அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday 1 April 2023

நோன்பு வைத்த நிலையில் இரத்த தானம் செய்தால் நோன்பு முறிந்துவிடுமா?

'இரத்த தானம்' செய்வது என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்ததில்லை. ஆனால், அவர்களின் காலத்துக்கு முன்பிருந்தே இரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றும் ஒரு சிகிச்சை முறை அரபியர்களிடம் இருந்தது. நபி(ஸல்) அவர்களின் காலத்திலும், அதற்கடுத்த காலக் கட்டங்களிலும் அந்த வழக்கம் நோய் நிவாரணத்திற்காக நடைமுறையில் தொடர்ந்து இருந்துவந்தது.

தலையின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் துவாரமிட்டு, கொம்புப் போன்ற கருவியின் மூலம் அதை உறிஞ்சி இரத்தத்தை அவர்கள் வெளியேற்றி வந்தனர். கண்ணாடிக் குவளையைப் பயன்படுத்தியும் இவ்வாறு இரத்தத்தை வெளியேற்றி வந்தனர். அப்படி செய்வது கெட்ட இரத்தத்தை வெளியேற்றும் முறை என்றும், அது உடலுக்கு ஆரோக்கியமானது என்ற நம்பிக்கையும் இருந்தது. அதற்கு அரபியில் 'ஹிஜாமா (حجامة)' என்று சொல்வார்கள். இன்றளவும் பலர் அதை மருத்துவ வழிமுறைகளில் ஒன்றாக செய்துக்கொண்டுள்ளனர்.

Blood Donation in Islam

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த இந்த நடைமுறையை வைத்து, வேறு பல சட்டங்களை நாம் அறிந்துக் கொள்ளலாம். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا خَالِدٌ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي الْأَشْعَثِ عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ أَنَّهُ مَرَّ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَنَ الْفَتْحِ عَلَى رَجُلٍ يَحْتَجِمُ بِالْبَقِيعِ لِثَمَانِ عَشْرَةَ خَلَتْ مِنْ رَمَضَانَ وَهُوَ آخِذٌ بِيَدِي فَقَالَ أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ

"இரத்தம் கொடுப்பவரும், எடுப்பவரும் நோன்பை முறித்துவிட்டனர்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் கூறினார்கள். நூல்: அஹ்மத்

இந்தக் கருத்தில் இன்னும் பல ஹதீஸ்களும் உள்ளன. ஆனால், இரத்தம் கொடுப்பவரின் நோன்பு முறிந்துவிடும் என்ற இந்தச் சட்டம் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் நடைமுறையிலிருந்து பின்னர் மாற்றப்பட்டுவிட்டது.

الدارقطنى

 2283 – حَدَّثَنَا أَبُو الْقَاسِمِ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى عَنْ ثَابِتٍ الْبُنَانِىِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ أَوَّلُ مَا كُرِهَتِ الْحِجَامَةُ لِلصَّائِمِ أَنَّ جَعْفَرَ بْنَ أَبِى طَالِبٍ احْتَجَمَ وَهُوَ صَائِمٌ فَمَرَّ بِهِ النَّبِىُّ -صلى الله عليه وسلم- فَقَالَ « أَفْطَرَ هَذَانِ » ثُمَّ رَخَّصَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- بَعْدُ فِى الْحِجَامَةِ لِلصَّائِمِ وَكَانَ أَنَسٌ يَحْتَجِمُ وَهُوَ صَائِمٌ كُلُّهُمْ ثِقَاتٌ وَلاَ أَعْلَمُ لَهُ عِلَّةً.

ஆரம்பத்தில் ஜஅஃப‌ர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்தபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைக் கடந்துச் சென்றார்கள். அப்போது, "இரத்தம் கொடுத்தவரும், எடுத்தவரும் நோன்பை விட்டுவிட்டனர்" என்று  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினர்கள். அதற்கு (சில காலங்களுக்கு) பிறகு நோன்பாளி இரத்தம் கொடுக்க அனுமதி வழங்கினார்கள். நூல்: தாரகுத்னீ

இவ்வாறு நோன்பு நோற்றவர் உடலிலிருந்து இரத்தத்தை வெளியேற்றுவதற்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதித்ததை ஆதாரமாகக் கொண்டு, உயிர் காக்கும் அவசியத்தை முன்னிட்டு இரத்த தானம் செய்வதால் நோன்பு முறியாது என்பதை நாம் அறிந்துக் கொள்ளலாம்.

அதேசமயம், நோன்பு நோற்றவர் தன் உடலில் இரத்தம் ஏற்றிக் கொள்ளுதல், குளுக்கோஸ் ஏற்றிக் கொள்ளுதல், ஊசி மூலம் மருந்துகளை உடலில் ஏற்றிக் கொள்ளுதல் போன்றவற்றுக்கு இதை ஆதாரமாகக் காட்டமுடியாது. ஏனெனில் இரத்தத்தை வெளியேற்றுவதற்கும், உள்ளே செலுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. வெளியேற்றுவற்கு அனுமதியளிக்கப்பட்டது என்பது, உள்ளே செலுத்துவதற்கு பொருந்தாது.

