இவ்வுலகில் நாம் எத்தனையோ விஷயங்களை கற்பனையில் சுமந்துக் கொண்டு
'இதுவும் நடக்குமா?' என மனக்கோட்டைக் கட்டி வைத்திருப்போம். அவற்றில்
சிலவற்றுக்கு நம் மனதில் அதி முக்கியத்துவம் கொடுத்து, தொடர்ந்து அதற்காக
பிரார்த்தித்துக் கொண்டே இருப்போம். ஆனால் அவை எல்லாமே எல்லோருக்கும்
நடந்துவிடுவதில்லை. அப்படி ஏதேனும் சில விருப்பங்கள் நடந்துவிட்டால்..? அதை
இறைவன் நாடிவிட்டால்..? அந்த அனுபவமும், அதனால் ஏற்பட்ட உணர்வுகளும்
எவ்வளவு இனிமையாக இருக்கும்..!!
'யான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்' என்று ஒற்றை வார்த்தையில் வாழ்த்து சொல்லி செல்வதைவிட
அந்த அனுபவத்தையே சொல்லும்போது, நம்மைப்போல் அதை விரும்பிய பலருக்கும்
மேலும் உற்சாகம் ஊட்டக்கூடியதாக இது அமையலாம்! அதன்மூலம் அவர்களும் அந்த
இன்ப அனுபவத்தை அடைய முயற்சிக்கலாம். எனவே எதிர்பார்த்து.. எதிர்பார்த்து,
ஏங்கிக் கிடைத்த அந்த பாக்கியத்தை, அனுதினமும் நினைத்து நினைத்து
சந்தோஷத்துடனும் திருப்தியுடனும் இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டே
இருக்கும் அந்த இனிய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.