கேள்வி: இஸ்லாத்தைப் பின்பற்ற முடியாத கல்லூரி மற்றும் இஸ்லாத்துக்கு முரணானவற்றை சொல்லும் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளைப் படிக்க வைக்கலாமா? ஏற்கனவே அந்தப் பள்ளியில் சேர்த்திருந்தால் என்ன செய்வது?
பதில்: கல்வியைப் பொறுத்தவரை, நம் பிள்ளைகளுக்கு இயன்றவரை தரமான கல்வியைதான் கொடுக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம், உலகக் கல்விக்கு நாம் எந்தளவு முக்கியத்துவம் வழங்குகிறோமோ அதைவிட, மார்க்கத்தைப் பேணுவதற்குதான் மிக முக்கியத்துவமும், முதலிடமும் கொடுக்க வேண்டும். எனவே, நாம் எந்த சூழ்நிலையிலும் உலக ஆதாயங்களுக்காக இஸ்லாத்துக்கு முரணானவற்றை செய்யக்கூடியவர்களாக ஆகிவிடாமல், மார்க்கத்திற்குக் கட்டுப்பட்ட நிலையில் பிள்ளைகளைப் படிக்கவைக்கக் கூடியவர்களாக இருப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஆனால் பல காலங்களாகவே நம் சமுதாய மக்கள் இதைப்பற்றி கவனம் செலுத்தாமல், கல்வித் தரத்தை மட்டுமே பிரதானமாக நினைத்து, கிறிஸ்தவ மிஷினரி கல்விக் கூடங்களிலும், கோவில் நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படக்கூடிய இந்து சமய அறநிலையத்துறை பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், வித்யாலயா பள்ளிக் கூடங்களிலும் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர்.
அவற்றை ஏன் நாம் தவிர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்துக் கொள்வது மிக அவசியம்!
அந்தப் பள்ளிகள், மாணவ / மாணவியர்களுக்குத் தேவையான உலகக் கல்விகளை மட்டும் கற்றுக் கொடுத்தால் யாருக்கும், எந்தப் பிரச்சனையுமில்லை. ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுள் கொள்கையைக் கொண்ட பல சமூக மக்களும் கலந்து வாழும் நம் சமுதாயத்தில், கல்வி நிர்வாகம் தங்களிடம் உள்ளது என்ற அதிகாரத்தை வைத்து தங்களின் மதம் சார்ந்தவற்றை பாடதிட்டங்களில் சேர்ப்பதும், தங்களுடைய கடவுள் கொள்கையை மறைமுகமாக நம் பிள்ளைகளுக்கு போதிப்பதும், அவர்களின் மதக் கோட்பாடுகளை பள்ளிகளில் செயல்படுத்தும் வண்ணம் வலுக்கட்டாயமான சில நடைமுறைகளை மாணவர்களிடம் திணிப்பதும், மார்க்கத்திற்கு முரணான இதுபோன்ற வெறுக்கத்தக்க இன்னும் பல பிரச்சனைகளையும் அங்கே நம் பிள்ளைகள் சந்திக்க வேண்டியுள்ளது.
பெண் பிள்ளைகளாக இருந்தால் அவர்கள் இஸ்லாமிய ஆடை ஒழுக்கங்களைப் பின்பற்றுவதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், கல்வியைத் தேடி செல்லும் பிள்ளைகள் அங்குள்ளவர்களுக்கு பயந்து, அவர்கள் மார்க்கத்திற்கு முரணாக சொல்வதற்கெல்லாம் கட்டுப்பட்டு ஆகவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா?
"لاَ طَاعَةَ فِي مَعْصِيَةٍ، إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ"
"(அல்லாஹ்வுக்கு) மாறுசெய்வதில் கீழ்ப்படிதல் கிடையாது; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: புஹாரி (7257)
யாராக இருந்தாலும், எந்த நிர்வாகமாக இருந்தாலும் அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கமான இஸ்லாத்திற்கு முரணான விஷயங்களில் கட்டுப்பட சொன்னால் அதை ஏற்று நாம் செயல்படுத்தக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறிவிட்டார்கள்.
எனவே, பிற சமுதாயத்தின் தெய்வ வழிபாட்டை மறைமுகமாகவோ, நேரடியாகவோ வற்புறுத்தும் இத்தகைய பள்ளிகள் இவ்வாறுதான் இயங்குகின்றன என்று தெரிந்தும், அந்தப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதற்கு முன்பே யோசிக்காமல், அங்கே சேர்த்தப் பிறகு அந்தப் பள்ளிகளில் தொடரலாமா அல்லது நிர்பந்த சூழ்நிலைக்காக அவர்கள் சொல்வதற்கு கட்டுப்படலாமா என்பது போன்ற கேள்விகளைக் கேட்பது சரியான அணுகுமுறை அல்ல.
ஏனெனில், நிர்ப்பந்தமான ஒரு சூழ்நிலையில் விலக்கப்பட்ட பாவமான செயல்களைச் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறது என்பதற்காக, பாவமான செயல்கள் நடக்கும் என்று தெரிந்தே ஹராமான விஷயங்களுக்கு வழிவகுக்கும் ஒன்றை நாமே தேர்ந்தெடுத்துவிட்டு அதை நிர்ப்பந்தம் என்று சொல்வதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது!
நிர்ப்பந்த சூழ்நிலைக்கு இலக்கணமாக அல்லாஹ் தன் திருமறையிலே இரண்டு அம்சங்களை கூறிக் காட்டுகிறான்:
فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِؕ
"வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்ப்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்."
(அல்குர்ஆன் 2:173)
எனவே, நிர்ப்பந்த சூழ்நிலையில் இஸ்லாம் அனுமதி கொடுக்கும் என்பதும், நாமே வலியச் சென்று ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதும் ஒன்றல்ல!
இப்படியான சூழ்நிலையில், கல்வியில் கவனிப்புடன் மதச் சார்பற்று நடத்தப்படும் அரசுப் பள்ளிக் கூடங்களைத் தேர்வு செய்வது சிறந்தது. அதேவேளை, மேற்சொன்ன தன்மைகளைக் கொண்ட, மார்க்கத்திற்கு முரணான கல்விக் கூடங்களை வெறுக்கும் விதிவிலக்கான சில பெற்றோர்கள், இஸ்லாமியக் கல்வியுடன் உலகக் கல்வியையும் போதிக்கும் பள்ளிக்கூடங்களைத் தேடுகின்றனர் என்பதும் சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால், அப்படி சில பள்ளிகள் இருந்தாலும் அங்கு இடம் கிடைப்பதும் சிரமம் என்பது மட்டுமல்ல, இடம் கிடைத்தாலும் கல்விக் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. அதனால், நடுத்தர மற்றும் வறிய குடும்பத்து மக்கள் அதில் இணைந்துப் படிப்பது இயலாத காரியமாகவே உள்ளது என்பதுதான் உண்மை!
வசதியுள்ள சிலர் அதிக தொகை செலுத்தி தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தாலும், குறிப்பிட்ட அந்தப் பள்ளிகள் உண்மையில் இஸ்லாமியக் கல்வியை சரியான முறையில்தான் போதிக்கின்றனவா?
உலகக் கல்வியுடன் இஸ்லாமியக் கல்வியையும் சேர்த்து போதிக்கிறோம் என்று சொல்லும் பெரும்பாலான பள்ளிகளில் சொல்லித் தரப்படும் கல்வி என்பது, ஷிர்க் - பித்அத்தை போதிக்கும் சுன்னத் (?) ஜமாஅத் கொள்கையைச் சார்ந்தவையாகவோ அல்லது ஆதாரமற்ற வகையில் எழுதி வைக்கப்பட்ட, இஸ்லாத்திற்கு உட்படாத செய்திகளை இஸ்லாம் என்ற பெயரில் சொல்லித் தரக்கூடியவையாகவோ அல்லது குர்ஆன் ஹதீஸை மட்டும் சொல்லாமல், இவை இரண்டுக்கும் அப்பாற்பட்ட விஷயங்களையும் சேர்த்து மார்க்கம் என்ற பெயரில் சொல்லித் தரக்கூடியவையாகவோ உள்ளன.
எனவே அவர்கள் போதிக்கும் இஸ்லாமியக் கல்வியில் ஒருபக்கம் குர்ஆன், ஹதீஸ்களின் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டாலும், அவை அல்லாதவற்றையும் கலந்து சொல்லித் தருவதால் அவை முழுமையான குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இல்லை என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள். சரியான முறையில் நபிவழியைப் பின்பற்ற அந்தப் பள்ளிகள் சரிவருமா என்பதை நாம் யோசிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அதேசமயம், வேறு எந்த பள்ளியில்தான் சேர்ப்பது என்ற குழப்பமான ஒரு மனநிலை ஏற்படத்தான் செய்யும் என்பதை மறுக்கவும் முடியாது.
இந்த இடத்தில்தான், நிர்பந்த சூழ்நிலைக்கு இஸ்லாம் சொல்லித்தந்த வரையறையைப் பேணி நாம் ஒரு முடிவெடுக்க வேண்டும். இரண்டில் எது ஓரளவுக்கு உகந்தது என்று பார்த்து அதை தேர்வுசெய்துக் கொள்ளவேண்டும். அதாவது, இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணாகக் கற்பிக்கப்படும் இடங்களை அறவே தவிர்த்துக் கொண்டு, குர்ஆன், ஹதீஸ்களின் அடிப்படையிலான பாடங்களோடு அவை அல்லாதவற்றையும் கலந்து சொல்லித் தரும் பள்ளிக்கூடங்களை நிர்பந்தத்திற்காகத் தேர்ந்தெடுக்கலாம்.
அத்துடன் மிக முக்கியமாக, நாம் தேர்ந்தெடுத்த அத்தகைய பள்ளிக்கூடத்தில் எவையெல்லாம் மார்க்கத்தில் சொல்லப்படாதது என்பதை நம் பிள்ளைகளுக்கு அவ்வப்போது தெரியப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்.
பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் இவ்வாறு நன்கு யோசித்து செயல்படுவது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை என்பதையும் நாம் புரிந்துக் கொண்டால், நம்முன் இருக்கக்கூடிய கல்வி சம்பந்தப்பட்ட சவால்களை எளிதில் சமாளிக்கலாம், இன்ஷா அல்லாஹ்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!