அதுபோல், குளுக்கோஸ் ஏற்றும் அளவுக்கு ஒருவரது நிலை பலஹீனமாக இருந்தால் அவர் நோன்பை முறித்துவிட சலுகைப் பெற்றவராக இருக்கிறார். ஆனால், உணவு உட்கொண்டு நோன்பை முறித்து அந்த பலஹீனத்தைப் போக்கிக் கொள்வதற்கு பதிலாக குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டாலும் உணவு உட்கொண்டது போன்ற சக்தியைப் பெற இயலும். அப்படி செய்வது, ஒரு நோன்பாளி எதையும் உண்ணக் கூடாது என்ற தடையை மீறியதாகவே ஆகும். எனவே, ஒருவர் மிகவும் பலஹீனமான நிலையில் இருந்து குளுக்கோஸ் ஏற்றிக்கொள்ளும் தேவையோ, அவசர நிலையோ ஏற்பட்டால் அவ்வாறு ஏற்றிக்கொண்டு நோன்பை முறித்த பிறகு, முறித்த நோன்பை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ளலாம். குளுக்கோஸ் ஏற்றும் நிலைமை ஏற்படாமலே உடலுக்குத் தெம்பு ஏற்றும் நோக்கத்தில் குளுகோஸ் ஏற்றப்பட்டால் அதுவும் உணவுடைய நிலையில் உள்ளதால், அவ்வாறு செய்வதும் நோன்பை முறித்துவிடும்.

இதுபோலவே இரத்தம் ஏற்றும் நிலையும் சாதாரண நிலையில் நடப்பது அல்ல. உயிர் காக்கும் அசாதாரணமான நிலையில்தான் இரத்தம் ஏற்றவேண்டிய நிலை ஏற்படும். இதுபோன்ற நிலையை அடைந்தவர் நோன்பை விட்டுவிட சலுகைப் பெற்றுள்ளார். உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் நோன்பை விட்டுவிடுவது இவரைப் பொருத்தவரை கடமையாகவும் ஆகிவிடும். அப்படியொரு ஆபத்தான சூழ்நிலையிலும் நோன்பை விடாமல் ஒருவர் இரத்தம் ஏற்றிக்கொள்வார் எனில், அவ்வாறு இரத்தம் ஏற்றிக்கொள்வதன் மூலம் அவருடைய நோன்பு தானாகவே முறிந்துவிடும். ஏனெனில், நாம் ஏற்கனவே சொன்னதுபோல் இரத்தத்தை வெளியேற்றுவதற்கும், உள்ளே செலுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. மருத்துவ தேவைக்காக இரத்தத்தை வெளியேற்ற மட்டுமே நபி(ஸல்) அவர்களின் அனுமதி உள்ளது.

அதுபோல், ஊசி மூலம் மருந்து செலுத்தும் அளவுக்கு உடல்நிலை சரியில்லாதவரும் நோன்பை விட்டுவிட அனுமதி பெற்றவர்தான். உடலுக்குள் அவற்றைச் செலுத்தினால் வயிற்றுக்குள் சென்று செயல்படுவதைவிட விரைவாக இரத்தத்தில் கலப்பதால், அதுவும் உணவு உட்கொண்டது போல்தான் ஆகும். எனவே, மருந்துகளை ஊசி மூலம் உடலில் செலுத்துவதும் நோன்பை முறித்துவிடும். நோயாளியாக இருப்பவர் வேறு ஒரு நாளில் அந்த நோன்பை வைத்துக் கொள்ள இறைவன் தெளிவான வழிகாட்டியிருக்கும்போது இவர்கள் நோன்பை விட்டுவிடுவதே சிறப்பாகும்.

ஆக, நோன்பு வைத்துக்கொண்டு இரத்தம் கொடுப்பதால் பலஹீனம் ஏற்படும் என்ற நிலையிலுள்ளவர்கள் அதைத் தவிர்த்துக் கொள்ளலாமே தவிர, நீரிழிவு நோயாளிகள் வீட்டிலிருந்தே செய்யக்கூடிய மிகச் சிறிய அளவிலான இரத்தப் பரிசோதனை முதல், முழு இரத்தப் பரிசோதனைக்காக இரத்தம் கொடுப்பது, இரத்த தானம் செய்வது போன்ற அனைத்தும் நோன்பை முறிக்காது. 

மாறாக, குளுக்கோஸ் ஏற்றிக் கொள்வது, ஊசி மூலம் மருந்து ஏற்றிக்கொள்வது, இரத்தம் ஏற்றிக் கொள்வது போன்றவைதான் நோன்பை முறிக்கும். 

இவற்றை படங்கள் மூலமாகவும் நினைவில் வைத்துக் கொள்வோம்:

மருத்துவ ரீதியாக நோன்பை முறிக்காதவை:

இரத்தப் பரிசோதனை (Simple Blood Test)

இரத்த தானம் செய்வது (Blood Transfusion)


முழு இரத்தப் பரிசோதனை செய்வது (Blood Check up)

மருத்துவ ரீதியாக நோன்பை முறிப்பவை:

குளுக்கோஸ் ஏற்றுவது (Infusion)

ஊசி மூலம் மருந்து ஏற்றுவது (Injunction)

இரத்தம் ஏற்றிக் கொள்வது (Blood Infusion)


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை