும்பினால் பெருநாள் உரையைக் கேட்கலாம்,  இல்லையேல் கேட்க வேண்டியதில்லை என்ற கருத்துப்பட வரக்கூடிய ஹதீஸ்கள் ஆதாரமற்றவையாகும்.

கன்னிப் பெண்கள், மாதவிடாய்ப் பெண்கள் உட்பட அனைவரும் வந்து இந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதன் பெருநாள் உரையை கேட்பதற்காகதானே தவிர மைதானத்திற்கு வந்து பேசிக் கொண்டிருப்பதற்காக அல்ல! எனவே பெருநாள் உரையின் போது பேசிக் கொண்டிருக்காமல் நபித்தோழர்கள் எப்படி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் உரையை அமர்ந்து அமைதியாகக் கேட்டார்களோ அதுபோல் நாமும் (ஜும்ஆ உரயைப் போன்றே) அமைதியாக இமாமின் பெருநாள் உரையைக் கேட்க வேண்டும்.

பெருநாள் பிரார்த்தனை

பெருநாள் தொழுகையும், உரையும் முடிந்ததும் நாம் உடனே கலைந்து விடாமல் ஆண்களும், மாதவிடாய்ப் பெண்கள் உட்பட அனைத்துப் பெண்களும் திடலில் அவரவருக்குரிய இடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யவேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும் மகத்துவமும் உள்ளது.

பெருநாள் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டும் எனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
         அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி); நூல்:புகாரி(971)

இந்த ஹதீஸில் பெருநாளைக்கு என்று ஒரு பரக்கத்தும், புனிதமும் இருப்பதாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அந்த பாக்கியத்தை நாம் இழந்து விடக்கூடாது என்பதற்காக பெருநாள் உரை முடிந்ததும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஜும்ஆவும் பெருநாளும்

ஜும்ஆத் தொழுகை கடமை என்றாலும் கூட, ஜும்ஆ தினத்தில் பெருநாள் வந்தால் ஜும்ஆவிற்குப் பதிலாக பெருநாள் தொழுகையே போதுமானது என்று இஸ்லாம் கூறுகின்றது. ஆனால், அப்படி ஜும்ஆ தினத்தில் பெருநாள் வரும்போது, நாம் விரும்பினால் பெருநாள் தொழுகையைத் தொழுதுவிட்டு பிறகு ஜும்ஆத் தொழுகையையும் தொழுதுக் கொள்ளலாம். விரும்பினால் அன்றைய தினம் பெருநாள் தொழுதுவிட்டு ஜும்ஆத் தொழுகையை தொழாமலும் இருக்க‌லாம். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இந்த இரண்டு விதமான நடைமுறைகளுக்கும் சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும், ஜும்ஆவிலும் 'ஸப்பி ஹிஸ்ம ரப்பிகல் அஃலா' என்ற அத்தியாயத்தையும், 'ஹல் அதாக ஹதீஸுல் காஷியா' என்ற அத்தியாயத்தையும் ஓதுவார்கள். ஒரே நாளில் பெருநாளும், ஜும்ஆவும் வந்துவிட்டால் இரு தொழுகைகளிலும் அந்த இரு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். 
      அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி); நூல்:முஸ்லிம்(1452)

இந்த ஹதீஸிலிருந்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஒரே நாளில் வந்த‌ பெருநாள் தொழுகையையும், ஜும்ஆத் தொழுகையையும் தொழுது இருக்கிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ள முடிகிறது.

'இன்றைய தினம் உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் வந்துள்ளன. யார் இந்தப் பெருநாள் தொழுகையைத் தொழுகிறாரோ அவர் ஜும்ஆத் தொழாமல் இருக்கலாம். ஆனால் நாம் ஜும்ஆத் தொழுகையை நடத்துவோம்' என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். 
                அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி);நூல்:அபூதாவூத்(907)

பெருநாள் தொழுதவர்கள் அன்றைய தினம் ஜும்ஆ தொழாமல் இருக்க அனுமதி வழங்கியுள்ளதால் இந்த அனுமதியையும் நாம் நடைமுறைப்படுத்தலாம்.

தொடரும்... இன்ஷா அல்லாஹ்!

முதல் பகுதி மற்றும் மூன்றாவது பகுதிகளைப் பார்க்கவும்.


Wednesday, 18 August 2010

இரவுத் தொழுகை

ரமலான் மாத்தில் தொழப்படும் இரவுத் தொழுகை மக்களின் வழக்கத்தில் "தராவீஹ்" என்றழைக்கப்படுகிறது. இரவில் தொழப்படும் இந்த தொழுகைக்கு,

"ஸலாத்துல் லைல்" (இரவுத் தொழுகை),
"கியாமுல் லைல்"(இரவில் நின்று வணங்குதல்),
"வித்ரு" (ஒற்றைப்படைத் தொழுகை),
"தஹஜ்ஜுத்(விழித்து தொழும் தொழுகை) போன்ற பெயர்கள்தான் ஹதீஸ்களில் காணப்படுகின்றன. "வித்ரு' என்பதும் இரவுத் தொழுகைக்குரிய பெயர்களில் ஒன்றுதான். ஆனால்,"தராவீஹ் தொழுகை" என்ற பெயர், பிற்காலத்தில் ரமலானுடைய மாதத்தில் இரவின் முற்பகுதியில் மக்கள் தாங்களாகவே அதிகப்படுத்தித் தொழும் 20 ரக்அத் தொழுகைக்கு மக்கள் சூட்டிக்கொண்ட பெயராகும். ஆனால், "தராவீஹ்" என்ற இந்த பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை.

இரவுத்தொழுகையின் சிறப்புகள்:

இந்த‌ இரவுத்தொழுகையான‌து, நமக்கு விதிக்கப்பட்ட கடமையான தொழுகைகளுக்கு பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், அதிக நன்மையை பெற்றுத்தரக்கூடியதாகவும் விளங்குகிறது.

ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி); நூல்:முஸ்லிம்

ஒரு முறை நபி(ஸல்)அவர்கள் நடுநிசியின் போது புறப்பட்டு பள்ளியில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர் அவர்களைப் பின்பற்றி தொழுதார்கள். காலையில் மக்கள் (இதுபற்றி) பேச ஆரம்பித்துவிடவே (மறுநாள்) அவர்களைவிட அதிகமானோர் கூடிவிட்டார்கள். அப்போது நபி(ஸல்)அவர்கள் தொழ, அவர்களைப் பின்பற்றி (மக்களும்) தொழுதார்கள். காலையில்(முன்போல்) மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். மூன்றாம் நாள் இரவு பள்ளிக்கு வந்தவர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அன்றும் நபி(ஸல்)அவர்கள் புறப்பட்டு வந்து, அவர்களின் தொழுகையைப் பின்பற்றி தொழப்பட்டது.

நான்காம் நாள் இரவு வந்த மக்களால் பள்ளி கொள்ளாத நிலை ஏற்பட்டுவிட்டது. அன்று நபி(ஸல்)அவர்கள் சுப்ஹு தொழுகைக்குத்தான் வந்தார்கள். (இரவுத்தொழுகைக்கு வரவில்லை.) சுப்ஹு தொழுகை தொழவைத்து முடித்தவுடன் (எப்போதும் சொற்பொழிவுக்குமுன் ஓதக்கூடிய) "தஷஹ்ஹுது, அம்மா பஃது" ஆகியவற்றை ஓதிவிட்டு மக்களை நோக்கி, உங்கள் நிலை எனக்கு மறையவில்லை, எனினும் நான் உங்கள் மீது இவ்விரவுத் தொழுகை கடமையாக்கப்பட்டு அவற்றை நீங்கள் தொழ இயலாது போய்விடுவீர்களோ என்று பயந்தே (நான் இரவு வெளியில் வராமல்) இருந்துவிட்டேன் என்று கூறினார்கள். இவ்வாறு ரமழானில் நிகழ்ந்தது.
அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி); நூல்: புகாரி

நபி(ஸல்)அவர்கள் இரவுத்தொழுகை விஷயமாக (மக்களுக்கு) வலியுறுத்திக் கட்டளையிடாமல், "ரமலானில் ஈமானோடும், நன்மைகிட்டும் என்ற நல்லாதரவோடும் நின்று வணக்கம் புரிவோரின் முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்" என்று கூறி ஆர்வமூட்டிக்கொண்டிருந்தார்கள். இந்நிலையில் நபி(ஸல்)அவர்கள் மரணித்துவிட்டார்கள். பின்னர் அபூபக்ர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்திலும், உமர்(ரலி)அவர்களின் ஆட்சியின் ஆரம்ப கட்டத்திலும் நிலைமை இவ்வாறே நீடித்திருந்து வந்தது என்று இதன் அறிவிப்பாளரில் ஒருவரான இமாம் ஜுஹ்ரி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
அறிவிப்பாளார்: அபூஹுரைரா(ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

மேற்காணும் அறிவிப்புகளின் மூலம் ரமலான் இரவுத்தொழுகையின் மகத்தான பலன்களை நாம் அறியலாம்.

இரவுத் தொழுகையின் நேரம்:

இஷா தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம். நபி (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் இரவின் அனைத்து நேரத்திலும் வித்ரு தொழுதுள்ளார்கள். அவர்களின் வித்ரு (சில நேரங்களில்) ஸஹர் வரை நீடித்துள்ளது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி

இரண்டிரண்டு ரக்அத்களாக தொழ வேண்டும்:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி

ஆக, இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாக தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கைக் கொண்ட வித்ரு தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.

வித்ரு தொழுகை ஸலாம் கொடுத்தபிறகு ஓதும் துஆ:

سُبْحاَنَ مَلِكِ الْقُدُّوْسُ

"ஸுப்ஹான மலிக்கில் குத்தூஸ்" என்று மூன்று முறை கூற வேண்டும். (நஸயீ)

பொருள்: பரிசுத்தமான ரப்பு தூய்மையானவன்

இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதல்:

இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது மிகச் சிறந்ததாகும். ஜமாஅத்தாகத் தொழுதல் என்பது பள்ளிவாசல்தான் என்பது அவசியமில்லை. வீட்டிலும் ஜமாஅத்தாகத் தொழுதுக் கொள்ளலாம். நபியவர்கள் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதற்கு மிகப் பெரும் சிறப்பைக் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் இரவுத் தொழுகையை இமாம் முடிக்கின்றவரை அவரோடு நின்று தொழுகின்றாரோ அவருக்கு இரவு முழுவதும் நின்று தொழுத நன்மை எழுதப்படுகின்றது.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி); நூல் : திர்மிதி

வீட்டில் தொழுவதே சிறந்தது:

நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் பாயினால் ஒரு அறையை அமைத்துக் கொண்டார்கள். சில இரவுகள் அதனுள் தொழுதார்கள். அவர்களது தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இதைப் பற்றி அறிந்து நபி (ஸல்) அவர்கள் (அந்த அறைக்கு வராமல்) உட்கார்ந்து விட்டார்கள். பின்பு மக்களை நோக்கி வந்து ''உங்களது செயல்களை நான் கண்டேன். மக்களே உங்களது இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள். கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி); நூல்: புகாரி

இரவுத் தொழுகை தவறி விட்டால்...

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு நோய் முதலியவற்றால் இரவுத் தொழுகை தவறி விட்டால் (அதற்கு ஈடாகப்) பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். நூல்: முஸ்லிம்

இரவுத் தொழுகையை பேணித் தொழல்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர லி); நூல் : புகாரி

தராவீஹ் தொழுகையும் இரவுத் தொழுகையும் வெவ்வேறானதா?

நபி (ஸல்) முன்னேரத்தில் ஒரு தொழுகையும் பின்னேரத்தில் ஒரு தொழுகையும் தொழுதுள்ளனர்; எனவே தராவீஹ் என்பது வேறு, தஹஜ்ஜுத் என்பது வேறு என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது தவறான கருத்து என்பதைப் பின்வரக்கூடிய ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். நபி (ஸல்) அவர்கள் ஒரே தொழுகையைத் தான் பல நிலைகளில் தொழ வைத்திருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அல்அத்தமா என மக்கள் அழைக்கும் இஷா தொழுகையை முடித்ததிலிருந்து ஃபஜ்ர் வரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். நூல்: முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையிலிருந்து பஜ்ர் வரையிலும் தொழுத மொத்த ரக்அத்களின் எண்ணிக்கை 11 ஆகும் என்று அன்னை ஆயிஷா (ரலி) குறிப்பிடுகிறார்கள். இந்தத் தொழுகை தஹஜ்ஜுத் தொழுகை என்றால் தராவீஹ் தொழுகை எங்கே? ஆக இந்தச் செய்தி, நபி(ஸல்) அவர்கள் இரவில் தொழுதது பல பெயர்களில் உள்ள ஒரே தொழுகையைத் தான் என்பது தெளிவுபடுத்துகிறது.

இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்துகள்?

அபூலைமத் இப்னு அப்திர்ரஹ்மான்(ரலி) அவர்கள் ஒருமுறை ஆயிஷா(ரலி) அவர்களிடம் ரமழானில் நபி(ஸல்) அவர்களின் இரவுத்தொழுகை எவ்வாறிருந்தது? என்று கேட்டதற்கு "ரமலானிலும் அது அல்லாத மற்ற காலங்களிலும் 11 ரக்அத்துகளைவிட அதிகமாக அறவே தொழுததில்லை" என்று கூறிவிட்டு (முதலில்) 4 ரக்அத்துகள் தொழுதார்கள்; அவற்றின் அழகையும், நீளத்தையும் கேட்காதீர். (என்னால் அதனழகை எடுத்தியம்ப இயலாது) பிறகு 4 ரக்அத்துகள் தொழுதார்கள். அவற்றின் அழகையும், நீளத்தையும் கேட்காதீர். பிறகு 3 ரக்அத்துகள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: அபூலைமத் இப்னு அப்திர்ரஹ்மான்(ரலி); புகாரி

ஆயிஷா(ரலி)அவர்களிடம் நபி(ஸல்)அவர்களின் இரவுத்தொழுகை ரமலானில் எவ்வாறிருந்தது என்று கேட்க‌ப்பட்டபோது "ரமலானிலும் அது அல்லாத காலங்களிலும் 11 ரக்அத்துகளுக்கு மேல் அதிகமாக அவர்கள் தொழுததில்லை" என்று அவர்கள் பதில் அளித்திருப்பதன் மூலம், ரமலானுக்கென்று அவர்கள் விசேஷமாக எதுவும் தொழாமல், தினசரி வழக்கமாகவும் 8+3=11 ரக்அத்துகள் மட்டுமே அவர்கள் தொழுதுள்ளார்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள். அதேசமயம், நபி(ஸல்)அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு முறைகளில் தொழுது நமக்கு வழிகாட்டியுள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

இரண்டிரண்டு ரக்அத்களாக 12 ரக்அத்கள் +1 ரக்அத் :



நபி (ஸல்) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ரு தொழுவார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரு ரக்அத்கள் தொழுதுவிட்டு சுப்ஹுத் தொழுகைக்காக (வீட்டை விட்டு) வெளியே சென்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள் : புகாரி, முஸ்லிம்

13 ரக்அத்கள்:

நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி); நூல்கள் : புகாரி, முஸ்லிம்

8+5 ரக்அத்கள்:

நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி); நூல்கள் : முஸ்லிம், திர்மிதீ

மேற்கண்ட (ஹதீஸ்களில்) இந்த 13 ரக்அத்களில், இரவுத் தொழுகை என்பது 8 ரக்அத்கள்தான். வித்ருத் தொழுகையைதான் நபி(ஸல்) 1, 3, 5 என்ற விதங்களில் சேர்த்து தொழுதுள்ளார்கள். இன்னும் சிலவேளை ஃபஜ்ருடைய முந்திய சுன்னத் 2 ரக்அத்கள் சேர்த்தும் தொழுதுள்ளார்கள்.

