அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday 29 March 2023

நோன்பு துறக்கும்போது என்ன துஆ ஓதவேண்டும்?

நீண்ட காலங்களாகவே பெரும்பாலான மக்கள், நோன்பு துறக்கும் ஓதும் துஆவாக, "அல்லாஹும்ம ல(க்)க சும்(த்)து.." என்று துவங்கும் துஆவை ஓதி வருகிறார்கள். இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதைப்பற்றி முதலில் பார்ப்போம்.


"அல்லாஹும்ம ல(க்)க சும்(த்)து…" என்று ஆரம்பிக்கும் அந்த துஆ பல்வேறு வாசக அமைப்புகளில் சில ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூ ஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி), அலீ (ரலி) ஆகிய நான்கு நபித்தோழர்கள் வழியாகவும் முஆத் பின் ஸஹ்ரா என்று ஒரு தாபிஇ வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவைகள் அனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.

"அல்லாஹும்ம ல(க்)க சும்(த்)து வஅலா ரிஸ்கி(க்)க அஃப்தர்(த்)து"

 "أللهم لك صمت، وعلى رزقك أفطرت"

என்ற இந்த வாசகத்தை 'முஆத் பின் ஸஹ்ரா' என்ற தாபிஇ அறிவிக்கும் செய்தி, 

- அபூதாவூத் (2011)

- முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா (பாகம்: 2, பக்கம்: 511)

- பைஹகீ (பாகம்: 4, பக்கம்: 239)

- ஷுஅபுல் ஈமான் – பைஹகீ (3747)

- அத்தஃவாத்துல் கபீர் – பைஹகீ (426)

- அஸ்ஸுஹ்த் வர்ரகாயிக் – இப்னுல் முபாரக் (1388,1390)

- அஸ்ஸுனனுஸ் ஸகீர் – பைஹகீ (1102)

- பழாயிலுல் அவ்காத் – பைஹகீ (141)

- அல்மராஸில் – அபூதாவூத் (95)

ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை இடம்பெற்ற அனைத்து நூல்களிலும் 'முஆத் பின் ஸஹ்ரா' என்பவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அறிவிக்கிறார். இவர் நபித்தோழர் அல்ல! (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இவர் சந்திக்கவுமில்லை.)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொடர்பான செய்தியை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைச் சந்திக்காத நபர் அறிவிப்பதை நாம் ஏற்கக் கூடாது. எனவே இந்தச் செய்தி பலவீனம் அடைகிறது.

மேலும் இந்தச் செய்தியை அறிவிக்கும் 'முஆத் பின் ஸஹ்ரா' என்பவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் இவரைப் பற்றி குறிப்பிடவில்லை. இப்னு ஹிப்பான் அவர்கள் யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். எனவே இப்னு ஹிப்பான் மட்டும் நம்பகமானவர் என்று தனித்து குறிப்பிடுவதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்பதில்லை. எனவே 'முஆத் பின் ஸஹ்ரா' என்பவர் யாரென அறியப்படாததால் மேலும் இச்செய்தி பலவீனமடைகிறது.

இதே செய்தி அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் மூலம் முஸன்னஃப் அபீ ஷைபா (பாகம்: 2, பக்கம்: 511ல்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து 'ஹுஸைன் பின் அப்துர் ரஹ்மான் அஸ்ஸுலமீ' என்பவர் அறிவித்துள்ளதாக உள்ளது.

இவர், அபூஜுஹைஃபா (ரலி), அம்ர் பின் ஹுரைஸ் (ரலி), இப்னு உமர் (ரலி), அனஸ் (ரலி), உமரா பின் ருவைபா (ரலி), ஜாபிர் பின் ஸமுரா (ரலி), உபைதுல்லாஹ் பின் முஸ்லிம் அல்ஹள்ரமீ (ரலி) ஆகிய ஆறு நபித் தோழர்களிடமிருந்தும் உம்மு ஆஸிம் (ரலி), உம்மு தாரிக் (ரலி) ஆகிய இரண்டு நபித் தோழியர்களிடமிருந்தும் ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்)

ஆனால் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து இவர் எந்தச் செய்தியையும் அறிவித்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. எனவே இந்தச் செய்தியும் ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை.

"அல்ஹம்துலில்லாஹில்லதீ அஆனனீ ஃபசும்(த்)து, வரஸகனீ ஃபஅஃப்தர்(த்)து"

 "الحمد لله الذي أعانني فصمت، ورزقني فأفطرت"

இந்த வாசகம், முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா (பாகம்: 2, பக்கம்: 511), பளாயிலுல் அவ்காத்-பைஹகீ (141) ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இச்செய்தியையும் 'முஆத் பின் ஸஹ்ரா' என்பவரே அறிவிக்கிறார். நாம் முன்னர் 'முஆத் பின் ஸஹ்ரா' என்பவர் தொடர்பாக கூறிய அனைத்து விமர்சனங்களும் இந்தச் செய்திக்கும் பொருந்தும் என்பதால் இந்தச் செய்தியும் பலவீனமடைகிறது.

