கேள்வி: இஸ்லாத்தைப் பின்பற்ற முடியாத கல்லூரி மற்றும் இஸ்லாத்துக்கு முரணானவற்றை சொல்லும் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளைப் படிக்க வைக்கலாமா? ஏற்கனவே அந்தப் பள்ளியில் சேர்த்திருந்தால் என்ன செய்வது?
பதில்: கல்வியைப் பொறுத்தவரை, நம் பிள்ளைகளுக்கு இயன்றவரை தரமான கல்வியைதான் கொடுக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம், உலகக் கல்விக்கு நாம் எந்தளவு முக்கியத்துவம் வழங்குகிறோமோ அதைவிட, மார்க்கத்தைப் பேணுவதற்குதான் மிக முக்கியத்துவமும், முதலிடமும் கொடுக்க வேண்டும். எனவே, நாம் எந்த சூழ்நிலையிலும் உலக ஆதாயங்களுக்காக இஸ்லாத்துக்கு முரணானவற்றை செய்யக்கூடியவர்களாக ஆகிவிடாமல், மார்க்கத்திற்குக் கட்டுப்பட்ட நிலையில் பிள்ளைகளைப் படிக்கவைக்கக் கூடியவர்களாக இருப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஆனால் பல காலங்களாகவே நம் சமுதாய மக்கள் இதைப்பற்றி கவனம் செலுத்தாமல், கல்வித் தரத்தை மட்டுமே பிரதானமாக நினைத்து, கிறிஸ்தவ மிஷினரி கல்விக் கூடங்களிலும், கோவில் நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படக்கூடிய இந்து சமய அறநிலையத்துறை பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், வித்யாலயா பள்ளிக் கூடங்களிலும் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர்.