10+1 ரக்அத்கள்:

நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி); நூல்கள் : முஸ்லிம்,திர்மிதீ

11 ரக்அத்கள் அல்லது 9 ரக்அத்கள் அல்லது 7 ரக்அத்கள்:

நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி)அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் 'நபி (ஸல்)அவர்கள், ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : மஸ்ரூக்; நூல்: புகாரி

வித்ரு 5 ரக்அத்கள் அல்லது 3 ரக்அத்கள் அல்லது 1 ரக்அத்:

வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ரு தொழட்டும். யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ரு தொழட்டும், யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஅய்யூப்(ரலி); நூல்கள்: நஸயீ, அபூதாவூத்

மேற்கூறப்பட்ட முறைகளில் ஏதேனும் ஒரு முறையில் நாம் இரவுத் தொழுகையை நிறைவேற்ற நமக்கு நபி(ஸல்)அவர்களின் வழிகாட்டுதலும் அனுமதியும் உள்ளது.(அதிகபட்சமாக 11 ரக்அத்கள் தொழுதுக்கொள்வது நமக்கு அதிக நன்மைகள் கொண்டதாக அமையும் என்பதையும் நாம் கவன‌த்தில் கொள்ள‌வேண்டும்.)

"என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள்" என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: மாலிக் இப்னுல் ஹுவைரிஸ்(ரலி); நூற்கள்:புகாரி, முஸ்லிம்

ஆக, இரவுத்தொழுகை அதிகபட்சமாக 11 ரக்அத்கள் தொழுவதுதான் நபி(ஸல்)அவர்களின் வழிமுறையாகும். 20 ரக்அத்கள் என்பது நபி(ஸல்)அவர்கள் காட்டித் தராத நடைமுறையாகும். ஆனால், நீண்ட காலமாக முஸ்லிம்கள் ரமலான் இரவுகளில் தராவீஹ் என்ற பெயரால் 20 ரக்அத்துகள் தொழுது வருகிறார்கள். பரம்பரை பரம்பரையாக 20 ரக்அத்துகள் தொழுது வருவதால் அதை நியாயப்படுத்தவே மனித மனம் விரும்புகின்றது. ஆனால் மனித விருப்பம் மார்க்கம் ஆக முடியாது. அல்லாஹ்தஆலா நபி(ஸல்) அவர்களைக் கொண்டு மார்க்கமாகக் காட்டித் தந்தது மட்டும்தான் நமக்கு மார்க்கமாக முடியும்.

தராவீஹ் என்று அழைக்கப்படும் இரவுத் தொழுகை 20 ரக்அத்கள் அல்ல:

நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் ஜமாஅத்துடன் அல்லாமல் இருபது ரக்அத்களும் வித்ரும் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ர லி); நூல்: பைஹகீ

இந்தச் செய்தி மட்டும் தான் தராவீஹ் 20 ரக்அத்கள் என்பதற்கு நபி (ஸல்) அவர்களுடன் தொடர்புப்படுத்தி வரும் ஹதீஸாகும். ஆனால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல என்பதற்கு,'இந்தச் செய்தியில் இடம் பெறும் அபூஷைபா என்பவர் பலவீனமானவர்' என்று அந்த ஹதீஸின் அடிக்குறிப்பில் இதைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.

அடுத்தாக அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரம் உமர் (ரலி) அவர்கள் தொடர்புடையதாகும்.

உமர் (ரலி) அவர்கள் காலத்தில் மக்கள் 20 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர் என்று யஸீத் பின் ரூமான் என்பவர் கூறுகிறார். நூல்: முஅத்தா

இந்தச் செய்தியைப் பற்றி விமர்சனம் செய்யும் இமாம் பைஹகீ அவர்கள் யஸீத் பின் ரூமான் என்பவர் உமர் (ரலி) அவர்கள் காலத்தை அடையவில்லை. அதாவது உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறக்கவில்லை என்று தனது அல்மரிஃபா என்ற நூ ல் குறிப்பிடுவதாக ஹனஃபி மத்ஹபைச் சார்ந்த ஸைலயீ அவர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள். (நூல்: நஸபுர் ராயா, பாகம்: 2, பக்கம்: 154)

உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறக்காத ஒருவர் அவர்கள் காலத்தில் நடந்த செய்தியை எவ்வாறு கூற முடியும்? எனவே இந்தச் செய்தியும் பலவீனமானதாகிறது. மேலும் இதற்கு மாற்றமாக உமர் (ரலி) அவர்கள் 8+3 ரக்அத்கள் தொழுமாறு கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான செய்தி இமாம் மாலிக் அவர்களின் அல்முஅத்தா என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உபை பின் கஅப் (ரலி), தமீமுத்தாரீ (ர லி) ஆகிய இருவரையும் (8+3) 11 ரக்அத்கள் மக்களுக்குத் தொழுவிக்குமாறு உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத்(ர லி); நூல்: முஅத்தா

ஆக, மக்களால் தராவீஹ் என்று அழைக்கப்படும் இரவுத் தொழுகை, 20 ரக்அத்கள் என்பதற்கு கூறப்படும் எந்த செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல. அதுபோல், ஒவ்வொரு ஸலாமுக்கு பிறகும் ஸலவாத்தோ மற்ற திக்ருகளோ ஓதக்கூடிய பழக்கமும் நபி(ஸல்)அவர்கள் காட்டித் தராதவையாகும்.

மார்க்கத்தில் அதிகப்படுத்தலாமா?

அடுத்து, நபி(ஸல்)அவர்கள் தொழுதது 11 ரக்அத்துகள் என்பது சரிதான். ஆனாலும், ரமலான் மாதத்தில் இரவு காலங்களில் அதிக ரக்அத்துகள் தொழுவது நல்லதுதானே, அதிலே என்ன கெடுதி இருக்கிறது? நன்மைதானே என்று சொல்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்களால் "பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் அனைத்தும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்" என்று தெளிவாக இனம் காட்டப்பட்டவை, நாம் நினைப்பது போல் கடிகாரம் கட்டுவதோ, கான்கிரீட் கட்டிடத்தில் வசிப்பதோ, பிளேனில் பறப்பதோ அல்ல. மார்க்கத்தில் நன்மை கிடைக்கும் என்ற நோக்கத்தோடு நபி(ஸல்)அவர்களால் காட்டித் தரப்படாத அமல்களைச் செய்வதும், அதிகப்படுத்துவதும் கேடுதான் என்பதை இந்த முஸ்லிம் சமுதாயம் நன்கு உணர்ந்து கொள்ளவேண்டும். இதற்கு ஹதீஸ்களில் நிறைய ஆதாரங்கள் உள்ளன. உதாரணத்திற்கு கீழேயுள்ள இந்த ஹதீஸைப் பார்த்து, மார்க்கத்தில் அதிகப்படுத்தலாமா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு காட்டரபி நபி(ஸல்) அவர்களிடம் வந்து உளுவின் விவரத்தைக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் மும்மூன்று முறைகளாக உளூச் செய்து காட்டி," இவ்விதமாகத்தான் உளூச் செய்ய வேண்டும்"என்று கூறி, பின்னர் "எவர் இதைவிட அதிகமாகச் செய்கிறரோ அவர் நிச்சயமாகத் தீமையைச் செய்தவராகவும், அளவு மீறியவராகவும், அநியாயம் செய்பவராகவும் ஆவார்"என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரழி); நூல்:அபூதாவூது, நஸயீ

நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தை நிறைவாகக் கற்றுத்தந்து விட்டார்கள், எதனையும் மறைக்கவில்லை, மறக்கவில்லை, சொன்னதையே செய்து காட்டினார்கள், குர்ஆனின் வாழ்க்கையை முழுமையாக பிரதிபலித்தார்கள் என்று பூரணமாக நம்புகிறவர்கள், நபி(ஸல்) அவர்கள் செய்ததற்கு மேல் அதிகமாக‌ நன்மை என்ற பெயரில் ஒருபோதும் செய்யமாட்டார்கள். தொழுகையாக இருக்கட்டும், திக்ராக இருக்கட்டும், எதுவாக இருக்கட்டும் நபி(ஸல்) அவர்கள் எதை, எப்படி, எந்த அளவு செய்து காட்டினார்களோ அதை அப்படியே அந்த அளவு மட்டுமே செய்வது கொண்டு திருப்தி அடைவார்கள். அதுவே பூரணமான மார்க்கமென்று உறுதியாக நம்புவார்கள். அல்லாஹ்தஆலா அப்படிப்பட்ட நல்லடியார்கள் கூட்டத்தில் நம்மையும் இணைத்து வைப்பானாக, ஆமீன்.

(இந்த தொகுப்புக்கு எனக்கு உதவிய ஆக்கங்களை உருவாக்கியவர்களுக்கு இறைவன் நற்கூலி வழங்குவானாக!)

பயணிக்கும் பாதை