"அல்லாஹும்ம ல(க்)க சும்(த்)து, வலா ரிஸ்க்கி(க்)க அஃப்தர்(த்)து, வதகப்பல் மின்னீ, இன்ன(க்)கஸ் ஸமீஉல் அளீம்"

 "اللَّهُمَّ لكَ صُمْتُ، وعلى رِزقِكَ أفْطَرْتُ، فتَقبَّلْ منِّي، إنَّكَ أنتَ السميعُ العَليمُ"

இந்த வாசகம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மூலம் தப்ரானீயின் அல்முஃஜமுல் கபீர் (பாகம்: 10, பக்கம்: 292) ல் இடம் பெற்றுள்ளது.

இதில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் 'அப்துல் மலிக் பின் ஹாரூன்' என்பவர் பலவீனமானவர் ஆவார். இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

இவரும், இவருடைய தந்தையும் பலவீனமானவர்கள் என்று இமாம் தாரகுத்னீ அவர்களும், இவர் பொய்யர் என்று யஹ்யா பின் மயீன், அபூஹாத்தம் அவர்களும், ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுபவர் என்று இப்னு ஹிப்பான் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்த செய்தி ஹாபிள் இப்னு ஹஜர் அவர்களின் 'லிஸானுல் மீஸான்' என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தச் செய்தியும் ஆதாரமற்றதாகி விடுகிறது.

"பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ல(க்)க சும்(த்)து வஅலா ரிஸ்கி(க்)க அஃப்தர்(த்)து"

 "بسم الله أللهم لك صمت، وعلى رزقك أفطرت"

இந்தச் செய்தி அனஸ் (ரலி) அவர்கள் மூலம் தப்ரானீ அவர்களின் அல்முஃஜமுல் அவ்ஸத் பாகம்: 16, பக்கம்: 338 லும்,

அல்முஃஜமுஸ் ஸகீர் பாகம்: 3, பக்கம்: 52 லும், கிதாபுத் துஆ பாகம்: 2, பக்கம்: 488 லும், அபூநுஐம் அவர்களின் அஹ்பார் உஸ்பஹான் பாகம்: 9, பக்கம்: 141 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவை இடம்பெற்றிருக்கும் அனைத்து நூல்களிலும் 'தாவூத் பின் ஸிப்ரிகான்' என்பவர் இடம்பெற்றுள்ளார்.

ஜவ்ஸஜானீ அவர்கள், இவர் ஒரு பொய்யர் என்றும் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று யஃகூப் பின் ஷைபா, அபூ ஸுர்ஆ அவர்களும், இவர் நம்பகமானவர் இல்லை என்று இமாம் நஸயீ அவர்களும், பலவீனமானவர் என்று அபூதாவூத் அவர்களும் மேலும் பலரும் விமர்சனம் செய்துள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்)

எனவே இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல!

"அல்லாஹும்ம ல(க்)க சும்(த்)து வஅலைக்க தவக்கல்(த்)து வஅலா ரிஸ்கி(க்)க அஃப்தர்(த்)து"

"أللهم لك صمت، وعليك توكلت، وعلى رزقك أفطرت"

இந்த வாசகம் அலீ (ரலி) அவர்கள் மூலம் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் 'அல்மதாலிபுல் ஆலிய்யா' பாகம்: 3, பக்கம்: 408 லும், 'முஸ்னதுல் ஹாரிஸ்' பாகம்: 2, பக்கம்: 256 லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியில் இடம்பெறும் ஆறாவது அறிவிப்பாளர் 'ஹம்மாத் பின் அம்ர் அந்நஸீபி' என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்லும் பொய்யர் என்று கடுமையாகக் குற்றம் சுமத்தப்பட்டவராவார்.

இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று இமாம் புஹாரி அவர்களும், இவர் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று இமாம் நஸாயீ அவர்களும், ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும், முற்றிலும் பலவீனமானவர் என்று இமாம் அபூஹாத்தம் அவர்களும், பொய்யர் என்றும் இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று பிரபலமானவர்களில் இவரும் ஒருவர் என்று இப்னு மயீன் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். (நூல்: லிஸானுல் மீஸான்)

இதைப்போன்று ஐந்தாவது அறிவிப்பாளர் 'அஸ்ஸரிய்யு பின் காலித்' என்பவர் யாரென அறிப்படாதவர் என்று இமாம் தஹபீ தனது 'மீஸானுல் இஃதிதால்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்தச் செய்தியும் பலவீனமடைகிறது.

ஆக மொத்தத்தில், "அல்லாஹும்ம லக்க சும்(த்)து…" எனத் தொடங்கும் எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை.

