அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Sunday, 26 October 2025

கால்நடைகளிலுள்ள சில உறுப்புகளை சாப்பிடக்கூடாதா?

கேள்வி:

நாம் உண்ணக்கூடிய கால்நடைகளில் சில உறுப்புகளை சாப்பிடக்கூடாது என்று சொல்லக்கூடிய கீழ்க்காணும் இந்தச் செய்தி  ஆதாரப்பூர்வமானதா?

"ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் எந்தப் பிராணியாக இருந்தாலும் இந்த உறுப்புகளை சாப்பிடக்கூடாது :

1) இரத்தம்

2) பித்தப்பை

3) ஆண்குறி

4) பெண்குறி

5) நீர்ப்பை

6) கட்டி / கழலை

7) இரண்டு விதைகள்

(நூல் : சுனனுல் குப்ரா : 19700)

பதில்:

அல்லாஹ் ஹலாலாக்கிய (உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட) கால்நடைகளில் சில உறுப்புகளை சாப்பிடக்கூடாது என்றும், குர்பானியில் பங்கிட்டுக் கொடுக்காமல் இவை கழிக்கப்பட வேண்டிய உறுப்புகள் என்றும் சொல்லி மேற்கண்ட செய்தியை சிலர் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். நீங்கள் குறிப்பிடும் அந்தச் செய்தி அரபி மூலத்துடனும், முழு அறிவிப்பாளர் வரிசையுடனும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

السنن الكبرى للبيهقي

19700 - أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، ثنا عَلِيُّ بْنُ حَمْشَاذٍ , أَخْبَرَنِي يَزِيدُ بْنُ الْهَيْثَمِ، أَنَّ إِبْرَاهِيمَ بْنَ أَبِي اللَّيْثِ، حَدَّثَهُمْ ثنا الْأَشْجَعِيُّ، عَنْ سُفْيَانَ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ وَاصِلِ بْنِ أَبِي جَمِيلٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: " كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْرَهُ مِنَ الشَّاةِ سَبْعًا: الدَّمَ وَالْمَرَارَ وَالذَّكَرَ وَالْأُنْثَيَيْنِ وَالْحَيَا وَالْغُدَّةَ وَالْمَثَانَةَ "، قَالَ: " وَكَانَ أَعْجَبَ الشَّاةِ إِلَيْهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُقَدِّمُهَا "، هَذَا مُنْقَطِعٌ

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆட்டிலுள்ள ஏழு விஷயங்களை வெறுத்தார்கள்:

இரத்தம், பித்தப்பை, ஆண்குறி, மடிகள், இரண்டு விதைகள், கட்டி /கழலை மற்றும் சிறுநீர்ப்பை.

மேலும் ஆட்டின் முன்கால் அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது."

அறிவிப்பவர்: முஜாஹித் (ரஹ்)

நூல்: சுனனுல் குப்ரா பைஹகீ (19700), அல்முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் 4-ம் பாகம்

நீங்கள் எடுத்துக்காட்டிய இந்தச் செய்தி, நபித்தோழர் அறிவிப்பதாகக் கூறப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு பொருட்களை விரும்ப மாட்டார்கள் என்றால், அதை ஒரு நபித்தோழரால்தான் சொல்லமுடியும். இதை "முஜாஹித்" என்பவர் அறிவிப்பதாக வருகிறது. இவர் நபித்தோழர் அல்லர். எனவே இது "முர்ஸல்" என்று சொல்லக்கூடிய பலவீனமான செய்தியாகும்.

மேலும் இந்தச் செய்தியில் "இப்ராஹீம் பின் அபில்லைஸ்" (إِبْرَاهِيمَ بْنَ أَبِي اللَّيْثِ) என்பவர் இடம்பெற்றுள்ளார். 'இவர் இட்டுக்கட்டுபவர்' என்றும், 'பொய்  சொல்பவர்' என்றும் சந்தேகிக்கப்பட்டவர் என்றும் விமர்சனங்கள் உள்ளன. இதன் காரணமாக இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்ற நிலையை அடைகிறது.

இது அல்லாமல் இன்னும் பல செய்திகளும் உள்ளன.

மேற்கண்ட அதே கருத்துடைய ஹதீஸ் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

المعجم الكبير للطبراني 

460- حَدَّثَنَا يَعْقُوبُ بن إِسْحَاقَ بن إِبْرَاهِيمَ بن عَبَّادِ بن الْعَوَّامِ الْوَاسِطِيُّ ، حَدَّثَنَا يَحْيَى بن عَبْدِ الْحَمِيدِ الْحِمَّانِيُّ ، نَا عَبْدُ الرَّحْمَنِ بن زَيْدِ بن أَسْلَمَ ، عَنْ أَبِيهِ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَيْسَ عَلَى أَهْلِ لا إِلَهَ إِلا اللَّهُ وَحْشَةٌ فِي قُبُورِهِمْ ، وَلا مَنْشَرِهِمْ ، وَكَأَنِّي أَنْظُرُ إِلَى أَهْلِ لا إِلَهَ إِلا اللَّهُ وَهُمْ يَنْفُضُونَ التُّرَابَ عَنْ رُءُوسِهِمْ ، وَيَقُولُونَ : الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنَّا الْحَزَنَ 461- وَبِهِ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْرَهُ مِنَ الشَّاةِ سَبْعًا : الْمَرَارَةَ ، وَالْمَثَانَةَ ، وَالْمحيَاةَ ، وَالذَّكَرَ ، وَالأُنْثَيَيْنِ ، وَالْغُدَّةَ ، وَالدَّمَ ، وَكَانَ أَحَبَّ الشَّاةِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُقَدَّمُهَا ، قَالَ : وَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِطَعَامٍ ، فَأَقْبَلَ الْقَوْمُ يُلْقِمُونَهُ اللَّحْمَ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ أَطْيَبَ اللَّحْمِ لَحْمُ الظَّهْرِ

இதை "அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம்" என்பவர் தன் தந்தை வழியாக அறிவிக்கிறார். இவர் தந்தை வழியாக ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் என்பதால் இதுவும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல.

எனவே ஹலாலான பிராணிகளில் இரத்தம், சாணம் தவிர மற்ற அனைத்தும் உண்பதற்கு ஹலால் ஆகும்; குர்பானியில் பங்கிட்டுக் கொடுப்பதற்கும் ஹலால் ஆகும். அவற்றில் ஏதாவது ஒன்றை தன்னுடைய சொந்த விருப்பத்தில் ஒருவர் சாப்பிடமாட்டார் என்றால் அதில் தவறில்லை. ஆனால் ஹலாலானவற்றை ஹராம் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை.

"இது அனுமதிக்கப்பட்டது; இது விலக்கப்பட்டது" என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றிபெற மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 16:116)



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை