கேள்வி: குப்ரா - நஸாயீ (9848) - வது ஹதீஸின் விளக்கம் என்ன?
"எவர் கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸி' யை ஓதிவருவாரோ அவருக்கு, மரணத்தைத் தவிர சுவர்க்கம் நுழைய எதுவும் தடையாக இருக்காது!" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
நூல்: ஸுனன் அல்குப்ரா - நஸாயீ (9848)
இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளதுபோல், சொர்க்கம் செல்வதற்கு மரணம் எப்படி தடையாக இருக்கும்? ஒருவர் மரணித்தால்தானே சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்லமுடியும்?
"கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸி' யை ஓதிவருபவருக்கு மரணத்தைத் தவிர சுவர்க்கம் நுழைய அவருக்கு எதுவும் தடையாக இருக்காது" என்பதன் விளக்கம் என்ன?
பதில்: பொதுவாக இஸ்லாம் சொல்லக்கூடிய எல்லா அமல்களும் மறுமைப் பலன்களைத் தரக்கூடியவை என்றாலும், சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக்கூடியவை என்று நபி (ஸல்) அவர்கள் பல நல்லமல்களைக் குறிப்பிட்டு கூறியுள்ளார்கள். அதில் ஒன்றுதான், ஒவ்வொரு ஃபர்ளு (கடமையான) தொழுகைக்குப் பிறகும் 'ஆயத்துல் குர்ஸியை' தொடர்ந்து ஓதிவரக்கூடிய அமலும் ஆகும்.
இப்போது உங்கள் சந்தேகத்திற்கு வருவோம். "ஆயத்துல் குர்ஸியை ஓதினால் சொர்க்கம் செல்வதற்கு மரணம் எப்படி தடையாக இருக்கும்? ஒருவர் மரணித்தால்தானே சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்லமுடியும்?" என்று கேட்டுள்ளீர்கள்.
அந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள வாசக அமைப்பை விளங்குவதில் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதால் அதன் பொருளை நீங்கள் சரியாக விளங்கவில்லை. ஒரு வாக்கியத்தில் சொல்லக்கூடிய மையக் கருத்தை உறுதிபட சொல்வதற்காக, அரபி மட்டுமல்லாமல் எல்லா மொழிகளிலும் இவ்வாறு சில வாக்கியங்களைப் பயன்படுத்துவது சாதாரணமான ஒரு வழக்கம்.
இதை ஒரு அழகிய உதாரணத்தோடு பார்ப்போம்:
இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கைக்கு முதல் ஆணிவேராக இருக்கக்கூடிய "லா இலாஹ இல்லல்லாஹ்" (لاَ إِلَهَ إِلَّا اللَّهُ) என்ற வாக்கியம் என்ன சொல்கிறது?
இந்த வார்த்தை, 'அல்லாஹ் கடவுளாக இருக்கிறான்' என்ற செய்தியை மட்டும் சொல்லவில்லை. 'அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கடவுளும் கிடையாது' என்று கூறுகிறது.
அதாவது, 'அல்லாஹ் கடவுளாக இருக்கிறான்' என்று சொன்னால், 'அல்லாஹ்வும் ஒரு இறைவன்; அவனைப் போன்று இன்னும் பல கடவுள்களும் இருக்கலாம்' என்ற பொருளைத் தந்துவிடும். ஆனால் இஸ்லாத்தின் இறைக் கோட்பாடு அப்படிப்பட்டதல்ல! "அல்லாஹ் என்ற அந்த ஒரேயொரு இறைவனைத் தவிர வேறு யாருமே, எதுவுமே இறைவனாக இருக்கவே முடியாது" என்ற ஓரிறைக் கொள்கையை இந்த உலக மாந்தர்களுக்கு இஸ்லாம் பிரகடனப்படுத்துகிறது!
எனவேதான், அல்லாஹ் மட்டுமே ஏக இறைவனாக இருக்கிறான் என்று உறுதியாக அறுதியிட்டு கூறுவதற்காக, ("லா இலாஹ இல்லல்லாஹ்"/ "There is no god except Allah") 'அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கடவுளும் கிடையாது' என்ற வாசக அமைப்பை இஸ்லாம் பயன்படுத்துகிறது.
ஒரு வாக்கியத்தில்,
"தவிர", "அன்றி", "அல்லாமல்" - இதுபோன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு, அத்துடன் "இல்லை", "இருக்காது", "கிடையாது" - போன்ற அர்த்தங்களைத் தரும் எதிர்மறை வார்த்தைகள் எங்கெல்லாம் இணைக்கப்பட்டு வருகிறதோ, அந்த வாக்கியம் நேர்மறையான பொருளைத் தருவதுடன், அந்தத் தகவலை உறுதிபடுத்திக் கூறுவதாக இருக்கும்.
-- அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கடவுளும் கிடையாது
-- மரணத்தைத் தவிர அவருக்கு சுவர்க்கம் நுழைய எதுவும் தடையாக இருக்காது
இப்போது இந்த வாக்கியங்களை கவனித்தால், அதிலுள்ள உறுதித்தன்மைப் புரியும்.
"அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கடவுளும் கிடையாது" என்றால், "அல்லாஹ் மட்டுமே உலக மாந்தர்கள் அனைவருக்கும் ஏக இறைவன்" என்று எப்படி உறுதியான முறையில் புரிந்துக் கொள்கிறோமோ அதுபோலதான் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸிலும்,
"யார் கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸியை' ஓதிவருவாரோ அவர் மரணித்துவிட்டால் சுவர்க்கம் நுழைவார்!" என்ற கருத்து அங்கே உறுதியாக சொல்லப்படுகிறது என்று புரிந்துக்கொள்ள வேண்டும். இதில் எந்தக் குழப்பமும் இல்லை.
நம் நடைமுறை வழக்கில் இன்னுமொரு உதாரணம்:
ஒருவர் உம்ராவுக்கு செல்வதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, விசா கிடைக்காமல் காத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம்,
"உனக்கு விசா கிடைத்தால் நீ உம்ராவுக்கு செல்லலாம்" என்று சொல்வதும், "உனக்கு விசா கிடைத்தாலே தவிர உம்ராவுக்கு நீ செல்ல முடியாது" என்று சொல்வதும் ஒரே அர்த்தம்தான் என்றாலும், இந்த இரண்டுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது.
அதாவது முதல் வாக்கியம், "உனக்கு விசா கிடைத்தால் நீ உம்ராவுக்கு செல்லலாம்" என்று நேர்மறை வார்த்தைகளோடு ஒரு தகவலை மட்டும் சொல்கிறது.
இரண்டாவது வாக்கியம், "உனக்கு விசா கிடைத்தாலே தவிர உம்ராவுக்கு நீ செல்ல முடியாது" என்று எதிர்மறை வார்த்தைகளோடு சொல்வதன் மூலம், முதல் வாக்கியத்தில் உள்ள அந்தத் தகவலை உறுதிபடுத்திச் சொல்கிறது. (பேச்சுவழக்கில் இதை சொல்ல வேண்டுமானால், "அடித்துச் சொல்வது" என்று கூறுவோம்.)
"உனக்கு விசா கிடைத்தாலே தவிர உம்ராவுக்கு நீ செல்ல முடியாது" என்ற அந்த இரண்டாவது வாக்கியத்தை இன்னொரு பாணியிலும் சொல்லலாம்.
"உம்ரா செல்வதற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டால், உனக்கு விசா கிடைப்பதைத் தவிர நீ உம்ராவுக்கு செல்ல வேற எதுவும் தடையாக இருக்காது"
இப்படி சொன்னாலும், "விசா கிடைத்தால் மட்டுமே உம்ராவுக்கு செல்லமுடியும்" என்று புரிந்துக் கொள்வோமா இல்லையா? அவருக்கு உம்ராவுக்கு செல்லத் தடையாக இருப்பது எது என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? விசா கிடைக்காமல் இருப்பதுதான் தடையாக இருக்கிறது என்று சொல்வீர்கள்தானே?
இப்போது உங்கள் கேள்வியை ஒருமுறைப் பாருங்கள்!
"சொர்க்கம் செல்வதற்கு மரணம் எப்படி தடையாக இருக்கும்? ஒருவர் மரணித்தால்தானே சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்லமுடியும்?" என்ற உங்கள் கேள்வியிலேயே உங்களுக்கான பதிலும் உள்ளது.
அதாவது, ஒரு கேள்வியை இரண்டு கேள்விகளாக முன் வைத்துள்ளீர்கள். உங்களுடைய முதலாவது கேள்விக்கு உங்களின் இரண்டாவது கேள்வியே பதிலாக அமைந்துள்ளது. எப்படியென்று கவனியுங்கள்:
முதல் கேள்வி: "சொர்க்கம் செல்வதற்கு மரணம் எப்படி தடையாக இருக்கும்?
இரண்டாவது கேள்வி: ஒருவர் மரணித்தால்தானே சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்லமுடியும்?"
நம்முடைய சுருக்கமான பதில்: ஆம்; அவர் இன்னும் மரணிக்காததால், சொர்க்கம் செல்ல முடியவில்லை. அதற்குத் தடையாக உள்ளது அவரது மரணம்தான். மரணித்துவிட்டால் சொர்க்கம் சென்றுவிடுவார்.
அதாவது, ஒவ்வொரு ஃபர்ளான தொழுகைக்குப் பிறகும் ஒருவர் 'ஆயத்துல் குர்ஸியை' ஓதிக்கொண்டு மரணிக்காமல் தொடர்ந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும்போது, அவர் எப்படி சொர்க்கம் செல்லமுடியும்? மரணித்தால்தானே சொர்க்கம் செல்லமுடியும்? அப்படியானால், அவருடைய மரணம்தானே அதற்கு தடையாக இருக்கிறது?
இதைதான் நீங்கள் கேள்வியாகக் கேட்டு, அதிலேயே அதற்கு பதிலும் கூறியுள்ளீர்கள். அதன் கருத்தைப் புரிந்துக் கொள்வதில் மட்டுமே உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இப்போது தெளிவாகியிருக்கும் என்று நம்புகிறோம், அல்ஹம்துலில்லாஹ்.
முக்கியக் குறிப்பு:
ஒரு நல்லமலைச் செய்யும்போது அதற்கு சொர்க்கமே கூலி என்று வரக்கூடிய அத்தனை செய்திகளும், அல்லாஹ்வுக்கு எந்த வகையிலும் இணைவைக்காத நிலையில் மரணித்தவர்களுக்கான மட்டுமுள்ள நற்செய்தி என்பதை மறந்துவிடக் கூடாது. அல்லாஹ்வுக்கு இணைவைத்த நிலையில் மரணித்தவர்களுக்கு இது பொருந்தாது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!