அடுத்து, "தஹபள்ளமஉ…" என்று ஆரம்பிக்கும் துஆ பற்றி

நோன்பு துறந்தப் பின், "தஹபள்ளமஉ வப்தல்ல(த்)தில் உரூ(க்)கு வஸப(த்)தல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்" 

 "ذهب الظمأ، وابتلت العروق، وثبت الأجر إن شاء الله"

எனும் இந்த துஆவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதியதாக அபூதாவூத், ஹாகிம், பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை ஆதாரமாகக் கொண்டுதான் மேற்கண்ட துஆவை நாம் ஓதி வந்தோம். 

இந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்துவிட்டு பின்வருமாறு கூறுகின்றார்கள்:

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான 'மர்வான் பின் ஸாலிம்', அவரிடமிருந்து அறிவிக்கும் 'ஹுஸைன் பின் வாகித்' ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புஹாரி, முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிடுகின்றார்.

ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், 'மர்வான் பின் ஸாலிம்', என்பவர் புஹாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள்.

மேற்கண்ட 'மர்வான் பின் ஸாலிம்' என்பவர் புஹாரியில் இடம் பெற்றுள்ளார் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில்தான், நம்பத்தகுந்த அறிவிப்பாளர்களின் வழியாக வந்த, ஆதாரப்பூர்வமான நபிமொழியில் உள்ளதாக எண்ணி நாமும் அதை ஓதி வந்தோம்.

இமாம் புஹாரி ஒருவரை ஆதாரமாகக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால்தான் ஏற்பார். பலவீனமானவர்களையோ, யாரென்று அறியாதவர்களையோ அவர் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலான அறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புஹாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் அதில் பெரும்பாலானவற்றுக்கு பதிலும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள்.

ஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. (இதை முறையாக மறு ஆய்வு செய்து, நேர்மையுடன் பொதுமக்களிடம் சமர்ப்பித்தவர்களுக்கு அல்லாஹ் நற்கூலிகளை வழங்குவானாக!)

மேற்கண்ட 'மர்வான் பின் ஸாலிம்' என்பவர் அறிவிக்கும் எந்த ஹதீஸும் புஹாரியிலும் முஸ்லிமிலும் இல்லை. ஹாகிம், தஹபீ ஆகியோர் தங்களை அறியாமலே தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புஹாரி, முஸ்லிம் நூல்களில் 'மர்வான் அல்அஸ்பர்' என்பவர் அறிவிக்கும் ஹதீஸ்தான் இடம்பெற்றுள்ளது. 'மர்வான் பின் ஸாலிம்' அறிவிக்கும் ஹதீஸ் புஹாரி, முஸ்லிமில் இல்லை. 'மர்வான் அல்அஸ்பர்' என்பவரை 'மர்வான் பின் ஸாலிம்' என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுவது, (இந்த ஹதீஸை ஆய்வு செய்தவர்களின்) மறு ஆய்வின்போது நமக்குத் தெரிய வருகின்றது.

மேலும் 'மர்வான் பின் ஸாலிம்' என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மைப் பற்றி வேறு எந்த அறிஞராவது குறிப்பிட்டுள்ளாரா என்று ஆய்வு செய்ததில், இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை.

இப்னு ஹிப்பானைப் பின்பற்றி இமாம் தஹபீ அவர்கள் மட்டும், 'இவர் நம்பகமானவர்' என்று கூறப்பட்டுள்ளார் என்று குறிப்பிடுகின்றார்.

இப்னு ஹிப்பான் அவர்கள், யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது பார்வையில் நம்பகமானவர் என்றால் யாராலும் குறை கூறப்படாதவராக இருக்க வேண்டும். யாரென்றே தெரியாதவர்களை யாருமே குறைகூறி இருக்க முடியாது. இதனால் யாரென்று தெரியாதவர்களையும் இப்னு ஹிப்பான், நம்பகமானவர் பட்டியலில் இடம்பெறச் செய்துவிடுவார்.

இதை அனைத்து அறிஞர்களும் நிராகரிக்கின்றனர். வேறு எந்த அறிஞரும் 'மர்வான் பின் ஸாலிம்' என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை.

எனவே, யாரென்று அறியப்படாத மர்வான் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இது ஆதாரப்பூர்வமானது என்று நிரூபிக்கப்பட்ட நபிமொழி அல்ல! இதன் அடிப்படையில் நோன்பு துறப்பதற்கென்று தனியாக எந்த துஆவும் இல்லை என்பது உறுதியாகின்றது.

சாப்பிடும்போது "பிஸ்மில்லாஹ்" கூற வேண்டும் என்ற (புஹாரி 5376) நபிமொழிக்கேற்ப பிஸ்மில்லாஹ் கூறி நோன்பு துறப்பதுதான் நபிவழிப்படி சரியான நடைமுறை ஆகும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை