அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday 28 November 2019

இஸ்லாமிய சொத்துரிமைக் கல்வியின் அவசியம்

இஸ்லாமிய சொத்துரிமைக் கல்வியைக் கற்றுக் கொள்வதின் அவசியம் என்ன?

மனித வாழ்வின் அனைத்து பிரச்சனைகளுக்கும் அழகிய வழிகளைக் காட்டும் இஸ்லாம், ஒருவர் மரணித்துவிட்டால் அவரது சொத்துக்களை அவருடைய வாரிசுகள் எவ்வாறு பிரித்துக் கொள்வது என்பதையும்கூட தெளிவான சட்ட விதிமுறைகளாக அறிவித்து வழிகாட்டியுள்ளது. அவற்றை நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம் என்று பார்த்தோமானால், மற்ற சட்டதிட்டங்கள் பற்றிய கல்வியைவிட இஸ்லாமிய சொத்துரிமைப் பற்றிய கல்வி நம்மில் மிக மிக குறைவாகவே உள்ளது.

இன்று வாரிசுரிமைக் கல்வி என்பது அரபுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள், கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் உட்பட ஒருசிலரைத் தவிர பலருக்கும் முழுமையாக தெரிவதில்லை என்பதுதான் வருத்தமான உண்மை! சில கல்லூரிகளின் பாடதிட்டத்தில் இவற்றை ஒரு பாடமாக வைத்திருந்தாலும், அவை குடும்பவியலின் ஒரு முக்கிய பிரச்சனைக்குரிய தீர்வென்ற ரீதியில் கற்றுக் கொடுப்பதாகவோ, கற்றுக் கொள்வதாகவோ தெரியவில்லை. ஏனெனில், அவற்றை கற்கும்போது இப்பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் கூட, பின்னாளில் அதுபற்றிக் கேட்டால் பதில் சொல்லத் தெரியாமல் மறந்துவிட்டிருப்பதைதான் காண்கிறோம். இதனால் சொத்துரிமை பிரச்சனை சிக்கலாகி இதுபோன்ற குடும்பப் பிரச்சனை தோன்றினால் இஸ்லாமியக் கல்லூரிகளுக்கு தீர்ப்புக்கேட்டு அவர்களின் பதிலுக்காக காத்திருக்க வேண்டிய நிலையில்தான் பெரும்பகுதி மக்கள் உள்ளார்கள். இல்லையெனில் யூகத்தின் அடிப்படையில் பாகப்பிரிவினை செய்துக் கொடுத்துவிட்டு கடந்து செல்வதையும் பார்க்கிறோம்.


மக்களின் பொருளாதாரம் ஒரே இடத்தில் குவிந்து, சமூகத்தில் சிலர் மட்டும் பொருளாதார வசதி நிறைந்தவர்களாகவும் சிலர் எப்போதுமே வறிய நிலையில் உள்ளவர்களாகவும் இருக்கும் போக்கை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஆனால் முறையான சொத்துப் பங்கீடுகள் செயல்படுத்தப்படுத்தப்படாத காரணத்தால், சொத்துக்காக உறவுகளுக்குள் பகைத்துக் கொள்வதும், சில குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளும் அளவுக்குகூட அந்த குடும்ப கட்டமைப்பில் பல விரிசல்களும் தேவையற்ற மன உளைச்சல்கள் ஏற்படுவதையும் பரவலாக பார்க்கமுடிகிறது.

அதனால்தான், ஒருவரின் உடமைகளில் யாரெல்லாம் உரிமைக் கொண்டாட தகுதியுள்ளவர்கள் என்பதைப் பட்டியலிட்டு, அதிலிருந்து யார் யாருக்கு எவ்வளவு கொடுக்கப்படவேண்டும் என்ற பங்கீடுகளையும் வகுத்து, எக்காலத்திற்கும் பொருத்தமான அழகிய தீர்வை இஸ்லாம் வழங்கியுள்ளது. அவற்றை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதின் மூலம், யாருடைய உரிமைகளையும் யாரும் அபகரித்துக் கொள்ள இயலாதவண்ணம் மிக அற்புதமான வகையில் அமைக்கப்பட்டதுதான் இந்த வாரிசுரிமை சட்டங்கள்! அவை இவ்வுலக வாழ்விற்கு மட்டுமின்றி மறுமை வாழ்வில் மகத்தான பலன்களை அடையக்கூடிய பாக்கியத்தையும் அளிப்பவை என்பதை நாம் உணரவேண்டும்!

ஆம்! மனித அறிவுக்குட்பட்டு எழுதப்பட்ட சட்டங்களைப்போல் அல்லாமல், ஏக இறைவனான அல்லாஹ்வால் இயற்றப்பட்ட அந்த பாகப் பிரிவினை சட்டங்களை, விருப்பு வெறுப்பின்றி அவற்றை உரிய முறையில் யார் கடைபிடிக்கிறார்களோ அவர்களுக்கு சுவனச் சோலைகளுடன் கூடிய மறு உலக வெற்றியைத் தருவதாக அல்லாஹ்தஆலா வாக்களிக்கிறான். அதுபோல், அவனால் விதிக்கப்பட்ட அந்த வரம்புகளை மீறுபவர்களுக்கும் அதனை அலட்சியப்படுத்தி கடந்து செல்பவர்களுக்கும் நரகின் தண்டனை இருப்பதாக எச்சரிக்கை செய்கிறான்.

"இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.


அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்து அவனது வரம்புகளை மீறுபவனை (அல்லாஹ்) நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு". (அல்குர்ஆன் 4:13,14)

ஆனால் இவ்வளவு எச்சரிக்கைகள் சொல்லப்பட்டும் நம்மில் பெரும்பாலானோர், நாம் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதிப்பவையாக இருந்தாலும் முன்னோர்வழி சொத்துக்களாக இருந்தாலும் அவையனைத்துமே நம் பிள்ளைகளுக்கும் நம் சந்ததிகளுக்கும் மட்டும்தான் என்றே எண்ணிக் கொண்டிருக்கிறோம். அதனால் இவ்வுலக பலன்கள் இருப்பது போன்ற ஒரு மாயைத் தோன்றினாலும், அதனால் நமக்கு மறுமை பலன்கள் உண்டா என்றால் நிச்சயமாக இல்லை! அல்லாஹ் நிர்ணயித்துள்ள அதன் பங்கீட்டு அளவுகளைக் கண்டுகொள்ளாமல் தன் சொத்து முழுவதும் தன்னோடு உள்ளவர்களுக்கு மட்டுமே சேர வேண்டுமென்ற பேராசையால் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்வதால், தன்னிடமுள்ள அந்த சொத்து சுகங்கள் தன் மரணத்திற்குப் பிறகு உரிமைப் படைத்த மற்றவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. அல்லது உரிமையற்றவர்கள் வந்து அவற்றை அபகரித்துவிடுகின்றனர். இதனால் மறுமையிலும் கடும் நஷ்டத்தை சந்திக்கவேண்டியிருக்கும். (அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாப்பானாக!)

"ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு சோதனை உண்டு. எனது சமூகத்தினரின் சோதனை செல்வமாகும்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: கஃபு இப்னு இயாள் (ரலி)
நூல்: திர்மிதீ (2337)

இந்த பொருட்செல்வம் என்ற சோதனையில் நம் சொத்துக்களைப் பிரித்துக் கொடுப்பதுதான் பெரிய சோதனையாக இருக்க முடியும். அதிலிருந்து நாம் கவனமாக வெற்றி பெறவெண்டுமானால் சொத்துக்களை பங்கீடு செய்யும் முறைகளை அறிந்து வைத்திருப்பதும், நம் குடும்பத்தினருக்கு அதைக் கற்றுக் கொடுப்பதும் நமக்கு மிகவும் அவசியம் என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

சிலர் நினைப்பதுபோல் இந்தக் கல்வி செல்வந்தர்களுக்கு மட்டும்தான் அவசியம் என்பதில்லை. சிறிய அளவிலான பொருளாதாரமோ மற்ற உடமைகளோ இருப்பவர்களுக்கும் அவசியமானதே! எந்த பொருளாதாரமும் இல்லாமல் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களும்கூட அல்லாஹ்வின் இந்த சட்டங்களைக் கற்று பிறருக்கு கற்றுக்கொடுப்பதின் மூலம் பெரும் நன்மைகளை அடையலாம்; இறைவன் நாடினால், அவர்களும் செல்வந்தர்களாகி தங்களின் வாழ்வியலில் நடைமுறைப்படுத்தவும் தேவைப்படலாம்.

அடுத்ததாக, எப்போது ஒருவரின் சொத்துக்கள் பங்கீடு செய்யும் நிலையை அடையும்? என்பதைப் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.

பயணிக்கும் பாதை